தான்பிரீன் : தொடரும் பயணம்
தியாகி ப. ராமசாமி
தான்பிரீன் :
தொடரும் பயணம்
ப. ராமஸ்வாமி
விடியல் பதிப்பகம்
கோவை - 641 015
நூல் தலைப்பு : தான்பிரின் : தொடரும் பயணம்
நூலாசிரியர் : ப. ராமஸ்வாமி
பதிப்பாண்டு : மூன்றாம் பதிப்பு, மார்ச் 1999
வெளியீடு : விடியல் பதிப்பகம்
3, மாரியம்மன் கோவில் வீதி
உப்பிலிப்பாளையம்
கோவை - 641015
தொலைபேசி எண் : 0422 - 570778
தொலைநகல் எண்: 0422-578782
அச்சுக் கோப்பு தலித் முரசு, சென்னை
அச்சாக்கம் : மணி ஆப்செட், சென்னை
விலை ரூ. 50
உள்ளடக்கம்
முதற்பதிப்பிற்கான முன்னுரை
ஒரு வார்த்தை
இரண்டாம் பதிப்புக்கான பதிப்புரை
மூன்றாம் பதிப்புக்கான பதிப்புரை
அயர்லாந்து விடுதலைப் போராட்டம்: ஒரு சுருக்கமான வரலாற்று அறிமுகம்
தான்பிரீன் பற்றி
1. ஆஷ்டவுன் போராட்டம்
2. தொண்டர் படை
3. முதல் வெடிமருந்துச்சாலை
4. தேர்தல் வெற்றி
5. ஸோலோஹெட்பக்
6. பதினாயிரம் பவுண்டு பரிசு
7. சிப்பாய்களின் சிறந்த உதவி
8. தாயின் தரிசனம்
9. போலிஸாரிடம் பிடிபட்ட தொண்டன்
10. ரயில் நிலையத்தில் ரகளை
11. பின் நிகழ்ச்சிகள்
12. பாதிரி வேஷம்
13. வைசிராயைக் குறிபார்த்தல்
14. ஆஷ்டவுனுக்குப் பின்னால்
15. மீண்டும் திப்பெரரி
16. புதிய போர்முறை
17. ஜெனரல் லூகாஸ்
18. கொலைக்கூட்டத்தின் முயற்சிகள்
19. டிராம்கொண்டரா சண்டை
20. பிரிவும் பிரிவாற்றாமையும்
21. திருமணம்
22. சமாதானம்
23. முடிவுரை
கவிதைகள்
சுதந்திரம்
இளங்கோவின் ஒரு கவிதை
அயர்லாந்து மண்ணில் உள்ள பிரிட்டிஷ் படைவீரனுக்கு ஓர் கடிதம்
முதற்பதிப்பிற்கான
முன்னுரை
* * *
ஒரு நாட்டின் சுதந்திரப்போரை நடத்துவதற்கு ஈடுபடுபவர்கள் மட்டும் இருந்தால் போதாது. சுதந்திரத்தைப் பற்றி ஆனந்தக் கனவுகள் கண்டு வீரக் கவிதை பாடக்கூடிய புலவர்கள் வேண்டும்; அறிவாளிகள் வேண்டும்; தீர்க்க தரிசிகள் வேண்டும். உணர்ச்சியற்றுக் கிடக்கும் உயிர்ப்பிண்டங்களை உருவாக்கி உயிரூட்டக்கூடிய ஆசிரியர்களும் பத்திரிகைகளும் நூல்களும் வேண்டும். மலைபெயர்ந்தாலும் நிலை பெயராத தீரர்கள் வேண்டும். அயர்லாந்து அதையும் பெற்றிருந்தது. ஐரிஷ் மொழியைப் புதுப்பித்து அரியாசனத்தில் அமர்த்துவதற்குத் திறமையுள்ள புலவர்கள் சிலர் முன்வந்தனர். தொழிலாளிகளையும் குடியானவரையும் பிரபுகளையும் ஒன்று சேர்த்து வெறியூட்டி ஆட்டுவிப்பதற்கு ஆர்தர் கிரிபித், பார்ணல், மைக்கேல் காலின்ஸ், சமன்டி வெலா. தான்பீரின், டெரன்ஸ் முதலிய ராஜதந்திரிகளும் அறிஞர்களும் வீரர்களும் முன்வந்து உழைத்தனர். இவர்களுடைய உழைப்பாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் 300 ஆண்டு அடிமைத் தளை உடைந்து, சிதறிப் பொடிப் பொடியாகப் பறந்து போயின.
அயர்லாந்து புரிந்த அரும் போரின் அடிப்படைத் தத்துவங்களைப் பற்றிக் தலைவர் டிவெலரா பலமுறையாக எடுத்துக் கூறியிருக்கிறார். அவருடைய வாக்கியங்களில் சிலவற்றைக் கவனித்தாலே உண்மை எளிதில் புலப்படும்.
"நாமும் ஆங்கிலேயரும் பக்கத்து வீட்டுக்காரர். ஆயினும் அவர்கள் நம் வீட்டில் குடிபுக ஒரு நாளும் சம்மதிக்கமாட்டோம்.“ "நமக்கு வழி, நம் பாஷை, அதுவே நம் குணமாக அமைகிறது. உண்மையான ஐரிஷ்காரன் யர் ஆங்கிலேயரால் கலகக்காரன் என்று அழைக்கப்படுகின்றவனே.“
அயர்லாந்து விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த சிலரைப்பற்றி தமிழில் எழுத வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. 1932ம் ஆண்டு முதல் இரண்டு வருடம் திருச்சியில் மூன்றாவது வகுப்புக் கைதிகளாக என்னோடு நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இருந்து வந்தனர். அவர்களில் ஆங்கிலப் படிப்பு இல்லாதவரே பெரும்பாலோர் அவர்களுக்கு நான் தமிழில் எழுதிய நூல்கள் அயர்லாந்தைப் பற்றியவை மூன்று: மைக்கேல் காலின்ஸ் சரித்திரம், டெரன் மாக்ஸ்வினியின் சுதந்திரத்தின் தத்துவங்கள், தான்பிரீன் சரித்திரம்.
இந்த மூன்றில் முந்தியவை இரண்டும் முன்பே வெளிவந்து விட்டன. 1947 வரை நம்நாடு அடிமைப்பட்டிருந்ததால் தான்பிரீன் சரித்திரத்தை வெளியிட இயலவில்லை. ஏனெனில் இதற்கு ஆதாரமான மூலநூல் இந்திய நாட்டில் வழங்கக் கூடாதென்று கடற் சங்கம் தடை செய்திருந்தது.
- ப. ராமஸ்வாமி
ஒரு வார்த்தை
* * *
தான்பிரீன் என்ற ஐரிஷ் விடுதலைப் போராளி பற்றித் தமிழில் எழுதப்பட்ட வரலாற்றினை சிறையில் நண்பர்கள் யாவரும் நாவல்களைப் படிப்பதுபோல் ஆர்வத்தோடு படித்தார்கள். பலர் அதனைப் பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்கள். காகிதம், பேனா, மை எதுவும் கிடையாது. எங்களைப் போலவே இந்தப் பொருள்களும் சட்டத்தை மீறி ஜெயிலுக்குள் வந்தன.
தான்பிரீன் தானே ஒரு நூல் எழுதியிருந்தான். அயர்லாந்தின் விடுதலைக்காக எனது போர் என்பது அதன் பெயர். அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டிருந்தும் அந்த நூல் எப்படியோ கடல்களையெல்லாம் தாண்டித் தானும் சட்டத்தை மீறி, திருச்சிச் சிறைக்குள் எங்களிடம் வந்து சேர்ந்தது. அதை ஆதாரமாக வைத்துக்கொண்டே இந்த நூலை எழுதினேன்.
நான் எழுதின தாள்களையெல்லாம் ஒன்று சேர்த்து என் உயிர் நண்பர் திரு. வை. சிவராமன் என்ற சைவப்பிள்ளை, முத்துப் போன்ற தம் கையெழுத்தில் ஒரு நல்ல பிரதி எடுத்திருந்தார். அதைப்போல் வேறு சில நூல்களிற்கும் அவர் பிரதி எடுத்திருந்தார். சட்டவிரோதமான இந்தச் சரக்குகள் எல்லாம் சிறையில் நான் அடைபட்டிருந்த சிறு அறைக்குள் இருந்தன. சிறைக்காவலர்களோ (Warder) அதிகாரிகளோ கண்டால் அவைகள் யாவும் கூண்டோடு கைலாசம் போய்விடும்!
எப்படியோ பல மாதங்களாக என் புத்தக கட்டுகள் 'கான்விக்ட் வார்டர்'களும் (Convict Warder - சிறைக்காவலருக்கு உதவியாக நியமிக்கப்பட்ட, கடுங்காவற் தண்டனை மேற்கொண்டுள்ள கைதி) சிறை முழுவதும் சோதனைபோட ஆரம்பித்து விட்டார்கள். விசில்களின் ஓசை போலிஸ் தடல்புடல் வேறு. கைதிகள் இருந்த இடங்களை விட்டு வெளியே வரமுடியாமல் அறைகளில் தள்ளிவிடப்பட்டனர். நானும் என் அறைக்குள்ளே இருந்து கதவுகளின் இரும்புக் கம்பிகளைச்சரிபார்த்துக் கொண்டிருந்தேன். கதவுகளிலுள்ள கம்பிகளின் வழியாகக் கைகளை வெளியே நீட்டி வரந்தாவிலிருந்த விளக்கின் ஒளியில் நள்ளிரவுகளில், நான் எழுதி முடித்த அநேகம் நோட்டுப் புத்தங்கள் எல்லாம் அன்று ஒரு நொடியில் பறி முதலாகும் நிலை.
எனக்கு அடுத்த அறையில் சைவப்பிள்ளை இருந்தார். என் அறையில் இருந்தபடியே சப்தம் கொடுத்தேன். 'நோட்டுப் புத்தகங்களை என்ன செய்ய' என்று கேட்டேன். நானும் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எவனாவது வருகிறானா என்று பார்ப்போம் என்றார். சிறிது நேரத்தில் அவருக்குத் தெரிந்த ஒரு கான்விக்ட் வார்டர் வராந்தாவழியே வந்தான். நண்பர் அவனிடம் விபரம் சொல்லி எப்படியாவது எங்கள் சொத்தைப் பாதுகாத்துச் சோதனை முடிந்த பிறகு திரும்பத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவன் தயாராயிருந்தான். ஆனால் அதிகாரிகள் எங்கும் அலைந்து திரிந்துக் கொண்டிருந்ததால் அதிகமாய் பயந்து நடுங்கினான். என் அறைவாசலுக்கு வந்து, 'சாமி கட்டு, கட்டு; சீக்கிரம் கட்டு' என்றான்.
நான் கட்டவேண்டியது ஒன்றுமில்லை. கட்டியிருந்தவைகளை அவிழ்க்கத்தான் வேண்டிருந்தது. எப்படியோ மிக விரைவாக எல்லாம் வெளியேறிவிட்டன. அவன் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு ஒரே ஓட்டமாகப் போய் விட்டான். என் அறைக்கு நேராக வெகுதூரத்தில் ஒரு பெரிய கிணறு உண்டு. அவன் அதை நோக்கியே ஒடினான். என் எழுத்துக்கள் சிறைக்காவலர் வீடுகளிலே அடுப்பின் நெருப்புக்கு இரையாகும் என்று இதுவரை பயந்திருந்தேன். இப்போது அவை வருணபகவானுக்கு இரையாகும் போலக் காணப்பட்டது.
கான்விக்ட் வார்டர் ஒரு பெரிய கயிற்றை எடுத்து எல்லா நூல்களையும் ஒன்றாகக் கட்டி, அந்தக் கட்டைக் கிணற்றின் நடுவிலிருந்த கல்லோடு சேர்த்துக் கட்டித் தொங்கவிட்டான். நூல்கள் கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருந்தன. வேறு எங்கு வைத்திருந்தாலும் அன்று நடந்த சோதனையில் அவை அகப்பட்டிருக்கும். சோதனை முடிந்ததும் எல்லாநூல்களும் ஒழுங்காக என் அறையில், முன் இருந்த இடத்திலே திரும்பி வந்து அமர்ந்துவிட்டன.
- ப. ராமஸ்வாமி
இரண்டாம் பதிப்புக்கான
பதிப்புரை
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாம், உலகின் நாடுகளிலும் கடந்த காலங்களில் நிகழ்ந்த பல்வகை விடுதலைப் போராட்டங்கள், புரட்சிகள் பற்றிய வரலாறுகளையும் அனுபவங்களையும் அறிந்திருப்பது மிகவும் அவசியமானது. அதன்மூலமே நாம், எமது போராட்டத்தினை தடைகளை மீறியும், சரியான திசையிலும் முன்னெடுத்துச் சென்று, எமது இலக்கினை அடைய முடியும்.
விடுதலைப் போராட்டங்களும் புரட்சிகளும் பல்வகைப்பட்டன. குடியேற்றவாதத்திற்கு எதிராகப் போராடி விடுதலை பெற்ற நாடுகளில் முதலாவது நாடு ஐக்கிய அமெரிக்காவாகும். அது, இரு நூற்றியொன்பது ஆண்டுகளுக்கு முன், 1776-இல், பிரித்தானியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பல, மேற்கத்தைய குடியேற்ற ஆதிககத்தினை எதிர்த்து விடுதலை பெறுவதற்காகத் தேசிய விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டன. அவ்வாறு போராடி விடுதலை அடைந்த நாடுகளுள் இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா என்பன அடங்கும்.
ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளித்துவம், பிரபுத்துவம் என்பவற்றை எதிர்த்து வெற்றிபெற்ற சோசலிசப் புரட்சி என்ற வகையில் ரஷ்யப் புரட்சி உலகின் சகல புரட்சிகளுக்கும் முன்னுதாரணமாகும்.
மேற்கத்தைய அரைக் காலனித்துவம், யப்பானிய ஏகாதிபத்தியம், உள்நாட்டுப் பிரபுத்துவம் ஆகிவற்றிற்கு எதிரான சோசலிசப் புரட்சியாக அமைந்தது சீனாவில்.
அமெரிக்காவின் நவகாலனித்துவத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டமாகவும் சமூக மாற்றத்திற்கான புரட்சியாகவும் அமைந்தது கியூபப் புரட்சி.
ஆசியாவில், நவகாலனித்துவத்திற்கு எதிரான விடுதலைப்போராட்டமாக அமைந்த வகையில் ஈரானியப் புரட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வரிசையில் நிக்கரகுவா புரட்சியும், எல் சவ்வடோர் போராட்டமும் அடங்கும்.
பல்தேசிய இன அரசமைப்புகளைக் கொண்ட நாடுகளில் தேசிய இன ஒடுக்குமுறை நிகழும்போது, அவ்வாறு ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றோ பலவோ அந்த அரசிலிருந்து பிரிந்து தமக்கென ஒரு புதிய அரசை நிர்மானிப்பதற்கான போராட்டம் அகக் காலனித்துவ எதிர்ப்புப் (Anti Internal Colonialism) போராட்டம் ஆகும். அயர்லாந்து, பங்களாதேஷ் விடுதலைப் போராட்டங்களும், சைப்பிரஸில் துருக்கிய இனப்போராட்டமும், பிலிப்பைன்ஸில் மித்தனாபோராட்டமும் மேற்கூறிய பிரிவுள் அடங்கும். இந்த வரிசையில் எமது தமிழீழ விடுதலைப் போராட்டமும் இடம் பெறுகிறது.
ஆக, விடுதலைப் போராட்டங்களும், புரட்சி அனுபவங்களும் கூடகாலத்திற்குக் காலம், நாட்டிற்கு நாடு மாறுபடுகின்றன. இவை காலம், இடம் என்பவற்றிற்கும் மேலாக சர்வதேச அரசியல் சூழல், புவியியல் அமைப்பு, அரசியல், சமூக அமைப்புப் போன்ற பல்வேறு காரணிகளையும் பொறுத்து மாறுபடுகின்றன.
எனவே, அத்தகைய வரலாறுகளையும் அனுபவங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டு மக்கள்.அறிவதன் மூலம், அத்தகைய வரலாறுகளிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் எந்ததெந்த அம்சங்களை நேரடியாகவே தாமும் பிரயோகிக்கலாம், எந்தெந்த அம்சங்களைத் தமக்கேற்ப மாற்றத்துடன் பிரயோகிக்கலாம், எந்தெந்த அம்சங்கள் தவிர்க்கப்டவேண்டும், அல்லது செய்யத் தக்கவை எவை, செய்யத் தகாதவை எவை போன்ற அம்சங்களை அறிந்துக்கொள்ளலாம்.
அவ்வாறு நோக்குமிடத்து, ஐரிஷ் (அயர்லாந்து) விடுதலை போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குமிடையே நிறைந்த ஒற்றுமை உண்டு. பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளர்ந்த அந்தப் போராட்டம் 750 ஆண்டுகளாகியும் இன்னும் தொடர்கிறது. அந்த நீண்ட வரலாற்றில் பல அரசி யல் தலைவர்களும் விடுதலைப் போராளிகளும் அப்போராட்டத்தை முன்னெ முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தத்தம் பங்களிப்புகளை நல்கியுள்ளனர். 1916-48 காலப் பகுதியில் சிறப்புப் பெற்ற தலைவர்கள்.ஆர்தர் கிரிபித், மைக்கேல் கொலின்ஸ், டி வலெரா. இவர்களுக்கு இணையாகக் குறிப்பிடத் தகுந்த ஒரு போராளி தான்பிரீன். வீரம் செறிந்த அவனது போராட்டம், இந்நூலில் இடம் பெறுகிறது.
'பாம்பின் கால் பாம்ப்றியும்' என்ற முதுமொழிக்கிணங்க, தான்பிரீனின் போராட்ட உணர்வினை எமது போராளிகள் மத்தியிலும் தொற்றவைக்கும் நோக்கில் தான்பிரீன் பற்றிய நூலை எங்கிருந்தோ முத்துக் குளித்து கண்டெடுத்தவர், தமிழீழப் போராளிகளின் தளபதிகளில் ஒருவர். அதனை மக்களிடையே பரப்பும் நோக்கில் நூலாக்கம் செய்யவென, பிரதி எடுத்து வைத்திருந்தார் மற்றுமொரு தமிழிழப் போராளி. ஆனால் துரதிஷ்ட வசமாக, அவர்கள் எண்ணம் நிறைவேறுமுன்பாகவே, வீரமரணமடைந்துவிட்டனர்; அந்த இருவர் வாழ்க்கையும் கூட இன்று வரலாறுகிவிட்டது. எனினும், அவர்களின் அந்த உணர்வு பல்லாயிரம் போராளிகளை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அவ்விருவரதும் உடனடி நோக்கமான நூல் வெளியீடு இன்று கைகூடுகிறது. இதுபோலவே அவர்களதும், அவர்களை ஒத்த பலரதும், பரந்துபட்ட மக்களதும் இலக்கான விடுதலையை அடைந்தே தீருவோம் என்பது திண்ணம்.
பிரதியெடுக்கப்பட்ட கையெழுத்துப்பிரதியே எமக்குக் கிடைத்த நிலையில் அதன் ஆசிரியர் பற்றி அதிற் குறிக்கப்படாமையால் நூலாசிரியர் பெயர் தெரியாதிருந்தது. எனினும் நூலில் இடம்பெற்ற 'ஒரு வார்த்தை', முன்னுரை ஆகியவற்றின் ஊடாக, 1932 - 34 காலப் பகுதியில் நூலாசிரியர் திருச்சிச் சிறையில் அரசியல் கைதியாக இருந்த காலத்தில் எழுதியுள்ளார் என்பது புலனாகிளது. மேலும், முன்னுரையிலிருந்து, நூலாசிரியர், தான்பிரீன் நூலைத் தவிரவும் மைக்கேல் காலின்ஸ் பற்றியும், டொரென்ஸ் மாக்ஸ்வினியின் சுதந்திரத் தத்துவங்கள் பற்றியும் எழுதியிருப்பது தெரியவந்தது. இதனடிப்படையில் தேடிப்பார்க்கையில் மைக்கேல் காலின்ஸ் கிடைத்தது. அதனைப் படித்துப் பார்த்ததில் அந்நூலில் உள்ள குறிப்புகளினூடாகவும், தான்பிரீன் பற்றிய நூலையும், மைக்கேல் காலின்ஸ் நூலை எழுதிய திரு. ப. ராமஸ்வாமி என்பவரே எழுதினார் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.
மேலும், இந்நூல் பிரசுரமான ஆண்டு எதுவென்பது தெரியாவிடினும், 1947 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்த மேற்படி மைக்கேல் காலின்ஸ் என்ற நூலில், சுதந்திரவீரன் தான்பிரீன் என்ற தலைப்பில் இந்நூல் வெளிவந்திருந்தற்கான ஓர் அடிக்குறிப்புக் காணப்படுவதால் 1947ஆம் ஆண்டுக்கு முன்பே இந்நூல் வெளிவந்திருந்தது என்பது தெளிவு. நூலின் தலைப்பையும் பொருத்தம் கருதி நாம் மாற்றியுள்ளோம்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள 'ஒரு வார்த்தை', முன்னுரை ஆகிய பகுதிகளையும் நூலாசிரியரே எழுதியுள்ளார். அதேவேளை, தான்பிரீனின் போராட்டத்தினை, அயர்லாந்தின் விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் இணைத்துப் பார்க்கும்போதே முழுமை ஏற்படும் என்ற நோக்கில் அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறும், மேலும் தான் பிரீன் பற்றிய ஒரு குறிப்பும் இந்தப் பதிப்பில் எம்மால் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்விரு பகுதிகளையும் உதயன் எழுதியுள்ளார். மேலும் ஆங்காங்கே முக்கியத்துவம் கருதி தடித்த எழுத்துக்கள் எம்மால் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தவிரவும், தமிழகத்தில் வழக்கில் உள்ள ரஸ்தா, தானாக்காரன் போன்ற சொற்கள் எம்மிடையே வழக்கில் இல்லாத காரணத்தால் தெரு அல்லது வீதி, போலிஸ்காரன் போன்ற சொற்களை இங்கு நாம் கையாண்டுள்ளோம் என்பதையும் குறிப்பிடுவது அவசியம். நூலின் இறுதியில் காணப்படும் இரு கவிதைகளும் பொருத்தம் கருதி எம்மால் சேர்க்கப்பட்டுள்ளன.
மக்களை அரசியல்மயப்படுத்தும் நோக்கில் மறுமலர்ச்சிக் கழகம் அவ்வப்போது நூல்களை வெளியிட்டுவருகிறது. அந்த வரிசையில் தான்பிரீன் பற்றிய இந்நூலை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
விடுதலைப் போராட்ட வரலாற்று நூல்கள் தமிழில் மிக அரிதாக காணப்படுகின்றன. நாமறிந்த வரையில் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பாக தமிழில் கணிசமான நூல்கள் வெளிவந்துள்ளன என்ற போதும் விஞ்ஞானபூர்வமான நூல்கள் மிகச் சிலவே. அவையும்கூட இப்போது இங்கு கிடைப்பது அரிது.
இந்நிலையில் மறுமலர்ச்சிக்கழம் ஏற்கனவே மிந்தனா பற்றி ஒரு சிறுபிரசுரத்தினையும், கியூபா - புரட்சிகர யுத்தம் என்ற நூலினையும் வெளியிட்டுள்ளமையை நினைவுகூறுகிறோம். மேலும், நிக்கரகுவா பற்றிய நூலொன்று அச்சு வேலை முடியுந்தறுவாயில் அச்சகத்திலிருந்து கிறீலங்காாணுவத்தினால் கைப்பற்றபட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்நூலினை விரைவில் மீண்டும் அச்சிட்டு வெளியிடுவோம் என்பதையும் கூற விரும்புகிறோம்.
மறுமலர்ச்சிக் கழகம்
யாழ் பல்கலைக் கழகம்
யாழ்ப்பாணம்
29. 8. 85
மூன்றாம் பதிப்புக்கான
பதிப்புரை
* * *
சில ஆண்டுகளுக்கு முன் காலமான இந்திய விடுதலைப் போராட்ட இயக்க வீரர். ப. ராமஸ்வாமி அவர்கள் அயர்லாந்து விடுதலைப் போராட்டம் குறித்து மூன்று நூல்கள் எழுதியுள்ளார். அதிலொன்றுதான் அயர்லாந்து விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய கெரில்லாப் போர்வீரன் தான்பிரீன் (டேன் பிரையன்) வரலாறும் ஆகும். நூலாசிரியர் எழுதிய முன்னுரையிலிருந்து அந்த நூல் 1947ல் தான் முதன் முதலில் வெளியிடப்பட்டது என்று அனுமானிக்கலாம். அதனை முதன் முதலில் வெளியிட்ட பதிப்பகத்தாரின் விபரம் நமக்குக் கிடைக்கவில்லை.
இந்த நூலைக் கண்டறிந்தவர் அதனுடைய இரண்டாம் பதிப்பினை வெளியிட்ட மறுமலர்ச்சிக் கழகம், யாழ் பல்கலைக் கழகம் தனது பதிப்புரையில் கூறுவது போல ஓர் ஈழப் போராளியாவார். அதனைப் படி எடுத்தவரும் ஒரு ஈழப் போராளியே. தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத்தான் இந்த நூலின் அருமை தெரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
உலகிலுள்ள எல்லாத் தேசியப் போராட்டங்களுக்கும் ஆதர்சமாகத் திகழ்வது அயர்லாந்து விடுதலைப் போராட்டமாகும். ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களிற் பலருக்கு அயர்லாந்துப் போராட்டம் முன்னெடுத்துக்காட்டாக இருந்தது போலவே இன்று ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் அது உத்வேகமும் உற்சாகமும் தந்து வருகின்றது. தமிழ்நாட்டிலும் அயர்லாந்துப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் பலரிடையே அதிகரித்து வருகின்றது.
அந்த ஆவலை நிறைவு செய்யும் வகையில் தோழர் எஸ். வி. ராஜதுரை 'தமிழர் கண்ணோட்டம்' ஏட்டில் தொட்ர்கட்டுரை எழுதி வருகின்றார். அயர்லாந்து மக்களின் நீண்ட புரட்சிப் போராட்டத்திலே களம் புகுந்து வீரச் செயல்கள் பல புரிந்த நாயகர்களில் ஒருவரான தான்பிரீனின் வரலாறும் ஓரளவு இப்பணியைச் செய்யும் என்பதால் இந்நூலின் மூன்றாம் பதிப்பை வெளியிட முடிவு செய்தோம்.
தான்பிரீன் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு இன்றியமையாத அயர்லாந்து போராட்ட வரலாற்றினையும் தான்பிரீன் பற்றிய குறிப்பொன்றினையும் ஈழ அறிஞர் உதயன் இரண்டாம் பதிப்பில் சேர்த்திருந்தார். அவையும் அப் பதிப்பிற்கான பதிப்புரையும் அப்பதிப்பில் இடம் பெற்றிருந்த இரண்டு கவிதைகளும் இம் மூன்றாம் பதிப்பிலும் இடம் பெறுகின்றன.
இரண்டாம் பதிப்பில் 10 ஆம் அந்தியாயத்திற்குரிய சில பகுதிகள் தவறுதலாக 11ஆம் அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டு அச்சிடப்பட்டிருந்தன. அந்தத் தவறு மூன்றாம் பதிப்பில் சரிசெய்யப்பட்டு, அப்பகுதிகள் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போல கெரில்லாப் போர் முறை குறித்து நூலாசிரியர் பிழையாக விளங்கிக் கொண்டிருந்த விஷயங்கள் திருத்தப்பட்டுள்ளன. தமிழ் நாட்டு வாசகர்களைக் கருத்தில் கொண்டு சில சொற்பிரயோகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளைச் செய்து முடித்த தோழர் எஸ். வி. ராஜதுரைக்கு என் நன்றி.
அச்சுக் கோப்புச் செய்த 'தலித் முரசு', அட்டை அமைப்பு வடிவமைத்த செய்த தோழர். வசந்த குமார் ஆகியோருக்கும் எனது நன்றி.
கோவை
பெ. சிவஞானம்
27.2.99
விடியல் பதிப்பகம்
அயர்லாந்து விடுதலைப் போராட்டம்:
ஒரு சுருக்கமான வரலாற்று அறிமுகம்
- உதயன்
* * *
ஐரிஷ் விடுதலைப் போராட்டம் 750 வருடங்களுக்கு மேலான நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டது. துப்பாக்கி என்னும் ஆயுதம் உபயோகத்திற்கு வருமுன்னரே வெட்டுக் கருவி, குத்துக் கருவி என்பவற்றின் துணைகொண்டு ஆங்கிலோ-நார்மன்ஸினரால் அயர்லாந்து கைப்பற்றப்பட்டது. கத்தி, கோடரி கொண்டு நாட்டைக் கைப்பற்றியவர்களால், பின்பு வீறுகொண்டெழுந்த விடுதலைப் போராட்டத்தைத் துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணை என்பன கொண்டும் கூட நசுக்கிட முடியவில்லை. உலக வல்லரசான அமெரிக்காவின் நவீன ஆயுதங்கள் வியட்நாமில் மண்கவ்வின; ஈரானில் ஷா மன்னர் தரித்திரிந்த அமெரிக்க ஆயுதங்கள் ஈரானிய மக்களின் புரட்சிப் பிரவாகத்தாற் சரிந்து வீழ்ந்தன. ஆயுத பலத்தால் மக்களை ஒடுக்கி நசுக்கிவிட முடியாது; மக்களே வரலாற்றின் நாயகர்கள் என்ற உண்மையை ஆயுத பலம்கொண்ட சாத்தான்களுக்கு மக்கள் பலம் எப்போதும் பாடம் புகட்டிக் கொண்டே இருக்கின்றது. மக்கள் பலத்துடன் போராளிகளின் ஆயுதங்கள் ஒருபடி உயரும்போது சாத்தான்களின் ஆயுதங்கள் ஓராயிரம் படிகள் வீழ்கின்றன. இந்த வகையில் பிசாசுகளின் கையிலுள்ள ஆயுதங்களைச் சரியவைப்பதற்கு எழுந்த ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்களுள் ஐரிஷ் விடுதலைப் போராட்டமும் ஒன்றாகும்.
அயர்லாந்து பிரிட்டனுக்கு மேற்கே 50 மைல் தொலைவிலுள்ள ஒரு தீவாகும். அயர்லாந்தில் அல்ஸ்டர் (Ulster), முன்ஸ்டர் (Munster), லீன்ஸ்டர் (Leinster), கொன்னாச் (Connacht) என நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இன்று இவ் அயர்லாந்து இரண்டு பகுதிகளாகப் பிரிவினை செய்யப்பட்டுள்ளது. ஒன்று அல்ஸ்டர் என்னும் பிராந்தியத்தைக் கொண்ட வட அயர்லாந்தும் மற்றது ஏனைய மூன்று பிராந்தியங்களையும் கொண்ட தென் அயர்லாந்துமாகும். வட அயர்லாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழுள்ள ஒரு பகுதியாகவும், தென் அயர்லாந்து, அயர்லாந்துக் குடியரசாகவும் இன்று அமைந்துள்ளன. அயர்லாந்துக் குடியரசின் பரப்பளவு 26,600 சதுரமைலாகும். மக்கள் தொகை 30,00,000 ஆகும். (1971ஆம் ஆண்டுக்கணிப்பீடு). வட அயர்லாந்தின் பரப்பளவு 5,462 சதுர மைல், சனத்தொகை 15,00,000 ஆகும். 1922 ஆம் ஆண்டு தென் அயர்லாந்து பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழான சுதந்திர அரசு (Irish Free State) என்ற உரிமையைப் பெற்றது. பின்பு இது 1948ஆம் ஆண்டு குடியரசாகியது. ஆனால் வட அயர்லாந்து ஆங்கில ஆதிக்கத்தின்கீழ் ஒரு மாகாணமாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
இனி அதன் வரலாற்றைச்சற்று நோக்குவோம். கி.பி. 1166 ஆம் ஆண்டு ஆங்கிலோ - நார்மன்ஸினர் அயர்லாந்தின் மீது படையெடுத்தனர். 1170ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் இரண்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தின் கீழ் அயர்லாந்து கொண்டு வரப்பட்டது. கடலரசியென்றும், உலக வல்லரசென்றும், சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியமென்றும் நாம் கேள்விப்பட்ட ஆங்கில நாட்டை எதிர்த்து அயர்லாந்து மக்கள் தாம் கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து போராடிவந்தனர். காலத்துக்குக் காலம் சில கட்டங்களில் போராட்டம் உக்கிரமடைந்தும், சில கட்டங்களிற் தொய்வடைந்தும் வந்துள்ளது. இப்போராட்டத்தில் மிதவாதம், சமரசம், ஆட்சியாளரோடு கூட்டுச்சேர்வு, காட்டிக் கொடுப்பு, இயக்கங்களிடையேயான முரண்பாடு போன்ற பல அம்சங்கள் இருந்தன. இவற்றால் ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டபோதிலும் இவற்றையும் மீறி வரலாறு முன்னேறத்தான் செய்தது.
இங்கிலாந்து ஒரு பெரும் வல்லரசாக வளர்ச்சி அடைவதற்கு அயர்லாந்தை முழுமையாக இங்கிலாந்தின் பிடிக்குள் வைத்திருக்க வேண்டியது, புவியியல் இட அமைவு, யுத்தம் கேந்திரம் என்பன பொறுத்தும், இங்கிலாந்திற்குத் தேவையான உணவுப்பண்ட உற்பத்தி பொறுத்தும் அவசியமாயிருந்தது. மேலும் பிற்காலத்தில் இங்கிலாந்தின் தொழிலுற்பத்திப் பொருட்களுக்கான சந்தையாகவும் அயர்லாந்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்கான சகல முயற்சிகளையும் இங்கிலாந்து தொடக்கத்திலிருந்தே கையாண்டு வந்தது.
கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்தே ஆட்சியாளர் மேற்கொண்ட நடவடிக்கைகளையும், மக்கள் மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளையும், இங்கு சுருக்கமாகப் பொதுமைப்படுத்தி நோக்குதல் பொருத்தமானதாகும். கைப்பற்றிய ஆரம்ப காலத்தில் ஆங்கிலோ-நார்மன் படையினர் சூறையாடல்களில் ஈடுபட்டனர். இப்படைகளை எதிர்த்து மக்கள் ஆங்காங்கே தம்மாலியன்ற போராட்டங்களைச் செய்தனர். அணியணியாகக் குதிரைகளிற் செல்லும் இராணுவத்தினை பதுங்கியிருந்து மக்கள் கொலைசெய்வதில் ஈடுபட்டனர். இராணுவம் தனக்குத் தேவையான தானியங்களைச் சூறையாடிவிட்டு மிகுதியான தானியங்களுக்கும், பயிருக்கும், குடிசைகளிற்கும் தீவைப்பதுண்டு. இதனால் மக்கள் இராணுவத்தினரின் கையிற் தானியங்கள் அகப்படாதிருப்பதற்காகத் தமது தானியத்திற்கும் பயிருக்கும் தாமே தீவைப்பதுமுண்டு. மக்கள் பலவேளைகளில் இராணுவத்தை உணவின்றி இறக்க வைத்திருக்கிறார்கள். மக்களும் பஞ்சத்தால் இறந்திருக்கிறார்கள்.
அயர்லாந்தை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்குக் குடியேற்றங்களை ஸ்தாபிப்பதே சிறந்த வழியென ஆட்சியாளர் எண்ணி கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிற் குடியேற்றங்களை ஸ்தாபிக்க முற்பட்டனர். ஒரு மக்கள் கூட்டத்தின் தேசியத் தன்மையை அழித்தொழிப்பதற்கும் போராட்டங்கள் எழவிடாது ஊடறுப்பதற்கும் ஒரு சிறந்த வழியாக குடியேற்ற முறைமை அமைந்துள்ளதென்பது தெளிவாகும். அரசியற் சிந்தனையாளர் மாக்கியவல்லி என்பவர் குடியேற்றம் சம்பந்தமாகக் குறிப்பிட்ட கருத்தினை இங்கு நோக்குதல் பொருத்தமாகும். "அரசன், தான் கைப்பற்றிய பகுதியைத் தனது ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமாயின் அங்கு தனது குடியேற்றங்களை ஸ்தாபிப்பது, இராணுவ முகாம்களை ஸ்தாபிப்பதைவிட மேலானதாகும். ஏனெனில் இராணுவத்துக்கு அரசனே ஊதியம் கொடுக்க வேண்டும்; அதே வேளை இராணுவத்தினர் அந்த மண்ணுக்கு பரிச்சயமானவர்களல்ல; ஆனால் குடியேற்றம் அவ்வாறில்லை. அவர்கள் அந்த மண்ணுக்குப் பரிச்சயமாகிவிடுவார்கள். அவர்களுக்கு அரசன் ஊதியம் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் கூலிக்காக மாரடிப்பவர்களாகவன்றி சந்ததி சந்ததியாக தமது உயிர் வாழ்விற்காக உணர்ச்சியோடு நின்று தாக்குப்பிடிக்கக் கூடியவர்கள். எனவே குடியேற்றம் இராணுவத்தைவிட மேலான நிரந்தர இராணுவமாகும்“ என்று குறிப்பிட்டார். இந்த வகையில் குடியேற்றமென்பது கைப்பற்றப்பட்ட மக்கள் பொறுத்து மிகவும் அபாயகரமானதென்பது உண்மையாகும். பொதுவாக உலகிலுள்ள படையெடுப்பாளர்கள் அனைவரும் குடியேற்றங்களை ஸ்தாபிப்பதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார்கள். அவ்வகையில் இங்கிலாந்தும் அயர்லாந்திற் குடியேற்றங்களைத் ஸ்தாபிக்க முற்பட்டது.
ஆங்கிலேயர் அயர்லாந்திற் குடியேற்றங்களை ஸ்தாபிக்கும் போதெல்லாம் ஐரிஷ் மக்கள் தீரத்துடன் அதனை எதிர்த்துவந்தார்கள். குடியேற்றுபவர்களை ஆங்காங்கே கொலைசெய்தார்கள். பலரை உயிருடன் பிடித்து காது, நாக்கு என் பனவற்றை அறுத்து விடுவார்கள். இவ்வாறு காது, நாக்கு என்பவற்றை அறுத்துவிட்டு அனுப்புவதன் நோக்கமென்னவெனில் இவர்களைக் காணும் ஆங்கிலேயர் யாரும் குடியேற வரமாட்டார்கள் என்பதுதான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இராணுவத்தினரையும், குடியேற்றக்காரரையும் கொன்று தொலைப்பதில் மக்கள் அக்கறை காட்டினர்.
இங்கிலாந்திலிருந்து கொலைக் குற்றவாளிகள், திருடர்கள், காவாலிகள், வீதிகளில் அலைந்து திரிந்தோர் முதலான சனங்கள் அயர்லாந்திற் குடியேற்றப்பட்டும், இராணுவ சேவைகளில் அமர்த்தப்பட்டும் வந்தார்கள். இங்கிலாந்திலுள்ள குற்றவாளிகளின் வேட்டைக் களமாக அயர்லாந்தை ஆக்கினார்கள். ஆனால், ஐரிஷ் மக்கள் இந்த குற்றவாளிகளுக்கு தமது புனிதமண்ணில் தண்டனை வழங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். எப்படியோ ஆங்கிலேயரின் சவக்குழியாய் அயர்லாந்து இருந்தது.
மத்தியகால ஐரோப்பாவிற் தோன்றிய மதப்பிளவுக்கும் மதப்போருக்கும் அயர்லாந்து விதிவிலக்காகவில்லை. இங்கிலாந்து புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவியது. அயர்லாந்தில் ரோமன் கத்தோலிக்க மதமே வேரூன்றி இருந்தது. இந்த நிலையில் ஆங்கிலேயருக்கும் ஐரிஷ்காரருக்கிமிடையிலான போராட்டம் மதப்போராட்டமாகவும் மாறிவிட்டது. ஆட்சியாளர் புரட்டஸ்தாந்து மதத்தையும் ஆங்கில மொழியையும் ஐரிஷ் மக்கள் மீது திணிக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.
ஒரு வல்லரசாக எழுச்சி பெற்று வந்த இங்கிலாந்து திட்டமிட்டு அயர்லாந்துக்கெதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதே வேளை ஐரிஷ் மக்கள் திட்டமின்றி, ஒருங்கிணைப்பின்றிச் சிதறுண்ட நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்ததால் ஆங்கிலேயர் மொழிமாற்றம், மத மாற்றம், குடியேற்றம் என்னும் அம்சங்களிற் குறிப்பிடத்தக்களவு வெற்றிகளை அடைந்தனர். வட அயர்லாந்து முழுவதிலும் ஐரிஷ் மொழி (Gaelic Language) கைவிடப்பட்டு ஆங்கில மொழி உபயோகத்திற்கு வந்தது. சிறு தொகையினர் புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவிக் கொண்டனர். இவ்வாறான மாறறங்கள் நிகழத் தொடங்கிய ஆரம்ப கட்டங்களில் ஐரிஷ் மொழியைக் கைவிட்டோர், ஆங்கிலக் கலாசாரம், உடைகள் என்பவற்றைப் பின்பற்றுவோர், மதம் மாறுவோர் என்போர்கத்தோலிக்க ஐரிஷ் மக்களால் ஆங்காங்கே கொல்லப்பட்டு வந்தனர். இவ்வாறான நடவடிக்கைகளால் இம்மாற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் இந்நடவடிக்கைகள் தடைகளை ஏற்படுத்த மட்டுமே உதவின.
ஐரிஷ் மக்கள் தமது சொந்தப் பூமியிலேயே தமது நிலங்களை இழந்து வந்தார்கள். கத்தோலிக்க ஐரிஷ் மக்களின் கையிலிருந்து முதலில் ஆங்கிலேயர் கைக்கும், புரட்டஸ்தாந்தினரின் கைக்கும் நிலங்கள் மாறிவந்தன. 1703 ஆம் ஆண்டு 14% நிலங்கள் மட்டுமே ரோமன் கத்தோலிக்க ஐரிஷ் மக்களின் கையிலிருந்தது. ஐரிஷ் மக்கள் தமது நாட்டைவிட்டுப் படிப்படியாக வெறியேறி அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறத் தொடங்கினர். 1847 ஆம் ஆண்டு அயர்லாந்திற் பெரும் பஞ்சமேற்பட்டது. இதில் இரண்டரை லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள். ஏறக்குறைய 7% இலட்சம் மக்கள் அயர்லாந்தைவிட்டுக் குடிபெயர்ந்தார்கள்.
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தேசிய விழிப்புணர்ச்சி பெரிதும் ஏற்பட்டது. 1847ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் ஆங்கிலேயர் மீது அதிக வெறுப்புணர்ச்சியை ஐரிஷ் மக்களின் மத்தியில் உருவாக்கியது. ஐரிஷ் மொழி, கலாசாரம் என்பவற்றைப் புதுப்பித்தல் என்பதற்கான இயக்கம், நிலச்சீர்திருத்தங்களுக்கான இயக்கம் என்பன தோன்றின. அயர்லாந்து தனி அரசாக அமைய வேண்டுமென்ற சிந்தனை வலுவடையத் தொடங்கியது. அயர்லாந்து தனியரசாக அமையவேண்டுமா வேண்டாமா என்ற வாதப் பிரதிவாதங்கள் கூட எழுந்தன. அயர்லாந்து ஒரு தனியரசாக அமையக்கூடாதென்ற கருத்தினை கார்ல் மார்க்ஸ் 1850களில் 60களின் மத்தியிலும் கொண்டிருந்தார். ஆனால் அவர் 1857 ஆம் ஆண்டு இக்கருத்தினை மாற்றி அயர்லாந்து பிரிட்டனியாவிடமிருந்து ஒரு தனியரசாகப் பிரிய வேண்டுமென்ற கருத்தினை வெளியிட்டார். [Previously I thought Ireland's separation from England impossible: Now I think it inevitable..." Marx(1967)] மேலும் மார்க்ஸ் 1869 ஆம் ஆண்டு இதுபற்றி குறிப்பிடுகையில் ஆழமான ஆய்வின் மூலம் அயர்லாந்து பிரிவதுதான் சரியென்ற நம்பிக்கை என்னிடம் ஏற்பட்டுள்ளது என்றார். [Deeper study has now convinced me of the opposite"... Marx (1869)] இதனைத் தொடர்ந்து மார்க்ஸ் அயர்லாந்து விடுதலை அடையவேண்டுமென்பதற்காகத் தன்னாலானவரை உழைத்தார். அயர்லாந்துப் போராட்டம் தனியரசுக் கோரிக்கையை நோக்கி வளர்ந்து சென்றது.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அயர்லாந்தில் பல இயக்கங்கள் தோன்றின. அவற்றைப் பண்புரீதியாக மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, அயர்லாந்து பிரிட்டனுடன் ஐக்கியமாக இருக்கவேண்டுமென்ற ஐக்கியவாதிகள் (Unionists); சுயாட்சி கோரிக்கை அணியினர் (Home Rule Party); அடுத்து குடியரசுவாதிகள் (Republicans) என்பனவாகும். போராட்டம் அதிகாரித்துவரும் வேளையில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்கலாமென லிபரல் அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் 1880களின் நடுப்பகுதிகளில் குறிப்பிட்டனர். இதற்காக 1886 ஆம் ஆண்டு சுயாட்சி மசோதா (Home Rule Bill) பொதுமக்கள் சபையில் (House of commons) கொண்டுவரப்பட்டது. இம்மசோதா பொதுமக்கள் சபையிலே தோற்கடிக்கப்பட்டது. ஆயினும் இதனை நிறைவேற்றத்தான் முயலப் போவதாக லிபரல் அரசாங்கப் பிரதமர் குறிப்பிட்டார். பின்னர் 1893ஆம் ஆண்டு பொதுமக்கள் சபையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்ட போதிலும் பிரபுக்கள் சபையில் இது நிராகரிக்கப்பட்டது. பரிவுகாட்டும் முறையால் சுயாட்சிக் கொள்கையை அழித்துவிடு' (Kill Home Rule by Kindness) என்ற கருத்தினை முன்வைத்து கன்சர்வேட்டிவ் கட்சியினர் செயற்பட்டனர்.
இதன் மத்தியில் பேச்சு வார்த்தையாற் பயனில்லையென்றும் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அயர்லாந்தை விடுவிக்க முடியுமென்ற கொள்கை உறுதிபெறுகின்றது. இளைஞர் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினர். ஐரிஷ் மக்களின் உரிமைகளை முற்றாக மறுப்பதன் மூலம்போராட்டம் உக்கிரடைந்து இறுதியில் அயர்லாந்து விடுதலை அடைந்து விடுமென்பதையும் உணர்ந்த ஆங்கில ஆட்சியாளர் போராட்டத்தை தணிப்பதற்காகச் சில உரிமைகளைக் கொடுக்கும் சீர்திருத்தங்களைச் செய்ய முன்வந்தனர்.
பெரும் வரையறைகளுடன் 1914ஆம் ஆண்டு சுயாட்சி மசோதா (Home Rule Act) சட்டமாக்கப்பட்டது. இச்சுயாட்சிச்சட்டம் குடியரசுவாதிகளைத் திருப்திப்படுத்தவில்லை. அவர்கள் பூரண குடியரசுக் கொள்கையையே முன்வைத்தனர். இச்சட்டம் அயர்லாந்துக்குள் பிரச்சினையைத் தோற்றுவித்து விட்டது. சுயாட்சிவாதிகளுக்கும், குடியரசுவாதிகளுக்கும் இடையே முரண்பாடுகள் பெரிதும் ஏற்பட்டன. சமரசத் தலைமை மக்களைப் பெரிதும் ஏமாற்ற முனைந்தது. குடியரசுக் கொள்கையை முன்னணிக்குள் கொண்டுவரக் குடியரசுவாதிகள் பெரிதும் முயன்றனர். இந்நிலையில் 1916ஆம் ஆண்டு குடியரசைவிரும்பும் தீவிர இயக்கங்கள் சில ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டன. இவ்வாயுதம் தாங்கிய எழுச்சி அடக்கப்பட்டது. இக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட முக்கிய முன்னணிப் பேராளிகள் 15 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுக் கொள்கை பெரிதும் செல்வாக்குப் பெற்றது. இதன் பின்பு 1918ஆம் ஆண்டு அயர்லாந்தில் பொதுமக்கள் சபைக்கான பொதுத் தேர்தலின்போது மொத்தம் (அயர்லாந்தில்) 105 இடங்களில் 73 இடங்கள் குடியரசுவாதிகளுக்கும், 26 இடங்கள் ஐக்கியவாதிகளுக்கும், 6 இடங்கள் சுயாட்சிவாதிகளுக்கும் சிடைத்தன. இதனைத் தொடர்ந்து குடியரசுவாதிகள் பொதுமக்கள் சபையைப் பகிஷ்கரித்து டி வலெரா (De Valera) என்பவரை ஜனாதிபதியாகக் கொண்ட அயர்லாந்துக் குடியரசைப் பிரகடனப்படுத்தினர். ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றன. 1919 - 21 வரை Anglo-Irish War என வர்ணிக்கப்படும் யுத்தம் நிகழ்ந்தது.
குடியரசுப் பேராளிகள் கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பதினைந்து பேர் முதல் இருபத்தைந்து பேர் வரையான வீரர்கள் அடங்கிய குழுக்கள் ஒவ்வொரு தாக்குதலிலும் ஈடுபடுத்தப்பட்டன. மறைந்திருந்து இராணுவத்தைத் தாக்குதல், அரசின் பிரதான மையங்களைத் தகர்த்தல், அரசுப் படைகளுக்கான தொடர்புகளைத்துண்டித்தல், இராணுவத்தினருக்கான உணவு விநியோகங்களைத் தடைசெய்தல் போன்ற தாக்குதல்கள் இடம்பெற்றன. அரசுப்படை வெறிநாய்போல நடந்துகொண்டது; கிலிகொண்டது. கெரில்லாக்கள் என்ற சொல்லைக் கேட்டாலே அரசுபடை திகைக்குமளவு கெரில்லாத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்நிலையில் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் குடியரசுவாதிகளின் பிரதான கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதாயும் அரசாங்கம் அறிவித்தது. குடியரசுவாதிகளும் பேச்சு வார்த்தையிற் கலந்து கொள்ள முன்வந்தனர்.
பேச்சுவார்தையிற் கலந்துகொள்ள ஆர்தர் கிரிபித் (Arthur Griffith), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) ஆகிய தலைவர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு பேச்சுவார்த்தையின் கலந்துகொள்வதற்கு டி வலெராவும் சம்மதித்தார். பேச்சுவர்த்தையின்போது முழு அயர்லாந்துக்கும் சுதந்திரம் தரமுடியாதென்றும், வட அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து மதத்தினரே பெரும்பான்மையினர், ஆகையால் அது பிரிட்டனுடன் இணைந்ததொரு மாகாணமாகவே இருக்குமென்றும், கனடாவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைப்போல (பிற்காலத்தில் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பிரிட்டிஷார் வழங்கிய சுதந்திரம் போல) பிரிட்டிஷ் முடியாட்சியின்கீழ் தென் அயர்லாந்துக்கு சுதந்திரம் வழங்கலாமெனவும் ஆட்சியாளர் குறிப்பிட்டனர். இது Irish Free State திட்டம் என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு அயர்லாந்து வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்படுவதையும், தொடர்ந்தும் பிரிட்டிஷ் முடியாட்சியின்கீழ் அயர்லாந்து இருக்கவேண்டுமென்பதையும் அயர்லாந்திற் பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் இருப்பதையும் டிவலெரா உட்படக் குடியரசுவாதிகளின் ஒரு பிரிவினர் வன்மையாக எதிர்த்தனர். ஆர்தர் கிரிபித், மைக்கேல் காலின்ஸ் போன்றோர் Irish Free State திட்டத்தை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று வாதிட்டனர். இறுதியில் குடியரசுவாதிகளின் பெரும்பான்மையினரால் Irish Free State திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1921ஆம் ஆண்டு irish Free State உடன்படிக்கையை ஏற்று ஆர்தர் கிரிபித், மைக்கேல் காலின்ஸ் என்போர் கையெழுத்திட்டனர். 1922ஆம் ஆண்டு Irish Free State என்ற பெயரில் தென் அயர்லாந்தில் கிரிபித், காலின்ஸ் ஆகியோரின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டது. வட அயர்லாந்து (Ulster) பிரிட்டனுடனேயே இணைக்கப்பட்டது. டிவலெரா உட்படக் குடியரசுவாதிகளின் ஒரு பிரிவினர் Irish Free State ஐயும் வட அயர்லாந்து தென் அயர்லாந்திலிருந்து பிரிக்கப்பட்டதையும் எதிர்த்துப்போராட்டத்தில் ஈடுபட்டனர். iris, Rupublican Army யில் (IRA) ஒரு பிரிவினர் புதிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இராணுவமாகினர். மறுபிரிவினர் இத்திட்டத்தினை எதிர்த்து ஆயுதம்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் ஓர் உள் நாட்டுபோர் உருவாகிவிட்டது. இதுதான் irish Civil War (1922-23) என வரலாற்றாசிரியர்களால் வர்ணிக்கப்படும் போராய் இடம்பெற்றது. உள்நாட்டுப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கையிலே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த இரு தலைவர்களில் ஒருவான கிரிபித் 1922 செப்டம்பர் முதல்வராத்தில் இயற்கை மரணமெய்தினார். அதேமாதம் பிற்பகுதியில் மற்றவரான காலின்ஸ் அரச இராணுவ முகாமினைப் பார்விையடச் சென்றுகொண்டிருக்கையில் குண்டுத்தாக்குதலுக்கிலக்காகி மரணமடைந்தார். விடுதலைக்காக ஒன்றாக இணைந்து தோளோடுதோள் நின்று போராடியவர்கள் இரு அணிகளாகப் பிரித்து ஒருவரை ஒருவர் கொல்வதில் ஈடுபட்டனர். இந்த உள்நாட்டுயுத்தத்தில் எதிர்ப்புக்குழுவினர் தோல்வியுற்றனர். ஆயினும் அவர்கள் தமது கோரிக்கைகளை முற்றாகக் கைவிடவில்லை.
1932ஆம் ஆண்டு டி வலெரா அயர்லாந்தின் பிரதமரானார். பிரிட்டிஷ் முடியாட்சிக்கு விசுவாசப் பிரமாணம் செலுத்துதல் என்பது நீக்கப்பட்டது. மேலும் 1938 ஆம் ஆண்டு, அயர்லாந்திலிருந்த பிரிட்டிஷ் தளங்கள் அகற்றப்பட்டதுடன் தேசாதிபதிக்குப் பதிலாக அயர்லாந்துக்குப் பொறுப்பான ஜனாதிபதி என மாற்றம் கொண்டுவரப்பட்டது. 1938 ஆம் ஆண்டு irish Free State என்பதற்குப்பதிலாக அயர்லாந்து என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக 1948 ஆம் ஆண்டு அயர்லாந்துக் குடியரசு என பிரகடனப்படுத்தப் பட்டது. டி வலெரா 1932 முதல் 1948 வரை தொடர்ந்து பிரதமராயிருந்தார். டிவலெரா பதவிக்கு வந்தபோதிலும் இவரையும் IRA எதிர்த்தது. இவரின் ஆட்சியின் கீழ்க்கூட பல IRA உறுப்பினர் கைது செய்யப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டனர். இறுதியாக 1948 ஆம் ஆண்டு குடியரசுப் பிரகடனத்தைத் தொடர்ந்து தமது ஒரு நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கூறி அயர்லாந்து அரசுக்கெதிரான போரை விடுத்து வட அயர்லாந்தை தென் அயர்லாந்துடன் இணைப்பதற்கான போராட்டங்களில் IRA தொடர்ந்து ஈடுபடத் தொடங்கியது. இந்தவகையில் வட அயர்லாந்துப் பிரச்சினை தொடர்ந்தும் நீடிக்கும் ஒரு பிரச்சினையாக இன்று வரை இருந்து வருகின்றது.
தான்பிரீன் பற்றி
- உதயன்
* * *
போராட்டம் வளர்ச்சியடையும்போது அதனைத் தணிப்பதற்குக் காலம் கடத்தல், சில சலுகைகளைக் கொடுத்தல் போன்ற ஏமாற்றுக்களை செய்வதில் ஆங்கில ஆட்சியாளர் மிகவும் கைவந்தவர்கள். Kill by Kindness என்ற கன்சர்வேடிவ் கட்சியின் சொற்றொடர் இங்கு கவனிக்கத்தக்கது. முதலாளித்துவ வர்க்கம் பற்றிப் பொதுவாகவும், அதில் ஆங்கில ஆட்சியாளர் பற்றிக் குறிப்பதாகவும் வி. ஐ. வெனின் தனது The Task of the Proletariat in our Revolution என்னும் நூலிற் குறிப்பிட்ட கருத்தினை இங்கு அவதானித்தல் பொருத்தமுடையதாகும் : "பூர்சுவா, நிலப்பிரபுத்துவ அரசாங்கங்கள் உலகளாவிய அனுபவத்திலிருந்து அவை பொது மக்களை அடக்கி ஆள்வதற்கு இரண்டுவித வழிகளைக் கையாள்கின்றன. முதலாவது வழி பலாத்காாமாகும். முதலாம் நிக்கலஸ், இரண்டாம் நிக்கலஸ் ஆகிய ரஷ்ய மன்னர்கள் கையாண்ட அலுகோஸ் நடைமுறைகள் எதெதனை இந்தப் பலாத்கார வழி மூலமும் சாதிக்கலாம், அதன் எல்லை வரம்புகள் என்ன என்பதை இரத்தம் தோய்ந்த முறையில் எடுத்துக்காட்டியுள்ளனர். ஆனால் இன்னொரு வழியும் இருக்கின்றது. இதனை ஆங்கில, பிரஞ்சு பூர்சுவா வர்க்கங்களே மிகவும் நேர்த்தியாக வளர்ந் தெடுத்துள்ளன. இவர்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த மாபெரும் புரட்சிகள் மூலம் ஜனங்களின் புரட்சிகர இயக்கங்களின் மூலமும் பாடத்தைக் கற்றுக் கொண்டனர். ஏமாற்று வித்தைகளையும் முகஸ்துதிகளையும், அழகான சொற்தொடர்களை இந்தவழி இலட்சக்கணக்கில் வாக்குறுதிகளை அள்ளிவீசும். ஆனால், கொடுப்பதோ ஒரு சில எலும்புத் துண்டுகள், சில சலுகைகள். அதேவேளை இன்றியமையாதவற்றை பூர்சுவா வர்க்கத்தினர் கைவிடாது தம்வசமே வைத்துக்கொள்வர்.“ என்று குறிப்பிட்டார்.
இங்கு லெனின் சுட்டிக்காட்டிய இந்த இரண்டாவது வழிமுறை மிகவும் ஆபத்தானது. இது மாயாஜால வலைகளை விரித்துப் பல மூடுமந்திரங்களைக் கொண்டிருக்கும். போராட்டத்தின் கூர்மையைத் தனிப்பதிலும், மக்களை ஏமாற்றுவதிலும் இம்முறை கணிசமானளவு வெற்றிகளை ஈட்டுவது. எனவே, பூர்சுவாக்களின் இந்தக் கபடத்தனமான சூழ்ச்சியை உடைப்பதில், அவற்றைக் குழப்புவதில் கெரில்லாப் போர்முறை ஒரு பலம் பொருந்திய மார்க்கமாய் உள்ளது. இந்த வகையில் அயர்லாந்தில் ஆங்கில ஆதிக்கத்திற்கெதிராக தான்பிரீன் மேற்கொண்ட கெரில்லா நடவடிக்கைகள் ஆங்கிலேயரின் சூழ்ச்சிகளையும், சமரசங்களையும் குழப்புவதில் ஒரு பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது. அதாவது 1900 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை ஆங்கிலேயர், ஐரிஷ் மிதவாதத் தலைவர்களையும், ஐரிஷ் மக்களையும் தொடர்ந்து காலம் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் ஏமாற்றி வந்தனர். இந்த நிலையில் விரக்தியுற்ற இளைஞர், ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் தீவிரமாய் ஈடுபடத் தொடங்கினர். அந்த வகையில் 1913 ஆம் ஆண்டு தொடங்கிய ஆயுதம் தாங்கிய இயக்கமே ஐரிஷ் தொண்டர்படை (Irish Volunteers). இதனை அடியொட்டி ஐரிஷ் குடியரசு இராணுவம் (Irish Republican Army - IRA) மலர்ந்தது.
இவ்வாறு 1913ஆம் ஆண்டு தோன்றிய அயர்லாந்துத் தொண்டர்படையில் 1911ஆம் ஆண்டு தான்பிரீன் ஓர் உறுப்பினராகச் சேர்த்து கொண்டார். தொடர்ந்தும் காலம் கடத்தி ஏமாற்ற முடியாதென்ற அளவிற்குப் போராட்டம் வெடித்து வந்ததும் ஆங்கில ஆட்சியாளர் சில விட்டுக் கொடுப்பு ஏமாற்றுதல்களைச் செய்ய முன்வந்தனர். அந்தவகையில்தான் 1914ஆம் ஆண்டு சுயாட்சிச் சட்டம் (Home Rule Act) நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா 1886ஆம் ஆண்டு முதல் முறையாக ஆங்கில ஆட்சியாளரால் பொதுமக்கள் சபையிற் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் 1914 ஆம் ஆண்டுவரை நிறைவேற்றாது காலம் கடத்தி வந்தனர் என்பது குறிப்படத்தக்கது. இந்த ஏமாற்றை ஏற்று ஐரிஷ் மிதவாதத்தலைவர்களும் பின்செல்லத் தொடங்கினர். காரணம் இச்சட்டத்தில் அவர்களுக்குச் சில எலும்புத்துண்டுகள் கிடைத்தமையாகும். எனவே இந்த ஏமாற்றையும், சமரசத்தையும், மிதவாதத்தையும் உடைத்து நீறு பூத்த நெருப்பாய் உள்ளே மறைந்திருக்கும் பிரச்சனையின் நீறைத் தட்டி நெருப்பை வெளிக்காட்டவேண்டியது ஒரு தலையாய பணியேயாகும். இந்த வகையில் தான்பிரீன் இந்தச் சமரசங்களையும், மாயாஜாலங்களையும் உடைத்துப் பிரச்சினையை எரிநிலைக்குக் கொண்டு வர கெரில்லா நடவடிக்கைகள் மூலம் பெரும்பணியாற்றினார்.
தூங்கிக்கிடந்த மக்களைத் தட்டி யெழுப்பியதிலும், எதிரியை நெருக்கடிக்குத் தள்ளியதிலும், மிதவாதத்தலைமையை சீர்குலைத்ததிலும், பிரச்சினையை எரிநிலைக்குக் கொண்டுவந்ததிலும், சர்வதேசரீதியாகப் பிரச்சனையைப் பிரபல்யப்படுத்தியதிலும் தான்பிரின் 1914ஆம் ஆண்டு தொடக்கம் 1922ஆம் ஆண்டு வரை கையாண்ட கெரில்லா நடவடிக்கைகள் மகத்துவமான பங்களிப்பை ஆற்றியுள்ளன. அதேவேளை அவர் மறுபக்கத்தில் ஸ்தாபன அமைப்பிலும், சோசலிச சிந்தனையிலும் சரியான கவனம் செலுத்தாமை அவரிடமிருந்த ஒரு பக்கக் குறைபாடாகும். எனினும் பொதுவாகச் சொல்லப்போனால் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கால்களை உடைத்து முடமாக்குவதில் தான்பிரீன் கையாண்ட கெரில்லா நடவடிக்கைகள் தந்திரோபரீதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனவே.
ஆஷ்டவுன் போராட்டம்
* * *
அயர்லாந்துத் தலைநகரின் பெயர் டப்ளின், அந்நகரின் மத்தியிலிருந்து நாலு மைல்களுக்கு அப்பால் ஆஷ்டவுன் என்ற ரயில் நிலையம் இருக்கிறது. அது டப்ளினிலிைருந்து செல்லும் பெரிய தெருவிலிருந்து சுமார் 600 அடி தூரத்தில் உள்ளது. இரண்டுக்கும் இடையில் ஒரு கிளைவிதி செல்லும். ஆஷ்டவுன் பெரிய ஊர் அன்று. அங்கு வீடுகளும் சில; வசிப்பவர்களும் மிகச்சிலர். டப்ளின் நகரவாசிகளின் அநேகர் அதைப் பார்த்திருக்கமாட்டார்கள். இவ்வளவு சிறிய ஊரிலே ரயில் நிலையம் அமைக்கப்பட்டிருந்ததின் காரணம் பந்தய ஓட்டங்களுக்கும் வேட்டையாடுவதற்கும் குதிரைகளை இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவுமேயாகும். அப்பக்கத்தில் குதிரைப் பந்தயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மைதானங்கள் பல உண்டு. வேட்டையாடுவதற்கு ஏற்ற வனங்களும் அதிகம். பந்தயத் தோட்டங்களின் சொந்தக்காரர் சிலருடைய வீடுகளும் அநாதை விடுதிகளும் கன்னிகா மடங்களும் தவிர வேறு பெரிய மாடமாளிகைகளை அங்கே பார்க்க முடியாது.
ரயில் நிலையத்திற்குச்செல்லும் தெருவும் பெரிய தெருவும் கூடுகிற இடத்தில் அந்த விடுதி அமைந்திருந்தது. ரயிலுக்குப் போகவேண்டியவர்கள் பெரிய தெருவிலிருந்து வலது பக்கம் திரும்பவேண்டும். அதே இடத்தில் இடது பக்கமாக வேறோரு தெரு செல்லுகிறது. அந்தத் தெருவில் சிறிதுதூரம் சென்றால் புகழ்பெற்ற பீனிக்ஸ் தோட்டத்தைக் காணலாம். அந்தத் தோட்டத்தின் வாயிலில் முற்காலத்தில் எப்பொழுதும் ஒரு போர்ப்படை இருப்பது வழக்கம். பின்னால் அது நின்றுபோய் விட்டது.
அத்தோட்டத்தினுள்ளே வாசலிலிருந்து 300 அடி தூரத்தில் ஒரு பெரிய மாளிகை இருக்கிறது. ஆங்கில மன்னனின் பிரதிநிதியாக அயர்லாந்திலுள் வைசிராய் (Viceroy - பதில் ஆளுநர்) சில சமயங்களில் தங்குவதற்காக அது அமைக்கப்பட்டிருந்ததால் அதற்கு 'வைசிராய் லாட்ஜ்' என்று பெயர். ஆண்டவனையும் அதனையும் தெருக்களையும் ரயில் நிலையத்தையும் பற்றி மேலே விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதன் காரணம் என்னவெனில் வெகு சீக்கிரத்தில் அங்கு ஒரு போராட்டம் நடப்பதைக் காணப்போகிறோம். ஆதலால் முன்னதள்கவே திசைகளைத் தெரிந்துகொள்வது நல்லதல்லவா?
1919ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியிருக்கும். டப்ளின் நகரிலிருந்து வாலிபர்கள் சிலர் துப்பாக்கி முதலிய ஆயுதங்களைத் தங்கள் உடைகளில் மறைத்து வைத்துக் கொண்டு சைக்கிள் வண்டிகளில் விரைவாக ஆஷ்டவுனை நோக்கி வந்தார்கள். எல்லோரும் வந்தால் பிறர் சந்தேகித்து விடுவார்கள் என்ற காரணத்தால் அவர்கள் தெருவில் இருவர் இருவராகப் பிரிந்து வந்தார்கள். ஆஷ்டவுனுக்கு வந்தவுடன் அவர்கள் யாவரும் கெல்லியின் விடுதிக்குள் சென்று அமர்ந்தார்கள். அவர்கள் மொத்தம் பதினொருபேர். மிகுந்த கம்பீரத்துடனும் வானமே இடிந்து விழுந்தாலும் கலங்காத உள்ளத்துடனும் விளங்கிய தான்பீரின் அவர்களுக்குத் தலைவன். அவன் முப்பது வயதுக்குள்ளிட்ட பிராயத்தினன். தலைவனுக்குரிய அருங்குணங்களையெல்லாம் அணிகலன்களாய் பெற்றவன். ஸின்டிரிஸ், ராபின்லன், வேராகன், டாலி, மக்டொன்ன, கியோக், லியனார்டு, கில்காயின், வைரன், லாவேஜ் என்பவர்கள் மற்ற பதிர்மர்கள். இவர்களில் லாவேஜ்தான் வயதில் மிக இளையவன். அவன் பால்மனம் மாறாத பச்சிளங் குழந்தை. வீர உள்ளமும் தாய்நாட்டின் மீது தணியாத காதலும் பெற்று விளங்குவது போன்ற முகத்தோற்றமுடையவன். அவனுடைய முழுப்பெயர் மார்டின் லாவேஜ்.
இந்தக் கூட்டத்தினரைச் சூழ்ந்து வேறு பல தொழிலாளர்களும் குடியானவர்களும் குடித்துக் கொண்டிருந்தார்கள். யாரும் அவர்களைக் கண்டு சந்தேகப்படவில்லை. அவர்கள் எந்த நோக்கத்துடன் கூடியிருக்கிறார்கள் என்றோ அவர்கள் அனைவரும் ஒரே கூட்டத்தார் என்றோ எவருக்கும் தெரியது. இனிய பாணவகைகளை வாங்கிக் குடிப்பதில் நேரத்தை போக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவரை ஒருவர் அப்பொழுதுதான் சந்தித்தவர்களைப் போல் அவர்களது சம்பாஷணை இயற்கையாயிருக்கவில்லை. முழுதும் செயற்கையாகப்பட்டது. ஆடு, மாடுகள், உழவு, நாற்று நடுகை, நிலங்கள் முதலிய பல விஷயங்கள் பற்றி அவர்கள் பேசினார்கள். ஆனால் மறந்தும் அரசியலைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. எல்லோரும் வெகு ஜாக்கிரதையுடன் இருந்தார்கள். ஏனெனில் பேசியவர்களுக்கு விவசாயத்தில் ஒன்றுமே தெரியாது. ஆனால் சூழ வீற்றிருந்தவர்களோ வாழ்நாள் முழுதும் விவசாயத்தில் திளைத்த வாலிபர்கள். தவறுதலான வார்த்தைகள் வெளிவராது மிகுந்த நிதானத்துடன் பேசினார்கள். பேச்சு ஒருபுறமிருக்க யாவருடைய உள்ளமும் ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருந்ததாகக் காணப்படவில்லை. இவர்களிற் சிலர் அடிக்கடி தங்கள் கைக்கடிகாரங்களில் நேரத்தைப் பார்த்தனர். வெளியில் வீதிகள் கூடுமிடத்தில் கண்னோட்டஞ் செலுத்திபோகிறவர்களையும் வருகிறவர்களையும் நுட்பமாய்க் கவனித்தனர். முதலாவதாக டப்ளின் நகரப் போலீஸ்காரன் ஒருவன் தனது பருத்த உடலைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு பீனிக்ஸ் தோட்ட வாயிலிருந்து வெளியே வந்தான். அவன் உருவம் பார்க்கத்தக்கதுதான் திண்ணமான சரீரம். ஈட்டிபோல் ஆகாயத்தில் துருத்திக்கொண்டிருந்த முனையுள்ள தொப்பி. பளபளவென்று ஒளிவிடும் பொத்தான்கள். மாசுமறுவற்ற பூட்ஸ். இடுப்பிலே ரிவால்வர். இத்தனையும் சேர்த்து ஒன்றாய்க் கருதிப் பார்த்தால் தெரியக்கூடிய உருவந்தான் அந்தப் போலீஸ் வீரன். அவன் வீதியில் நின்றுகொண்டு யாரையும் நடமாடவிடாமல் தடுத்துக் கொண்டிருந்ததால், யாரோ ஒரு பெரிய அதிகாரி அங்கு வருவதற்கு ஏற்பாடு நடப்பதாகத் தோன்றியது.
ஆம்! அன்று ஒரு பெரிய அதிகாரி அங்கு விஜயம் செய்வதாக இருந்தார். அவர்தான் அயர்லாந்தின் வைசிராய். அவர் அயர்லாந்திலிருந்து தமது தலை நகருக்கு அப்பொழுது விஜயஞ்செய்ய ஏற்பாடாயிருந்தது. இந்த ஏற்பாடு பொது ஜனங்களுக்கும் இதர அதிகாரிகளுக்கும் பல ரகசியப் போலீஸாருக்குமே தெரியாது. வைசிராயின் மெய்க்காப்பாளர் எவர் எவருக்குத் தெரியவேண்டியது அவசியமோ அவர்களுக்கு மட்டும் அவரது வருகை கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. வைசிராயின் விஜயம் இத்தனை ரகசியமாக்கப்பட்டது ஏன்? ஏனெனில் காலநிலை அப்படி இருந்தது. அயர்லாந்து முழுவதும் ஆங்கிலேயர் மீதான துவேஷம் உச்சநிலையைடைந்திருந்தது. புரட்சிக்காரர்கள் போலிஸ் அதிகாரிகளை எங்கு கண்டாலும் சுட்டுத்தள்ளி வந்தனர். சாதாரண வெள்ளையர்களில் இவ்வளவு வன்மம் செலுத்தி வந்தவர்கள் அவர்கள். அயர்லாந்தின் அரசாங்கத் தலைவரான வைசிராயின் மீது அது தப்பமுடியுமா? அப்பொழுதிருந்த வைசிராய் அயர்லாந்தில் பிறந்தவராயினும் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்காகவே உழைத்தவர். தாம் புறப்படும் நேரத்தையும் செல்லும் பாதையையும் முன்கூட்டித் தெரிவிப்பார். கடைசி வேளையில் எல்லாம்வற்றையும் மாற்றி விடுவார். ரயிலில் போவதாகச் சொல்லி மோட்டாரில் போய்விடுவார். பல வேஷங்கள் தரித்துப் பிறர் அறியமுடியாமல் செல்வார். ரஷ்யச் சக்கரவர்த்தியான ஜார் அரசன் இதுபோல்தான் செய்வது வழக்கமாம். ஜாருக்கு நாடெங்கும் பகை. பிரஜைகள் எல்லோரும் விரோதிகள். அவன் உயிரை யார் எந்த நேரத்தில் பழிவாங்குவார் என்பது நிச்சயமில்லாமல் இருந்தது. அதுபோலவே அயர்லாந்து ஜனங்கள் தங்கள் தேசத்தில் ஏற்பட்டிருந்த ஆங்கில அரசாங்கத்தைப் பகைத்து வெளிப்படையாகக் கலகஞ் செய்யக் கிளம்பிவிட்டதால் லார்ட் பிரெஞ்ச் (அதுதான் வைசிராயின் பெயர்) மிகுந்த கவனத்துடன் நடமாடவேண்டிய அவசியம் நேர்ந்தது. அவர் வருகை மிகவும் அந்தரங்கமாக வைக்கப்பட்டிருந்த போதிலும், அது சம்பந்தமான இடம் காலம் முதலியவை எவர்களுக்குத் தெரியக்கூடாதோ அவர்களுக்கு மட்டும் எப்படியோ தெரிந்திருந்தது. கெல்லியின் விடுதியில் தங்கிக்கொண்டிருந்த பதினொரு பேர்களுக்கும் பகல் 11-40 மணிக்கு ஆஷ்டவுன் ரயில் நிலையத்தில் வைசிராய் தங்குகிறார் என்பது தெரியும். அதற்காகத்தான் அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே அவர்கள் புறப்பட்டு வந்து விடுதியில் காத்திருந்தனர்.
வைசிராயின் ரயில் வருவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்னால் துப்பாக்கிகள் ஏந்திப் பட்டாளத்தார் நான்கு ராணுவமோட்டார் லாரிகளில் பீனிக்ஸ் தோட்ட வாயிலிருந்து வெளியேறி கெல்லியின் விடுதிப்பக்கமாக ரயில் நிலையத்திற்குச் சென்று அணிவகுத்து நின்றனர். இவர்களைத் தவிர வேறு பல ஆயுதந்தாங்கிய டப்ளின் நகரப்போலீஸார் பீனிக்ஸ் தோட்டவாயிலிலிருந்து வைஸ்ராய் லாட்ஜ் வரையிலும் வீதியைப் பாதுகாத்து வந்தனர். குறித்த நேரத்தில் ரயில் வண்டி ஆஷ்டவுன் ஸ்டேஷனில் வந்து நின்றது. இரண்டு மூன்று நிமிஷங்கள் கழிந்தன. ஸ்டேஷன் வீதியில் மோட்டார் கார் கிர்... கிர் என்று வேகமாய் ஓடி வரும் சத்தம் கேட்டது. விடுதியிலிருந்த பதினொரு பேர்களும் மெதுவாக வெளியே வந்து முன்னதாகவே ஏற்பாடு செய்திருந்தபடி, தத்தமக்குரிய இடத்தில் போய் நின்றனர். அவ்விடுதிக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த ஓர் உர வண்டியின் பக்கம் தான்பிரீனும், கியோக்கும், லாவேஜூம் சென்று அதை இழுத்தனர். அது மிகக் கனமான வண்டியாதலால் மிகவும் சிரமப்பட்டு இழுக்கவேண்டியிருந்தது. அவர்கள் அதைப் பலமாக இழுத்து ஸ்டேஷன் வீதிக்குக் கொண்டு சென்றனர். அப்பொழுது முதன் முதலில் அங்கு வந்து நின்று கொண்டிருந்த போலீஸ்காரன் கூக்குரல் போட ஆரம்பித்தான். 'யார் அங்கே வைசிராய் வரப்போகிறார் விலகு விலகு என்று அவன் கூறினான். அந்த ஆசாமிகளோ, தாங்கள் மட்டுமின்றி உரவண்டியையும் சேர்த்து இழுத் துச்சென்றனர்.
அவர்களுக்கு வைசிராய் வரப்போவது நன்றாய்த் தெரியும். தெரிந்ததினால் தான் சரியான சமயத்தில் வண்டியை இழுத்தார்கள். அவர்களுக்கு வைசிராயினிடத்தில் வேலை இருந்தது. அது போலிஸ்காரனுக்கு எப்படித் தெரியும்? நேரமோ பறந்து கொண்டிருந்தது. ஒரு விநாடி ஒரு யுகமாகத் தோன்றியது. கரணம் தப்பினால் மரணம். உரவண்டியை வீதியின் மத்தியில் உருட்டினால்தான் வைசிராயின் கார் நிற்கும். அதற்குத் தடை ஏற்பட்டால் அவர்கள் காரியம் வீணாகிவிடும். போலீஸ்காரன் கண்டித்து ஏசிக்கொண்டேயிருந்தான். தான்பிரீன் இடைவிடாது வண்டியை இழுத்துக்கொண்டே யிருந்தான். அவனும் நண்பர்களும் கைகளில் துப்பாக்கி வைத்திருந்ததைப் போலிஸ்காரன் கண்டு பிடிக்கவில்லை...
அக்காலத்தில் ஜனங்கள் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள உரிமை கிடையாது. போலீஸ்காரனோடு வாதாடுவதில் பயனில்லை யெனினும் அவன் வாயை மூடுவதாகவும் இல்லை. துப்பாக்கியை எடுத்து அவன் வாயை அடக்கலாம் என்றால் ஒரு விஷயம் அறியாத அவனைச் சுடுவதால் என்ன பயன்? மேலும் குண்டோசைகேட்டவுடன் வைசிராயின் பாதுகாப்புக்காக நிற்கும் பட்டாளத்தார் அங்கு ஓடிவந்திருப்பார்கள். இவ்வாறெல்லாம் எண்ணமிட்டான் தான்பிரீன். போலீஸ்காரனை வார்த்தைகளால் பயமுறுத்திக்கொண்டே வேலையை நிறைவேற்றிவந்தான். அவன் வேலை என்ன? உரவண்டியை விதியில் இழுத்துச்சென்று ஸ்டேஷனிலிருந்து கார்கள் வரும்பொழுது முதல் மோட்டாரை விட்டு விட்டு, இரண்டாவது மோட்டாருக்கு முன்னால் வண்டியைத் தள்ளி வழியை மறித்து நிறுத்திவிட வேண்டும். அதற்கு உதவியாக மற்ற இரு நண்பர்களும் கூட இருந்தனர். போலீஸ்காரன் கடைசிவரை தன்னுடைய கூக்குரலை நிறுத்தாததைக் கண்டு வீதியின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒருவன், தான்பிரீனுக்கு உதவி செய்யவேண்டுமென்று தன்கையிலிருந்த ஒரு வெடி குண்டைப் போலிஸ்காரன் மீது குறிவைத்து எறிந்துவிட்டான். இது பொருத்தமில்லாத வேலை. ஏனென்றால் குண்டோசைகேட்டால் லார்ட் பிரெஞ்ச் அந்தப்பாதையிலேயே வராமல் மாற்றப்பட்டுவிடும். இவை ஒன்றையும் கவனியாது அவ்வாலிபன் ஆத்திரத்தில் குண்டை எரிந்துவிட்டான். நல்லவேளையாக அது போலீகாரனுக்கு அதிக காயத்தை உண்டாக்கவில்லை. அவன் தலையில் மட்டும் சிறிது காயப்படுத்தியது. தான்பிரீனும் அவன் நண்பர்களும் ஒரு நிமிஷத்தையும் வீணாக்கக் கூடாதென்றும், வருவது வட்டும் என்றும் துணிந்து நின்றனர். வைசிராயின் சாரணன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் முன்னதாகச் சென்றான். அடுத்தாற்போல் ஒருகார் வந்தது. பதினொரு பேர்களும் பல திசைகளிலிருந்தும் அதன்மேல் சுட ஆரம்பித்தனர். உடனே வண்டியிலிருந்தவர்களும் எதிர்த்துச் சுட்டனர். ஒரு குண்டு தான்பீரினுடைய தலையில் பட்டு அவனுடைய தொப்பியை அடித்துக் கொண்டு போய்விட்து. தலையில் காயமில்லை. கார்சென்ற வேகத்தில் அதனுள் யார் யார் இருந்தனர் என்பதைக் கவனிக்கமுடியாது போயிற்று. வெளியே நின்றவர்களுக்கு அவர்களைப் பற்றிய கவலையும் இல்லை. ஏனெனில் இரண்டாவது காரிவில்தான் வைஸ்ராய் வருவார் என்று அவர்களுக்குத் தெரியும். முதல் காரைச் சுட்டால் அதிலுள்ளவர்கள் அதை வேகமாய் ஓட்டிச் சென்று விடுவார்கள். பின் சாவகாசமாக இரண்டாவது காரை எதிர்க்கலாம் என்பது அவர்கள் வண்ணம் அவர்கள் எண்ணியபடியே முதல் கார் வாயு வேகத்தில் பறந்து சென்றது. தான்பியின் வண்டியை வீதியை மறித்து நிறுத்திவிட்டான். இரண்டாவது காரும் வந்துவிட்டது. தான்பிரீனும் அவனுடைய கூட்டத்தாரும் நாலு பக்கத்திலுமிருந்து அதன் மேல் ரிவால்வர்களால் சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசி எரிந்தனர். கார்மீது நெருப்பு மழை பெய்வது போலிருந்தது. ஆனால் காருக்குள்ளிருந்தவர்களிடம் யந்திரத்துப்பாக்கியும் இருந்தது. அதனாலும் நீண்ட துப்பக்கிகளாலும் அவர்கள் சுட்டனர். வெளியே நின்றவர்களிடம் ரிவால்வர்களும் வெடிகுண்டுகளுமே இருந்தன. தான்பிரீனும் அவனுடன் வண்டிப் பக்கம் நின்ற இருவரும் மிகுந்த அபாயகரமான நிலையிலிருந்தனர். பகைவர்கள் துப்பாக்கிகள் அவர்களைக் குறிவைத்துச் சுட்டன. அத்துடன் ஓடைப்புறத்திலும், மற்ற இடங்களிலும் சூழ்ந்து நின்று கொண்டிருந்த அவர்களுடைய நண்பர்களின் குண்டுகளே அவர்களைக் கொன்றுவிடக்கூடும். ஆயினும், அவர்கள் பகைவர்களுக்கு மிக நெருக்கமாக நின்று போராட வேண்டியிருந்தது.
இவர்கள் மூவரும் வண்டிக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்தார்கள். அந்த வண்டி எதிரிகளுடைய குண்டுகளால் துள்துளாகப் பிய்ந்து ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது. ஒரு பக்கம் கூரிய அம்புகள் போன்ற மரக்குச்சிகள் பாய்ந்தன. ஆனால் குண்டுகள் ஆட்களைத் தவிர மற்றெல்லாவற்றையுமே துளைத்தன. அந்த வேளையில் எதிர்ப்பக்கத்திலிருந்து பகைவர்களுக்கு உதவியாக வேறோரு கார் விரைந்து வந்தது. அதிலிருந்தவர்களும் சுட ஆரம்பித்தார்கள். தான்பிரீன் கூட்டத்தார் இரண்டு கொள்ளிக்கட்டைகளுக்கு இடையில் அகப்பட்ட எறும்புக் கூட்டத்தைப்போல் ஆகிவிட்டனர். ஆயினும் சிறிதும் மனம்தளராது அவர்கள் அரும்போர் புரிந்துவந்தனர். அப்பொழுது திடீரென்று பகைவரின் குண்டொன்று தான்பிரீனுடைய இடதுகாலில் பாய்ந்தது. அவன் காலில் குண்டு பாய்ந்ததை உணர்ந்தானேயொழிய அது பாய்ந்த இடத்தைக் கூடக் குனிந்து பார்க்கவில்லை. சுடுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தான். கார்களிலிருந்து ஆங்கிலேயர் பன்னிரண்டு நீண்ட குழல் துப்பாக்கிகளாலும் ஒரு யத்திரத்துப்பாக்கியாலும் சுட்டு வந்தனர். தான்பிரீன் கூட்டத்தார் ரிவால்வர் முதலிய சிறு ஆயுதங்களுடன் சிறிதும் தளராது எதிர்த்து நின்றனர். ஆங்கிலேயர் சரியாகக் குறிவைத்துச் சுட்டால், வெளியே நின்ற பதினோரு பேர்களும் ஒரு கணத்தில் இறந்து வீழ்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களுடைய கைகளும் கால்களும் நடுங்கும்பொழுது அவர்களுக்குக் குறி எப்படி வாய்க்கும்!
இவ்வாறு வெகுநேரம் அருஞ்சமர் நடந்தது. திடீரென்று பகைவரின் ஒருவன் குறிபார்த்து மார்ட்டின் லாவேஜைச் சுட்டுவிட்டான். குண்டு அவன் உடலில் தைத்து, அவன் குற்றுயிராய் சாய்ந்து விட்டான். சில நிமிஷங்களுக்கு முன்னால் அயர்லாந்தைப் பற்றியும் அதன் விடுதலையைப் பற்றியும் ஆனந்தமாய்ப்பாடிக் கொண்டிருந்த இளஞ்சிங்கம் போன்ற லாவேஜ், ஆங்கிலேயரின் குண்டால் அடிப்பட்டு அருகே நின்ற தோழன் தான்பிரீனுடைய கைகளில் சாய்ந்தான். தான்பிரீன் அவனை மார்போடு அனைத்துக் கொண்டான். சுற்று முற்றும், எங்கனும் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பு மழையின் நடுவே தாய்நாட்டுக்காகப் போராடி, அந்நியனுடைய குண்டை மார்பிலேந்தி வீரமரணம் அடையவேண்டுமென்று விரும்பிய லாவேஜ்தன் தோழனின் கைகளிலே வீழ்ந்து கிடந்தான். தான்பிரீன் அவனை விதிப்புறத்தில் கொண்டு கிடத்தினான். ஸாவேஜின் மெல்லிய இதழ்கள் அசைவதைக் கண்டு அவன் ஏதோ சொல்ல விரும்புவதாக எண்ணி, அவன் வாயில் செவி வைத்துக் கேட்டான். 'என் காரியம் முடிந்து போயிற்று தோழா போரை விடாது நடத்துங்கள்!' என்று மெல்லி குரலில் ஸாவேஜ் கூறினான். ஆயிரம் இடிகள் விழுவதுபோல் நாலு பக்கத்திலும் குண்டுகள் விழுகின்றன. காது செவிடுபடும்படியான ஓசை. இரத்த வெள்ளத்திலே ஒரு வாலிபன் மிதந்து கொண்டிருக்கிறான். சில நிமிஷங்களில் அவன் அந்தமில்லாத உறக்கத்தில் ஆழ்ந்து போகின்றான். இடையில் 'தோழா போரை விடாது நடத்துங்கள் என்று மெல்லக் கர்ஜிக்கிறான். இந்தக் காட்சியை யாரால் மறக்கமுடியும். இருபத்தொரு வயதான இளஞ்செல்வன் ஸாவேஜ் தேசத்திற்கு உழைக்கவே ஜன்மமெடுத்ததாகக் கருதி, தேசத்திற்காக உயிர்பலி கொடுக்க முன்வந்தவன், மூன்று வருடங்கள் அரும் போராட்டங்கள் செய்துவிட்டு இப்பொழுது மார்பிலே குண்டு தாங்கி வீழ்ந்துவிட்டான்.
இறந்த தோழனுக்கு அனுதாபம் காட்டி நிற்கவேண்டிய நேரம் அதுவன்று. ஆதலால் தான்பிரீன் மறுபடியும் போராடச் சென்றான். அவனுடைய காலிலிருந்து ரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. எவ்விடத்தில் தப்பி நின்று போராடலாம் என்று பார்த்தால் எங்கும் வழி காணப்படவில்லை. எனினும் தைரியத்தைக் கைவிடாது அவன் கெல்லியின் விடுதிக்குப் பின்னால் சென்று அங்கிருந்து சுட ஆரம்பித்தான். அவனுடைய நண்பர்களிடம் வெடிகுண்டுகள் தீர்ந்துபோயின. சிலருடைய ரிவால்வர்களில் குண்டுகளில்லை. ஆனால், எதிரிகளிடமிருந்தும் குண்டுவரக் காணோம். ஆங்கிலத் துருப்புகள் பீனிக்ஸ் தோட்டத்தைப் பாதுகாக்க விரைந்தோடிவிட்டன.
அவ்வளவு நேரம் நடந்த போராட்ட முடிவில் களத்தில் உடைந்து சிதறிப்போன இரண்டாவது மோட்டார் வண்டியும் அதை ஒட்டுபவனான மாக்இவாய் என்றவனும், முதல் முதலில் குண்டுபட்ட போலிஸ்காரன் ஒருவனும் இறந்துபோன மார்ட்டின் லாவேஜின் உடலுமே தான்பிரீன் கூட்டத்தார் கையில் சிக்கிய பொருள்கள். டிரைவருக்கு மிகுந்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவனை அவர்கள் விடுதலை செய்து விட்டார்கள்.
தான்பிரீனும் தோழர்களும் வைசிராயைச் சுட்டுத்தீர்த்து விட்டதாக உறுதியுடன் நம்பினர். அவரைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியாத முறையில், வைசிராப் பலருக்கு மத்தியிலே மாறுவேஷத்துடன் இருந்தார். இறந்தவர் யார் யாரென்றும், விலக்கப்பட்டவர்கள் விவரம் என்ன என்றும் தெரியவில்லை, போராட்டம் முடிந்தவுடனே தான்பிரீன் கூட்டத்தார் ஒரு விநாடியும் விண்போக்காது நகருக்குள் சென்றுவிட வேண்டும் என்று கருதினர். ஏனென்றால் சில நிமிஷ நேரத்தில் அங்கு பல்லாயிரம் பட்டாளங்கள் வந்துவிடும். எங்கும் லார்ட்பிரெஞ்ச்சுடப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவிநிற்கும். எனவே அவர்கள் சைக்கிள் வண்டிகளில் ஏறிக்கொண்டு ஆஷ்டவுனை விட்டு வெகு வேகமாய் வெளியேறினர். ஸாவேஜ் களப்பலியாக களத்திலே விடப்பட்டான். அவன் உடல் கெல்லியின் விடுதியில் வைக்கப்பட்டது. தோழர்கள் புறப்படு முன்னால் அவனுடைய ஆன்மா சாந்தியடையும்படி பிரார்த்தித்தனர். அதுவே அந்தப் போர் வீரனுக்குத் தோழர்கள் செலுத்திய கடைசி மரியாதை.
வைசிராயைத் தாக்கச் சென்ற பதினொரு வாலிபரில் ஒன்பது பேருக்குக் காயமில்லை; லாவேஜ் வீரசுவர்க்கம் புகுந்தான்; தான்பிரீன் காலில் அடிபட்டு ரத்தம் பெருகிக் கொண்டேயிருக்கவும், சைக்கிளில் சவாரி செய்துக் கொண்டு சென்றான். உயிர்தப்பிய பதின்மரில் ராபின்ஸனுடைய சைக்கிள் இடையில் உடைந்து பிரயாணத்திற்கு உதவாது போயிற்று. எனவே அவன் ஸின்டிரீஸியின் சைக்கிளில் அவனுக்குப் பின்னால் ஏறி நின்று கொண்டு சென்றான். ஒரு சைக்கிளில் இருவரைத் தாங்கி வேகமாகச் செல்லமுடியாது. வேகமாய்ச்செல்லாவிடின் பகைவர்கள் எட்டிப் பிடித்து விடுவார்கள். அந்நிலையில் எதிரே ஒருவன் கைக்கிளில் வந்து கொண்டிருந்தான். ராபின்ஸன் கீழே குதித்து, ரிவால்வரை அவனுக்கு நேராகப் பிடித்து, அவனைக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டான். வந்தவன் மறுப்பேச்சில்லாமல் சைக்கிளைக் கொடுத்துவிட்டான். ராபின்லன் தான் திருடனில்லை என்றும், தனக்கு அந்த சைக்கிள் தேவை என்றும், அன்று மாலையில் அதை 'கிரெஷாம் ஹோட்ட'லில் வைத்து விடுவதாயும், அங்கு வந்து அவன் எடுத்துக் கொள்ளலாம் என்றுக் கூறினான். பிறர் சைக்கிளைப் பிடுங்கினாலும் அதிலும் ஒரு மரியாதை இருந்தது: திருட்டுச் சொத்து வேண்டாமென்று ராபின்ஸன் சொன்ன வாக்குப்படியே பின்னால் செய்து விட்டான். சொந்தக்காரன் அந்த ஹோட்டலுக்குச் சென்று சைக்கிளை எடுத்துக் கொண்டானோ, இல்லையோ என்பது தெரியாது. பிறகு பத்துப் பேர்களும் செளக்கியமாக டப்ளின் நகருக்குள் சென்று மறைந்துவிட்டனர்.
இவர்கள் யார்? எதற்காக இம்மாதிரிக் காரியங்களைப் புரிந்தார்கள்? இவர்கள் ஜரிஷ் புரட்சிக் கூட்டத்தார். அயர்லாந்தைக் கொடுமையாக ஆண்டுவந்த ஆங்கில அரசாங்கத்தை அழித்து, அங்கு குடியரசை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் புரட்சி செய்து வந்த கூட்டத்தாரில் இவர்கள் முக்கியமானவர்கள். தான்பிரீன் இவர்களுடைய தலைவன். இவர்கள் அனைவரும் யுத்தப் பயிற்சி பெற்று, புரட்சிப் பட்டாளத்தில் பதவிகள் வகித்து வந்தார்கள்.
லார்ட் பிரெஞ்ச் அரசாங்கத் தலைமைப் பதவி வகித்து வந்ததால், அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டால், ஆங்கில அரசாங்கத்தை அயர்லாந்து மக்கள் விரும்பவில்லை என்பது உலகமெங்கும் விளக்கமாய்த் தெரிந்துவிடும் என்பதும், அதிலிருந்து உள்நாட்டில் புரட்சி கொழுந்து விட்டெரியும் என்பதுமே புரட்சிக் காரர்களின் கருத்து.
புரட்சிக்காரர்கள் வைசிராயைச் சுட்டுக் கொன்றதாக எண்ணிக் கொண்டார்களே தவிர, அவர் இறக்கவில்லை, காயப்படவுமில்லை, ஏனெனில், வழக்கத்திற்கு விரோதமாக அவர் அன்று முதல் காரிலேயே சென்று விட்டார்.
2
தொண்டர் படை
* * *
ஐரோப்பிய யுத்தம் 1914ஆம் ஆண்டு ஆம்பமாயிற்று. மனித சமூகத்தின் வளர்ச்சியில் - நாகரிகத்தில் - இந்த யுத்தம் மிகமுக்கியமான இடம் பெற்றிருக்கிறது. இதுகாறும் நாம் அரசியல் புரட்சிகளையும். சமூகப் புரட்சிகளையும், ஒடுக்கப்பட்டோர் புரட்சிகளையும், பொதுவாகத் தேசப்புரட்சிகளையும் பற்றியே கேட்டிருக்கிறோம். ஐரோப்பிய யுததம் உலகப் புரட்சிக்கு வித்தாக அமைந்ததே விந்தையாகும். அதை ஆம்பித்தவர்களும் அவ்வாறு ஏற்பட வேண்டுமென்று கனவிலும் கருதவில்லை. சிறிய தேசத்தார்களுடைய சுதந்திரங்களைப் பாதுகாக்கவும், உடன்படிக்கைகளின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், உலக சமாதானத்தைப் பாதுகாக்கவும் அவர்கள் போராடுவதாகக் கூறி வந்ததில் எவ்வளவு உண்மை உண்டென்பதை உலகம் தெரிந்து கொண்டது. யுத்தத்தில் பலநாடுகள் தங்களுடன்படிக்கைகளைக் காற்றில் பறக்க விட்டதை நாம் கண்ணாற் கண்டோம். சிறு நாட்டார்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தொடுக்கப்பட்ட அறப் போரின் பெரிய நாட்டார்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. யுத்தத்தில் சம்பந்தப்பட்ட வல்லரசுகள். தாங்கள் முன்னதாக அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளுக்குப் பிறப்புரிமையாகிய சுதந்திரத்தைக் கொடுக்க மறுத்துத் தங்களுடைய பிடியைத் தளர்த்துவதற்குப் பதிலாக உறுதிப்படுத்தின. புதிய நாடுகளைப் பிடிப்பதில் தங்களுக்குள்ள ஆசையையும் வெறியையும் அவைகள் மறைக்கவும் இல்லை அறத்தை நிலைநாட்டவும் மானிட சமுதாயத்தின் சுதந்திரத்தைக் காப்பாற்றவும் யுத்தம் தோன்றியதாகக் கூறினார்கள். யுத்தத்தில் கலந்துகொண்ட அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் தீவுகளின் சுதந்திரத்தைப்பறித்து அவற்றை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தது. ஜப்பான், கொரியாதேசத்தின் மேல் ஆதிக்கம் செலுத்திவந்தது. ஜெர்மனி, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் தன் கைவசமுள்ள பிராந்தியங்களை விடுவிக்கப் பிரியப்படவில்லை. ஜார்சக்கரவர்த்தியின் ரஷ்யா மண் வெறியே உருவாக விளங்கியது. இந்தியா, எகிப்து, அயர்லாந்து நாடுகளை இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இதனை வல்லரசுகளும், சந்திரனைப்போல் தங்கள், குறைதெரியாமல், பிறர் குறைகளை களையும் நோக்கத்துடன் போராடின. இடைவிடாது நான்கு ஆண்டுகள் போராடி உயிரையும் பொருளையும் ஆற்று நீரைப்போல் அள்ளிக்குடித்தன. ஐரோப்பிய யுத்தத்தில் 97,43,914 பேர் மடிந்தனர். 2,09,27,456 மக்கள் காலிழந்தும், கையிழந்தும், கண்ணிழந்தும் அங்கங்களையிழந்தனர். முப்பது இலட்சம் பேர் போன இடமே தெரியவில்லை. மொத்தம் ஏழாயிரம் கோடி பவுண்டு செலவழிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு உதிரத்தையும் பொன்னையும் பலியாக விழுங்கிய யுத்தத்தின் முடிவு என்ன?
பிரிட்டிஷ் பிரதம மந்திரியான லாயிட் ஜார்ஜ் உலகத்தில் யுத்தத்தைத் தொலைப்பதற்கே இந்த யுத்தம் தொடுக்கப்பட்டதாக ஒருமுறை, இருமுறையல்ல 76 முறை உலகறியக் கூறினார். பிறநாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் வல்லரசுகள் உண்மையில் உலக சமாதானத்திற்காக உழைக்க முடியுமா? உழைத்தாலும் அது பலிக்குமா? யுத்தத்திற்கு இந்தியா பதினான்கு இலட்சம் மனிதர்களையும் இருபதினாயிரம் பவுண்டையும் கொடுத்து உதவியது. அயர்லாந்து 1,34,000 வீரர்களை யுத்தத்திற்குக் கொடுத்தது. ஆனால் யுத்த முடிவில் இந்தியாவும் அயர்லாந்தும் என்ன நிலைமையில் இருந்தன? இந்தியா யுத்தத்திற்கு பின்புதான் அதன் பாடத்தைக் கற்றுக்கொண்டது. அயர்லாந்து யுத்தம் ஆரம்பத்திலேயே உண்மையைத் தெரிந்துகொண்டது. முதல் ஆண்டிலேயே அது தனது சுதந்திரப்போராட்டத்தை தீவிரமாய் நடத்த ஆரம்பித்து விட்டது.
அயர்லாந்து சிறிய தீவு. உலகில் பெரிய ஏகாதிபத்தியத்தையுடைய "கடலரசி“ இங்கிலாந்தை எதிர்த்து அயர்லாந்து சுதந்திரத்தைப் பெறுவது எங்ஙனம்? இங்கிலாந்துக்கு வெளியிலிருந்து ஒரு பெரிய ஆபத்து ஏற்படும் பொழுது அந்நியர் அதைத் தாக்கும்பொழுது, அயர்லாந்து அதை எதிர்த்துப் போராடினால் ஒரு வேளை வெற்றியடையக்கூடும். ஏனெனில் இங்கிலாந்து தன் முழுவலிமையுடன் அதை எதிர்த்து நிற்க அப்போழுது இயலாது போகும். இந்த நோக்கங் கொண்டே அயர்லாந்து 1914 ஆம் ஆண்டு முதல் தனது போராட்டத்தை ஆரம்பித்தது. அதன் தலைவர்கள் ஆங்கில ராஜதந்திரிகளுடைய பசப்பு வார்த்தைகளை நம்பவில்லை. ஒரு வல்லரசு துன்பத்தில் ஆழ்ந்திருக்கும்பொழுது அதன் வாயில் இருந்து உண்மை, உரிமை, உடன்படிக்கை முதலிய இனிய சொற்கள் வெளிவந்தபோதிலும், பின்னால் துன்பம் நீங்கிய காலையில் அவை காலடியில் மிதிபட்டு இழிவடையும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்கள் போரை விரும்பினார்கள்; போரையும் உடனேயே வேண்டினார்கள்.
1914ஆம் ஆண்டு அயர்லாந்தில் மூன்று விதமான பட்டாளங்கள் இருந்தன. ஒன்று அயர்லாந்தை அடக்கிப் பிரிடிஷ் ஆதிக்கத்தை நிலைநாட்ட உபயோகிக்கப்பட்ட ஆங்கில ராணுவம்; மற்றொன்று ஆரஞ்சுப்படை மூன்றவது ஐரிஷ் தொண்டர்படை அயர்லாந்தின் வட பாகத்திலுள்ள அல்ஸ்டர் மாகாணத்தார் தங்களுக்குத் தனி உரிமைகள் வேண்டுமென்றும், மற்றப்பக்கத்தாரோடு சேர்ந்து வாழமுடியாதென்றும் கூறி, தம் நாட்டாரையே எதிர்ப்பதற்காக ஆரஞ்சுப் படையை வைத்துக்கொண்டிருந்தனர். ஆங்கில அரசாங்கத்தார் அல்ஸ்டர்வாசிகளைத் தங்களுக்குப் பக்கபலமாக வைத்துக் கொண்டிருந்தனர். ஐரிஷ் தொண்டர் படை என்பது தேசியவாதிகளான மிதவாதிகளுடைய ராணுவம். அதை ஸின்பீன் படை என்றும் சொல்வதுண்டு. அயர்லாந்து பூரண சுதந்திரம் பெற்றுக் குடியரசை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் போராடுவதற்காக அந்தப் படை அமைக்கப்பட்டிருந்தது.
யுத்த ஆரம்பத்தில் பிரிட்டிஷ் பார்லிமென்டார் அயர்லாந்துக்கு ஒரு சுய ஆட்சி மசோதாவை நிறைவேற்றி வைத்திருந்தனர். அந்தச் சொற்பச் சீர்திருத்தத்தைக்கூடக் கொடுக்கக்கூடாது என்று அல்ஸ்டர்வாசிகள் எதிர்த்தனர். டப்ளின் நகரத்தில் ஒரு பார்லிமென்ட் ஏற்படுத்தப்பட்டாலும், தாங்கள் உயிருள்ளவரை அதை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் கூறினார்கள். தங்களுக்கு ஒரு தனியான பாலிமெண்டும் தனி அரசியலும் வேண்டுமென்று கோரினார்கள். அயர்லாந்துக்கு சுயராஜ்யமே கொடுக்கக்கூடாதென்று பிடிவாதமாகக் கூறிவந்த பெருஞ்செல்வர்களான ஆங்கில கன்ஸர்வேட்டிவ் கட்சியர் அல்ஸ்டர் வாசிகளுக்குப் பொருளுதவியும் பிற உதவிகளும் செய்து அவர்களைப் பிரிட்டிஷ் பார்லிமென்டுக்கே விரோதமாகத்தூண்டி விடுவார்கள். அல்ஸ்டார்வாசிகள் துணிவுடன் முன்வந்து வெளிப்படையாக யுத்தப் பயிற்சி பெற்று, ஆயுதம் தாங்கி, ஆரஞ்சுப்படையை அமைத்துக் கொண்டார்கள். அக்காலத்தில் லின்பின் இயக்கம் அயர்லாந்தில் அதிகச் செல்வாக்கைப் பெற்றிருக்கவில்லை. டப்ளின் தலைநகருக்கு வெளியே அதைப்பற்றி ஜனங்களுக்கு அதிகம் தெரியாது. ஐரிஷ் பிரமுகர்களில் பெரும்பாலார் பார்லிமென்டில் சென்று கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். அவர்களுக்கு ஜான் ரெட்மெண்டு என்பவர் தலைவர். யுத்த ஆரம்பத்தில் அவர் தமது அமிதவாதத்தை எல்லாம் பறிகொடுத்துவிட்டு, பிரிட்டிஷாருக்கு உதவிப் பட்டாளம் சேர்த்து அனுப்பிக் கொண்டிருந்தார். அவரைப் பின்பற்றியவர்களும் அதே வேலையில் ஈடுபட்டார்கள். ஆரஞ்சுப் படையையோ, முற்றிலும் ஆங்கிலேயருக்கு அநுகூலமானது. இந்நிலையில் அயர்லாந்தின் சுதந்திரத்தைப் பெறவும், ஆங்கிலேயப் படையையும் ஆரஞ்சுப்படையையும் எதிர்த்து நின்று போராடவும் ஒரு தேசியப்படை அவசியம் என பிர்சி, மக்னில் முதலிய தலைவர்கள் கருதினார்கள். அவர்களுக்கு நாட்டில் அதிகச் செல்வாக்கு இல்லாதிருந்தபோதிலும் ஐரிஷ் வாலிபர்கள், அவர்களுடைய கருத்தை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டு, ஐரிஷ் தொண்டர்படையை அமைத்தனர். ஜெர்மனியுடன் இங்கிலாந்து போராடுவது தர்மத்திற்காக அன்று என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒரே கனவு தாய்நாடு விடுதலை பெற்று சுதந்திரக் காற்று வீச வேண்டும் என்பதே.
டோனோஹறில் என்னும் கிராமத்தில் தான்பிரீன் 1914 ஆம் ஆண்டு ஐரிஷ் தொண்டர்படையில் முதன் முதலாகச் சேர்ந்து கொண்டான். அவனுடைய சொந்த ஊர் திப்பெரரி நகரம். அவனுக்கு அப்போழுது வயது இருபது. அக்காலத்திலேயே அவனைப் போலிஸார் புரட்சிக்காரன் என்று கவனித்து வர ஆரம்பித்தனர். அவனும் அவன் நண்பர்களும், ஆங்கிலப்படையில் சேரவேண்டுமென்று ஜான் ரெட்மண்ட் கூறிவந்ததைச் சிறிதும் கவனியாமல், தங்களுடைய வேலையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மைதானங்களில் கூடி வெளிப்படையாகத் தேகப்பயிற்சி, யுத்தப் பயிற்சி முதலியன செய்து வந்தார்கள். எப்பொழுதாவது ஒரு காலம் வரும், அக்காலத்தில் தங்கள் பகைவனை ஒரு கை பார்க்கலாம் என்பதே அவர்களுடைய நம்பிக்கை. அவர்களுடைய பகைவன் இங்கிலாந்தைத் தவிர வேறெவருமில்லை.
யுத்தம் வளர வளரப் போலிஸார் அவர்களை மிகவும் நெருக்கமாகக் கவனித்து வந்தனர். அவர்கள் ஜெர்மானியர்களிடம் அதுதாபமுடையவர்கள் என்று பறை சாற்றப்பட்டது. பத்திரிகைகளில் ஜெர்மானியர்கள் மனிதத்தன்மையையே கைவிட்டு அநாகரிகமான கொடுமைகளைச் செய்து வந்ததாகப் பொய்யும் புரட்டும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததால், ஐரிஷ் ஜனங்கள் அவர்களை வெறுத்து, ஆங்கிலேயரிடம் அனுதாபம் காட்டி வந்தனர். பணக்காரர்களும், கொழுத்த வியாபாரிகளும் பெரிய குடியானவர்களும் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார்கள். ஆனால் ஐரிஷ் தொண்டர் படையிலுள்ளவர்கள் ஆங்கிலேயருக்கு எவ்வித உதவியும் செய்ய மறுத்துவிட்டனர். ஆங்கில யுத்த வீரர்களுக்குச் செளகரியங்கள் அமைத்துக் கொடுப்பதாக ஐரிஷ் போலிஸார் சில நிதிகள் சேர்த்து வந்தனர். தான்பிரீன் அந்த நிதிக்கு உதவி செய்ய மறுத்து விட்டான். அதனால் போலிஸார் அவனிடம் வெறுப்படைந்தனர். அப்பொழுது தான்பிரீன் ஒரு பெரிய ரெயில்வே கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். போலிஸார் அவனுடைய மேலதிகாரிகளிடம் இதுபற்றி புகார் செய்தனர்.
ஐரிஷ் போலீஸ் படையைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். மற்ற நாடுகளிலுள்ள போலீஸ் படையைப் போலில்லாமல் அது விசேஷ ராணுவப் பயிற்சி பெற்று அயர்லாந்தில் சாதாரணமான குற்றங்களை அதிகமாயில்லாமையால் சுதந்திர விருப்பம் கொண்ட தொண்டர்களைப் பின்பற்றிச் சென்று துப்பறிவதே போலிஸாரின் முக்கிய வேலையாக இருந்தது. அவர்கள் கோயில்களில் பாதிரிமார்கள் செய்த மதப் பிரசங்கங்களைக்கூட சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு போவது வழக்கம். அவர்கள் மொத்தம் சுமார் பதினாயிரம் பேர்கள் இருந்தனர். ஒவ்வொரு கிராமம் அல்லது நகரத்தினுடைய அளவுக்குத்தக்கபடி இரண்டு முதல் இருபது பேர்வரை நாடெங்கும் போலிஸார் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தப் போலிஸாரின் உதவி இல்லாவிடின் அயர்லாந்தில் இருந்த நாற்பதினாயிரம் ஆங்கிலத்துருப்புகளும் எவ்வித வேலையும் செய்யமுடியாது. ஏனென்றால் படை வீரர்களுக்கு நாட்டைப் பற்றியும் நாட்டிலுள்ள ஜனங்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. ஜனங்களோடு நெருங்கிப் பழகி உளவறிந்து சொல்வதற்கு ஐரிஷ் போலிஸ்படையே ஆங்கில அரசாங்கத்தின் மூளை என்று சொல்லலாம். இந்தப் படை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சர்ரொபர்ட்பீல் என்பவரால் அமைக்கப்பட்டதால், ஐரிஷ் போலிஸாரை ஐனங்கள் பீலர்கள் என்று ஏளனமாக அழைப்பது வழக்கம்.
இனி நம்முடைய சரித்திரத்தைக் கவனிப்போம். யுத்த ஆரம்ப முதல், தான்பிரீனும் அவனுடைய தோழர்களும் தங்களுடைய சொந்த வேலைகளுக்கிடையே அடிக்கடி கூடி யுத்தப்பயிற்சியை இடைவிடாது நடத்தி வந்தார்கள். அத்துடன் துப்பாக்கி, ரிவால்வர் முதலிய ஆயுதங்கள் எங்கு எங்கு கிடைக்கும் என்று தேடிச் சேர்த்து வந்தார்கள். அக்காலத்தில் தொண்டர்களிடம் ஆயுதங்கள் மிகச் சுருக்கமாகவே இருந்தன. 1915 ஆம் ஆண்டு முழுவதும் 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் இவ்வாறு பயிற்சி செய்வதிலும் ஆயுதங்கள் சேர்ப்பதிலும் கழிந்தன. 1916ஆம் ஆண்டு ஈஸ்டர் விழாவின் போது அயர்லாந்தில் சுதந்திரத்திற்காக ஒரு பெரிய கலகம் நடந்தது. அக்காலத்தில் திப்பெரரித் தொண்டர்கள் அதிகம் பங்கெடுத்துக் கொள்ள முடியாமல் போயிற்று. ஏனென்றால் அக்கலகத்தை நடத்திய மேலதிகாரி அவர்களுக்குச் சரியான உத்தரவு அனுப்பவில்லை. ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல உத்தரவுகளினால் அவர்கள் தீவிரமாக எதையும் செய்ய முடியாது போயிற்று.
1916 ஆம் ஆண்டு வருடத்துக் கலகம் ஜனங்களிடையே ஒரு பெரிய மாறுதலை உண்டுபண்ணிவிட்டது. அதுவரை ஸின்பினர்களை மதியாமல் இருந்தவர்கள் திடீரென்று அவர்களிடம் அதிக அபிமானம் காட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் தொண்டர்களுடைய படை அப்பொழுது போதிய வல்லமை பெற்றிருக்கவில்லை. ஆயிரக்கணக்காக தொண்டர்களை அரசாங்கத்தார் பிடித்து நாடு கடத்தி இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டனர். தொண்டர்களுடைய ஆயுதங்கள் பலவற்றைப் போலிஸாரும் ராணுவத்தாரும் பறித்துக் கொண்டு போய்விட்டனர். தொண்டர்கள் வெளிப்படையாகப் பயிற்சி பெறவோ, அணிவகுத்துச் செல்லவோ கூடாது ஏன்றும் நாடெங்கும் விளம்பரஞ் செய்யப்பட்டது. சிறிது காலத்திற்குத் தொண்டர்களிடையே குழப்பமும் அயர்வுமே காணப்பட்டன. ஆனால் ஈஸ்டர் கலகத்தில் சம்பந்தப்பட்டுப் போராடிய தொண்டர்கள் பலர் ஆங்கில ராணுவத்தார் வலையில் அகப்படாது தப்பி, தொண்டர் படையைச் சீர்திருத்தி அமைப்பதற்காக டப்ளின் நகரில் இரண்டு ரகசிய மகாநாடுகளை நடத்தினர். சில வாரங்களில் மீண்டும் தீவிரமான வேலை ஆரம்பமாயிற்று. தம்பிரீனும் அவனுடைய தோழர் ஸின்டிரீஸியும் தங்களுடைய தொண்டர் படையைச் சீர்திருத்தி அமைக்க முயன்றார்கள். எக்காரியத்தையும் ரகசியமாகவே செய்யவேண்டியிருந்தது. வாரத்திற்கு இருமுறை அவர்கள் ஒரு சிறிய வனத்தில் கூடிப் பயிற்சி செய்வது வழக்கம். இவ்வாறு 1917ஆம் ஆண்டு மே மாதம் வரையில் நடந்து வந்தது. அப்பொழுது தான்பிரீனுடைய படையில் 13 பேர்கள் இருந்தார்கள். அவர்களில் யாருக்கும் போர்முறைகளைப் பற்றித் தெரியாது. வேறு ராணுவப் பயிற்சி உள்ளவர்கள் ஆங்கிலப் பட்டாளத்தில் சேர்ந்து கொண்டிருந்ததாலும் கண்டவர்களையெல்லாம் நம்புவது அபாயமானதாலும் அவர்களது ராணுவப்பயிற்சி முற்போக்கு அடையமுடியவில்லை. எனினும், தேகப்பயிற்சி செய்தல், கொடி, குழல் ஊதுதல் முதலியற்றால் அடையாளங்களைக் கற்றுக் கொள்ளுதல், ரிவால்வரால் குறிபார்த்துச் சுடுதல் முதலியவற்றில் அவர்கள் விசேஷப் பழக்கம் பெற்று வந்தனர். இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள அவர்களுக்குப் புத்தகங்களைத் தவிர வேறு உதவியில்லை. அந்தப் புத்தகங்களும் அரசாங்கத்தாரால் ஆங்கிலத்துருப்புகளுக்கும் கொடுக்கப்பட்டவை. அவர்களை எதிர்ப்பதற்கு அவர்களுடைய புத்தகங்களே உதவிபுரிந்தன. தான்பிரீன் கூட்டத்தார் பிரிட்டிஷ் துருப்புக்கள் பயிற்சி செய்யும் இடங்களுக்கு அடிக்கடி சென்று கவனிப்பது வழக்கம். அதன் மூலம் அவர்கள் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள். அத்துடன் எங்காவது, யாரிடமாவது ஒரு ரிவால்வர் கிடைக்குமென்று அவர்கள் கேள்விப்பட்டால் என்ன விலை கொடுத்தாவது அதை வாங்கி விடுவது வழக்கம். அந்த நேரத்தில் தேவையுள்ள பணமும் எப்படியாவது கிடைத்துவிடும்.
1917 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தான்பிரீன் படையினர் நகரெங்கும் தெரியும்படியாக அணிவகுத்துச் சென்றனர். அக்காலத்தில் ஈஸ்டர் கலக சம்பந்தமாக நாடுகடத்தப்பட்ட பலர் அயர்லாந்திற்கு மீண்டும் வந்து வாலிபர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர். அரசியல் விவகாரங்களிலும் குடியரசுக்காரர்களுக்குச் செல்வாக்கு அதிகரித்து வந்தது. குடியரசின் பெயரால் நின்ற இாண்டு அபேட்சகர்களுக்குத் தேர்தலில் வெற்றி கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்னால் லியூஸ் சிறையிலிருந்து விடுதலையடைந்த ஈமன் டி வெலசாவும் குடியரசுக் கட்சியின் சார்பாகப் பார்லிமெண்டின் ஸ்தாபனம் ஒன்றுக்கு அபேட்சகராக நின்றார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆங்கிலப் பார்லிமென்டிற்கே செல்வதில்லை என்று உறுதி கூறினார். அவருக்கு மகத்தான வெற்றி ஏற்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் அவர் திப்பெரரி நகரில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரசங்கம் செய்தார். அப்பொழுது தான்பிரீன் படையினர் அனைவரும் ஒரே மாதிரியான பச்சைநிற உடை தரித்து டிவலெராவுக்கு மெய்க் காப்பாளராக நின்றனர். அப்பொழுது திப்பெரரியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்கள் தங்கியிருந்தனர். அதனால் தான்பிரீன் படையினர் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லமுடியவில்லை. அவற்றிற்குப் பதிலாக நீண்ட தடிக் கம்புகளை வைத்திருந்தனர். அக்காலத்தில் ராணுவத்தைப்போல் அணிவகுத்துச் செல்வதும், ஒரேமாதிரியான ராணுவ உடையணிவதும், கைகளில் தடிக் கம்பு வைத்திருப்பதும் குற்றமென்று அரசாங்கம் விளம்பரப்படுத்தியிருந்தது. தடிகளையும் தடைசெய்து விளம்பரஞ் செய்யப்பட்டது மிகவும் வியப்பாகும்! அதன் வரலாற்றைக் கவனிப்போம்.
டப்ளின் நகரத்திலே ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இங்கிலாந்திலுள்ள ஐரிஷ் கைதிகள் மிகவும் கேவலமாக நடத்தப்படுவதைக் கண்டிக்கவே அக் கூட்டம் கூடியது. பிளங்கெட் என்பவரும் கதால் புருகா என்பவரும் பிரசங்கம் செய்தார்கள். அப்பொழுது டப்ளின் நகரப்போலிஸைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மில்ஸ் என்பவர்.அந்த அமைதியான கூட்டத்தைக் கூடவிடாமல் கலைக்க முயன்றார். அக்கூட்டத்தில் ஹாக்கி விளையாட்டிற்குச் செல்லக்கூடிய வாலிபர்களும் விளையாடி விட்டுத்திரும்பிய வாலிபர்களும் பலர் இருந்தனர். இன்ஸ்பெக்டர் கூட்டத்தைக் கலைத்துப் பேசுகிறவர்களைக் கைது செய்ய வேண்டுமென்று முயற்சித்தபொழுது அவர்மேல் ஒரு ஹாக்கி மட்டை எறியப்பட்டது. அவர் காயங்களடைந்து பின்னால் அக்காயங்களால் இறந்து போனார். இதிலிருந்து அயர்லாந்திலுள்ள பிரிட்டிஷ் துருப்புக்களின் சேனாதிபதியாகிய சர் பிரியான் மாகன், யாரும் தெருக்களில் ஹாக்கிக் மட்டைகளைக் கொண்டுசெல்லக் கூடாது என்று சட்டம் போட்டு விட்டார்; மனிதர்கள் கம்பு ஊன்றி நடக்கக்கூடாது என்று சட்டமிடுவது எவ்வளவு கேவலமோ, அதைப்போன்றது. இந்த அநாகரிக உத்தரவும். இந்தச்சட்டம் போடுவதற்கு முன்னால் ஜனங்கள் அதிகமாய்த் தடிகள் வைத்திருப்பதில்லை. ஆனால் அதற்குப்பின்னால் நாடு, நகரம் எல்லா இடங்களிலும் ஜனங்கள் ஹாக்கித்தடிகளைத் தாங்கிச் சென்றனர். முன்பின் தடிகள் வைத்திருக்காதவர்களும் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டனர்.
தான்பிரீன் கூட்டத்தார் திப்பெரரியில் ஹாக்கித் தடிகளைத் தாங்கி ராணுவ உடையில் அணிவகுத்துச் சென்றது, பகைவர்களுக்குக் கலகத்தை உண்டாக்கியதைப் போலவே நண்பர்களுக்கும் கலக்கத்தை உண்டாக்கியது. உள்ளூரில் இருந்த ஸின்பீனர்கள் அதைக்கண்டு திடுக்கிட்டுப்போயினர். அப்போழுது ஸின்பீன் கட்சிக்கு மிகுந்த ஆதரவு ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் அதில் சேர்ந்தனர். ஆனால் அவர்கள் தீர்மானங்களைத் தவிர வேறு ஆயுதங்களையும் உபயோகிக்கத் தயாராக இருக்கவில்லை. திப்பெரரியிலிருந்த ஸின்பீனர்கள் தான்பிரீன் கூட்டத்தாரிடம் அதிருப்தி கொண்டதன் காரணம் என்னவெனில் அவர்கள் கூட்டம் கூடித்தர்க்கம் செய்து ஒரு நீண்ட தீர்மானம் இயற்றாமலே ராணுவ உடை தரித்து அணிவகுத்துச் சென்றதுதான். இத்தகைய மந்தபுத்திக்காரர்களால் பின்னாலும் பலதடைகள் ஏற்பட்டன. ஆனால் தான்பிரீன் கூட்டத்தினர் அவைகளைப் பொருட்படுத்தவில்லை.
தீப்பெரரியில் நடந்த இச்சம்பவத்தைச் சில்லறை உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுகின்றனர். உடனே குற்றவாளிகளைக் கைது செய்யும்படி உத்தரவு பிறந்தது. தான்பிரீன் மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தியின் விருந்தினராகச் சிறைசெல்வதற்கு விரும்பவில்லை. வெளியிலே பல வேலைகள் காத்து நிற்கும் பொழுது, மாமனார் வீட்டில் விருந்துண்ன என்ன அவசரம்? அவனும் ஸீன்டிரீஸியும் வீட்டைவிட்டு வெளியேறி வெளியிடங்களுக்குச் சென்று போலிஸ் புலிகளின் கண்ணில் படாமல் மறைந்தனர். ஆனால் சில நாட்களில் ஸீன் போலிசாரால் கைது செய்யப்பட்டான். அவன் கார்க் நகரத்து ஜெயிலில் கொண்டுவைக்கப்பட்டான். அங்கே வேறு பல புரட்சித் தலைவர்கள் இருந்தனர். ஸீன் அவர்களோடு கலந்து பின்னால் செய்ய வேண்டிய காரியங்களுக்குத் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்தான். புரட்சிக்காரர்களைச் சிறைகளில் அடைத்து வந்தது அவர்களுக்கு விசேஷ உதவியாக இருந்தது. பல திறப்பட்ட அபிப்பிராயங்களுடைய புரட்சிக்காரர்கள் வெளியிலேயே ஒன்று கூடுவதற்கு வழியில்லாதாகையால் சிறைகளுக்குள்ளே ஒருவருக்குகொருவர் வந்து பேசிக்கொள்வதற்குப் பிரிட்டிஷார் உதவி செய்து வந்தனர். பல புரட்சிக்காரர்கள் சிறையில் வைத்துத்தான் ராணுவப் பயிற்சி பெற்று வெடிகுண்டு செய்யவேண்டிய வழிகளைத் தெரிந்து கொண்டார்கள். ஆதலால் சிறைச்சாலையே புரட்சிக்காரர்களின் சர்வகலாசாலை என்பது பொருந்தும்.
ஸீன்டிரிஸ் ராணுவ நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு இரண்டு வருஷம் தண்டனை அடைந்தான். ஆனால் எட்டு மாதத்திற்குப்பிறகு விடுதலை செய்யப்பட்டான். இந்த விசாரனையெல்லாம் வீண் ஆடம்பரத்தைத் தவிர வேறில்லை. ஏனென்றால் தேசியத்தொண்டார்கள் எதிர் வழக்காடுவதில்லை. பிரிட்டிஷ் நீதி மன்றத்திற்குத் தங்களை விசாரிப்பதற்கு உரிமையே கிடையாது என்று அவர்கள் கூறிவந்ததார்கள். விசாரணை நடந்து கொண்டிருக்கும்; சாட்சிகள் போலீஸார் கட்டிக் கொடுத்த பொய் மூட்டைகளை அவிழ்த்து அளந்து கொண்டிருப்பார்கள். அதேசமயத்தில் குற்றங்சாட்டப் பெற்றுக் கைதிக் கூண்டில் நிற்கும் தொண்டர்கள் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருப்பார்கள். விசாரணையையும் தண்டனையையும் அவர்கள் ஒரு துரும்பாகக்கூட மதிக்கவில்லை. சிரித்த தாமரை மலர் போன்ற முகத்துடன் அவர்கள் சிறைசென்றவண்ணமாயிருந்தனர். அடிமை நாட்டிலும் அந்த ஆட்சியுள்ள நாட்டிலும் கண்ணியமானவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைதானே!
சிறைக் கோட்டங்கள் மண்ணுலகில் மனிதனால் படைக்கப்பட்ட நகரங்கள். பெரும்பாலும் கொலை, களவு செய்து சிறைசெல்லுவோர் வாழ்க்கையில் மிகுந்த தாழ்ந்தபடியிலுள்ளவர்கள். அவர்களுக்கே சிறைத் தண்டனை நரக வேதனையாகும். ஆனால் அரசியல் போராட்டத்தில் உயர்ந்த ஒரு கொள்கைக்காக பிறப்புரிமையாகிய சுதந்திரம் பெறுவதற்காக வாழ்வு, செல்வம், பெருமை அனைத்தையும் துறந்து வெளியேறும் தியாகிகளையும் சிறையிலடைப்பது எவ்வளவு அநாகரீகம். ஆனால் உலகம் தோன்றிய நாள்முதல், அரசியலில் மாறுபட்ட கருத்துக்கொண்டவர்களுக்கும் பழையமூப்படைந்த மூடக் கொள்கைகளை எதிர்பவர்களுக்கும் சிறையே வீடாக அமைந்துள்ளது. விதை கெடாமல் முளைவராது. பிறர் நலம் பேணுவோர் சிலுவையைத் தாங்கித் துன்புறாமல் முடியாது. ஆதலால் நல்லோருடைய யாத்திரா மார்க்கத்தில் சிறை ஒரு படை வீடு: பயிற்சி நிலையம். ஆனால் சிறையில் தேசபக்தர்களுக்கு, ஆடும், மாடும் உண்ண மறுக்கும் ஆபாசமான உணவு கொடுக்கப்பட்டால் யாரிடம் முறையிடமுடியும்? உண்ணாவிரதம் என்னும் உயரிய ஆயுதம் மட்டுமே மட்டுமே அவர்களுக்கு ஆபத்தில் உதவுகிறது. இந்த ஆயுதத்தை அயர்லாந்தின் வீரர்களும் பல சமயம் உபயோகிக்கும் படி நேர்ந்தது.
ஸின் முதலிய ஐரிஷ் தேசபக்தர்கள் தாங்கள் அந்நிய அரசாங்கத்தால் மிருகங்களிலும் கேவலமாக நடக்கப்பட்டதை எதிர்த்துப் போராட உண்ணாவிரதத்தையே மேற்கொண்டனர். அவர்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளுக்குரிய மரியாதையையே அவர்கள் வேண்டினார்கள். ஆனால் அரசாங்கத்தார் அவர்களை டப்ளின் நகரச் சிறையில் கொண்டுபோய் வைத்தார்கள். உண்ணாவிரதம் நின்றபாடில்லை. அங்கு அதிகாரிகள் அவர்களுக்குப் பலவந்தமாய் உணவு ஊட்டினார்கள். இக்கொடிய முறையால் மிக்க வீரமுள்ள புரட்சித்தலைவரும் 1916 ஆம் வருடத்திய கலகத்தில் தலைமை தாங்கி நின்றவருமான தளகர்த்தர் டாம் ஆன் உயிர்துறந்தார். இந்தக் கொலை, தேசத்தை எழுப்பி விட்டது. ஜனங்கள் கோபங்கொண்டு பொங்கினர். ஐரிஷ் தேசபக்தர்கள் எண்ணியதை நிறைவேற்றும் உறுதியுடையவர்கள் என்பதையும் அப்பொழுது முதன் முறையாக அரசாங்கத்தார் தெரிந்து கொண்டார்கள். இதன் பின்பு அரசாங்கத்தார் உண்ணாவிரதம் இருந்தவர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ள இசைந்தனர். அது முதல் அவர்களை அரசியல் கைதிகளாக, யுத்தக் கைதிகளாக நடத்துவதாக அரசாங்கத்தார் உறுதி கூறினர். பின்னால் பலவந்தமாக உணவூட்டும் முறை கையாளப்படவில்லை.
ஸின் சிறையின் புழுங்கிய காலத்தில் அவன் தோழன் தான்பிரீன் சும்மா இருக்கவில்லை. அவன் சுற்றியிருந்த பல கிராமங்களுக்குச் சென்று, தொண்டர் படைகளைத் திரட்டிப் பயிற்சி கொடுத்து வந்தான். அதே வேளையில் நாடு முழுவதிலும் தொண்டர்படைகள் மிகத் திறம்படப் பயிற்சி பெற்றுவந்தனர். 1916ஆம் வருடத்திலிருந்த நிலைமையைப் பார்க்கிலும் அப்பொழுது ஐரிஷ் தொண்டர்படை மிகவும் உயர்ந்துவிட்டது. ஆனால் இடையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்களுடைய பரம்பரை வழக்கப்படி கைதிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டனர். அப்பொழுது டண்டாக் சிறைக்கு மாற்றப்பட்டிருந்த ஸினும் அவன் தோழர்களும் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். அவர்கள் பின்னால் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வளவு காலமாகத் தொண்டர்படையின் பயிற்சி ரகசியமாகவே நடந்து வந்தது. திடீர்ரென்று பிரிட்டிஷ் படைகள் கிராமங்களுக்குச்சென்று சில தொண்டர்களைப் பிடித்துக் கொண்டு சென்றன. ஆனால் ஸீன் விடுதலையாகி வெளி வந்த பின்பு தொண்டர் பயிற்சி வெளிப்படையாகவே நடக்க வேண்டுமென்றும் ஒவ்வொரு தொண்டர்ரையும் அரசாங்கம் கைது செய்து விட்டாலும் கவலைப்படக்கூடாது என்றும் கூறினான். ஏனென்றால் அரசாங்கம் தொண்டர்களை ஒழுங்காகக் கைது செய்ய ஆரம்பித்தால் பல்லாயிரக்கணக்காக முன்வரும் தொண்டர்களை வைப்பதற்கு அயர்லாந்திலுள்ள சிறைகளும் போதாது. பின் உலகமெல்லாம் இங்கிலாந்தைக் கண்டு எள்ளிநகையாடும். எனவே இங்கிலாந்தும் சும்மாகிடந்த சங்கை ஊதிக்கெடுக்க விரும்பவில்லை.
ஐரிஷ் தொண்டர்களுக்கு ஆயுதம் இல்லாமையே பெருங்குறையாக இருந்தது. 1916ஆம் வருவும் நடந்த கலகத்தில் இருந்து அரசாங்கம் முன்னால் இருந்ததைப் பார்க்கிலும் அதிக கண்டிப்பாக ஆயுதச்சட்டத்தை அமுல் நடத்தியது. தேசத்தில் யாரும் அரசாங்க உத்தரவில்லாமல் துப்பாக்கி வைத்திருக்கக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. அடுத்த கலகம் வெகுவிரைவில் வந்துவிடும் என்பதை அரசாங்கம் மோப்பம்பிடித்து அறிந்து கொண்டிருந்தது. ஆனால் யாருக்கும் புலப்படாத சில மாய வழிகளின் மூலம் தொண்டர்கள் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வரவழைத்துக் கொண்டிருந்தார்கள்
அரசாங்கத்தார் அடக்குமுறை ஆவேசத்தில் ஸின் டிரிஸை மீண்டும் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்டது முதலே அவன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டான். சிறையில் வேறு பல நண்பர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் மைக்கேல் பிரென்னன், ஸீமாஸ், ஓநீல். ஸீன் சிறைப்பட்ட காலத்தில் தான்பிரீன் தொண்டர் படையில் படிப்படியாக உயர்ந்த ஸ்தானங்களைப் பெற்று கடைசியில் 'பிரிகேட் கமான்டன்ட்' என்ற படைத் தளகர்த்தர் பதவியையும் பெற்றான். தொண்டர் படையில் ஒவ்வொர் அங்கத்தினரும் வாக்குரிமை பெற்றுத்தத்தம் பிரிவுகளுக்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது வழக்கம். படையிலும் குடியரசுக் கொள்கையையே அவர்கள் கையாண்டு வந்தனர்.
அக் காலத்தில் ஐரோப்பிய யுத்தத்தில் ஆங்கிலேயர் மிகுந்த கஷ்ட நஷ்டங்களை அடைந்து வந்தனர். 1918 - ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஜெர்மானியர் பிரிட்டிஷ் படைக்குள் புகுந்து அவற்றைச்சின்னா பின்னப்படுத்தினார். இங்கிலாந்து மிகவும் அவலமடைந்து மூச்சுத்தினறும் அவ்வேளையிலே, ஆங்கிலேயர் அயர்லாந்து ஜனங்களைக் கட்டாயப்படுத்தி யுத்தத்திற்கு இழுத்துக் கொண்டு வர வேண்டும் என்று கூவினர். மன்னர் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? ஆங்கிலேயர் அனைவரும் அயர்லாந்தின் மன்னரன்றோ சில வாரங்களில் தேவையான சட்டம் பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டது. ஐரிஷ் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிடினும் அவர்களைப் போர்க்களத்திலே பலிக்குக் கொண்டு நிறுத்தும் அதிகாரத்தை அச்சட்டம் ஆங்கிலேயருக்கு கொடுத்தது. அப்பொழுது முன் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட லார்ட் பிரெஞ்ச் டப்ளின் நகரில் வைசிராயாக இருந்தார்.
பிளவுபட்டு அயர்ந்து கிடக்கும் ஒரு தேசத்தை ஐக்கியப்படுத்தி எழுப்பிவிட வேண்டுமானால் அதற்கு சிறந்த உதவி அடக்கு முறையைப் போல் வேறில்லை. கட்டாய ராணுவச்சட்டம், அயர்லாந்தின் கண்ணைத் திறந்துவிட்டது. அதுவரை ஐரிஷ் ஜனங்கள் பிரிட்டிஷாரை அவ்வளவு கடுமையாய் எதிர்த் தில்லை. ஆண், பெண், குஞ்சுகள் யாவரும் அச்சட்டத்தை எதிர்த்தனர். பாமரர் முதல் பாதிரியார் வரை அனைவரும் அதைக் கண்டித்தனர். அதுவரை பிளவுபட்டிருந்த கட்சிகளெல்லாம் மந்திரத்தில் கட்டுண்டதுபோல் ஒன்று சேர்ந்து உழைத்தனர். தாங்கவொண்ணாத துன்பம் தலைமேல் விழப்போவதை அறிந்த ஜனங்கள் தொண்டர் படையினர் என்ன செய்கின்றனர்? அவர்கள் துப்பாக்கியும் ரிவால்வரும் கொண்டு பயிற்சி செய்தது வெறும் பாவனைக்காகவோ? என்று கூவினர். இங்கிலாந்தை எதிர்க்கக்கூடியவர்கள். அவர்களே என்று யாவரும் உணர்ந்தனர். ஒரு தொண்டன் உயிரோடிருக்கும் வரை கட்டாய ராணுவச் சட்டம் அமுலுக்கு வர முடியாது என்பதை அயர்லாந்தும் அதை ஆண்டு அடக்கிய இங்கிலாந்தும் நன்கு அறியும்.
தொண்டர் படையில் ஆட்களுக்குக் குறைவில்லை; ஆயுதத்திற்கே முடை! பல்லாயிரம் வாலிபர்கள் அப்படையில் சேர்ந்து கொண்டனர். ஆனால் காற்றுக்கூடப் புகமுடியாதபடி பாதுகாக்கும் ஆங்கிலேயர் கண்முன்பு அத்தனை பேருக்கும் ஆயுதங்களைச் சேர்ப்பது எங்ஙனம்? தொண்டர்கள் திகைத்துத் தவித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கைகள் ஆயுதந்தாங்கத் துடித்துக் கொண்டிருந்தன. கால்கள் போர்க்களத்திற்கு செல்ல முனைந்து நின்றன. அந்நிலையில் அவர்கட்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. அயர்லாந்தில் அரசாங்கத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சில பணக்காரர்களும் ராஜவிசுவாசிகளும் துப்பாக்கிகளையும், ரிவால்வர்களையும், பட்டாக்கத்திகளையும், ஈட்டிகளையும் தங்கள் மாளிகைகளிலே சும்மா வைத்துக் கொண்டிருந்தனர். ராஜவிசுவாசிகளுக்கு இத்தனை ஆயுதங்களும் எதற்கு? புரட்சிக்காரருக்கே அவை தேவை! தொண்டர்கள் இதை அறிந்து கொண்டு, ஊரூராய்ப் பிரிந்து சென்று ஆயுதம் சேகரிக்க ஏற்பாடு செய்தார்கள். முதலாவது எந்த ஊரில், யாரிடம், எத்தனை ஆயுதங்கள் உண்டு என்பதற்குக் கணக்கெடுத்தார்கள். கணக்குப்படி ஆயுதங்களைக் கீழே வைக்கும்படி ஆங்காங்கு இரவில் சென்று கேட்டார்கள். பலர் சமாதானமாகவே ஆயுதங்களைக் கொடுத்துவிட்டார்கள். பலர் தங்களிடமுள்ள ஆயுதங்களை விரைவாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அழைப்பும் அனுப்பினார்கள் சிலர் மட்டும் மறுத்தார்கள். மறுத்தவர்கள் மார்புக்கு நேராகத் தொண்டர்கள் துப்பாக்கிகளைப் பிடித்தவுடன், அந்த மறுப்பும் ஒழிந்தது. ஓர் உயிரையும் வதையாமலே தொண்டர்களுக்குத் தேசத்திலிருந்த ஆயுதங்களெல்லாம் வந்து சேர்ந்தன. ஆனால் அதிகாரிகள் சும்மா இருக்கவில்லை. இந்நிலை ஏற்படும் என்று தெரிந்ததால் அவர்கள் போலிஸாரை அனுப்பி ஜனங்களிடமுள்ள ஆயுதங்களை வாங்கி வரும்படி பணித்தார்கள். போலிஸார் போன இடமெல்லாம் சில நிமிஷங்களுக்கு முன்னதாகவே புரட்சி வாலிபர்கள் ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு போன செய்தியைத் தெரிந்து கொண்டு வெறுங்கையுடன் திரும்பினார்கள். இருக்கும் சர்க்காருக்கும் எதிர்காலச் சுதந்திர சர்க்காருக்கும் எவ்வளவு வித்தியாசம்!
3
முதல் வெடிமருந்துச்சாலை
* * *
கட்டாய ராணுவச்சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதால் அயர்லாந்தின் ஜனங்கள் மிகுந்த கலக்கடைந்தார்கள். பல்லாயிரக்கணக்கான வாலிபர்களும் வயோதிகர்களும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக ஐரிஷ் தொண்டர் படையில் வந்து சேர்ந்துகொண்டனர். பதினோறிலிருந்து ஐம்பது வயது வரையுள்ளவர்கள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஏதாவதொரு தொண்டர்படையைச் சேர்ந்திருந்தார்கள். பெண்கள் தனியாக ஒரு சங்கத்தை வைத்துக் கொண்டார்கள். பையன்கள் வானரசேனைகளை அமைத்துக்கொண்டு தொண்டர் படைக்கு உதவி செய்ய முன்வந்தனர். வந்த தொண்டர் படையின் முக்கிய அதிகாரிகளிற் பலர் சிறையில் இருந்ததால் வெளியிலிருந்த சிலர் இரவு பகலாக உழைத்து அவர்களுடைய வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருந்தது. கட்டாய ராணுவச்சட்டம் அயர்லாந்தை ஒற்றுமைப்படுத்துவதற்காகக் கடவுள் அருளிய ஒரு பாக்கியம் என்று கருதினார்கள். அதன் மூலமாவது வேற்றுமைகள் ஒழிந்து அயர்லாந்து நிரந்தரமான ஒற்றுமையை அடையுமென்று தான்பிரீன் முதலானவர்கள் எண்ணினார்கள்.
இங்கிலாந்து ஐரிஷ் மக்களின் உறுதியைக் கவனித்து வந்தது. கட்டாய ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவருவதா அல்லது அயர்லாந்தை இழப்பதா என்ற பிரச்சினை ஏற்பட்டது. ஏனெனில் மக்கள் எல்லோரும் கலகத்துக்குத் தயாராக நின்றார்கள். இங்கிலாந்து பேசாதிருந்து நாட்டின் நிலைமையை ஆராய்ந்து வந்தது. தொண்டர்களும் தீவிரமாகவும் இடைவிடாமலும் தங்களுடைய பிரசாரத்தை நடத்தி வந்தார்கள்.
தன்பிரீன் இயற்கையான யுத்தம் வருவதற்கு முன்னே தன்படையினருக்குள்ளே ஒத்திகை யுத்தங்களுக்கு ஏற்பாடு செய்தான். அவர்களில் சிலர் திப்பெரரி நகரின் ஒரு பாகத்தைப் பாதுகாப்பார்கள். மற்றும் சிலர் அதை முற்றுகையிட்டுப்பிடிப்பார்கள். இருகட்சியாருக்கும் தீவிரமான போராட்டம் ஏற்படும். அதிலிருந்து அவர்கள் நல்ல பயிற்சி பெற்றுவந்தார்கள் தொண்டர்கள் திப்பெரரி நகரின் சில பாகங்களைத் தங்களுடைய ராணுவ ஸ்தலங்கள் என்று குறிப்பிட்டு அங்கே ஆங்கிலப் போலீஸாரும் சிப்பாய்களும் வராமல் பாதுகாத்து வந்தனர். அவர்களுடைய இந்த நடவடிக்கைகளின் போதெல்லாம் அந்நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ்கிப்பாய்கள் இருந்தனர் என்பதை மத்துவிடக்கூடாது.
சில சமயங்களில் இங்கிலாந்து புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது வழக்கம். அது தன் கைக்கு எட்டாவிட்டால் குடுமியை விட்டுவிடும். கட்டாய ராணுவச்சட்த்தால் அயர்லாந்திலிருந்து ஒரு மனிதனைக்கூட ராணுவத்திற்குச்சேர்க்க முடியாது என்பதை அது தெரிந்துகொண்டது. ஆதலால் அச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்படாமலே ஒழிந்தது. இதனால் ஐரிஷ் தொண்டர்படைக்கு மிகவும் கஷ்டமேற்பட்டது. பல்லாயிரக்கணக்காக அதில் வந்து சேர்ந்து கொண்டிருந்த மக்கள் படிப்படியாக அதிலிருந்து விலகிவிட்டார்கள். சட்டம் ஒழிந்தவுடன் அவர்களுடைய கவலையும் ஒழிந்து விட்டது. அவர்கள் ஆங்கில அரசாங்கத்தின் கட்டாயத்தினால் ஆங்கிலப்படையில் சேர்ந்து பிரான்ஸ், டாடல்னலிஸ் முதலான யுத்த அரங்கங்களிலே சாவதை வெறுத்து அதற்குப் பதிலாகத் தங்களுடைய நாட்டிலே ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து மடிய விரும்பினார்கள் சட்டம் ஒழிந்த பிறகு அவர்களுக்குத் தொண்டர் படையில் விருப்பமில்லாமல் போய்விட்டது. அவர்கள் அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக ஆயுத்ந் தாங்கிப் போராடத் தயாராகவிருக்கவில்லை. சுதந்திரத்திற்காக ஒரு சொட்டு ரத்தம் சிந்துவதுகூட அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பழைய அரசியல்தலை வாகளும் இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார்கள். ஆனால் வாலிபர்கள் பலர் தங்கள் உறுதியில் சிறிதும் தளராது அயர்லாந்து பூரண சுதந்திரத்தைப் பெறும்வரையிலும் போராடியே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். தான்பிரீனும் அதே கருத்தை கொண்டிருந்தான்.
அச்சமயத்தில் ஸீன்டிரீஸிடண்டாக் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவந்தான். பதின்மூன்று நாட்களாக அவன் உணவுகொள்ளவில்லை. அதிகாரிகள் அவனைச்சாகவிட்டு விடுவார்கள் என்று தோன்றிற்று. வெளியே இருந்த தான்பிரீன் முதலானவர்கள் அச்சமயத்தில் தீரமான ஒரு காரியத்தைச் செய்து அவனை மடியவிடாமல் பாதுகாக்க வேண்டுமென்று கருதினார்கள். தான்பிரீனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஸீனை அரசாங்கத்தார் சிறைவூத்திருப்பதைப் போல தானும் அவர்களுடைய போலீஸ்காரன் ஒருவனைப் பிடித்துக்கொண்டு வந்து ஒரு ரகசியமான வீட்டில் அடைத்துவைத்து, அவனை பலவந்தமாக உண்ணாவிரதம் இருக்கும்படி செய்யவேண்டும் என்றும், ஸீனை விடுதலை செய்தால்தான் போலிஸ்காரனையும் விடுதலை செய்ய முடியும் என்றுறு அறிவித்து விடவேண்டும் என்றும் அவன் தீர்மானம் செய்தான் மறற நணபாகளும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அக்காலத்தில்லிமெரிக் ஜங்ஷன் என்னுமிடத்தில் இருப்புப் பாதை பக்கம் சில போலீஸ்காரர் காவலுக்கு நிற்பது வழக்கம். தான்பீரீனும் அவனுடைய தோழர்களும் மொத்தம் 40 பேர்கள் ஒரு நாள் அவ்விடதிற்குச் சென்று அருகே இருந்த மலையடிவாரத்தில் மறைந்திருந்தார். தற்செயலாக அன்றைக்கு ஒரு போலிஸ்காரனும் அவ்விடத்திற்கு வரவில்லை. பின்னால் தான்பிரீனுடைய யோசனை ஐரிஷ் குடியரசுச் சகோதர சங்கத்தால் நிராகரிக்கபட்டது. அச்சங்கம் மிகவும் ரகசியமானது. மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமான தொண்டர்கள் பலர் அதில் இருந்தனர். தொண்டர் படையை மேற்பார்க்கும் அதிகாரம் அச்சங்கத்துக்கே உண்டு. இச்சம்பவத்திற்குப் பிறகு தான்பிரீத் சங்கத்திலிருந்து விலகி விட்டான்.
1918 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஸீன் விடுதலை செய்யபட்டான் அவன் வெளியே வந்தவுடன் தொண்டர் படைசம்பந்தமான திட்டங்கள் பற்றி தான்பிரீனிடம் விவாதித்தான். தான்பிரீன் திட்டங்கள் போட்டுப் போட்டு சலிப்படைந்து இருந்ததால் உடனே சண்டையை ஆரம்பிக்க வேண்டுமென்று கூறினான். ஸீனுக்கும் அவனுக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டது. இருவரும் தாங்கள் நட்புக்கு எவ்விதக் குறைவும ஏறபடாதபடி தத்தம் கருத்துப்படியே வேலைசெய்ய ஆரம்பித்தார்ர்கள். தான்பிரீன். பாட்ரிக் என்னும் நண்பனுடன் சேர்ந்து ஒரு வெடிமருந்துச் சாலையை ஏற்படுத்தினான். அதன்மூலம் ஏராளமான வெடி மருந்தைத் தயார் செய்யவேண்டும் என்பது அவன் நோக்கம். தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் அவனும் கியோக்குமே. அத்தொழிற்சாலை டாம் ஒட்வியர் என்பவருடைய குடிசையின் ஒரு பாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. தான்பிரீனிடம் வெடிமருந்து செய்வதற்குத் தக்க யந்திரங்கள் இல்லை. கையாலேயே வெடிமருந்தும் குண்டுகளும் தயார் செய்யவேண்டி இருந்தது. செய்யபட்ட குண்டுகளும் மழையிலும் காற்றிலும் வெளியே கொண்டுபோனால் வெடிக்கக்கூடியனவாக இல்லை. வெடிகுண்டுகள் தயார் செய்வதோடு அவர்கள் தோட்டக்களும் தயார் செய்து வந்தார்கள். அவர்கள் வெளியிடங்களில் இருந்து துப்பாக்கிகளையும் ரிவால்வர்களையும் அபகரித்து வருவதையும் நிறுத்திவிடவில்லை. ஆங்காங்கே சிலரிடம் இன்னும் துப்பாக்கிகள் பாக்கி இருந்தன. தான்பிரீன் அவர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்வது வழக்கம்.
ஒரு சமயம் ஆயுதக் கொள்ளைக்காகச் சென்று வரும்பொழுது தான்பிரீன் பகைவர்களுடைய கையில் சிக்கும்படி நேர்ந்தது. அவனும் டிரீஸி முதலான நண்பர்களும் திப்பெரரியிலிருந்து திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது தான்பிரீனுடைய சைக்கிளில் காற்றுக் குறைந்து போய்விட்டதால் அது ஓடாது நின்று விட்டது. அவன் கீழே இறங்கி மற்றவர்களை முன்னால் செல்லும்படி விட்டு சைக்கிளுக்குக் காற்றடிக்க ஆரம்பித்தான். முன்னால் சென்ற தொண்டர்களை போலிஸார் பார்த்துவிட்டனர் அவர்கள் போகும் வழியிலேயே போலிஸ் படை வீடுகள் இருந்தன. ஆனால் போலிஸார் அந்த ஆறு தொண்டர்களிடம் நெருங்கத்துணியவில்லை. அவர்களுக்கு வழக்கமாயிருந்த தைரியத்துடன் விலகியிருந்து விட்டார்கள். தொண்டர்கள் வாயுவேகமாக மறைந்து விட்டார்கள். அந்நிலையில் தான்பிரீன் காற்றடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு தடித்த போலிஸ்காரன் அவனுடைய சட்டையைப் பிடித்து இழுத்தான். அதுவரை போலிஸ் புலி அவன் பக்கத்தில் இருப்பதை தான்பிரீன் உணரவில்லை. அவனுடைய இடதுகையில் பூட்டுக்களை உடைப்பதற்கு உபயோகிக்கப்படும் இரும்புப் பட்டையொன்று இருந்தது. அவன் அதைக் கொண்டு போலிஸ்காரன் மண்டையிலே அடித்து, மண்டை சரியாக இருக்கிறதா என்று பரீட்சை பார்த்தான். ஆசாமி அப்படியே அமர்ந்து விட்டான். உடனே தான்பிரீன் ரிவால்வரை உருவி மற்றப் போலிஸார் முன்பு அதை நீட்டிக் கொண்டு புறப்பட ஆரம்பித்தான். போலிஸ் அதிகாரி "மரியாதையாகப் பணிந்துவிடு அல்லது சுட்டுவிடுவேன்“ என்று பயமுறுத்தினார். தான்பரீன், "கைகளைக் கீழே போடுங்கள்! இல்லாவிட்டால் உங்களைக் கூட்டத்தோடு சுவர்க்கத்திற்கு அனுப்பிவிடுவேன்“ என்று பதிலுரைத்தான். போலிஸார் அந்த உத்தரவுக்குப் பணிந்தனர். அச்சமயத்தில் தான்பிரீன் திடீரென்றுதன் சைக்கிளில் ஏறி ஒரு முடுக்கு வழியாகப் பாய்ந்து சென்று விட்டான். அவன் அன்று தப்பியது மிகவும் ஆச்சரியம். ஏனென்றால் சில நிமிஷங்களுக்குள் அபாய அறிவிப்புக் கொடுக்கப்பட்டு, நகரைச்சுற்றிலும், தெருக்களிலும் சந்துகளிலும் ஏராளமான பட்டாளங்கள் தொண்டர்களைப் பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டன. ஆனால், அதற்குள் தான்பிரீன் தனது வெடிமருந்துச் சாலையில் தோழர்களுடன் செளக்கியமாக அமர்திருந்தான்.
தான்பிரீனுடைய வெடிமருந்துச்சாலை நெடுநாள் நிலைத்திருக்கவில்லை. அங்கு தொண்டர்கள் தங்களுக்கு வேண்டிய செளகரியங்களைத தாங்களே தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. சமையல் செய்வதற்கும், தண்ணிர் கொண்டு வருவதற்கும் வேறு உதவியாளில்லை. ஒருநாள் தான்பிரீன் ஒரு வாளி தண்ணீர் கொண்டுவருவதற்கு வெளியே சென்றிருந்தான். அவன் திரும்புகையில் குடிசையில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் வரும்பொழுது தீடிரென்று குடிசையின் கூரை ஆகாயத்தில் எழும்புவதைக் கண்டான். அதே சமயத்தில் இடி இடித்தது போல் பல வெடிகுண்டுகள் வெடிப்பதையும் கேட்டான். ஒரு நிமிஷத்தில் வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. அவன் உள்ளேயிருந்த தன்னுடைய தோழருக்கு என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்றான். கையில் இருந்த வாளியைக் கீழே வைத்துவிட்டு குடிசைக்குள் விரைந்தோடினான். பரணியில் ஏறிப்பார்த்தான். அங்கே பாட்ரிக்கியோக் பேச்சற்றுக் கீழே கிடந்தான். தான்பிரீன் அவனைக் கைகளில் ஏந்திக்கொண்டு மேலிருந்து விழுந்துகொண்டிருந்த கொள்ளிக்கட்டைகளின் நடுவே எடுத்துச்சென்று அங்கேயிருந்த மல்டீன் ஓடைக்கரையில் கொண்டு வைத்தான். வாளியைக் கொண்டு வந்து அதில் இருந்த குளிர்ந்த நீரை அவனுடைய முகத்தில் இரண்டுமுறை தெளித்தான். உடனே கியோக் எழுந்து நின்று "ஏ மூட சிகாமணியே! என்னைத் தண்ணீரில் அமிழ்த்திவிடுவாய் போலிருக்கிறதே!“ என்று வேடிக்கயைாகக் கோபித்துக் கொண்டான். தான்பிரீன் எப்படியாவது நண்பன் பிழைத்துக் கொண்டானே என்று ஆனந்தங் கொண்டான். அவர்கள் இருவருக்கும் குடிசையும் வெடிமருந்துச் சாலையும் அழிந்துபோன கவலை மட்டும் தணியவில்லை.
தான்பிரீன் கையிலிருந்த காசையெல்லாம் வெடிமருந்துச் சாலைக்காகச் செலவழித்திருந்தான். இப்பொழுது ஒட்வியருடைய வீடு எரிந்து போனதிற்கு நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டியிருந்தது. தோழர்களின் உதவியால் வீடு முன்னைப் பார்க்கிலும் அழகாக அமைக்கப்பட்டுவிட்டது. எனினும் தான்பிரீனுடைய தொழிலுக்கு அவ்வீடு பின்னால் கிடைக்கவில்லை. அதனால் அவன் திப்பெரரிவாசியான ஓ கானல் என்பவருடைய வீட்டில் தனது தொழிற்சாலையை அமைத்துக்கொண்டான். அவ்விடத்தில் அவனுக்கு அதிக வெற்றியும் கிடைத்தது. ஏனென்றால் மீண்டும் வீடு வெடித்துவிடாமல் இருப்பதற்கு அவன் மிகுந்த முன்னெச்சரிக்கை எடுத்துக்கொண்ட்ான்.
அந்த வீட்டில் இருக்கும்பொழுது தொண்டர்களுக்குச் சந்தோஷம் ஏற்படவில்லை. ஏனென்றால் அங்கு ஒரு விதமான செளகரியமும் கிடையாது. படுக்கை, பாய், தலையணை எதுவும் கிடையாது. அவற்றை வாங்கப் பணமும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இரண்டு கம்பளங்களை இரவல் வாங்கி வைத்துக்கொண்டு தலையிலே வைக்கோலை விரித்து அதன்மேல் ஒரு கம்பளத்தை விரித்துத் தொண்டர்கள் கிடப்பது வழக்கம். மேலேயிருந்துவரும் பனியைத் தொண்டர்கள் தாங்கமுடியாமல் அவர்கள் ஏராளமான பழைய பத்திரிகைகளை உடல்களின் மீது போர்த்துக்கொண்டு அவற்றிக்கு மெலாகக் கம்பளத்தை மூடிக்கொள்வார்கள். கொஞ்சம் உருண்டு புரண்டு படுத்தால் பத்திரிகைகள் கிழிந்துபோகும்; மீண்டும் குளிர் ஆரம்பித்துவிடும். ஆதலால், அவர்கள் அசையாமலே ஒரே நிலையில் படுத்திருந்து தினமும் மூன்று மணிநேரம் உறங்குவது வழக்கம். குளிரைத் தவிர வேறு சில தொந்தரவுகளும் இருந்தன. வீடு முழுவதும் சுண்டெலிகள் நிறைந்திருந்தன. இரவில் அவைகள் படுத்திருந்தவர்களின் தலைகளைக் கடித்துக் கடித்து எழுப்பிவிட்டுவிடும். சில சமயங்களில் தான்பரீன் கோபத்துடன் எழுந்து அவற்றை அடிப்பது வழக்கம். அப்பொழுது எலின்டிரிஸி, "அண்ணா அவைகளாவது சந்தோஷமாயிருக்கட்டும். உன்னுடைய தலையில் இருந்து கொஞ்சம் ரோமத்தை அவை கொண்டு போய்விட்டால் ஒன்றும் முழுகிப்போய் விடாது“ என்று சாந்தப்படுத்துவது வழக்கம். தான்பிரீன் "இந்த சுண்டெலிகளுக்குப் போலிஸாரிடம் என்ன உறவு? அவர்களைப் போலவே நாம் போன இடமெல்லாம் வந்து தொந்தரவு செய்கின்றனவே!“ என்று கூறிப் பரிகசிப்பான்.
சிறிது காலத்திற்குப் பிறகு கியோக் வேறு வேலை காரணமாக வெளியேறிவிட்டான். தான்பிரீனுக்கு உதவியாக ஸீன் ஹோகன் என்னும் நண்பன் வந்து சேர்ந்தான். அதிலிருந்து ஐந்து வருடகாலம் அவர்கள் இனைபிரியாமல் இருந்தார்கள். ஹோகன், டிரீஸி, தான்பிரீன் மூவரும் மூன்று உடலும் ஒருயிரும் போல் ஐக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு கோபமான வார்த்தையோ, மனஸ்தாபமோ ஏற்பட்டதில்லை. அவர்கள் ஓ கானல் வீட்டில் இருக்கும் பொழுது ஸீமாஸ் ராபின்ஸன் என்னும் உயரிய நண்பன் அவர்களோடு சேர்ந்து கொண்டான். இந்நால்வரும் வயது, நோக்கம், குணம் முதலியவற்றில் ஒத்திருந்தார்கள். அயர்லாந்தைச் சுதந்திர நாடாக்கவேண்டும் என்று அவர்கள் கண்ட கனவுகளுக்கும் தயாரித்த திட்டங்களுக்கும் அளவேயில்லை. இதன் பிறகு ஓ கானல் தமது வீட்டைத் திருப்பித்தர வேண்டுமென்று அவர்களுக்கு அறிவித்தார். அவர்கள் காலி செய்வதைத்தவிர வேறு வழியில்லை. சட்டபூர்வமான உரிமைகளைப்பற்றி அவர்கள் அப்பொழுது வாதாடிக்கொண்டிருக்க வில்லை. வாடகை கொடுத்தாகிலும் வேறு வீடுகளை அமர்த்தலாமென்றால் கண்ட வீடுகளில் வசிப்பது அபாயகரமாயிருந்தது. ஏனென்றால் போலிஸார் ஆங்கில ஆட்சியில் வெறுப்புக்கொண்ட ஐரிஷ்காரர்களைப் பிடிக்கவேண்டும் என்று தேடித்திரிந்து கொண்டிருந்தனர். அந்தச்சமயத்தில் தான்பிரீன் கூட்டத்தாருக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம் பிறந்தது. ஸீன் ஹோகனுடைய உறவினர்களில் சிலர் தங்களுடைய பால் பண்ணை ஒன்றை அவர்களுடைய உபயோகத்திற்காகக் கொடுத்தனர். அங்கே படுக்கை முதலிய வசதிகள் இருந்தன. தான்பிரீனுக்கு இதெல்லாம் பழக்கமாகிவிட்டது. முன்னால் தொண்டர் படையைச் சேர்ந்தபொழுது அவன் பலநாள் உண்ண உணவின்றிப் படுக்க இடமின்றிக் கஷ்டப்பட்டுப் பழக்கமடைந்திருந்தான்.
பால் பண்னை நாளடைவில் போலிஸாருடைய கவனத்திற்குட்பட்டது. அவர்கள் 'தகர வீடு' என்று அதை அடையாளம் சொல்லி அழைப்பது வழக்கம்.
ஒரு சமயம் ஸீன் டிரீஸியும் தான்பீரினும் டப்ளின் நகரிலிருந்து சில ஆயுதங்களைக் கொண்டுவருவதற்காக சைக்கிளில் சென்றனர். அவர்கள் கையில் பணமிருந்திருந்தால் ரயிலில் சென்றிருப்பார்கள். அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கே செல்ல வேண்டியிருந்தது. காலை எட்டுமணிக்குப் புறப்பட்டு, அன்று மாலை ஆறு மணிக்கு டப்ளினைச் சேரவேண்டியிருந்தது. அவர்கள் நூற்றுப் பத்து மைல் பிரயாணம் செய்து குறிப்பிட்ட நேரத்தில் டப்ளினை அடைந்தனர். அங்கு பில் ஷனாஹன் என்னும் நண்பனுடைய வீட்டில் தங்கியிருந்தனர். அதுமுதல் பில் ஷனாஹன், அவர்களுக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் உதவிசெய்துவந்தார்.
அவர்கள் டப்ளினிக்குச் சென்றது திங்கட்கிழமை. சனிக்கிழமைவரை அவர்களுக்கு அங்கு வேலையிருந்தது. சனிக்கிழமை காலை 8.10 மணிக்கு அதை விட்டுப் புறப்பட்டு அன்று மாலை திப்பெரரியில் கூடவிருந்த தொண்டர் படை அதிகாரிகளுடைய கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் அவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுடைய கையில் ஆறு ரிவால்வர்களும், ஐந்நூறுதுப்பாக்கிக் குண்டுகளும், ஆறு வெடிகுண்டுகளும் இருந்தன. அவ்வளவையும் சுமந்து கொண்டு அவர்கள் மற்ற அங்கத்தினர்கள் வருவதற்கு முன்னதாகவே கூட்டத்திற்கும் வந்துவிட்டனர்!
4
தேர்தல் வெற்றி
* * *
1918ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அயர்லாந்தில் பொதுத்தேர்தல் நடந்தது. அதில் ஸின்பீன் இயக்கத்திற்கும் ஐரிஷ் தொண்டர்படைக்கும் மகத்தான வெற்றி ஏற்பட்டது. மேலும் தேர்தலின் மூலம் அயர்லாந்தின் உள்ளக் கருத்து உலகத்திற்குத் தெளிவாக அறிவிக்கப்ட்டது.
அயர்லாந்துக்கென்று தனியான சட்ட சபையோ, பார்லிமென்டோ கினையாது. பிரிட்டிஷ் பார்லிமென்டுதான் அதற்கும் சட்டசபை பார்லிமென்டில் அயர்லாந்துக்கு 103 ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்ட்டிருந்தன. பார்லிமென்டுக்குப் பிரதிநிதிகள் தேர்தெடுக்கப் பொதுத் தேர்தல் நடக்கும் பொழுது, அயர்லாந்திலும் அத்தேர்தல் நடைபெறும். அதில் இடம் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட ஐரிஷ் பிரதிநிதிகள் தங்கள் தாய்நாட்டுக்காக விசேஷ நன்மை செய்ய முடியும் என்று சிலர் எண்ணியிருக்கலாம். இது தவறான எண்ணம். ஏனெனில் பார்லிமென்டிலுள்ள 700 அங்கத்தினரில் ஐரிஷ் பிரதிநிதிகள் ஏழில் ஒரு பாகத்தினரே. "இராவணனுக்குப் பத்துத் தலை, இங்கிலாந்தின் பார்லிமென்டுக்கு எழுநூறு தலை!“ என்று ஐரிஷ் மேதையான அன்னி பெஸன்ட் அம்மையார் கூறுவது வழக்கம். இந்த 700 தலைகள் அயர்லாந்துக்கு விரோதமாக நிற்கும் பொழுது, ஐரிஷ் பிரதிநிதிகள் என்ன செய்ய முடியும்? அவர்கள் கெஞ்சிப் பார்த்தார்கள். பரஸ்பர ஒத்துழையாமையைக் கையாண்டு பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை.
யுத்த காலத்திலும் அதற்கு முன்னும் மொத்தம் ஏழு வருடகாலம் அயர்லாந்தில் பொதுத் தேர்தலே நடக்கவில்லை. 1918ஆம் ஆண்டுதான் புதிதாய்த் தேர்தல் ஆரம்பமாயிற்று. இடையில் மக்களுடைய மனோபாவத்தில் விசேஷ மாறுதல் ஏற்பட்டிருந்தது. அவர்கள் இங்கிலாந்திடம் கொஞ்சமும் நம்பிக்கை வைக்கவில்லை; தங்களுடைய பிரதிநிதிகளைச் சீமைப் பார்லிமென்டுக்கு அனுப்புவதில் எவ்வித பயனுமில்லை என்பதை உணர்ந்திருந்தார்கள். அயர்லாந்துக்குச் சுயாட்சி கொடுக்கும் விஷயமாக இங்கிலாந்து செய்த நம்பிக்கை மோசமும், அது தயவு தாட்சண்யமின்றி இயற்றிய கட்டாய ராணுவச்சட்டமும் மக்களுடைய மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தன. 1916ஆம் ஆண்டு நடந்த சுதந்திரக் கலகம் அவர்களிடையே ஒரு பெரும் எழுச்சியை உண்டாக்கி விட்டது. அதனால் அவர்களுக்குப் புத்துயிரும் புதிய தைரியமும் உண்டாயின. தங்குதடையற்ற பரிபூரணமான சுதந்திரத்தையே அவர்கள் வேண்டினார்கள். முன்னால் நடத்த உபதேர்தல்களிலேயே இக்கருத்தை அவர்கள் வெளியிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தேர்ந்தெடுத்த இரு பிரதிநிதிகளும் குடியரசுக் கொள்கையுடையவர்கள். இப்பொழுது பொதுத்தேர்தலின் மூலம் மக்கள் குடியரசையே ஆதரித்து நின்றார்கள் என்பதை அறிவிக்க ஒர் அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.
1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி ஐரோப்பிய யுத்தம் முடிந்தது. அதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னால் டிசம்பர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் முதல் முதலாக வயது வந்த சகலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆதலால் ஸின்பீன் இயக்கத்துக்கு மக்கள் எவ்வளவு ஆதரவு காட்டினார்கள் என்பதைப் பரீட்சித்துப் பார்க்க அதுவே தக்க சந்தர்ப்பமாயிற்று.
மக்களிடையே மிகுந்த பிரசாரம் செய்யவேண்டியிருந்தது. ஸின்பீன் இயக்கத்தைப் பற்றி அவர்களிடையே பல தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்கள் அரசியல் கட்சியான ஸின்பீனையும், பட்டாளப் பயிற்சிபெற்ற ஐரிஷ் தொண்டர் படையையும் நன்றாய்ப் பாகுபாடு செய்து தெரிந்துகொள்ளவில்லை. 1916ஆம் ஆண்டு கலகம் ஸின்பீன் கலகம் என்றழைக்கப்பட்டது. தொண்டர்கள் லின்பீன் தொண்டார்கள் என்று கருதப்பட்டது. இவ்வாறு ஸின்பினுக்கும் தொண்டர் படைக்குமுள்ள வித்தியாசத்தை மக்கள் தெரிந்துகொள்ளாமலிருந்ததால், பெருத்த நஷ்டமொன்றும் ஏற்பட்டுவிடவில்லை. ஏனென்றால் நாளடைவில் ஸின்பீன் கட்சியார் குடியரசுக் கொள்கையை ஒப்புகொண்டு வந்தனர். தேர்தல் காலத்தில் எல்லாக் கிராமங்களிலும் நகரங்களிலும் ஸின்பின் சங்கங்கள் தோன்றின. ஒரு சங்கத்தினுடைய தலைவரோகாரியதரிசியோ உள்ளூர்த் தொண்டர்படையின் தளகர்த்தராகவும் இருப்பது சகஜம். ஸின்பின் கட்சியிலிருந்த பெரும்பாலான வாலிபர்கள் தொண்டர்படையிலும் ஊழியர்களாய்ப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.
தேர்தலில் மக்களுக்கு ஸின்பீன் வெறி பிடித்துவிட்டதென்றே சொல்லலாம். பாதிரிமார்களிற் பலர் அதில் சேர்ந்து கொண்டனர். ஸின்பின் கொள்கைகள் காட்டுத் தீப்போல் நாடெங்கும் பரவின. நாட்டிலும் நகரத்திலும் எங்கு பார்த்தாலும் திறமையுள்ள சொற்பொழிவாளர்கள் மேடைகளில் மக்களுடைய கடைமையைப் பற்றிப் பல்லாயிரம் பிரசங்கங்கள் செய்து வந்தார்கள். எங்கும் உற்சாகத்திற்கும் உழைப்பிற்கும் குறைவேயில்லை. தேர்தலில் ஏற்பட்ட உற்சாகத்தினால் ஐரிஷ் தொண்டர்படையின் தொகை குறைய ஆரம்பித்தது. பலர் அதிலிருந்து பிரிந்துவிட்டனர். ஆனால் எஞ்சி நின்றவர்கள், தேர்தலுக்குப் பின்னால் படையை மீண்டும் திறம்பட அமைத்துக் கொள்ளலாம் என்று கருதி தேர்தலில் தீவிரமாக இறங்கி உழைத்தார்கள். எல்லோரும் குடியரசு அபேட்ககர்களுக்காகப் பிரசாரம் செய்தனர். நாட்டில் ஒரு வீடு, சுவர், மரம் பாக்கியில்லாது விளம்பரங்கள் ஒட்டப்பட்டன. அறிக்கைகள் எழுதப்பட்டன. எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும், 'குடியரசுக்கே வாக்களியுங்கள்' 'ஸின்பீனையே ஆதரியுங்கள்!' 1916 ஆம் வருடத்திய வீரரை மறவாதீர் என்ற விளம்பரங்களே காணப்பட்டன. குடியரசை ஆதரிப்பவர்கள் வெற்றி பெற்றால், பார்லிமென்டுக்குச் சென்று பதவி ஏற்பதில்லை என்றும், அயர்லாந்திலேயே தங்கித் தனிக் குடியரசை அமைத்து உழைப்பர் என்றும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மக்களும் அத்திட்டத்தில் மோகங்கொண்டுவிட்டனர்.
பொதுத் தேர்தலில் உழைத்த பல வாலிப வீரர்களும் வேறு பல காரணங்களுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டும் உள்நாட்டுக் கலகத்தில் சுடப்பட்டும் இறந்துபோயினர். அவர்களுடைய சுயநலமற்ற உழைப்பினாலேயே அயர்லாந்து முன்னேறிச்செல்லமுடிந்தது. தேர்தலில் குடியரசுக்காக நின்ற லின்பீனர்களுக்குப் பெரியதோர் வெற்றி கிடைத்தது. 'பிரிட்டிஷ் ஆட்சி வேண்டாம், ஐரிஷ் குடியரசையே ஆதரிப்போம்' என்று கூறியவர்களுக்கே வெற்றி கிடைத்தது. மொத்தம் நூற்றைந்து ஸ்தானங்களில் எழுபத்திமூன்றுக்குக் குடியரசுக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தப் பிரதிநிதிகள் 1919ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி டப்ளின் நகரில்கூடி அயர்லாந்து குடியரசாதிவிட்டது, என்று உலகறியப் பிரகடனப்படுத்தினார்கள். அத்துடன் புதிய தேசிய அரசாங்கத்தையும் அமைத்துக்கொண்டார்கள். இவ்வாறு கூடிய எழுபத்திமூவர் கூட்டமே டெயில் ஜரான் என்ற ஐரிஷ் பார்லிமென்டு. இதற்கும் ஆங்கில அரசாங்கத்திற்கும் சம்பந்தமில்லை. டெயில் ஜரான் அயர்லாந்தை ஆள்வதற்குத் தனக்கே உரிமை உண்டென்று கூறிவிட்டது. இந்த நேரத்தில் தான்பிரீனும் தோழர்களும் தங்கள் நகருக்கு அருகில் இருந்த லோலோஹெட்பக் என்னுமிடத்தில் தங்களுக்குத் தெரிந்த முறையில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அது ஆங்கில அதிகாரத்தைக் கிள்ளி எறிந்துவிடத் தக்கதாயிருந்ததது. நாட்டில் வாலிபர்கள் தயாராயிருக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு வழியைக் காட்டிவிட்டால் பின் காரியங்களை அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். கட்டாய ராணுவச்சட்டம் அமுலுக்குவாந்ததால் பல தொண்டார்கள் முதலிலேயே விலகி வெறும் அரசியல்வாதிகளாகப் போய்விட்டனர். இந்நிலையில் தீவிரமான சில காரியங்களைச் செய்து தேசத்தை எழுப்பிவிட வேண்டுமென்று தான்பிரீன் கூட்டத்தார் எண்ணினார்கள். அதனால்தான் ஸோலோஹெட்பக்கில் தங்கள் முதற்போரைத் தொடங்கினார்கள்.
5
ஸோலோஹெட்பக்
* * *
அரசர்களுக்கு வரிப்பணம் எவ்வளவு அவசியமோ புரட்சிக்காரருக்கு அவ்வளவு அவசியமான பொருள் வெடிமருந்து. தான்பிரீன் முதலானவர்கள் அதைத் தேடுவதில் முதலில் கருத்தைச் செலுத்தினர். 1919 ஜனவரி ஆரம்பத்திலேயே ஸோலோஹெட்பக் கல்லுடைக்கும் பாசறைகளுக்குப் பக்கம் வெடிமருந்து கொண்டுவரப்படும் என்று செய்தி அவர்களுக்கு எட்டியது. ஆனால் வெடிமருந்து வண்டியுடன் அதன் பாதுகாப்புக்கு ஆயுதம் தாங்கிய போலிஸ்காரர்களும் வருவார்கள். வெடிமருந்து வேண்டுமானால் அவர்களிடமிருந்து அதைப் பறிக்கத்தான் வேண்டியிருந்தது. தான்பிரீனும் ஸீனும் இதைப்பற்றி அடிக்கடி கலந்துபேசினார்கள். அவர்களிடம் ஆட்கள் அதிகமில்லை. ஆனால் இருந்த சிலரோ மிகுந்த தைரியசாலிகள். அச்சிலரை வைத்துக்கொண்டு விரைவாக மருந்துக் காரியத்தை முடிக்காவிட்டால் வெளியிலுள்ள மற்றத் தொண்டர்களும் உற்சாசங் குன்றிக்கிடப்பார்கள்.
எதிரிகளோடு நேராக நின்று இடைவிடாது போராடமல் மறைந்து நின்று சமயம் வாய்த்தபோதெல்லாம் எதிரிகளைத்தாக்கிவிட்டு மீண்டும் மறைந்து கொள்வது கொரில்லச் சண்டை என்று சொல்லப்படும். 'கொரில்லா என்பது மனிதக் குரங்கு, அது இப்படித்தான் சண்டை செய்வது வழக்கம்.[1]
அடிமை நாட்டில் அந்நியர் வலியராகி நிற்கும் பொழுது மக்கள் இத்தைகயை கெரில்லாச்சண்டையே செய்யமுடியும். பல கெரில்லாச்சண்டைக்கு ஆட்களின் தொகையைப் பார்க்கிலும் அவர்களின் தீரமும் திறமையுமே முக்கியம். தான்பிரீன் இதையறிந்து தன்னிடமிருந்த நண்பர்கள் சிலரைத் தயார் செய்து வைத்துக்கொண்டான்.
வெடிமருந்துடன் வரும் போலிஸாரைச் சுடுவதா அல்லது ஆயுதங்களை மட்டும் பறித்துக் கொண்டு அவர்களை விட்டு விடுவதா என்று பிரச்சினையைப்பற்றி அவன் நண்பர்களுடன் யோசனை செய்தான். ஸீன் அநாவசியமாய் அவர்களைக் கொல்ல வேண்டாம் என்றும் ஆயுதங்களே தங்களுக்குக் குறி என்றும் எடுத்துக் கூறினார்.
ஸோலோஹெட்பக் திப்பெரரியிலிருந்து இரண்டரை மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய நகரம். லிமெரிக் ஜங்ஷனுக்கும் அதற்கும் இடையில் உள்ள தூரம் ஒரு மைல். கல்லுடைக்கும் இடம் ஒரு கிளை வீதியின் மேல் இருந்தது. அங்கு ஏராளமான பாறைகள் உண்டு. அந்தப் பகுதி மலைப்பாங்கான பிரதேசம். வெகுசமீபத்தில் ஊர்களில்லை. நிலங்களின் மத்தியில் சில வீடுகள் மட்டும் கட்டப்பட்டிருந்தன. கல்லுடைக்கும் இடம் கிளை வீதியின் வலது பக்கத்திலிருந்தது. அதன் இரண்டு பக்கத்திலும் உயர்ந்த மரக்கிளைகள் இருந்தன. அவற்றிற்குப் பின்னால் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. ஒளிந்திருப்பதற்கு அவை மிகவும் உதவியாயிருந்தன.
தான்பிரீன் கூட்டத்தாருக்கு வெடிமருந்து வண்டி வரும் நிச்சயமான தேதி தெரியவில்லை. வரப்போகின்ற நாளைக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே அது வருவதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அந்த ஐந்து தினங்களிலும் அவர்கள் புதர்களில் மறைந்து காத்திருந்து ஏமாந்தனர்.
வெடிமருந்துக்காகக் கடைசிவரை காத்து நின்றவர்கள் பின் கண்ட ஒன்பது பேர்கள் தான்பிரீன், ஸீன் டிரீஸி, ஸீமஸ் ராபின்ஸன், ஸீன்ஹோகன், ஜாக் ஒமீரா, பாட்ரிக் மக்கார் மிக், மைக்கேல் ரியான், பாட்ரிக் ஒட்வியர், டிம்குரோ.
எவரும் அறியாதபடி அவர்கள் மறைந்திருக்க வேண்டியிருந்தது. காலம் மிகக் குழப்பமானது. கண்டவர்களையெல்லாம் போலிஸார் சந்தேகிப்பது வழக்கம். கல்லுடைக்கும் இடத்தில் வேலைசெய்துவந்த நூற்றுக்கணக்கான தொழிலாளரில் யாரேனும் அந்நியர்கள் அக்கம்பக்கத்தில் நடமாடுவதைக் கண்டால் சந்தேகங்கொளவர். சந்தேகம் சத்துருக்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் ஆதலால் அங்கு காத்திருந்தவர்கள், அதிகாலையில் பொழுது விடியுமுன்பே வந்து புதர்களுக்குப் பின்னால் மறைந்து கொள்வது வழக்கம். எந்த நேரத்திலும் ஆயுதங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு பகைவரின் வரவை அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டெயிருந்தனர். இரண்டு மணிக்குப் பின்பு போலிஸார் வரமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் போலிஸார் அங்கிருந்து நகரத்திற்கு இருட்டு முன்பே திரும்பவேண்டியிருக்கும். இரண்டு மணிக்குப் பின் தான்பிரீன் தோழர்களுடன் தன்வீட்டுக்குச் சென்றுவிடுவான். வீட்டில் அவனுடைய அன்னை யாவருக்கும் உணவு சமைத்துப் போடுவது வழக்கம். அதிகாலையில் நான்கு மணிக்கே காலை ஆகாரம் தயாரித்துக் கொடுத்து, அவள் அவர்களை வழியனுப்புவாள். ஆறாவது நாள் காலையில் அவள் காலை உணவு கொடுக்கும் பொழுது 'இன்று காரியத்தை முடிக்காமல் வந்தீர்களானால் நாளை முதல் நான் உங்களுக்குச்சோறு படைப்பது சந்தேகம்தான்!' என்று எச்சரிக்கை செய்தனுப்பினான்.
கடைசியாக ஜனவரி 21ஆம் தேதி வந்து சேர்ந்தது. அன்றைய தினம் அயர்லாந்தின் சரித்திரத்தில் மிக விசேஷமானதாகும். சர்வ வல்லமையுள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து அயர்லாந்து விடுபட்டுத் தனது உயிரினும் இனிய குடியரசை அன்றுதான் ஸ்தாபித்துக் கொண்டது. டப்ளினின் டெயில் ஐரான் ஏற்பட்டதும் அன்றுதான். உலகத்திலுள்ள சகல சுதந்திர நாடுகளுக்கும் அயர்லாந்து யாருக்கும் அடிமையில்லை என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தினத்நில் தான்பிரீன் கூட்டத்தார் ஸோலோஹெட்பக் புதர்களில் பகைவரை எதிர்பார்த்து வெகு நேரம் காத்திருந்தனர். அவர்கள் அனுப்பியிருந்த தூதுவன் கிளை வீதியில் நடமாடிக்கொண்டு திப்பெரரி வீதியில் வண்டி வருகின்றதா என்று திகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் திடீரென்று ஓடிவந்து சுடர்விடும் கண்களுடன் 'ஆசாமிகள் வந்துவிட்டனர். வந்து விட்டனர், என்று கூவினான்.
உடனே ஒவ்வொருவனும் முன்னரே குறித்தபடி தனது இடத்திற்குச் சென்று தயாராய் நின்றான். அவர்களில் யாருக்காவது கூச்சமோ அதிர்ச்சியோ ஏற்பட்டிருந்தாலும் ஒருவரும் அதை வெளிக்காட்டவில்லை. மின்னல் பாய்வது போல் ஒவ்வொரும் விரைந்து சென்று கடமையில் ஈடுபட்டனர். வெகுசீக்கிரத்தில் போராட்டத்தில் அவர்களுக்கு வாழ்வு அல்லது மரணம் ஏற்படக் காத்திருந்தது. தூதன் மீண்டும் ஓடிவந்து வருகிறவர்களுடைய எண்ணிக்கையையும் நெருங்கி எவ்வளவு தொலைவில் வருகிறார்கள் என்பதையும் அறிவித்தான். வண்டி நெருங்கி வந்துகொண்டிருந்தது. சக்கரங்கள் வீதியில் 'சடசட' வென்று உருளும் ஓசை கேட்டது. குதிரைக் குளம்புகளின் ஓசையும் கேட்டது.
தான்பிரீன் பரபரபடைந்தான். மிகவும் அமைதியுடன் நிற்க வேண்டுமென்று விரும்பினாலும் அது மிகக் கஷ்டமாயிருந்தது. கூடியவரை ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, புதரை விலக்கிவெளியே வீதியில் எட்டிப்பார்த்தான். குதிரை வண்டி வெகுசமீபத்தில் வந்துவிட்டது. குதிரையின் இரண்டு பக்கத்திலும் இருவர் வந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் வண்டிக்காரன். மற்றவன் ஒரு 'முனிசிப்பல்' வேலைக்காரன். வண்டிக்குப்பின்னால் சிறிது தூரத்தில் ஆயுதந்தாங்கிய இரண்டு போலிஸாரும் வந்துகொண்டிருந்தனர்.
போலிஸார் வெகுசமீபத்தில் வந்தவுடன் புதரில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் ஒரே தொனியில் 'தூக்குங்கள் கைகளை' என்று உரக்கக் கூவினார்கள். ஆனால் போலிஸார் இருவரும் கைகளைத்துக்குவதாகக் காணப்படவில்லை. தான்பிரீன் முதலியோர் அவர்களை வீணாகக் கொன்றுதள்ள மனமின்றி, மீண்டும், 'தூக்குங்கள் கைகளை!' என்று உத்தரவிட்டனர். போலிஸார், கைகளைத் தூக்குவதற்குப் பதிலாக, யுத்த வீரர்களைப் போல், துப்பாக்கிகளைக் கையில் பிடித்துச் சுடுவதற்குக் குறிபார்த்தனர். அவர்களும் ஐரிஷ்காரர்கள் அல்லவா! மரியாதையாகப் போலிஸார் துப்பாக்கிகளைத் துார எறிந்திருந்ததால், உயிர்ப் பிச்சை பெற்றிருப்பார்கள். அந்நிய அரசாங்கத்திடம் வாங்கிய கூலிக்காக அவர்கள் உயிரை விடத் துணிந்து நின்றனர்; ஒரு நிமிஷம் தாமதித்திருந்திருந்தால் புரட்சிக்காரர்கள் மடிந்திருப்பார்கள். ஆதலால் அவர்கள் கண்கொட்டு முன்னால் போலிஸாரைக் குறிவைத்துத் துப்பாக்கி விசைகளை இழுத்துவிட்டனர். குண்டுகள் ஏக காலத்தில் குறிதவறாமல் பாய்ந்தன. இரண்டு போலிஸாரும் மூச்சற்றுக் கீழே சாய்ந்தனர். ஐரிஷ் தேசிய வீரர்கள் தங்களுடன் பிறந்த ஐரிஷ் சகோதரர்களை வீழ்த்திவிட்டனர்!
* * *
↑ நூலாசிரியரின் இக் கருத்து பிழையானது கொரில்லாக் குரங்குக்கும் இவ்வகைச் சண்டைக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. கிரமப் படைகளுக்கு (Regular Army) எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்தும் போராட்ட முறையின் பெயர் கெரில்லாப் போராட்டம் (Guerilla warfare) ஆகும். இது முதன் முதலாக ஸ்பெயின் நாட்டில் உருவாயிற்று நூலாசிரியர் அதனை கொரில்லாக் குரங்கின் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தி இங்கு எழுதுவதால் 'கொரில்லாச் சண்டை' என்று அவர் பயன்படுத்திய சொற்றொடர் இங்கு மட்டும் அப்படியே தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. நூலில் இதற்கு முன்பும் பின்பும் உள்ள பகுதிகளில் 'கெரில்லாச் சண்டை' என்று திருத்தப்பட்டுள்ளது -பதிப்பாளர்
6
பதினாயிரம் பவுண்டு பரிசு
* * *
நாட்டுப்புறத்திலே, வீதி நடுவிலே, குண்டோசை கேட்டது. வயல்களிலும் பண்ணைகளிலும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டுப் போயினர். ஆங்காங்கே சிதறிக்கிடந்த வீடுகளின் வாயில்களில் ஆண்களும் பெண்களும் மொய்த்து நின்று, என்ன விசேஷம் என்று கவனித்தனர். மாண்டுகிடந்த போலிஸாரைப் பார்த்து வழிப்போக்கர்கள் பிரமித்து நின்றனர். வண்டிக்காரன் ஜேம்ஸ் காட்பிரேயும், முனிசிப்பல் வேலைக்காரன் பாட்ரிக் பிளினும் சாலை ஓரத்திலே மெய்மறந்து கிடந்தனர். ஒரு மணி நேரத்தில் அதிகாரிக்குத் தகவல் தெரிந்தவுடன் பல்லாயிரம் பட்டாளத்தார் அங்கு வந்து விடுவார்கள். சந்துகள், பொந்துகள், வீதிகள் எல்லாம் ராணுவ வீரர்கள் மொய்த்து விடுவார்கள்.
தான்பிரீன் ஒரு வினாடியேனும் வீண்போகக்கூடாதென்று அறிந்து போலிஸார் கையிலிருந்த ஆயுதங்களையும் தோட்டாக்களையும் பறித்துக்கொண்டு, இரண்டு பேரைத் தவிர மற்றத் தோழர்களை எல்லாம்பல திசைகளிலும் பறந்தோடும்படி உத்தரவிட்டான். அவனுடன் இருந்த நண்பர்கள் ஸீன் டிரீஸியும், ஸீன் ஹோகனும் வெடிமருந்து வண்டியின் பின்பக்கத்தில் தான்பிரீனும், டிரீஸியும் அமர்ந்து கொண்டனர். ஹோகன் சாரத்தியம் (சாரத்தியம் : வண்டி ஓட்டுதல்) செய்ய ஆரம்பித்தான். ஏனெனில் வண்டியில் இருந்தவர்களுடைய உயிர்கள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஹோகன் லகானை இழுத்தவண்ணமாகவே இருந்தான். வழியிலே வண்டியிலுள்ளவர்களைக் கண்டு பள்ளிக்கூடப் பிள்ளைகளும் குடியானவர்களும் ஆச்சரியப்பட்டுக்கொண்டே சென்றனர். வண்டி இடையில் நிற்கவில்லை.
டோனாஸ்கி என்னுமிடத்தை நோக்கி வண்டி சென்றது. வழியில் வெகுநேரம் வரை தொண்டர்களில் ஒருவரும் வாய் திறக்கவில்லை, கரடுமுரடான மலைப்பாங்கான வீதியில் வண்டி கற்களில் தூக்கிப்போடும்பொழுது குடல் தெறித்துவிடும்போலிருந்தது. ஆனால் வெடிமருந்து மட்டும் எப்படியோ வெடிக்காமலிருந்தது. வண்டியிலுள்ளோர் தாங்கள் தேடிக் கொணர்ந்த பண்டமே தங்களைத் தீர்த்துவிடுமோ என்று பயந்து கொண்டே சென்றனர்.
கடைசியாக அவர்கள், முன்னரே ஏற்பாடு செய்திருந்த இடத்தை அடைந்தனர். அங்கே தயாராக வைக்கப்பட்டிருந்த குழியில் வெடிமருந்தைக் கொட்டி மூடிவைத்தனர். தான்பிரீன் இரண்டு வெடிமருந்துக்குச்சுகளை மட்டும், போலிஸார் கண்ணில் மண்ணள்ளிப்போடுவதற்காகக் கையில் வைத்துக்கொண்டான். குதிரையை அவிழ்த்து ஓட்டிவிட்டு அந்த இடத்தில் அவற்றைப்போட்டு வைத்தான். பின்னால் போலிஸாரும், ராணுவத்தாரும் அப்பக்கத்தில் மாதக்கனக்காய் தேடும் பொழுது, வெடிமருந்து புதைக்கப்பட்ட இடத்தின் மேலே பல தடவை நடந்துவந்த போதிலும் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் வெகுதூரத்திற்கு அப்பால் கிடந்த இரண்டு குச்சிகளையும் சுற்றிச்சுற்றிப் பல நூறு சுரங்கங்களைத் தோண்டிவிட்டார்கள். வெடிமருந்து பூமிக்குள் இருப்பதாகக் கருதி அதை எடுப்பதற்காக அவர்கள் வெட்டிய குழிகளை, ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் பாசறைகளாக உபயோகிக்கலாம். அவ்வளவு சிரமப்பட்டு, அவர்கள் நாட்டுப்புறம் எங்கும் குழிதோண்டி விட்டனர். ஆனால் மருந்துள்ள இடம் மட்டும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை. வெளியே போடப்பட்டிருந்த இரண்டு குச்சிகளும் அவர்களை முற்றிலும் ஏமாற்றி விட்டன.
தொண்டர்கள் தென்பக்கத்தில் கால்டீ மலைகளை நோக்கி நடந்து சென்றனர். அம்மலைகளில் பிறர் அறியாமல் மறைந்திருக்க முடியும். நான்கு மைல்களுக்கு அப்பால் அவர்கள் பிட்ஸ்ஜெரால்டு என்ற ஒருத்தி வீட்டில் சிறிது நேரம் தங்கி உணவெடுத்துக்கொண்டனர். காலையில் வீட்டில் சாப்பிட்ட பிறகு அதுதான் அவர்களுடைய இரண்டாம் வேளை உணவு அங்கு அதிக நேரம் தங்காது மீண்டும் வழிநடக்கத் தொடங்கினர். குளிர்தாங்கமுடியாமல் இருந்தது. வழியில் இரண்டு மலை ஆடுகள் நின்றதைத் தவிர வேறு உயிர்ப்பிராணிகள் எதுவும் அப்பக்கத்திலே காணப்படவில்லை. அவர்களுக்கு மலைப் பாதைகள் சரியாகப் புலனாகவில்லை. வழியிலே இருந்த இரண்டொரு வீட்டாரிடம் பாதையை விசாரிக்கலாம் என்றால் அவர்களுடைய வாய் கம்மா இருக்காது. அப்பக்கத்தில் மூவர் சென்றதாக அவர்கள் யாரிடத்திலேனும் சொல்லிவிடக் கூடும். ஆதலால் மூவரும் யாரையும் கண்டு கேளாமல் கால்கள் போன இடமெல்லாம் சுற்றித்திரிந்தனர். வட்டங்கள் சுற்றினர். வழி தெரியாமல் திகைத்தனர். இடையில் ஸீன் டிரீஸீ இருபதடி ஆழமுள்ள ஓர் ஓடையில் வீழ்ந்துவிட்டான். அவன் மடிந்தான் என்றே மற்றவர்கள் கருதினார்கள். ஆனால் அவர்கள் அவனைத் தூக்கி வெளியே விட்டபொழுது அவன் 'இன்னும் எத்தனை பேரையோ சுட்டபின்பல்லவா நான் சாகவேண்டும்!' என்று கர்ஜித்தான். அவர்கள் மீண்டும் மலையுச்சியை நோக்கிச் சென்றனர் அம்மலையைத் தாண்டி மறுபக்கத்திற்குப் போய்விட்டால் அவர்களுடைய கவலை ஒழியும். உயரே போகப் போகக் குளிர் அதிகமாயிருந்தது. கோடை நடுவிலேயே இம்மலையில் பனி பெய்யும். அந்த மாரிக்கால இருளிலே இங்கு குளிர் தாங்கமுடியவில்லை. மூன்று மணிநேரம் அவர்கள் மலையில் ஏறிச்சுற்றிய பின்னால் முன்னால் பார்த்த இரண்டு மலை ஆடுகள் நின்ற இடத்திற்கே திரும்பிவந்துவிட்டனர் அதைக் கண்டு மனம் வருந்தினர். இனி அம்மலையைத் தாண்டுவது இயலாது என்று மலைத்தனர். அப்பொழுது ஸீன் ஹோகன் கவிபாடுகிற புலவர்கள் மட்டும் மலைகள் மாண்புடையவை என்றும், அழகின் உறைவிடம் என்றும் வர்ணிக்கிறார்களே! அவர்கள் வீட்டில் இருந்துகொண்டே ஆனந்தமாய்ப் பாடிவிடுகிறார்கள். நம்மைப் போல் பட்டினியும் பசியுமாய்க் குளிரில் வந்து நடந்தால், அவர்கள் ஏழு ஜன்மத்திலும் இயற்கை ஆழகைப் பற்றிப் பாடவே மாட்டார்கள் என்று வேடிக்கையாகப் பேசினான்.
பின்னர் அவர்கள் வேறு வழியில் செல்லவேண்டுமென்று தீர்மானித்தனர். இருப்புப் பாதை வழியாகக் காஹிர் என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டனர். இந்த யோசனை தோன்றியது.அவர்களுடைய நல்லதிர்ஷ்டமே. ஏனென்றால், வீதி வழியாக எந்தப் பக்கம் சென்றிருந்தாலும், அவர்கள் பட்டாளத்தார் கையில் சிக்கியிருப்பார்கள். நாலு பக்கத்தாலும் பட்டாளத்தார் மோட்டார் லாரிகளின் சுற்றிக்கொண்டே யிருந்தனர்.
வழி நடப்பதில் இருப்புப்பாதை வழியாகச் செல்வதைப் போல் கஷ்டமானது வேறில்லை. அதிலும் இரவு, அந்த அந்தகாரத்தின் நடுவே அவர்கள் முன்னும் பின்னும் எச்சரிக்கையுடன் கவனித்துக்கொண்டே சென்றனர். தான்பிரீன் திடீரென்று முன்னால் சிறிதுதுரத்தில் கறுப்பாக ஓர் ஒருவம் நிற்பதைக் கண்டான். உடனே ரிவால்வரைக் கையில் பிடித்துக்கொண்டு, யாரது கைகளை மேலே தூக்கு என்று உத்தரவிட்டான். அந்த ஒருவம் உத்தரவை அசட்டைசெய்து விட்டு, அசைவற்று நின்றது. தான்பிரீன் நீட்டிய ரிவால்வருடன் நெருங்கிச் சென்று பார்த்தான். இந்த நெடிய உருவம் ஒரு ரயில்வே கம்பம்! அதைக் கண்டதும் அவன் அடைந்த வெட்கத்திற்கு அளவேயில்லை. அந்தக் கம்பத்தில், 'உத்தரவில்லாமல் இங்கு பிரவேசிப்பவர்கள் கைதுசெய்யப்படுவார்கள்' என்ற ஓர் அறிக்கை தொங்கிக் கொண்டிருந்தது. கூட இருந்த நண்பர்கள் இருவரும் சிரிப்பை அடக்கமுடியாமல் கொக்கரிப்பதைக் கண்டு, தான்பிரீனும் அவகளுடன் சேர்ந்து சிரிக்கலானான்.
சிறிதுதூரம் சென்றதும் ஸீன் ஹோகனுடைய பூட்ஸ்களில் ஒன்று அறுந்து கிழிந்துபோய்விட்டது. அடிப்படி நின்று அதைக் கட்டவேண்டியிருந்தது. இத்தகைய கஷ்டங்களையெல்லாம் மறந்து நடக்கும்படி ஸீன்டிரீஸி வழியெங்கும் வேடிக்கையான கதைகள் கூறி நண்பர்களை மகிழ்வித்து வந்தான். காஹிர் எவ்வளவு தூரம் என்று யாராவது கேட்டால், அடுத்த வளைவு திரும்பியதும் வந்து விடும் என்று அவன் கூறிவந்தான். ஒரு வளைவிலிருந்து மற்றொரு வளைவுக்குச் சுமார் மூன்று மைலுக்குக் குறைவில்லை. அடுத்த வளைவுக்குப் போனவுடன், அவன் அதற்கடுத்த வளைவென்று கூறி வந்தான். வருந்தி, வாடும் உள்ளத்திற்கு அவனுடைய வேடிக்கைச்சொற்கள் அமிர்தம் போலிருந்தன. வழியில் ஆங்காங்கே சில மணல் மேடுகளில் ஐந்து நிமிஷ நேரம் இளைப்பாறிக் கொண்டு அவர்கள் முன்னேறிச்சென்றனர்.
முடிவில் காஹிர் வந்து சேர்ந்தனர். அவர்களுடைய களைப்புக்கும் உடல் வலிக்கும்.அளவேயில்லை. எந்த நிமிஷம் எலும்புகள் ஒரே குவியலாக வீழ்ந்துவிடுமோ என்று எண்ணும்படி அவர்கள் விளங்கினார்கள். ஆதலால் மேற்கொண்டு யோசிப்பதில் பயனில்லை என்றும், எங்காவது இளைப்பாற வேண்டுமென்றும் கருதி நேராக ஊருக்குள் சென்றார்கள். காஹிர் ஸோலோஹெட் பக்கிலிருந்து பதினைந்து மைல் தூரத்திலிருந்தது. யாரிடம் சென்று இருப்பிடம் கேட்பது என்று அவர்களுக்குப் புலப்படவில்லை. பசி கொடுரமாயிருந்தது. குளிரோ உதிரத்தைக் கட்டியாக உறையும்படி செய்து விட்டது. கால்கள் கெஞ்சித் தடுமாறின. தான்பரீனுக்கு ஒரு நண்பருடைய ஞாபகம் வந்தது. டாபின் என்ற ஒரு மாதின் வீட்டிற்கு அவன் நண்பர்களை அழைத்துச் சென்றான். அவள் வந்த விருந்தினரை மிக்க உவகையுடன் உபசரித்தாள். அவர்களுக்கு வேண்டிய படுக்கை முதலானவற்றைக் கொடுத்தாள். அந்நிலையில் அம் மூவரும் அங்கு சிறிது இளைப்பாறினார்கள்.
மறுநாள் காலையில் அவர்கள் எழுந்தவுடன் பத்திரிகைகளை வாங்கி ஆவலுடன் பார்த்தனர். லோலோஹெட்பக் விஷயமாய் என்ன செய்திகள் வெளிவந்திருக்கின்றன. என்பதைக் கவனித்தனர். 'திப்பெரரி அக்கிரமம்!' 'இரட்டைப் போலிஸார் கொலை' முதலிய தலைப்புகள் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தன. இறந்த போலிஸாரின் பெயர்கள் மக்டொன்னல், ஒகானல் என்று அச்சிடப்பட்டிருந்தன. அவர்களுடைய மரண விசாரனையும் வெளிவந்திருந்தது.
பின்னால் நாட்கள் போகப்போக, நம் தொண்டர்களுக்குப் பல தகவல்கள் தெரியவந்தன. கொலைகள் சம்பந்தமான இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு மாணவர்களும் சிறையிலிடப்பட்டார்கள். எங்கும் பொதுக் கூட்டங்களிலும், மாதா கோயில்களிலும் கொலைகளைப் பற்றிய கண்டனங்கள் கூறப்பட்டன. அவைகளைக் கண்டிக்காத பத்திரிகையே கிடையாது. ஸின்பீன் சங்கங்கள் கூடக் கண்டனத்தில் கலந்து கொண்டன.
திப்பெரரியின் தென்பாகம் ராணுவப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதாவது அரசாங்கத்தார் அங்கு ராணுவச்சட்டத்திற்கு நிகரான கொடிய சட்டத்தை அமுல் நடத்த ஆரம்பித்தனர். எங்கும் போலிஸூம் ராணுவமும் குழுமி நின்றன. கண்ட இடமெல்லாம் பாணாத்தடிகளும் போலிஸ் இயந்திரத்துப்பாக்கிகளும் நின்றவர், நடந்தவர், சந்தேகிக்கப்பட்டவர், யாரும் சோதிக்கப்பட்டனர். வீடுதோறும் சோதனை, தெருக்கள் தோறும் பாதுகாப்பு சந்தைகள், கூட்டங்கள், விழாக்கள் யாவும் தடுக்கப்பட்டன. ஒரு சிறு சம்பவம் ஆங்கில அரசாங்கத்தின் சகல சக்திகளையும் கிளப்பிவிட்டு விட்டது. அதன் கோர உருவத்தை உலகுக்குத் திறந்துகாட்டி விட்டது.
மேற்கொண்டு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளில் இருந்து தான்பிரீன் முதலியோர், தங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கும், பிடிப்பதற்குத் துப்புக் கூறுவோர்க்கும் ஆயிரம்பவுண்டு பரிசு பொடுப்பதாக அரசு விளம்பரப் படுத்தியிருந்ததைத் தெரிந்து கொண்டனர். பின்னால் இந்தப் பரிசு பதினாயிரம் பவுண்டாக உயர்த்தப்பட்டது. அவர்களுடைய தலைகளின் விலை பதினாயிரம் பவுண்டு என்று தீர்மானிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் அதிக எச்சரிகையுடன் நடமாட வேண்டியிருந்தது. மக்களில் யாரும் அவர்களைக் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் போலிஸாரில் சிலர்மட்டும் பரிசு பெறும் நோக்கத்துடன் ஊருராய்த் தேடினார்கள். நாளடைவில் அவர்களும் சிரத்தை குறைத்து ஒதுங்கிவிட்டனர்.
7
சிப்பாய்களின் சிறந்த உதவி
* * *
டாபின் அம்மாளுடைய வீட்டில் இரண்டு நாள் தங்கிவிட்டு, தான்பிரீன் முதலானவர்கள் வேறிரண்டு நண்பர்களுடைய வீடுகளுக்குச் சென்றனர். அங்கிருந்து டுப்பிரிட் என்னும் இடத்திலிருந்த ரியான் என்பவருடைய வீட்டுக்குச் செல்ல நினைத்திருந்தார்கள். அங்கு வரப்போவதாகத் தகவல்களும் சொல்லி விட்டிருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அங்கு செல்லாமல், கடைசி நோத்தில் மிக்செல்ஸ் நகரத்திற்குப் புறப்பட்டுவிட்டனர். அவர்கள் ரியான் வீட்டுக்குச் செல்வதற்காகத் தீர்மானித்திருந்த நேரத்தில், அங்கு எட்டுப் போலிஸார் அந்த வீட்டைச் சூழ்ந்து ரியானையும் கைது செய்துகொண்டு போயினார்.
மிக்செல்ஸ் நகருக்குப் போகும் பொழுது அவர்கள் இடையில் ஒபிரியன் என்பருடைய வீட்டில் விருந்தினராக இருந்தனர். அவர்கள் மேல் மாடியிலே படுத்திருந்தனர். அப்பொழுது திடீரேன்று பல பீலர்கள் (ஐரிஷ் போலிஸார்) கீழே வீட்டுக்குள் நுழைந்து உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். தொண்டர்கள் சண்டை நெருங்கி விட்டது என்று எண்ணித் துப்பாக்கிகளைக் கையிலெடுத்துக் கொண்டனர். மாடிப்படிகளிலே பீலர்கள் காலெடுத்து வைக்கவேண்டியதுதான் தாமதம், அவர்களை எமலோகத்திற்கு அனுப்பிவிடவேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், பீலர்கள் மாடிப் படிகளில் ஏறவுமில்லை, எமலோகத்திற்குப் போகத் தயாராகவும் இல்லை. பின்னால் விசாரித்ததில், நாய்களின் அனுமதிச்சீட்டுக்கு (லைசன்ஸுக்கு)ப் பணம் செலுத்துவது பற்றி விசாரிக்கத் தான் அவர்கள் வந்ததாகத் தெரிந்தது!
பிறகு தொண்டர்கள் மிச்செல்ஸ், கிழக்கு லிமெரிக் நகர்களைத் தாண்டி லாகெல்லி நகரையடைந்தனர். அங்கு ஒருவாரம் தங்கியிருந்தனர்.
அங்கே அவர்கள் இருந்த நிலைமையைக் கண்டால், கல்லும் கசிந்துருகும். அவர்களை ஒத்த பிற வாலிபர்கள், தங்கள் அறிவையும் ஆற்றலையும் விற்று, அந்நிய அரசாங்கத்தின் கீழே வேலைபார்த்தும், வேறுபல தொழில்கள் செய்தும் ஏராளமாகச்சம்பாதித்துப் பெற்றோர், பெண்சாதி, பிள்ளை குட்டிகளுடன் இன்ப வாழ்க்கை நடத்துகையில் அவர்கள், துப்பாக்கியும் தேச பக்தியுமே துணையாய்க் கொண்டு, காடும் மலையுமாக அலைந்து கொண்டிருந்தனர். உணவுக்கும், உடைக்கும், உட்காரும் இடத்திற்கும் அவர்கள் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. கையில் ஒருசதமேனும் காசு இல்லை. சொந்த நாட்டில் பகலில் வெளியே தலைநீட்ட வழியில்லை. திருடர்களைப் போல் நள்ளிரவில் நடக்கவேண்டியிருந்தது. இரண்டு இரவுகளை ஒரே ஊரில் கழிக்க வழியில்லை. குட்டிப்போட்ட பூனைப்போல், ஊரூராய்த் திரியும்படி நேர்ந்தது. இதைப்பார்க்கிலும் இன்னும் எத்தனைகஷ்டங்களையும் அவர்கள் தாய்த்திரு நாட்டிற்காக ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந்தனர். ஆயினும் ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் நெஞ்சு பொறுக்கவில்லை. நாட்டில் அவர்களை ஆதரிப்பவர் எவருமில்லை. அவர்களைப் பற்றி மலைமலையான கண்டனங்கள் குவிந்தனவேயன்றி, அணுவளவு ஆதரவுமில்லை. ஸின்பீனர்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. அவர்களுடைய பழைய நண்பர்களில் பலரும் அவர்களைக் கைவிட்டுவிட்டனர். அவர்களைக் கண்டவுடன் நண்பர்கள் நடுங்கி விலகினார்கள். எனினும் ஒரு விஷயத்தை மட்டும் தொண்டர்கள் மறக்காது ஆறுதலடைந்து வந்தனர். காலம்மாறும்; இன்று நாம் செய்ததைக் கண்டிப்பவர்கள் நாளை உண்மையை அறிந்து நம்மைப் போற்றிப் பின்பற்றுவார்கள். 1863இல் கலகம் செய்தவர்களையும், 1867இல் புரட்சி செய்தவர்களையும், 1916இல் சுதந்திரப்போர் தொடுத்தவர்களையும் அக்காலத்து மக்கள் கண்டித்தார்கள்; பின்னால் அவர்களே ஆதரித்தார்கள். குடியரசை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் உறுதி கொண்டுள்ளார்கள். ஆனால் அதற்காக வேண்டிய காரியத்தை ஆரம்பித்தால் கண்டிக்கிறார்கள். பின்னால் எல்லோரும் நம்முடன் சேருவார்கள். அப்பொழுது நமது கொள்கை வெல்லக் காண்போம் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு உற்ற துணையாயிருந்தது.
சில இடங்களிலே அவர்களுக்கு ஓர் இரவு தங்ககுவதற்குக் கூட இடம் கிடைக்கவில்லை. மிகக் குளிரான இரவுகளில், யார் வந்து ஒதுங்கினாலும் இடம் கொடுக்கக்கூடியவர்கள், அவர்களைத் தாட்சண்யமின்றி வெளியேற்றி விட்டனர். ஒரு சமயம் அவர்கள் ஒரு குடியானவன் வீட்டில் தங்கியிருந்தார்கள். வெளியே யாரோ கதவைத்தட்டும் ஓசை கேட்டது. குடியானவன், யாரது? என்று கேட்டான். போலிஸ் என்று பதில் வந்தது. அவ்வார்த்தையைக் கேட்டவுடன் உள்ளேயிருந்த திருக் கூட்டத்தார் எழுந்து துப்பாக்கிகளைத் துக்கிக் கொண்டு தயாராய்நின்றனர். கதவு திறக்ககப்பட்டது. அடுத்த வீட்டுக்காரன் ஒருவனே ஏதோகாரியமாக அங்கு வந்திருந்தான். அவன் விளையாட்டாகவே போலிஸ் என்று சொன்னானாம்! அவன் போனவுடன் தொண்டர்களுடைய கைகளில் துப்பாக்கிகளைக் கண்ட குடியானவன், 'துப்பாக்கி ஆசாமிகளுக்கு இங்கு இடமில்லை, வெளியேறுங்கள்' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. வானமே கூரையாகப் பூமியைப் பாயாகக் கொண்டு, அவர்கள் வெளியேறினர். வழக்கம்போல் வழிநடையை மேற்கொண்டனர். கிழிந்த ஆடைகளும், கேடுற்ற பூட்ஸ்களும், அவர்களைக் குளிரில் வாட்டி வருத்தின. அவர்கள் எதிர்பார்த்துச் சென்ற நண்பர்கவில் பலர் தங்க மாட்டுத்தொழுவங்களிலே கூடத் தங்க இடம் கொடுக்கவில்லை. துன்பம், துணுக்கம், பசி, கால்வலி, விழிப்பு இவற்றைத் தவிர வேறொன்றும் அவர்களுக்குத் துணை நிற்கவில்லை. எவ்வளவு சுற்றியும் அவர்கள் ஸோலோஹெட்பக்கிலிருந்து பத்துமைல் தூரத்திற்குள்ளாகவே நடந்து கொண்டிருந்தனர்.
டோனோ என்னும் கிராமத்தில் அவர்கள் தங்கியிருக்கையில் அவர்களுடைய பழைய நண்பன் ஸீமஸ் ராபின்ஸன் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். ராபின்ஸன் வெடிமருந்து வேட்டையில் அவர்களுடன் இருந்தவன். பல வருஷங்கள் பிரிந்த நண்பனை மீண்டும் கண்டபோது யாவரும் ஆனந்தம் கொண்டனர். பாடி ரியான் என்னும் தேசபக்தரான வர்த்தகர் ஒருவர் அவர்களுக்கு மிகுந்த உதவி செய்தார். அக்காலத்தில் அவர்கள் மக்களைத் தங்கள் வசப்படுத்தித் தேசத்தில் பெரும் போராட்டத்தை ஆரம்பிப்பதற்குத் திட்டங்கள் போடுவதில் பொழுதைப் போக்கிவந்தனர். அவர்களுடைய தீவிரமான திட்டம் எதையும் டப்ளின் தலைநகரில் இருந்த தலைமைக் காரியாலயத்தார் ஏற்றுக்கொள்ளவழியில்லை. ஆயினும் தலைநகரில் இருந்த நண்பர்கள் சிலர் தான், பிரீன் கூட்டத்தாரை அமெரிக்காவுக்கு ரகசியமாக அனுப்பிவிட வேண்டும் என்று ஒரு கப்பலைத் தீர்மானித்து வைத்து அவர்களைத் தயாராய் இருக்கும்படி தகவலும் சொல்லி விட்டனர். தான்பிரீன் அதைக் கேட்டுக் கோபமடைந்தான். தன்னையும் நண்பர்களையும் தேசப்பிரஷ்டம் செய்வதற்கே இந்தச்சதி செய்யப்பட்டதாக எண்ணி, மனம் வாடினான். தலைமை நிலையத்தார்.அவர்களுக்கு உதவி செய்து போரை மேலும் நடத்த வேண்டியிருக்க அதை விட்டொழித்து, அவர்களையும் நாடு கடத்தத்துணிந்து விட்டனரே என்று தொண்டர்கள் மனக் கசப்படைந்தனர். எது நேரினும் அயர்லாந்தை விட்டு வெளியேற முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டனர்.
டோனோவிலிருந்து 'அப்பர் சேர்ச்' வழியாக அவர்கள் நகருக்குச் சென்றனர். அங்கேதங்களுடைய யுத்த சபைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். தலைமை அதிகாரிகள் உத்தரவு கொடுக்காவிட்டாலும், தாங்களாகவே வேலையை ஆரம்பித்து விட முடிவுசெய்தனர். திப்பெரரியில் தங்கியிருந்த ராணுவத்தார் உடனே அந்த எல்லையை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்றும், இல்லாவிடில் அவர்களுடைய உயிர் அவர்களுக்குச் சொந்தமில்லை என்றும் ஓர் எச்சரிக்கை விளம்பரத்தைத் தயார் செய்தார்கள். அந்த விளம்பரம் தேசம் முழுவதும் ஒட்டப்பட்டது. பத்திரிகைகள் அந்த விளம்பரத்தை வெளியிட்டு ஏளனம் செய்து எழுதின. அந்த எச்சரிக்கை கானல் நீராகக்கருதப்பட்டது. ஆனால், அது உண்மையாகி விட்டதாகப் பிற்காலச்சரித்திரத்திலே காணலாம்.
சில நாட்களுக்குப் பிறகு தொண்டர்கள் தலைமை அதிகாரிகளுடைய உத்தரவை மீறித்தலைநகரான டப்ளினுக்கே சென்று விடவேண்டும் என்று துணிந்து புறப்பட்டனர். ராபின்ஸனும், டிரீஸியும் முன்னதாகவே டப்ளினில் இருந்தனர். அங்கு மிகுந்த எச்சரிகையுடன் நடமாட வேண்டியிருந்தது. ஏனெனில் போலிஸ் கெசட்டில் லொலோஹெட்பக் கொலைகளில் சம்பந்தப்பட்டவர் ஒவ்வொருவரைப் பற்றிய விவரமும், அங்க அடையாளங்கள் முதலியவையும் வாரந்தோறும் விளம்பரமாகி வந்தன. பிடிப்பவர்களுக்குப் பரிசும் கிடைக்கும்.
தான்பிரீன்தானும் விரைவாக டப்ளின் செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான். அங்கு சென்றால்தான் பல கஷ்டங்களும் நீங்குமென்று கருதினான். டிம் ரியான் என்னும் தோழன் ஒரு மோட்டார்காருடன் உதவிக்கு வந்து சேர்ந்தான். டாம்மி என்பவன் காரை ஒட்டுவதற்கு முன்வந்தான். தான்பிரினும் ரியானும் காரின் பின் பக்கத்திலும், ஹோகனும் டாம்மியும் முன்பக்கத்திலும் அமர்ந்து கொண்டு, வடதிசைநோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் லிமெரிக் நகருக்குச் செல்லும் வரை ஒரு விசேஷமும் ஏற்படவுமில்லை.
லிமெரிக் நகர வீதியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மோட்டார் லாரிகளில் வந்து கொண்டிருந்தனர். அத்தனை பேர்களும் ஏதோ பெருங் கூட்டங்களைக் கைது செய்யப்போவதாகத் தோன்றியது. தான்பிரீன் கூட்டத்தாரைப் பிடிக்கவே ராணுவத்தார் லாரிகளில் சுற்றிக் கொண்டிருந்தனர். தொண்டர்கள் எங்கோ பக்கத்தில் ஒளிந்து கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டு அவர்களைப் பிடிப்பதற்காகவே ஏராளமான ஆயுதங்களையும், யந்திரத்துப்பக்கிகளையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர்.
தான்பிரீனும் பெரிய அபாயம் ஏற்படப்போவதாக எண்ணினான். ஒரு சிப்பாய் சிறிது சந்தேகம் கோண்டுவிட்டாலும், அவனுடைய கூட்டத்தாருக்கே ஆபத்துத்தான். சிப்பாய்களில் பணி அவர்களுடைய அங்க அடையாளங்களைப் பற்றி நன்றாகப் படித்து வைத்திருந்தனர். எப்படியாவது பதினாயிரம் பவுண்டு பரிசைப் பெறவேண்டும் என்பதும் பல சிப்பாய்களின் ஆசை. அத்துடன் மற்றக் குற்றவாளிகளைப் பார்க்கிலும், லோலோஹெட்பக் ஆசாமிகளையே பிடிக்கவேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம்.
எல்லாச் சிப்பாய்களும் தான்பிரீனுடைய காருக்குள் உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றனர். தான்பிரீனும் தோழர்களும் கலக்கமடைந்தால், காரியம் கெட்டுவிடும். அவ்விடத்தை விட்டுத் திரும்பிச் சென்றாலும், சிப்பாய்களுக்கு வேறு சந்தேகம்வேண்டியதில்லை. எனவே தொண்டர்கள் ஒரு பாவமும் அறியாதவர் போல் அமைதியாக இருந்து விட்டனர்.
இருபது லாரிகளைக் கடந்தாயிற்று. பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் அவர்கள் பட்டாளத்தாரை வியப்போடு பார்த்துக்கொண்டே சென்றனர். அவர்களுடைய பார்வை, அளவற்ற கிருபையுடன் எங்களை ஆண்டடக்கும் துரைமார்களே, எவ்வளவு அலங்காரமான உடைகளை அணிந்து செல்கிறீர்கள் என்று பரிகசிப்பது போல் தோன்றிற்று. எல்லா லாரிகளையும் தாண்டியாகி விட்டது. ஒரு சிப்பாய்கூட அவர்களைச்சந்தேகிக்கவில்லை. ஆனால், வீதியில் ஒரு மூலையிலே சென்றவுடன், அங்கு காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்த சிப்பாய் 'நிறுத்தங்கள் காரை' என்று ஒரு போடு போட்டான் கார் உடனே நிறுத் தப்பட்டது!
காருக்குள்ளே இருந்தவர்கள் நெருக்கடி ஏற்பட்டு விட்டதாய்க் கருதினார்கள். மற்ற சிப்பாய்கள் எல்லோரும் வேண்டுமென்றே தங்களை விட்டுவிட்டுப் பின்னால் தாங்கள் ஓடி விடாதபடி சூழ்ந்து கொள்ளவே சூழ்ச்சி செய்திருப்பதாக அவர்கள் எண்ணினார்கள். இருக்கும் நிலைமையில் என்ன செய்வது என்று யோசித்தனர்கள். தான்பிரின் துப்பக்கியை எடுத்து வெளிக்குத் தெரியாமல் மறைவாகப் பிடித்துக் கொண்டான். முதல் குண்டை யார் தலையில் செலுத்த வேண்டும் என்று குறிபார்த்துக் கொண்டான். அவ்வேளையில் ஓர் அதிகாரி அங்கு விரைந்து ஓடிவந்தார்.
'கனவான்களே, உங்களைத் தாமதப்படுத்தியதற்காக மன்னிக்க வேண்டும்' என்று அவர் கூறினார். மன்னிப்பு என்ற சொல்லைக் கேட்டவுடன், தான்பிரீன் திடுக்கிட்டுப் போனான். மறைவாகத்துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டான். அந்த அதிகாரி காவற் சிப்பாய்களின் தலைவர்.வீதியில் இரண்டு லாரிகள் உடைந்து கிடப்பதாயும், அவை குறுக்கே அடைத்துக் கொண்டிருந்ததால் அந்தப் பக்கமாய் கார்செல்ல முடியாதென்றும், எல்லோரும் கீழே இறங்கி நடந்து செல்வது நல்லது என்றும் அவர் கூறினார்.
இதற்குள் தான்பிரீன் மனம் அமைதி பெற்று விட்டது. அவன் மரியாதையாக அதிகாரியைப் பார்த்து, ஐயா! மிக முக்கியமான வேலையின் நிமித்தம் நாங்கள் அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. நீண்ட தூரம் காரில் வந்ததால் களைப்படைந்திருக்கிறோம். அத்துடன் என் காலில் வாதநோய். நான் எப்படி நடக்கமுடியும்? நீரே யோசித்துச் சொல்லும் என்று கூறினான். அதிகாரி இாக்கமைந்து நாலைந்து சிப்பாய்களை அழைத்து, துப்பாக்கிகளைக் கீழே வைத்துவிட்டுத் தான்பிரீனுடைய காரைத் தள்ளிக் கொண்டு போய் மறுபக்கத்தில் விடும்படியாக உத்தரவிட்டார். அவர்கள் அறுநூறு அடி தூரம் காரைத் தள்ளிக்கொண்டுபோய் விட்டனர்.
அந்தச் சிப்பாய்களுக்குத் தான்பிரீன் சொன்ன வந்தனங்களுக்கு அளவே யில்லை! சிப்பாய்களும் திரும்பத் திரும்ப 'சலாம்' செய்து விட்டு எங்கோ மறைந்திருப்பதாய்க் கேள்விப்பட்டதான் பிரீன் கூட்டத்தாரைக்கண்டு பிடிக்க மற்றச்சிப்பாய்களோடு சென்றுவிட்டனர்!
சிப்பாய்கள் விடைபெற்றுச் சென்ற மறுகணத்திலேயே தான்பிரீனுடைய கார் வேகமாய்ப் பறக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் சென்ற பின்பு தொண்டர்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு வயிறு வெடிக்கும்படி சிரித்தனர். அதுவரை உள்ளத்தில் கட்டுப்பட்டிருந்த சந்தோஷம் வெள்ளப் பெருக்கெடுத்தது போலிருந்தது.
8
தாயின் தரிசனம்
* * *
லிமெரிக் நகரில் தேசியப் பற்றுள்ள பாதிரியார் ஒருவர் இருந்தார். புரட்சிக்காரர்களிடம் அவருக்குப் பிரியம் அதிகம். பொதுநல ஊழியம் செய்யும் எவருக்கும் அவர் தோழர். அவரைக் காணவே தான்பிரீன் முதலானவர்கள் காரில் பிரயாணம் செய்து வந்தனர். லிமெரிக் வந்ததும் அவர்கள் நேராகப் பாதிரியாருடைய வீட்டுக்குச் சென்றனர்.
பாதிரியார் அவர்களைக் கண்டதும் அளவற்ற ஆனந்தங்கொண்டார். அவருக்குக் கடுகளவு பயமுமில்லை. அவருடைய வீட்டில் வேலைபார்த்து வந்த மோல்லி என்னும் மாது புதிய வாலிப விருந்தினர்களிடம் விசேஷ அன்பும் மரியாதையும் காட்டினாள். அவர்களுக்குப் பசித்தபோது நல்ல உண்டிகளும், பானங்களும் தயாரித்துக் கொடுத்தாள். சில சமயங்களில் சுவையுள்ள பண்டங்களைச் செய்து, அவற்றை உண்டு தீர வேண்டும் என்று மோல்லி கண்டிப்பான உத்தரவும் போடுவதுண்டு. அங்கிருந்த பொழுது தான்பிரீனும் ஹோகனும் இரண்டு நாள் இரவும் பகலும் படுத்த படுக்கைவிட்டு எழுந்திராமல் ஓய்வெடுத்துக் கொண்டனர். மோல்லி அடிக்கடி அங்கு வைக்கப்பட்டிருந்த சிலுவையின் பக்கம் சென்று, அவர்கள் நீடுழி வாழவேண்டும் என்று பிரார்த்தித்து வந்தாள். சிலுவையின் முன்னால் அணையா விளக்கு ஒன்று போட்டாள். ஜப மாலையைக் கையில் பிடித்து, அவர்களைப் பகைவர்களிடமிருந்து இறைவன் காக்க வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அவள் அவர்களிடமிருந்து வந்து 'இனி கவலையை ஒழியுங்கள் உண்மையான தர்மவான்களைத் தெய்வம் காட்டிக் கொடுக்காது' என்று ஆறுதல் சொல்வது வழக்கம்.
லிமெரிக்கிலிருந்து தான்பிரீனும் ஹோகனு, லாகெல்லிக்குச் சென்றனர். அங்கே வந்திருந்த டிரீஸியையும் ராபின்ஸனையும் சந்தித்தார்கள். அவர்கள் சந்தித்த காட்சி பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் போட்டிப் பந்தய விளையாட்டில் ஆனந்தக்கூத்தாடுவது போல் இருந்தது. நால்வரும், ஒன்று கூடிவிட்டதால் அவர்களுடைய கவலைகள் சிதறிப் போயின. தான்பீரின், பாதிரியார் தங்களுக்குச் செய்த உதவிகளையும், நண்பர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தான். டிரீஸியும், ராபின்ஸனும் டப்ளின் நகரில் தங்களை யாரும் சந்தேகிக்கவில்லை என்பதையும் வேறுபல அதிசயங்களைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.
லாகெல்லி, ஸோலோஹெட்பக்கிலிருந்து ஆறு அல்லது ஏழுமைல் துரத்திலுள்ளது. அவ்விடத்திற்குத் தான்பிரீன் வந்து சேர்ந்தது வரை ஸோலோஹெட்பக் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. பட்டாளத்தாரும், போலிஸாரும் அந்தப் பக்கங்களில் வெடிமருந்துப் புதையலைத் தேடிக் குழிகள் தோண்டுவதை நிறுத்தியபாடில்லை. தான்பிரீஸ், எங்கெங்கு போவது வழக்கம் என்று அறிந்து, அங்கெல்லாம் சோதனை போடப்பட்டது.
தான்பிரீனும் தோழர் மூவரும் நான்கு சைக்கில்களை வாங்கிக்கொண்டு, டப்ளினுக்குச் செல்லும் நோக்கத்துடன், டோனோஹில்லுக்குச் சென்றனர். வழியில் முன்னால் போலிஸாரைச் சுட்ட இடத்தைத் தாண்டிச்செல்ல வேண்டியிருந்தது. அவ்விடத்தில் அவர்கள் கீழிறங்கிச் சில நிமிஷங்கள் தங்கி விட்டுச் சென்றனர். டோனோஹில்லிருந்து தான்பிரீனுடைய வீடு அரை மையில் தூரத்தி இருந்தது. அவன் மூன்று மாத காலமாய்ப் பாராத தன் அன்னையைப் பார்க்கவேண்டும் என்று ஆவல் கொண்டான். இடையில் அவளுக்கு ஒரு கடிதங் கூட எழுதவில்லை. ஆதலால் அவன் நேராக வீட்டை நோக்கிச் சென்றான். அன்னையின் திருவடிகளைப் பணிந்தான். அந்த மாதரசியின் துயரங்களுக்கு அளவில்லை. தான்பிரீன் போன்ற பிள்ளையைப் பெற்று வீரத்தையும் தேசாபிமானத்தையும புகடடிய ஒரு குற்றத்தினால் அவள்பட்ட கஷ்ங்களை வேறு யாரால் சகிக்கமுடியும்? அவளுடைய சிறு வீடு 24 மணி நேரத்தில் மூன்று முறை சோதனை போடப்பட்டு வந்தது. அதிகாலையில் விடிவதற்கு முன்னால் 'பீலர்கள்' வந்து சோதனை போடுவார்கள்; நள்ளிரவில் பட்டளாத்தார் திடீரென்று புகுந்து சோதனை போடுவார்கள். அந்தத் தாய் அவ்வளவையும் சகித்துக் கொள்வாள். பிற்காலத்தில் 'பிளாக் அண்டு டான்' என்ற பட்டாளத்தார் அயர்லாந்தில் சொல்ல முடியாத கொடுமைகளைச் செய்துவந்த காலத்தில், அவளுடைய வீட்டைத் தீவைத்துப் பொசுக்கி, அவளுடை, கோழிகளையும் குஞ்சுகளையும் கூடக் கத்தியால் குத்திக் கொன்றார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோபம் கோழிக் குஞ்சுகளின் தலையிலும் பாய்ந்தது!
எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும், அந்த வீரத் தாய் தைரியத்தை மட்டும் கைவிடவில்லை. வீரப் பிள்ளையை பெற்றதே பாக்கியம் என்று அவள் கருதி வந்தாள். பீலர்களும் பட்டாளத்தார்களும் அடிக்கடி அவளிடம் சென்று, 'உன் மகன் எங்கே?' என்று கேட்பார்கள். அவள் 'என் மகனுள்ள இடத்தில் நீங்கள் கூசாமல் செல்வீர்களா?' என்று கேட்பது வழக்கம். ஒரு சமயம் பட்டாளத்தார் வந்து தான்பிரீனைத் தேடுப்பொழுது, அவன் வீட்டு மாடியிலே இருக்கிறான், போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்; என்று அவள் விளையாட்டாகச் சொன்னாள். பட்டாளத்தார் அதை உண்மை என்று எண்ணி, உடனே துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு, திரும்பி ஓடிப் பக்கத்தில் மறைந்து கொண்டார்கள் பின்னால், தான்பிரீன் வீட்டிலில்லை என்று தெரிந்துகொண்டுதான் அவர்கள் வெளியே வந்தார்களாம்.
தான்பிரீன், வீரத் தாயின் வீர மகன். தாயைப் போல்தானே பிள்ளையும் இருப்பான்!
9
போலிஸாரிடம் பிடிபட்ட தொண்டன்
* * *
தான்பிரீன் அன்னையிடம் அரிதில் விடைபெற்றுக் கொண்டு நண்பர்களுடன் கிளான்மெல் நகருக்குச் சென்றான். அதுதான் ஐரிஷ் போலிஸாரின் தலைமை இடம். அங்கிருந்த்தொண்டர்படைத் தலைவர்களைக் கண்டு பேசி, விரைவாகக் காரியங்களை ஆரம்பிக்கவேண்டும் என்று தான்பிரீன் வர்புறுத்தினான். நகரத் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினான் பிறகு அங்கிருந்து அவனும் நண்பர்களும் ரோஸ்மூரை அடைந்தனர்.
ரோஸ்மூரில் ஒரு நண்பர் பக்கத்து ஊரான பல்லாக் என்னும் இடத்தில் ஈமன் ஒப்ரியேனுடைய வீட்டில் ஒரு நடனக் கச்சேரி நடக்கப் போவதாக தெரிவித்தார். தான்பிரீனும் அவன் தோழர்களும் களைப்பை மறந்தனர். அங்கு போவதில் ஏற்படக்கூடிய ஆபாயத்தையும் கருதவில்லை.பல வருஷங்களாக அம்மாதிரியான கச்சேரிகளில் அவர்கள் கலந்து கொண்டதில்லை. ஆதலால் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று தீர்மானித்தனர். அதன்படி கச்சேரி நடக்கும் இடத்திற்குச் சென்றனர். போனவுடன் விருந்துண்ணும் கூட்டத்தோடு கலந்து கொண்டனர்.
அங்கு பாடப்பட்ட கீதமும், அளிக்கப்பட்ட உணவுகளும் மிகவும் இனிமையாக இருந்தன. தொண்டர்கள் தாங்கள் 'சட்ட விரோதமான நபர்கள் என்பதை அடியோடு மறந்து உண்பதிலும், ஆடுவதிலும் ஆனந்தமாய்ப் பொழுது போக்கிவந்தனர். பீலர்களும், ராணுவத்தாரும் வெளியே பல இடங்களில் அவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்க, அவர்கள் இங்கே ‘டான்ஸ்' ஆடிக் கொண்டிருந்தார்கள்
இரவு முழுவதும் நடனஞ் செய்துவிட்டு விடியப் போகிற நேரத்தில், தான்பிரீன் சில பையன்களுடன் ரோஸ்மூருக்குத் திரும்பினான். மற்ற மூவரும் அவனுடன் செல்லாது அங்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். தான்பிரீன் இருப்பிடத்திற்குச் சென்றபின், சிறிது நேரத்தில் டிரீஸியும், ராபின்சனும் அங்கு வந்து சேர்ந்தனர். ஸீன் ஹோகன் மட்டும் வரவில்லை. அவன் பின்னால் வந்து சேருவான் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் படுக்கச் சென்றனர்.
ஐந்து தினங்களாக உறக்கமில்லாதிருந்ததாலும், அன்றிரவு முழுவதும் நடனமாடியதாலும் மூவரும் மிகவும் களைப்புற்றுப் படுத்தவுடனே உறங்கி விட்டனர். தொழுவங்களிலும் தோட்டங்களிலும் அவர்கள் நன்றகத்தூங்குவார்கள். படுக்கைகளும் தலையணைகளும் அலங்காரமாகப் போடப்பட்ட இடத்தில் நித்திரைக்குக் குறைவிருக்குமோ!
தான்பிரீன் உறங்கும் பொழுது யாரோ ஏதோ கூறுவது செவியில் பட்டது. தூக்கத்தில் ஒன்று சரியாக புலனாகவில்லை. பாட்ரிக்கின்னான் என்னும் பழைய நண்பர் திடீரென்று அங்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். தான்பிரீன் கண்னைவிழிக்க முடியாமல் அயர்ந்து கிடந்தான். ஆனால், கின்னான், 'பீலர்கள் ஹோகனைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள், என்று தெளிவாகக் கூறிய சொற்களைக் கேட்டவுடன், அவன் திடுக்கிட்டு எழுந்துவிட்டான். அவ்விஷயத்தை அவனால் நம்ப முடியவில்லை. ஹோகன் பீலர்களால் சுடப்பட்டு இறந்தான் என்றால், அதை நம்பியிருப்பான். ஆனால், எதிரிகளைச் சுட்டுத் தள்ளாமல், பேடித்தனமாக அவன் பீலர்களுடைய கையில் சிக்கினான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. கின்னான் வேடிக்கையாக் கூறியிருப்பாரோ என்று சந்தேகித்து அவன் டிரீஸியைத் திரும்பிப் பார்த்தான். ஒரு வினாடியில் மூவரும் எழுந்து நின்று அடுத்தாற் போல் என்ன செய்வதென்று யோசிக்கலாயினர்.
தான்பிரீனுடைய தலை கிறுகிறுத்துக் கொண்டிருந்தது. உடம்வு முழுவதும் உணர்ச்சியற்றிருந்தது. ஆயினும் ஆருயிர்த்தோழன் ஹோகன் பகைவர் கையில் சிக்கிவிட்டான் என்றதைக் கேட்டு அவன் நிலை கொள்ளவில்லை. அவனும் தோழர்களும் ஹோகனைப் பீலர்களுடைய கையிலிருந்து உடனே விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர். 'ஹோகனை விடுவிக்க வேண்டும், அல்லது நாம் மடிய வேண்டும்' என்று முடிவு செய்தனர்.
ஹோகன் எப்படிப் பிடிப்பட்டான் என்பதைப் பற்றி அவர்கள் விசாரித்தார்கள். அவன் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். இடையில் பத்து பீலர்கள் அவனைச் சூழ்ந்து பிடித்துக் கொண்டனர். அவன் துப்பாக்கியைத் தொடுவதற்குக் கூடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் பீலர்கள் புரட்சிக்காரர்களைப் பிடிப்பதானால், பிடித்தவுடன் சுட்டுக் கொல்வது வழக்கமாயிற்று. ’கைதிகள் ஓட ஆரம்பித்தார்கள். அதனால் சுட்டு விட்டோம்!' என்று அவர்கள் மழுப்பிவிடுவார்கள். ஆனால் அந்த வழக்கம் ஹோகன் பிடிபடும்போது அமுலில் இல்லை.
ஹோகன் எங்கே வைக்கப்பட்டிருக்கிறான் என்ற தகவலொன்றும் கிடைக்கவில்லை. வழிப்போக்கர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றால் அக்காலத்தில் நன்றாய் விடிவதற்குமுன்னால் எவரும் வீதியில் நடமாடுவதில்லை. அவனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துவரச் சில வாலிப நண்பர்கள் சைக்கிள்களில் சுற்றித் திரிந்தனர். ஒரு புலனுந் தெரியவில்லை. பீலர்கள் ஹோகனை மிகவும் எச்சரிக்கையாய் மறைத்துக் கொண்டு போயிருந்தனர். வெகு நேரத்திற்குப் பிறகு, அவன் தர்லஸ் போலிஸ் நிலையத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
தர்லஸ் போலிஸ் நிலையத்தைத் தாக்கி அதிலிருந்து ஹோகனை மீட்பது நடக்க முடியாத காரியம். ஏனெனில் ஏராளமான போலிசும் பட்டாளமும் எந்த நேரத்திலும் தயாராய் வைக்கப்பட்டிருந்தன. போலிஸ் நிலையத்தைச் சுற்றிலும் பெரிய கோட்டை ஒன்று இருந்தது. போலிஸார் இமைகொட்டாது பாராக் கொடுத்து வந்தனர். புரட்சிக்காரருடைய வேலைகள் அவர்களுக்கு மிக நன்றாய்த் தெரியும். அதிலும் வெடிமருந்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஹோகன் அவர்களிடம் கைதியாக இருக்கும் பொழுது அவர்கள் அதிக எச்சரிக்கையாயிருந்தது ஆச்சரியமில்லை.
போலிஸ் நிலையத்தைத் தாக்க முடியாவிட்டால் வேறு என்ன செய்வது, இதைப் பற்றித் தான்பிரீன் தீவிரமாக யோசித்து, ஒரு முடிவு செய்தான். அக்காலத்தில் கைதிகளை ‘ரிமாண்டு' செய்வதற்கும் ஆரம்ப விசாரனை செய்வதற்கும் இரண்டொரு நாள்தான் போலிஸ் நிலையத்தில் வைப்பது வழக்கம். பிறகு அவர்கள் மவுன்ட் ஜாய், கார்க், மேரிபரோ, டான்டாக், பெல்டாஸ்டு முதலிய பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றுக்கு மாற்றப்படுவது வழக்கம். திப்பெரரிக் கைதிகளை கார்க் நகர ஜெயிலுக்குக் கொண்டு போவார்கள். எனவே ஹோகன், தர்லஸ் நிலையத்திலிருந்து ரயிலில் கார்க்குக்கே கொண்டு போகப்படுவான் என்று தான்பிரீன் ஊகித்தான்.
அதற்குத் தக்கபடி திட்டம் அமைத்தான். எமிலி என்ற ஸ்டேஷனுக்குப் போய், அங்கு ரயில் வந்தவுடன் உள்ளே பாராக்காரர்களைச் சுட்டுவிட்டு, ஹோகனை மீட்க வேண்டும் என்பது அவன் யோசனை. எமிலி சிறிய ஸ்டேஷன். அங்கு பட்டாளம் கிடையாது. ஆனால் ரயிலை நிறுத்திக் கைதியை மீட்பது மூன்று பேர் செய்யக்கூடிய காரியமில்லை. ஆதலால், தான்பிரீன் உதவியாட்கள் வேண்டுமென்று திப்பெரரி நகரலிருந்து தனது படைக்குத் தகவல் சொல்லிவிட்டான். திப்பெரரியில் இருந்து எமிலி ஏழாவது மைலில் இருந்தது.
முன்னேற்பாடுகள் யாவும் செய்யப்பட்டு முடிந்தன. 1919 மே மாதம் 12ஆம் தேதி தான்பிரீனும் நண்பர்களும் தங்களுடைய சைக்கிள்களை எடுத்துக் கொண்டு எமிலியை நோக்கிப் புறப்பட்டனர். கோபத்தினாலும், ஆத்திரத்தாலும், கவலையாலும் அவர்களுடைய உதிரம் கொதித்துக் கொண்டிருந்தது.
நேர் பாதையிலே சென்றால், எமிலி முப்பது மைல் தூரத்தில்தான் இருந்தது. ஆனால் நேர் பாதையிலே போலிஸ் தோழர்கள் அடிக்கடி நடமாடிக்கொண்டிருப்பார்கள் அல்லவா? காட்டுப்பாதையில் ஐம்பது மைல் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. பாதையோ சீர்கெட்டது. எங்கு பார்த்தாலும் மேடும், பள்ளமும் குழியும், கல்லுமாயிருந்தது. சைக்கிள்களில் அவர்களுடைய உடல் இருந்தனவேயன்றி, உறக்க மயக்கத்தால் மூவருடைய தலைகளும் நாலு பக்கத்திலும் ஆடிக்கொண்டேயிருந்தன. நண்பனை மீட்க வேண்டும் என்ற ஆத்திரம் மட்டுமே அவர்களையும் சைக்கிள்களையும் தள்ளிக்கொண்டு சென்றது.
இடையிலே ஸீன்டிரீஸி வழக்கம் போல் கதைகள் சொல்ல ஆரம்பித்தான். வழியிலிருந்து ஊர்களின் சரித்திரங்களையும் அவற்றில் வசித்த வீரர்களைப் பற்றியும் அவன் விரிவாக எடுத்துச் சொன்னான். திடீரென்று ஏதோ வீழ்வதாக. சத்கங் கேட்டது. டிரீஸியும், தான்பிரீனும் பின்னால் திரும்பிப் பார்த்தனர். ராபின்ஸன் சைக்கிளிலிருந்து தூங்கிக் கீழே விழந்து விட்டான் விழுந்தவன் பங்குவதைக் கண்டனர். அவன் உடலில் அவ்வளவு களைப்பு இருந்தது. அவர்கள் அவனைத் தட்டி எழுப்பபி அழைத்துக் கொண்டு சென்று மே மாதம் 13ஆம் தேதி காலை எமிலியை அடைந்தனர்.
1Ο
ரயில் நிலையத்தில் ரகளை
தான்பிரீன் கூட்டத்தார் காலை 2.30 மணிக்கே எமிலியை அடைந்தனர். முதல் ரயில் மதியத்தில்தான் வரும் என்று தெரிந்து கொண்டு அவர்கள் திப்பெரரியிலிருந்து உதவியாட்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். திப்பெரரி வீதியில் வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தனர். ஒருவரும் வரக்காணோம். வழியில் என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்றனர். மணி பதினொன்று அடித்தது. ஒவ்வொரு நிமிஷமும் ஒரு நாளாகத் தோன்றிற்று. எந்த ஆசாமியும் வரக்கானோம். ரயில் வரக்கூடிய நேரம் நெருங்கி விட்டது.
உதவிக்கு நண்பர்கள் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? ஸீன் ஹோகன் பகைவர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவனுடைய நண்பன் சும்மா இருப்பதா? அது நட்புக்குத்துரோகம் அல்லவா? இவ்வாறெல்லாம் தான்பிரீன் எண்ணமிட்டான். எப்படியாவது முயற்சி செய்து பார்த்துவிட வேண்டியது தங்கள் கடமை என்று தீர்மானித்தான். ஹோகனுக்குப் பாதுகாப்பாகச் சுமார் நான்கு முதல் எட்டுப் போலிஸார் தக்க ஆயுதங்களுடன் வரக்கூடும். ஆனால் அவைகளையெல்லாம் பற்றி யோசிக்க அந்தத் தொண்டர்களுக்கு மனமில்லை. ஹோகனை மீட்க வேண்டும் அல்லது அவனுக்காகத் தங்கள் உயிரைப்பலியிட வேண்டும் வருவது வரட்டும் என்று அவர்கள் துணிந்து நின்றனர். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ரயில் வந்து விட்டது. உடனே மூவரும் ஸ்டேஷனுக்குள்ளே பாய்ந்தனர்.
உள்ளே பாய்ந்த வேகத்தில் தான்பிரீன் ஒரு கிழவியை இடித்துத் தள்ளிவிட்டான்; தானும் கீழே விழுந்தான். கிழவியைத் திரும்பிப் பாராமலே துள்ளி எழுந்து ரயிலடிக்கு ஓடினான். ஒவ்வொரு நிமிஷமும் அவனுடைய கைவிரல் சட்டைக்குள் மறைத்திருந்த ரிவால்வரின் குதிரையைப் பிடித்த வண்ணம் தயாராக இருந்தது.
ரயில் வந்ததே யொழிய அதில் ஒரு கைதியையும் காணோம்! மூவரும் ஏமாற்றமடைந்து திகைத்தனர். ஆனால் அதுவும் நல்லது தான் என்று கொஞ்சம் சந்தோஷம் அடைந்தனர். ஏனெனில் ஹோகன் அடுத்த ரயிலில் கொண்டு வரப்பட்டால், அதற்குள் திப்பெரரி ஆட்கள் வந்துவிடக்கூடும் என்று அவர்கள் நம்பினார்கள். அடுத்த ரயில் வரும்வரை காத்திருப்பதுதான் மிகவும் கஷ்டமாயிருந்தது. போராட்டத்தில் தீவிரமாய்க் குதிப்பது எளிது. ஆனால் எதையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதுதான் கஷ்டம்.
திப்பெரரி நண்பர்கள் ஆபத்துக்கு உதவத் தவறி விட்டனர். தான்பிரீன் வேறு எங்கிருந்து உதவி பெறலாமெனச் சிந்தித்தான். பக்கத்து மாவட்டங்களிலிருந்த கால்ட்டீ தொண்டர் படைக்குத் தகவல் கொடுத்தால் பல வீரமுள்ள வாலிபர்கள் உடனே உதவி செய்வார்கள் என்று கருதினான். அவ்வண்ணமே அவர்களுக்குச் செய்தி அனுப்பி உதவிக்கு வரும்படி வேண்டினான். கால்ட்டீ வீரர்கள் தகவல் கிடைத்த மறுநிமிஷமே ஐந்து பேர்களை அனுப்பி வைத்தனர்.
கால்ட்டீ தொண்டர்களுடைய பெயர்களாவன: ஈமன் ஓப்ரியன். ஜேம்ஸ் கான்லன், ஜே. ஜே. ஓப்ரியன், ஸீன் லிஞ்ச், மார்ட்டின் போலீ. அந்த வாலிபர்கள் அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் அவர்களில் மார்ட்டின் போலீ என்பவன் பின்னால் போலிஸாரால் பிடிக்கப்பட்டு, இரண்டு வருஷங்கள் கழித்து மவுண்ட் ஜாய் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவன் மட்டுமல்ல, அந்தப் போராட்டத்தில் எவ்வித சம்பந்தமும் இல்லாத மாஹெர் என்னும் வாலிபனும் குற்றஞ் செய்ததாகப் பொய்க்காரணம் சொல்லி தூக்கிலிடப்பட்டு மடிய நேர்ந்தது. அந்த இரு வாலிபரும் அயர்லாந்துக்காகச் சிரித்த முகத்துடன் உயிரைப் பலி கொடுத்தனர்.
கால்ட்டீ துணைவர்களைச் சேர்த்து தான்பிரீன் படையில் மொத்தம் எட்டுப் பேர்கள் இருந்தனர். ஐந்து பேர்களுக்கு ஆயுதங்கள் இருந்தன; மூவர் நிராயுத பாணிகள். எல்லோரும் கூடிஆலோசித்ததில் முன்போட்டதிட்டம் சிறிது மாற்றப்பட்டது. ஸீன்டிரீஸியும், ஸிமஸ் ராபின்ஸனும், தான்பிரீனும், அடுத்த ஸ்டேஷனுன நாக்லாங்குக்கு சைக்கிள்களிற் சென்றனர். நாக்லாங் எமிலியிலிருந்து மூன்றாவது மைலில் இருந்தது. மற்ற ஸ்டேஷன்களில் எப்பொழுதும் போலிஸாரும் பட்டாளத்தாரும் தங்கியிருப்பார்கள் என்பதால் நாக்லாங் ஸ்டேஷனுக்கே செல்ல வேண்டும் என்று அவர்கள் புறப்பட்டார்கள். அதன் பக்கத்தில் இரண்டு மைல்களுக்கு இடையில் போலிஸ் நிலையமே கிடையாது. நாக்லாங்கிலும் காரியம் பலிக்கவில்லையானால், அடுத்த ஸ்டேஷனான பிளார்னிக்கு மோட்டாரில் செல்வது என்று அவர்கள் தீர்மானித்தனர். மற்ற நால்வரும் எமிலிக்குச் சென்றனர். அவர்கள் அங்கு ரயிலில் வந்தவுடன் அதில் ஏறிக்கொண்டு, யாரும் சந்தேகிக்காதபடி ஹோகனிருந்த இடத்திற்குப் பக்கத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும் என்றும், நாக்லாங் வந்தவுடன் அங்கு காத்திருந்த தான்பிரீன் முதலானவர்களுக்கு அந்த வண்டியை அடையாளம் காட்டவேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தான்பீரினும் நண்பர் இருவரும் நாக்லாங் ஸ்டேஷனை அடையும் பொழுது முதல் மணி அடிக்கப்பட்டது. ரயில் எமிலியை விட்டுப் புறப்பட்டுவிட்டது என்பதை அது அறிவித்தது. தொண்டர்கள் ரயில் நிற்கக்கூடிய மேடைக்குச் சென்று உலாவிக்கொண்டிருந்தனர். அவர்கள் சாதாரன மனிதர்கள் போலவே காணப்பட்டார்கள். ஆனால், அவர்களுடைய கைகள் மட்டும் சட்டைப்பைக்குள் ரிவால்வரைப் பற்றிய வண்ணமாயிருந்தன.
தூரத்தில் எஞ்சினுடைய புகை ஆகாயத்தில் தெரிந்தது. அடுத்த நிமிஷத்தில் வண்டி ஸ்டேஷனில் வந்து நின்றது. அதே சமயத்தில் கார்க் நகரிலிருந்து வேறோரு வண்டியும் வந்து அடுத்த தண்டவாளத்தில் நின்றது. அந்த வண்டியில் ஏராளமான பட்டாளத்தார்கள் இருந்தனர் என்பது தொண்டர்களுக்கு மறுநாள் தான் தெரியவந்தது. அன்று நடந்த குழப்பத்தில் எக்காரணத்தாலோ பட்டாளத்தார் கீழே இறங்கிக் கலந்து கொள்ளவில்லை. ஒரு வேளை அவர்களுக்குத் தகவல் கிடைப்பதற்கு முன்னரே கலகம் முடிந்து விட்டது போலும்.
ரயில் தண்ட வாளத்தில் நிற்குமுன்பே வண்டியிலிருந்த தோழர்கள் ஆசாமி இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டினார்கள். ரயில் ஒரு நிமிஷம்தான் நிற்கும். அதற்கு மேல் நிற்க வேண்டுமானால் எஞ்சின் ஒட்டியவர்களைச் சுடவேண்டியிருக்கும். அதற்கு அவசியமில்லாமல், அந்த ஒரு நிமிஷத்திற்குள் காரியத்தை முடித்து விடவேண்டுமென்று தான்பிரீன் தீர்மானித்தான்.
ஹோகன் இருந்த வண்டி மிக நீளமானது. அதில் பன்னிரண்டு தனி அறைகள் இருந்தன. அந்த அறைகளுக்கு வெளியே எல்லாவற்றிற்கும் பொதுவான பாதையிருந்தது. கால்ட்டீ ஆசாமிகள் அந்தப் பாதையிலே நின்று கொண்டிருந்தனர். ஸீன்ஹோகன் கைவிலங்கிடப்பட் டு எஞ்சின் இருந்த திசையைப்பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு இரு பக்கத்திலும் ஒரு சார்ஜென்டும், ஒரு போலிஸ்காரனும் இருந்தனர். அவனுக்கு முன்னால் வேறு இரண்டு போலிஸ்காரனும் இருந்தனர். அவனுக்கு முன்னால் வேறு இரண்டு போலிஸ்காரர்கள் அமர்ந்திருந்தனர். தான்கு காப்பாளர்களும் துப்பாக்கி, கத்தி முதலிய ஆயுதங்களையும் தயாராப் வைத்துக் கொண்டிருந்தனர். அன்றைய போராட்டத்தை ஸீன் டிரிஸியே தலைமை வகித்து நடக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவன் உத்தரவு கொடுத்து விட்டான். ரயில் வந்து நின்று ஐந்து வினாடிகளுக்குள் அவர்கள் அதில் ஏறி நீண்ட பாதையின் வழியாக ஹோகனிருந்த அறைக்குள் பாய்ந்தனர். பாயும்பொழுது அவர்கள் 'தூக்குங்கள் கைகளை' என்று கூவிக்கொண்டே சென்றனர். அவர்கள் உள்ளே போவதற்கு ஒரு நிமிஷத்திற்கு முன்புதான் சார்ஜெண்டு ஹோகனைப் பார்த்து, 'அடே உன்னுடைய ஸீன் டிரீஸியும், தான்பிரீனும் இப்பொழுது எங்கடா போனார்கள்?' என்று கேட்டுக்கேலி செய்தானாம். அடுத்த நிமிஷத்தில், அவன் விளையாட்டாகக் கேட்ட கேள்விக்கு உண்மையாகவே பதில் கூற, நீட்டிய ரிவோல்வர்களுடன் தான்பிரீனும், டிரீலியும் அங்கு புகுந்து விட்டனர். ஹோகன் அநாதையில்லை என்பதை நிரூபித்து விட்டார்கள்.
போலிசார் புதிய ஆசாமிகளைக் கண்டவுடன் அவர்கள் வந்த காரியத்தைத் தெரிந்து கொண்டனர். என்ரைட் என்ற கான்ஸ்டபிள் தன் ரிவால்வரை எடுத்து ஹோகனுடைய நெற்றிக்கு நேராக நீட்டிவிட்டான் யாராவது கைதியை விடுவிக்க வந்தால் முதலில் கைதியைச் சுட்டுக் கொல்லும்படியாகப் போலிஸ் மேலதிகாரிகள் அவர்களுக்குச் சொல்லிவிட்டிருந்தார்கள். கண்கொட்டு முன்னால் அப்பாதகன் ஹோகனைச் சுட்டிருப்பான். ரிவால்வரின் விசையை இழுக்கும்போழுது, அவனுடைய நெஞ்சில் படீரென்று குண்டு பாய்ந்து விட்டது. அவன் சுருண்டு விழுந்து இறந்து போனான். அந்தக் குண்டு புரட்சிக்காரருடைய முதற் குண்டு.
வண்டியிலிருந்த மற்றப் பிரயாணிகள் புரட்சி வாலிபர்களுடைய நோக்கத் தைத்தெரிந்து கொண்டார்கள். அங்கிருந்த பட்டாளத்தான் ஒருவன் கூட, பிரிட்டிஷ் காக்கி உடையை அணிந்து கொண்டே, 'குடியரசு நீடுழி வாழ்க!' என்று வாழ்த்துக்கூறி ஆர்ப்பரித்தான். அவன் சொந்த வேலையின் பொருட்டு எங்கோ சென்று கொண்டிருந்தவன்.
முதல் குண்டில் ஒரு போலிஸ்காரன் தீர்ந்துபோனதைக் கண்டு மற்றவர்கள் ஹோகன் மேல் கைவைக்க அஞ்சினர். அந்தக் குண்டோசை கேட்டவுடன் மற்றொரு போலிஸ்காரன் ஜன்னல் வழியாகக் குதித்து, ஊளையிட்டுக்கொண்டே மாயமாய் மறைந்து போனான். மறுநாள் காலையில்தான்.அவன் எமிலிபோலிஸ் நிலையத்திற்குப் போய் முதல் நாள் ஸ்டேஷனில் நடந்ததைக் கூறினானாம்!
கான்ஸ்டபிள் என்ரைட் இறந்து போனான்; மற்றொருவன் உயிருடன் மறைந்தொழிந்தான். சார்ஜெண்டு வாலஸ் என்பவனும், கான்ஸ்டபிள் ரெய்லியுந்தான் பாக்கியிருந்தார்கள். அவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சுட ஆரம்பித்தார்கள். புரட்சிக்காரர்களும் சுட்டார்கள். அவர்கள் சுடுவதில் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்களுடைய குண்டுகள் தங்கள் ஆட்களையே கொன்று விடக்கூடும். அல்லது ஹோகன் மேல் பட்டுவிடக்கூடும். இடையில் கான்ஸ்டபிள் ரெய்லி கீழே தரையில் சாய்ந்து விட்டான். இருக்கும் நிலையைக் கருதி, அவன் இறந்தவனைப் போல் பாசாங்கு செய்து கொண்டு தரையோடு தரையாய்க் கிடந்தான். தலையை மேலே தூக்கியிருந்தால் அவனும் விண்ணை எட்டிப்பார்த்திப்பான். சார்ஜெண்டு வாலஸ் கடைசிவரை தயங்காது தனியே நின்று போராடி வந்தான். அவன் அடைக்கலம் புகுந்தால் உயிர்ப்பிச்சை கொடுப்பதாய்ப் புரட்சிக்கார்கள் பலமுறை கூறிப்பார்த்தார்கள். அவன் கேட்பதாயில்லை. கூட இருந்தவர்கள் தன்னைக் காட்டிக் கொடுத்துப்போன பின்பும் அவன் கலங்காது நின்று போராடினான். சுற்றிலும் பெருங்குழப்பம், இடமோ மிகச் சிறியது. வண்டியில் மக்கள் கூட்டம் அதிகம். அவ்வளவுக்குமிடையே புரட்சிக்காரர்கள் ஹோகனைக் கதவு வழியாக வெளியே தள்ளிக்கொண்டு போவதற்கு ஏற்பாடுகளைச் செய்தனர்.
கடைசியில் ஹோகன் பந்தோபஸ்தாய் வெளியேற்றப்பட்டான். புரட்சிக்காரர்களும் வண்டியை விட்டு வெளியே குதித்தார்கள். வீரமிக்க சார்ஜெண்டு அவர்களை விடுவாதாயில்லை. அவனும் வெளியே குதித்து அவர்களைப் பார்த்துச் சுட்டுக்கொண்டேயிருந்தான். தான்பிரீன் திரும்பிப் பார்த்தான். அவன் உடம்பில் ஒரு குண்டு பாய்ந்து இரத்தப் பெருக்கெடுத்தது. ஆனால் குண்டு எந்த இடத்தில் பாய்ந்தது என்பது அந்த ஆத்திரத்திலும் அவசரத்திலும் அவனுக்குப் புலனாகவில்லை . சிறிது நேரத்திற்குப் பிறகு தான் சுவாசப்பையில் காயம் பட்டிருப்பதை உணர்ந்தான்.
டிரீஸி, ஈமன் ஓப்ரியன், ஸ்கான்லன் ஆகிய மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களிடமும் தான்பிரீனிடமுமே ரிவால்வர்கள் இருந்தன. ஆயுதங்கள் வைத்திருந்த நால்வருடைய உடம்புகளிலும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. தான்பிரீனைத் தவரி மற்ற மூன்று பேர்களுடைய துப்பாக்கிகளும் சண்டையில் எங்கோவிழுந்துவிட்டன. தான்பிரீன் ஓருவனே ஆயுதந்தாங்கிச் சண்டை செய்யக்கூடிய நிலைமையில் இருந்தான். அவனுக்கு எதிராக சார்ஜெண்டு வாலஸ் போராடிக்கொண்டிருந்தான். அத்துடன் இறந்து போனதாய் பாவனை செய்து கொண்டிருந்த கான்ஸ்டபிள் ரெய்லியும் மெல்ல எழுந்து வந்து தான்பிரீனைப் பார்த்து ஓயாமல் சுட்டுக் கொண்டிருந்தான். தான்பிரீனுடைய வலது கையில் மீண்டும் ஒரு குண்டு பாய்ந்தது. அவனுடைய ரிவால்வரும் கீழே விழுந்து விட்டது. அவன் குனிந்து அதை எடுத்துக் கொண்டு மீண்டும் இரண்டு எதிரிகளையும் பார்த்து சுடலானான். வலது கை பயனற்றுப் போனதால், இப்பொழுது இடது கையால் சுட்டு வந்தான். இத்தகைய சந்தர்ப்பம் ஏற்படு மென்றே அவன் முற்காலத்திலேயே இரண்டு கையாலும் குறிதவறாது சுடப்பழகியிருந்தான். அந்தப் பழக்கம் இந்த ஆபத்தில் மிக உதவியாக இருந்தது. எதிரிகளுடைய குண்டுகளுக்கு இடம் கொடாமல் தப்புவதோடு, அவர்களையும்சுட வேண்டியிருந்தது. இடையில் வேறு எதிரிகள் எங்கிருந்தாவது வருதற்குள் போராட்டத்தை அவசரமாகவும் முடிக்க வேண்டியிருந்தது.
கான்ஸ்டபிளின் கை பதறாமலிருந்திருந்தால் தான்பிரீனை ஒரு கணத்தில் சுட்டுக் கொன்றிருக்க முடியும். தான்பிரீன் விரைவாக ரிவால்வரை அவன் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தான். தனக்கு சாவுமணி அடித்து விட்டதென்று அஞ்சி அவன் அவ்விடத்திலிருந்து குதிரைபோல் துள்ளி ஓடிவிட்டான். சார்ஜெண்டுக்கு பலமான காயங்கள் ஏற்பட்டன. அவனும் தரைமேல் வீழ்ந்தான். தான்பிரீன் ரெய்லியை விடாது சுடவேண்டுமென்று பார்த்தான். ஆனால் அவனுடைய கண்களில் இரத்தம் வழிந்து பார்வை தெரியாமல் போய்விட்டது. இதற்குள் நண்பர்கள் ஹோகனை ஸ்டேஷனுக்கு வெளியே செளகரியமான ஓரிடத்திலே கொண்டு சேர்த்தனர்.
இறந்த கான்ஸ்டபிளையும் இறந்து கொண்டிருந்த சார்ஜென்டையும் தவிர அங்கு வேறு எதிரிகள் இல்லை. ஆதலால் தான்பிரீன் விரைவாகச் சென்று ஸ்டேஷன் வாயிலை அடைந்தான். மக்கள் திகைப்படைந்து ரயிலிலிருந்து கீழே குதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எஞ்சின் ஓட்டிக்குக் கூட சண்டை நடந்தது தெரியாது. எங்கோ குண்டோசை கேட்பதாக அவன் எண்னிக் கொண்டான்.
அன்றிரவு இறந்து போன என்ரைட்டின் உடலும், காயம்பட்ட சார்ஜென்டும் ரயிலில் கில்மல்லக் என்ற ஊருக்குக் கொண்டு போகப்பட்டதில் சார்ஜென்டும் மறுநாள் மாலை இறந்துபோனான். பின்னால் மரண விசாரணையில் ரெய்லி வாக்குமூலம் கொடுத்தான். அவன் வாக்கு மூலத்தை ஒருவரும் நம்பவில்லை. இந்த மரண விசாரணையின் முக்கிய அம்சம் என்னவெனில், ஜூரர்கள் கொலை என்று தீர்ப்புக்கூற மறுத்துவிட்டதேயாகும். கெளரவமான மனிதர்களை அரசாங்கம் கைது செய்ததும், மக்களுக்கு ஆத்திரமூட்டியதும், தக்க பந்தோபஸ்தில்லாமல் போலிஸாரை அனுப்பி வைத்ததும் குற்றமென்று அவர்கள் கூறினார்கள் அத்துடன் புரட்சிக்காரர்களுக்கு இறந்து போன போலிஸாரிடம் பகைமை இல்லை என்பதையும், போலிஸார் தங்கள் கடைமையை மறந்து துப்பறிந்து கூறும் உளவாளிகளாக நடந்தும், பட்டாளத்தில் வேலைகளைத் தாங்களே செய்தும் வந்ததால் இம்மாதிரிச்சண்டைகள் நடந்தன என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்!
நாக்லாங் சம்பவத்தைப் பற்றிப் பலர் பலவாறு கூறி வந்தனர். பாதிரிமார்களும், பத்திரிகைக்காரர்களும் வழக்கம்போல் அதைக் கண்டித்து ஓலமிட்டனர். ஆனால் இதே ஆசாமிகள்தான் பின்னால் 'வீரர்கள் வாங்கித் தந்த சுயராஜ்யம்' என்று அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.
11
பின் நிகழ்ச்சிகள்.
* * *
மற்ற விஷயங்களைக் கவனிப்பதற்கு முன்னால் ஸீன் ஹோகன், பிலர்கள் கையில் அடைந்த துன்பங்களைச் சிறிது பார்ப்போம்.
பால்லாக் நகரில் நடனக் கச்சேரி முடிந்ததும், அதிகாலையில் ஸீன் ஹேகன் ஆன்பிக்டில் இருந்த மீகர் குடும்பத்தார் வசித்து வந்த வீட்டுக்குக் சென்றான். அவனுடன் பிரிஜிட் என்னும் பெண்ணும் துணையகச் சென்றாள். அவள் மீகருடைய உறவினள். அவளுடைய சொந்த வீட்டி வீட்டில்ன் டிரீஸி, தான்பிரீன் முதலியோர் அன்றிரவு படுத்திருந்தனர்.
ஹோகன் காலையுனைவு சாப்பிட உட்கார்ந்தான். உணவை மறந்து அப்படியே கண்ணயர்ந்த மேசையின் மேல் சாய்ந்து விட்டான். ஐந்து நாள் இரவு தொடர்ந்து தூக்கம் விழித்த களைப்பு அவனைக் கீழே உருட்டிவிட்டது. பின்னர் ஒருவாரு மீண்டும் கண்னை விழித்துக் கொஞ்சம் உணவு அருந்திவிட்டு அவன் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்து உறங்க ஆரம்பித்தான். அவனுடைய ரிவால்வரும் இடுப்பில் கட்டும் கச்சை வாரும் பக்கத்திலே கழற்றி வைக்கப்பட்டிருந்தன. மீகரும் அவருடைய இரண்டு பெண்களும் பால் கறப்பதற்காகத் தொழுவத்திற்குச் சென்றனர்.
'போலீஸார் வீதியில் வருகிறார்கள், வருகிறார்கள்!' என்று திடீரென்று சத்தம் கேட்டது. ஹோகன் திடுக்கிட்டெழுந்து கச்சையை இறுகக்கட்டி ரிவால்வரை எடுத்துக்கொண்டு வாயிற்படிக்குச் சென்றான்.
போலிஸார் வெகுதூரத்தில் வரும்போழுது யாரோ ஓடிவந்து தகவல் கொடுத்துவிட்டதால், ஹோகன்தப்பி ஓடுவதற்குப் போதுமான நேரம் இருந்தது. அவன் வீட்டிலிருந்தே வெளியில் எட்டிப் பார்த்தான். போலிஸார் தென்படவில்லை. உடனே அவன் வெளியேறி, போலிஸார் வடபக்கத்திலிருந்து வருவதாக எண்ணிக்கொண்டு தென்புறம் திரும்பி வயல்களில் குதித்து ஒடலானான். வீதி மேட்டிலிருந்ததால், அங்கிருந்து பார்த்தால் வயல்களில் நடப்பது நன்றாகத் தெரியும். வீதியில் ஆறு போலிஸ்காரர் நின்று கொண்டு ஹோகன் ஓடிவருவதைக் கவனித்தனர். அவன் அதிவேகமாய் வயல்களைத் தாண்டி அவர்கள் நின்ற இடத்திற்கே போய் மேட்டில் ஏறிவிட்டான் போலிஸ்கார்கள் உடனே அவனைப் பிடித்துக் கொண்டனர். ஹோகன் தனக்கு மேற்கொண்டு அபாய மில்லை என்று கருதியிருந்ததால் ரிவால்வரை இடுப்பில் மாட்டியிருந்தான். ஆதலால் அதை உடனே எடுக்க முடியவில்லை.
உடனே அவனுக்கு விலங்கிடப்பட்டது; அவனுடைய ரிவால்வர் பறிக்கப்பட்டது. போலிஸார் அவனை மீகருடைய வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கே அதற்கு முன்னால் சென்று வீட்டைச் சோதனை போட்டுக் கொண்டிருந்த பல போலிஸார் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அங்கு கூடியிருந்த போலிஸார் அனைவருக்கும் தங்களிடம் கைதியாக அகப்பட்டிருந்த பேர்வழி யார் என்பதே தெரியவில்லை. அவன் பெயர் என்ன என்று கேட்டார்கள். ஹோகன் பீலர்களை மதித்துப் பதில் சொல்வது வழக்கமில்லை. பீலர்கள் அவனை வெளியே கொண்டு செல்லும்போது அவனுடைய தோழி பிரிஜிட் அவ்விடத்திற்கு ஓடிவந்து, 'ஸீன் போய்வா! வந்தனம்! என்று கூறினான். அப்பொழுதுதான் போலிஸாருக்கு அவனுடைய பாதிப் பெயர் தெரிய வந்தது!
அந்தப் போலிஸ் கூட்டத்திற்கு சார்ஜென்டு வாலஸ்தான் தலைமை வகித்திருந்தான். கான்ஸ்டபிள் ரெய்லியும் அவனுடன் இருந்தான். கடையில் போலிஸார் ஹோகனை தர்லஸ் போலிஸ் நிலையத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்ந்தனர். அங்கு ஒரு போலிஸ்காரன் ஹோகனைப் பார்த்தவுடன், அவன் ஸோலோ ஹெட்பக் கொலைகள் சம்பந்தமாகப் பிடிபட வேண்டியவர்களில் ஒருவன் என்பதைக் கண்டுபிடித்து விட்டான்!
பிலர்கள் ஹோகனைப் பலவிதமாகத் துன்புறுத்தினார்கள். கைகளாலும் தடிகளாலும் அடித்தார்கள். அடிமேல் அடிவிழுந்ததும், அவன் வாய் திறந்து ஒரு வார்த்தைகூடச்சொல்லவில்லை. ஒரு போலிஸ்காரன் தான்பிரீனும், டிரீஸியும் கைது செய்யப்பட்டிருப்பதாயும் அவர்கள் உள்ளதையெல்லாம் ஒளிக்காமல் சொல்லி விட்டதாயும் தெரிவித்தான். அவனும் உள்ளதைச் சொன்னால் தூக்கிலிடப்படாமல் லண்டனுக்குத் தப்பிப்போக வழி உண்டு என்பதையும் அவன் குறிப்பாக எடுத்துக்காட்டினான். ஸின் ஹோகன் போலிஸ்காரர்களின் வார்த்தைகளை நம்புவானா? அவனுடைய நண்பர்கள் உயிரை இழப்பினும் , மானத்தையும், கொள்கைகளையும் இழக்க மாட்டார்கள் என்பது அவனுக்கு வெகு நன்றாகத்தெரியும். ஆதலால் அவன் முற்றிலும் மெளனமாக இருந்துவிட்டான். போலிஸார் மேலும் பயமுறுத்தினார்கள், அடித்தார்கள், ஏசினார்கள், ஏமாற்றிப் பார்த்தார்கள், ஒன்றும் பயன்படவில்லை. பின்னால் 13ஆம் தேதி அவனைக் கார்க் ஜெயிலுக்குக் கொண்டிபோகையில்தான் ரயிலில் தோழர்கள் வந்து அவனை விடுதலை செய்தனர்.
வழியில் சார்ஜென்ட் வாலஸ் அடிக்கடி, 'தான்பிரீன் எங்கே? எங்கே?, என்று கேட்டு, ஒவ்வொரு கேள்வி கேட்கும் போதும் அவனைக் கத்தி முனையால் குத்தி வந்தானாம். ஹோகனுடைய உடம்பிலிருந்த புண்களே போலிஸாரின் திருவிளையாடல்களை எடுத்துக்காட்டின. ஆனால் சார்ஜென்ட் வாலஸ் மேற்கொண்டு உயர்ந்த உத்தியோகத்தைப் பெறமுடியாதபடி இவ்வுலகத்தை விட்டே புறப்பட நேர்ந்து விட்டது.
இனி, தான்பிரீன் முதலானவர்களைக் கவனிப்போம். கடைசியாக கான்ஸ்டபிள் ரெய்லி ஓடிய பிறகு, தான்பிரீனும் நண்பர்களும் ஸ்டேஷனை விட்டு வெளியேறினார்கள். அவர்களுடைய உடம்புகளிலும் உடைகளிலும் ரத்தம் கொட்டுவதைக் கண்டு மக்கள் திடுக்கிட்டுப் பல இடங்களிலும் சிதறி ஓடி மறைந்தனர். அந்த ஸ்டேஷனில் இம்மாதிரியான சம்பவத்தை அவர்கள் முன்னர் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. ஒருவரும் புரட்சிக்காரரை நெருங்கவேயில்லை. புரட்சி வீரர்களையும் கைதியையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர்களிருந்தனர்.
தான்பிரீனால் நடக்கவே முடியவில்லை. அத்துடன் அவனுடைய ரிவால்வரில் குண்டுகளும் காலியாகிவிட்டன. அவன் பக்கத்தில் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். வெளியிலிருந்து ஸ்டேஷனைப் பார்த்து ஒரு மோட்டார் கார் வந்து கொண்டிருந்தது. உடனே அவன் வெற்று ரிவோல்வரை நீட்டி அதை வழிமறுத்தி நிறுத்தினான். அந்த நிலையில் அவனைக் கண்ணுற்ற யாரும் இரக்கப்படாமலிருக்கமுடியாது. அவனுடைய தலை 'கிர்.. கிர்..' என்று சுழன்று கொண்டிருந்தது; உடம்பெல்லாம் இரத்தம் வழிந்தது; வழியில் ஒரு சுவரில் முட்டித் தலையிலிருந்து கண்னை மறைத்து இரத்தம் பொழிந்து கொண்டிருந்தது. அவனுடைய கால்கள் தள்ளாடி வீழ்ந்ததால் அவன் ஒரு கையால் பூமியைத் தடவிக் கொண்டே உருளலானான். அவனைப் பார்த்த சில மக்கள் அலறிக் கொண்டு ஓடினார்கள். கடைசியாக ஒரு புண்ணியவான் ஓடி வந்து உதவி செய்யலானான். அவன் காக்கியுடை தரித்திருந்த அரசாங்கப் பட்டாளச் சிப்பாய்! தான்பிரீன் அவன் கைமீது சாய்ந்து கொண்டே வீதியில் நடக்கலானான். அவனுடைய மூளையும் கலங்கியிருந்தது. முடிவில் ரிவால்வரைக் காட்டி நிறுத்திய காரை உபயோகிக்க அவனுக்கு ஞாகபமில்லை. வழியில் மற்ற நண்பர்கள் வீதியோரமாகக் காத்திருந்தனர். அவர்கள் ஒரு கசாப்புக்கடைக்காரனுடைய கத்தியை வாங்கி ஹோகனுடைய கைவிலங்குகளை உடைந்தெறிந்னர். நான்கு தொண்டர்கள் அவனை மிகவும் பந்தோபஸ்தான இடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றனர்.
தான்பிரீன், டிரீஸி, ஈமன் ஓபிரியன், ஸ்கான்லன் ஆகிய நால்வரும் ஷனாகனுடைய வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். சுற்றிலும் மையிருட்டாக இருந்ததால் பாதை சரியாய்த் தெரியவில்லை. இடையில் சில வாலிபர்கள் அவர்ளுக்கு வழிகாட்டி உதவி செய்தனர்.
வீடு சேர்ந்ததும் தான்பிரீன் ஒரு படுக்கையில் படுக்கவைக்கப்பட்டால், அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு பாதிரியாரும் வைத்தியம் செய்யப் புகழ்பெற்ற ஒரு வைத்தியரும் அழைத்து வரப்பட்டார்கள். வைத்தியருடைய பெயர் டாக்டர் ஹென்னெஸ்ஸி. அவ்விருவரும் நோயாளி 24 மணி நேரத்திற்குமேல் ஜீவித்திருக்கமாட்டார் என்று அபிப்பிராயப்பட்டனர். ஏனென்றால் தான்பிரீனுடைய சுவாசப்பையில் குண்டு பாய்ந்து மறுபுறத்தால் வெளியே போயிருதது. அத்துடன் உடலிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியாகியிருந்தது. தான்பிரீன்தான் உயிரோடிக்கக்கூடிய 24 மணி நேரத்திலுமாவது அமைதியாய் இருப்புதற்கு வழியில்லையே என்று வருந்தினான்.
அவன் படுத்திருந்த ஷனாகனுடைய வீட்டைச்சுற்றிலும் கிளான்ஸி என்பவனுடைய தலைமையின் கீழ் ஒரு தொண்டர்படை காவலுக்காக வைக்கபட்டிருந்தது. வேறு பல தொண்டர்கள் ஊரைச் சுற்றியுள்ள வீதிகளில் நிறுத்தப் பட்டிருந்தனர். போலிஸாருடைய தலை எங்காவது காணப்பட்டால் உடனே, தகவல் கொடுப்பதற்கும், அவர்கள் வீட்டுப் பக்கம் நெருங்கினால் எதிர்த்து போராடுவதற்குமே தொண்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். தான்பிரீன் உயிரேடிருக்கும் வரை பகைவர்கள் அவனைத் தொட்டுவிடாமல் இருப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் தொண்டர்கள் செய்து வைத்திருந்தனர். இங்கே இந்நிலையிருக்க, நாக்லாங்கிலும் அதன் சுற்றுப்புறத்திலும் டுன், ஊலர், கால்பல்லி முதலான பல கிராமங்களிலும் நகரங்களிலும் ஏராளமான பட்டாளத்தார்களும் போலிஸ்கார்களும் கொண்டுவரப்பட்டனர். தென் திப்பெரரியிலும், கிழக்கு லிமெரிக்கிலும் வீடு வீடாய்ச் சோதனை போடப்பட்டது. புதியதாய் மண் போடப்பட்டிருந்த சவக்குழிகள் எல்லாம் தோண்டிப் பார்க்கப்பட்டன. ஏனென்றால் இரண்டு புரட்சிக்காரர்கள் படுகாயமடைந்ததாயும் அவர்கள், இறந்து போய்ப் புதைக்கப்பட்டிருப்பார்கள் என்றும் போலிஸாருக்குத் தகவல் கிடைத்ததாம்.
தான்பிரீன் அதிக நேரம் ஓய்வெடுத்துக்கொள்ள வழியில்லை. சில மணி நேரம் கழியும் முன்பே தொண்டர்கள் போலிஸார் அங்கு வருவதாகத் தெரிந்து கொண்டார்கள். உடனே அவர்கள் ஒரு மோட்டார் காரைக் கொண்டுவந்து அதில்தான்பிரீனை ஏற்று வைத்து கில்மல்லக் நகரத்தின் வழியாக ஓட்டிச் சென்றனர். வழியில் போலிஸாருடைய வீடுகளிருந்தன. அவற்றின் வழியாகவே கார் சென்றது. எப்படியாவது அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டியது அவசியமாயிருந்தது. கடைசியாக அவர்கள் மேற்கு லிமெரிக்கில் ஸீன்பின்னுடைய வீட்டையடைந்து அங்கு தான்பிரீனைச் செளகரியமாய்ப் படுக்கவைத்தனர். ஸீன் பின் அவனுடைய பழைய நண்பன். ஆதலால் அவனையும் அவன் தோழர்களையும் மிக்க அன்புடன் உபசரித்து வந்தான். பக்கத்திலிருந்து மற்றக் குடும்பத்தார்களும் அவர்களை அடிக்கடி வந்து பார்த்து வேண்டும். உதவிகள் செய்து வந்தார்கள்.
அங்கு தான்பிரீன் வெகுநாள் அமைதியாயிருக்க முடியவில்லை. பகைவர்கள் அவனைப் பற்றித் துப்பறிந்து நாலு பக்கத்திலும் நெருங்கி வந்து கெண்டிருந்தனர். தொண்டர்களில் பலர் தாங்களும் பல இடங்களிலிருந்து எதிரிகளைப் பற்றிய ரகசியங்களை அறிந்து வந்தனர். தான்பிரீன் அங்கிருந்து கெர்ரிக்குக் கொண்டுசெல்லப்பட்டான். அங்கு போன பின்பு வெகுவிரைவாகக் குணமடைந்து வந்தான். அவன் அடைந்த காயங்களால் இறந்தே தீரவேண்டும் என்பது இயற்கை வழியாகக் காணப்பட்டபோதிலும், அவன் பிடிவாதமாக இறக்க மறுத்து உயிர் வாழ்ந்து வந்தான். கெர்ரியிலிருக்கும் பொழுது அவன் சிறிது தூரம் நடக்கவும் முடிந்தது.
துன்பங்களின் நடுவே தான்பிரீனுக்கும் மற்றத் தோழர்களுக்கும் ஒரு பெரிய இன்பம் மட்டும் எப்பொழுதும் இருந்துவந்தது. எத்தனையோ துயரங்களின் நடுவிலும் அவர்களுடைய ஆருயிர் நண்பன் ஸீன் டிரீஸி வேடிக்கையாகப் பேசி அவர்களுடைய கவலைகளை மாற்றிச் சந்தோசப்படுத்தி வந்தான். நாக்லாங்கில் டிரீஸியில் வாயில் குண்டு பட்டதால், அவன் வெகுநாள் துன்பப்பட தேர்ந்துது. தான்பிரீனோ சுவாசப்பையிலும் உடம்பிலும் குண்டு பட்டுக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். டிரீஸி ஒருநாள் அவனைப் பார்த்து, நண்பா உன்னுடைய தலையை எனக்குக் கொஞ்சநாள் இரவல் கொடுத்து வாங்குவாயா என் வாய் புண்ணாயிருப்பதால் சாப்பிட முடியவில்லை. நம்வாய்களை மாற்றிக் கொள்வது நலம் என்று கூறினான். யாவரும் கொல்லென்று சிரித்தனர். மற்றொரு நாள் இரவில் அவர்கள் கல்வென் வழியாகத் திப்பெரிக்குச் சைக்கிள்களிற் சென்று கொண்டிருந்தனர். அந்தப் பிரதேசம் முழுவதும் ராணுவச் சட்டம் அமுலில் இருந்ததால் பட்டாளத்தார் எங்கும் திரிந்துக்கொண்டிருந்தானர். ஆதலால் அனைவரும் அதிக வேகமாய் சைக்கிள்களை ஓட்டிக்கொண்டு சென்றனர். அந்நிலையில் டிரீஸி 'ஒரு குண்டுசி வேண்டும் கழுத்தில் கட்டியுள்ள 'டை' காற்றில் பறக்கிறது. அதைச்சட்டையோடு சேர்த்துக் குத்துவதற்கு யாரிடமாவது ஒரு குண்டுசி இரக்குமா?’ என்று கேட்டான். கொஞ்சம் கூடப் பயமில்லாமல் நடு வீதியில் அவன் எல்லோரையும் நிறுத்தி விட்டதற்காக நண்பர் நண்பர்கள் வருத்தப்பட்டனர். ஆயினும் டிரீஸியின் கவலையற்ற இன்பகரமான தமாஷை யாவரும் அதுபவித்ததிலும் குறைவில்லை! இதுபோல் டிரீஸி தாடி தீப்பற்றி எரியும்போது பிடிக்கு நெருப்புக் கேட்பது வெகு நாள் பழக்கமாய்ப் போய்விட்டது.
கெரியில் தான்பிரீன் முதலானவர்கள் அடிக்கடி பத்திரிகை படிப்பது வழக்கம். அவற்றில் நாக்லாங் சம்பவத்தைப் பற்றிப் பலபொய்யும் புளுகுகளும் புனைந்துரைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் தொண்டர்களுடைய செயலைக் கண்டித்து அறிக்கைகளும் அபிப்பிராயங்களும் வெளிவந்தன. அரசர் பெருமான் தம்மிடம் கூலிக்கு வேலைபார்த்து நாக்லாங்கில் உயிர் கொடுத்தவர்களுடைய பந்துக்களுக்கும் ஐரீஷ் வைசிராய்க்கும் அனுதாபச் செய்தி அனுப்பியிருந்தார்.
கெர்ரியிலிருந்து தொண்டர்கள் ஷன்னான் நதிக்கரையின் வழியாக லிமெரிக் பகுதிக்குத் திரும்பினார்கள். அங்கு தினசரி ஆற்றில் முழுகுவதும் ஒய்வெடுத்துக் கொள்வதும் பழைய விஷயங்களையும் புதிய விஷயங்களையும் பற்றிச் சிந்திப்பதுமாகப் பொழுதைப் போக்கி வந்தனர். அவர்களுடைய காயங்களும் விரைவாகக் குணமடைந்து வந்தன. சும்மாயிருக்கும் நேரங்களில் அவர்கள் பிடித்து வந்த மீனுக்கு அளவேயில்லை. சுற்றிலும் ரகசியப் போலிஸ், கடியடிப் போலிஸ், பீரங்கிப் பட்டாளம், பற்பல அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து, அவர்களைப் பிடிப்பதற்காக எள்ளிருக்கும் இடத்தையும் விடாது தேடிக்கொண்டிருந்தனர். அந்த வேளையில் அவர்கள் ஸ்நானமும் பானமும் தவறாமல் மிக்க மனஅமைதியுடன் மீன் பிடித்து மகிழ்ந்து வந்தனர்!
12
பாதிரி வேஷம்
* * *
தொண்டர்கள் மேற்கு லிமெரிக்கில் இருக்கும்போது போலிஸாரும் பட்டாளத்தாரும் அவர்களைப் பிடிக்க எத்தனையோ முயற்சிகள் செய்துகொண்டிருந்தனர். அந்தப் பிரதேசம் முழுவதையும் வளைத்துக்கொண்டு, வீடு வீடாகச் சோதனை செய்து வந்தார்கள். தொண்டர்களைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ஏராளமான பொன் பரிசளிப்பதாக நடெங்கும் பறைசாற்றப்பட்டு வந்தது. அவர்களுடைய அங்க அடையாளங்களை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது.
1919ஆம் ஆண்டு கோடை காலத்தில் பிரிட்டிஷ் கவண்மெண்டார் பழைய கிழட்டு ஐரிஷ் சிப்பாய்களையெல்லாம் ஒன்று சேர்த்து புதிய ரகசிய இலாகா அமைத்துப் பலப்படுத்திக் கொண்டனர். அடுத்த இரண்டு வருஷங்களில் அவர்கள் எத்தனை பேர் இந்த உத்தியோகம் பார்ப்பதற்காக உயிரை இழந்தார்கள் என்பதை அக்காலத்துப் பத்திரிகைகளைப் பார்த்தால் தெரியவரும். ஐரிஷ் தொண்டர்கள் தங்கள் தேசத்தாரேதங்களைக் காட்டிக்கொடுக்கும் நீசத் தொழிலைச் செய்வதற்கு முன் வந்ததைக் கண்டு சந்தித்த இடத்திலெல்லாம் அவர்களைப் பரலோகத்திற்கு அனுப்பி வந்தனர். அரசின் ரகசிய இலாகாவிலுள்ளவர்கள் தீவிரமாக எதையும் செய்யமுடியாதபடி அந்த இலாகாவையே முறித்து வந்தசர்கள்.
அக்காலத்தில் தெருப்புறங்களில் ரகசியப் போலிஸாருடைய பிரேதங்கள் அடிக்கடி கிடப்பது வழக்கம். அவற்றின் கழுத்துக்களிலே சீட்டுக்கள் கட்டப்பட்டிருக்கும். அச்சீட்டுக்களிலே ஐரிஷ் தொண்டர் படையினரால் தண்டிக்கப்பட்டவர்கள். ஒற்றர்களே எச்சரிக்கை என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஒற்றர்களா இல்லையா என்று சந்தேகப்படக்கூடிய நபர்களுக்கு மட்டும் உயிர்ப் பிச்சை கொடுத்தனுப்பி விடுவதே வழக்கம்.
கடைசியாகத் தொண்டார்கள் மீண்டும் ஷன்னான் நதியைத் தாண்டித் தென்திப்பெரரிக்குச் சென்றனர். அவர்களுக்குச் செலவுக்குப் பணம் இல்லாமல் கஷ்டமேற்பட்டது. பலர் பணம் கொடுக்கத் தயாராயிருப்பினும், அவர்களைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தொண்டர்கள் தங்களைப் போன்ற ஏழைகளுடைய வீடுகளிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தார்கள். பல்லாக் நகர வாசியான சம்ன் ஒ டிபிர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். அந்த நண்பருடைய வீட்டில் தான் முன்பு நடனக் கச்சேரி நடந்து, பின்னர் ஸீன் ஹோகன் வெளியேறும் போது கைது செய்ப்பட்டான்.
வெகு காலமாக மறைந்து திரிந்து கொண்டு, தீவிரமான காரியங்களைச் செய்வதற்கு வழியில்லாமல் பொழுதுபோவதைக் கண்டு தான்பிரீன் மனம் வருந்தினான். அவன் ஸோலோஹெட்பக்கிலும், நாக்லாங்கிலும் ஆரம்பித்துக் கொடுத்த காரியங்களைத் தேசத்தார் பின்பற்றி ஆங்காங்கே பெரும் போர் தொடுப்பார்கள் என்று நம்பியிருந்தான். சிற்சில இடங்களில் மட்டும் போலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டும், உதிரியான போலிஸாரிடமிருந்து ரிவால்வர்களும் துப்பாக்கிகளும் பறிக்கப்பட்டும் வந்ததே தவிர எங்கும் ஒரேயடியான வேலை நடக்கவில்லை. ஆதலால் மேலும் தீவிரமான காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று தான்பிரினும் தோழர்களும் முடிவு செய்தனர். டப்ளினுக்குப் போனால்தான் தொண்டர்படையின் நிலையும், தேசமக்களின் அபிப்பிராயமும் நன்கு புலப்படும் என்று அவர்கள் கருதினார்கள். அதன்படி ராபின்ஸனையும் ஹோகனையும் வடதிப்பெரரியில் விட்டு விட்டு தான்பிரீனும் டிரீஸியும் இரண்டு சைக்கிள்களை எடுத்துக்கொண்டு டப்ளினுக்குச் சென்றனர்.
டப்ளினில் அவர்கள் ஷனாகனுடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். ஷனாகன் அவர்களுடைய பழம்பெரும் தோழன். எந்தத் தொண்டர் டப்ளினுக்குச் சென்றாலும் அவருடைய வீட்டுக்குத்தான் செல்வது வழக்கம். தொண்டர் படையின் சேனாதிபதிக்கு உதவியாகக் கடிதப் போக்குவரத்தைக் கவனித்து வந்தமைக்கேல் காலின்ஸைக் கண்டு தான்பிரீனும் டிரீஸியும் பல சமயம் விவாதம் செய்தார்கள். டப்ளினில் தங்குவதற்கு அவர்களுக்கு வேண்டிய உதவி செய்வதாய் காலின்ஸ் வாக்களித்தார். அவ்வுறுதியைப் பெற்றுக் கொண்டு அவர்கள் ராபின்லனையும், ஹோகனையும் அழைத்துக்கொண்டு வருவதற்காக மீண்டும் நாட்டுப்புறம்சென்றனர்.
அச்சமயம் தான்பிரீன் ஒரு பாதிரியாரைப் போல வேஷம் போட்டுக்கொண்டிருந்தான். பல புரட்சிக்கார்கள் பாதிரிவேஷம் பூணுவது அக்கால வழக்கம். அயர்லாந்தில் போலிஸார் பாதிரிமார்களிடம் பணிவுடன் நடப்பார்கள். ஆனால் புரட்சிக்காரர் பலரும் பாதிரிகளைப் போல் மாறு வேஷம் தரித்து வருகிற விஷயம் அவர்களுக்குத் தெரியும். யாரை உண்மையான பாதிரி என்றும் யாரைப் போலிப் பாதிரி என்றும் நம்புவது? அவர்கள் ஒருவரையும் தடுத்துக் கேள்வி கேட்க விரும்பவில்லை. ஏனெனில் உண்மைப் பாதிரியை வழிமறித்தால் ஜனங்கள் மிகவும் கோபடைவார்கள். போலிப்பாதிரியை வழிமறித்தால் துப்பாக்கிக்குப் பலியாக நேரும்!
டப்ளினில் இருந்தபோது ஒருசமயம் தான்பிரீன் மேனுத் என்ற இடத்திற்குப்போக நேர்ந்தது. வழியில் அவனுடைய சைக்கிளில் ஒரு சக்கரத்தில் காற்று இறங்கி ரப்பர் சக்கரம் சிறிது கிழிந்தும் போய்விட்டது. அதை ஓட்டுவதற்கு ரப்பர் துண்டும் பசையும் தேவையாயிருந்தன. அவன் சைக்கிள் கடைக்குச் சென்று ஒட்டித்தரும்படி கேட்டான். சிலமணிநேரம் காத்திருந்தால்தான் முடியும் என்று கடைக்காரன் சொன்னான். பக்கத்தில் மேனுத் கலாசாலையிருப்ப தாயும், அங்கே இளம்பாதிரிமார்கள் படித்து வருவதாயும். அவர்களிடம் போனால் ஒட்டித்தருவார்கள் என்றும் தெரிவித்தான். போலிப் பாதிரியான தான்பிரின் உண்மைப் பாதிரியார்களின் முன் எப்படிப் போக முடியும் கடைக்காரனிடம் கோபப்பட்டுக் கொண்டு எங்கே செல்வதென்று தான்பிரீன் யோசித்தான். ஆபத்துக் காலத்தின் போலிஸாரே தனக்கு உதவி செய்வது வழக்கம் என்பது அவன் ஞாபகத்திற்கு வந்தது. உடனே பக்கத்திலிருந்த போலிஸ் நிலையத்திற்குச் சென்றான். அங்கு சென்றதும் காவலிலிருந்த போலிஸ்காான் முன்னால் ஓடிவந்து 'சலாம்' செய்தான். பாதிரியும் மிகுந்ததாாாள விந்தையுடன் ஆசிர்வதித்து, வந்த காரியத்தைக் கூறினான். உடனே பல போலிஸாரும் ஓடிவந்து சைக்கிள் சக்கிரத்தில் கிழிந்த இடத்தை ரப்பரை ஒட்டிக் காற்றடைத்துக் கொடுத்தனர். அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, பாதிரி, நிலையத்துள் சுவரில் ஒட்டப்பட்டிருந்த அச்சிட்ட அறிக்கைகளை ஜன்னல் வழியாகக் கவனித்துப் பார்த்தான். அவற்றில் ஒன்றில் பின்கண்டவாறு எழுதப்பட்டி ருந்தது:
போலிஸ் நிலையம்
1000 பவுண்டு இனாம்
அயர்லாந்தில் கொலை செய்த கொலைகாரன் தேவை!
டானியல் பிரீன் (தான்பிரீன்)
மூன்றாவது திப்பெரரித்தொண்டர் பட்டாளத்தின் தளகர்த்தர்
என்று அழைக்கப்படுகின்றவர்
வயது 27. உயரம் 5அடி 7 அங்குலம், சிறிது கபிலநிறம். கறுத்த மயிர் (முன்னால் நீண்டிருக்கும்). சாம்பல் நிறமான கண்கள், குட்டையான வளைந்த மூக்கு, தடித்த உருவம், கனம் சுமார் 12 ஸ்டோன் (168ராத்தல்). முற்றிலும் சவரம் செய்யப்பட்டிருக்கும் முகம், கோபமுள்ள 'புல்டாக்' தோற்றம், வேலை செய்து விட்டு வருகிற கருமான் போன்ற உருவம், தொப்பி நெற்றிவரை இழுத்து மாட்டப்பட்டிருக்கும்.
அவரைக் கைது செய்வதற்கு உதவியாகப் 'பொதுஊழிய இலாகா' வைச் சேராத எந்த நபராவது துப்புச்சொல்லும் பட்சத்தில் அவருக்கு மேற்படி பரிசு ஐரிஷ் அதிகாரிகளால் கொடுக்கப்படும். தகவலை எந்தப் போலிஸ் நிலையத்திலும் கொடுக்கலாம்.
அந்த அறிக்கையைப் படிக்கும் போது தான்பிரீன் சிறிதும் சிரிக்கவேயில்லை. உள்ளத்தில் தோன்றிய உவகையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான். பிறகு பீலர்கள் செய்த உதவிக்குப் பலமுறை வந்தனம் கூறிவிட்டு, மெதுவாக வெளியே வந்து கம்பி நீட்டினான்.
13
வைசிராயைக் குறிபார்த்தல்
* * *
நாக்லாங் சம்பவத்திலிருந்து அயர்லாந்தில் புரட்சிக்காரர்களுடைய போராட்டம் தீவிரமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் தொண்டர்கள் ஆயுதங்களைக்காகக் கொள்ளையிட்டனர். ஊர்காவலுக்காகச் செல்லும் போலிசார் ஆங்காங்கேதாக்கப்பட்டனர். டப்ளின் நகரிலிருந்த இரகசியப் போலிசார் திருடர்களையும், சூதாடிகளையும், சாதாரண கலகக்காரர்களையும் கண்டுபிடிப்பதை விட்டு, அரசியில்வாதிகளையும் புரட்சிக்காரர்களையும் பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் தங்களுடைய துப்பறியும் வேலைகளுக்காகப் பழைய திருடர்களையும், குற்றவாளிகளையும் கையாட்களாகச் சேர்த்துக் கொண்டனர். நள்ளிரவில் ஸின்பினர்களுடைய வீடுகளில் சோதனை போடவும், லின்பின் புத்தகங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் கொள்ளையிடவும் அவர்கள் பட்டாளததார் கூடச் சென்று உதவி புரிந்து வந்தார்கள். டப்ளின் நகரிலுள்ள மக்கள் அனைவருக்கும் அவர்களைத் தெரிந்திருந்த போதிலும், அவர்கள் அச்சமின்றி நடமாட முடிந்தது. ஒரு குற்றமும் செய்யாதவர்களும், வாழ்நாள் முழுவதும் துப்பாக்கியையே தொட்டறியாதவர்களுமான மக்களுடைய வீடுகளில் நாள் தவறாமல் சோதனைகள் போடப்பட்டன. இந்த அற்பக் கொடுமைகள் மக்களை அரசாங்கத்திற்கு விரோதமாய்த் தூண்டிவிட்டன. ஐரீஷ்மொழியில் பாடல்கள் எழுதி வைத்திருப்பது போன்ற அற்பக்காரியங்களுக்காகப் பல ஆடவர்களும், பெண்களும், பையன்களும், சிறுமிகளும்கூடச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தொண்டர்களால் இக்கொடுமைகளைச் சகித்திருக்க முடியவில்லை.
1919 ஆம் வருடக் கடைசியில் நிலைமை மாறிவிட்டது. முதன்மையான இரகசியப் போலிஸார் நடுத்தெருக்களில் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். சுட்ட தொண்டர்கள் பகைவர்களிடம் சிக்காமல் தப்பிவந்தனர். பிற்காலத்தில் இரகசியப் போலிஸ் வர்க்கத்தையே அழித்து விடவேண்டும் என்று தொண்டர்கள் உறுதி செய்தபின் அவ்வர்க்கத்தார் தங்கள் வீடுகளில் வசிக்கமுடியவில்லை. தெருக்களில் நடமாடவும் முடியவில்லை. கடைசியாக அவர்கள் அனைவரும் 'டப்ளின்மாளிகை' க்குள்ளேயே பதுங்கிக்கிடக்க நேர்ந்தது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதனால் ஆயுதந்தாங்கிய பட்டாளத்தாருடன் வருவதே வழக்கம். அவர்களில் பலர் வேலையை ராஜினாமா செய்தனர்; மற்றும் சிலர் புரட்சிக்காரர்களுடைய தொந்தரவுக்குத் தப்பி வாழமுடிந்தது; ஏனென்றால் அவர்கள் புரட்சிக்காரருடைய வழிக்கு வருவதில்லை என்று அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர். பின்னால் பல இரகசியப் போலீஸார் புரட்சிக்காரருடைய இரகசிய இலாகாவில் சேர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த அரசாங்க ஆவணங்களையும் தகவல்களையும் கொடுத்துப் பேருதவி செய்துவந்தனர்.
திப்பெரரியிலிருந்து வந்திருந்த தான்பிரீன் முதலான நால்வரும் டப்ளின் நகரில் நிலையாக இருப்பதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு நகரிலுள்ள சந்துக்கள், பொந்துக்கள் உட்பட எல்லாப் பகுதிகளும் நன்றாய்த் தெரிந்திருந்தன. எவ்விதமான மாறுவேஷமும் அணியாமல், நினைத்த இடமெல்லாம் சுற்றித் திரிந்தனர். டப்ளின் பெரிய நகராதலால், அவர்கள் சுயேச்சையாகத் திரியவும், நண்பர்களைச் சந்தித்து மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிக் கலந்து கொள்ளவும் வசதியாயிருந்தது. இரகசியப் போலிஸாரின் தொந்தரவைச் சகிக்கமுடியாமல் தான்பிரீன் கூட்டத்தார் ஒற்றர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று தீர்மானித்தனர். அவர்கள் சில ஒற்றர்களைச் சுட்டுத்தள்ளினார்கள்; மற்றும் சிலரைத் தாக்கித்துரத்தினார்கள். தங்களைத் தொடர்ந்து வந்தால், என்ன வெகுமதி கிடைக்கும் என்பதை அவர்கள் செய்கையில் காட்டினார்கள். பிறகு ஒற்றர்களுடைய இடையூறு குறைய ஆரம்பித்தது. திப்பெரரியிலிருந்து சில ஒற்றர்கள் டப்ளினுக்கு வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள்தான் ஸோலொஹெட்பக் ஆசாமிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும் என்பது அரசின் எண்ணம். அந்த ஒற்றர்கள் வந்த சில நாட்களுக்குள் பாடங்கற்றுவிட்டனர். அவர்கள் தான்பிரீன் கூட்டத்தாரைப் பின்பற்றிச் செல்வது தங்கள் உடம்புக்கு நல்லதில்லை என்று கண்டு கொண்டனர். குளிர்காய்வதற்கு, நெருப்போடு ஒட்டியிராமலும் வெகுதுரம் விலகிவிடாமலும் இருப்பது போல, அவர்கள் தொண்டர்களிடம் நடந்து கொண்டனர். சில சமயங்களில் அவர்கள் தொண்டர்களை வெகு சமீபத்தில் கண்டு விட்டாலும், காணாதது போல் வெகு விரைவாகச் சென்று விடுவார்கள்.
சிறிது காலத்திற்குப் பின் தான்பிரினும் அவன் தோழர்களும் போலிஸ்காரர்களையும் சிப்பாய்களையும் சுட்டுத் தள்ளி வந்ததைப் பற்றி நீண்ட விவாதங்கள் வெய்து வந்தனர். முடிவில் அது போதாதென்றும், வேறு சிலமுறைகளைக் கையாள வேண்டும் என்றும் தீர்மானித்தனர். பெரிய அதிகாரிகள் போலிலாரைத் தங்களுடைய வில்லுக்கேற்ற அம்புகளாக உபயோகித்து வந்ததால், எய்தவரை விட்டு அம்பை நோவதில் என்ன பயன்? சில போலிஸாரைச் சுட்டுத் தள்ளிவிட்டால் அதிகாரிகள் வேறு சிலரை நியமித்து விடுகிறார்கள். அதிகப் படிப்பில்லாத ஏழை மக்கள் ஏராளமாயிருக்கும் வரை தொப்பியும் சட்டையும் மாட்டி அவர்களைப் போலீஸ் வேலைக்கு நியமிப்பது எளிதாகவிருந்தது. மேலும், போலிஸாருடைய உயிர் பலிவாங்கப்படுவதை இங்கிலாந்து அதிகமாய்ப் பொருட்படுத்துவேயில்லை. எனவே பெரிய அதிகாரிகளை வதைத்தால் தான் இங்கிலாந்து கண்விழிக்கும் என்று புரட்சிக்காரர்கள் தீர்மானித்தார்கள். அரசாங்க தலைமை அதிகாரிகளைப் பழிவாங்கினால் தேசமெங்கும் தந்திகள் பறக்கும்; உலகமெங்கும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும்; சகல நாட்டார்களும் ஐரிஷ் அரசாங்கத்தில் ஏதோ கோளாறுகள் இருப்பதாகத் தெரிந்து கொள்வார்கள். ஆங்கில அதிகாரிகளும் ராஜதந்திரிகளும் துக்கமடைவார்கள். அயர்லாந்தில் ஆங்கில ஆட்சி ஒழுங்காக நடைபெறாமற் போகும். தொண்டர்கள் இவ்வாறு பலவிதமாக யோசனை செய்து, அயர்லாந்தின் வைசிராயான லார்ட் பிரெஞ்சைத் தாக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அம்முடிவைப் பலமுக்கியமான நண்பர்களுக்கு அறிவித்து அவர்களில் சிலரை உதவிக்கு வரும்படியாக அழைப்பனுப்பினர்.
லார்ட் பிரெஞ்சைச் சுடுவது சாமானியமான விஷயமில்லை. தரிசனம் கிடைப்பதே அரிது. அவர் வெளியே செல்லும் பொழுதுதெல்லாம் ஏராளமான பட்டாளத்தார் பாதுகாப்பிற்குச் செல்வது வழக்கம். அவர் எங்கு எப்பொழுது செல்லப்போகிறார் என்ற விஷயம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. முக்கியமான விஷேசங்களிலும் விழாக்களிலும் அவர் அடிக்கடி கலந்து கொள்வதில்லை. இக்காரணங்களினால் தான்பிரீன் கூட்டத்தார் அவர் சம்பந்தமாகத் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற முடியவில்லை. மூன்று மாத காலமாய் இரவு பகலாய் அவர்கள் திட்டங்கள் போட்டுப் பல இடங்களிலே அவரை எதிர்பர்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய இரகசிய தூதர்கள் ஓடி அலைந்து வைசிராய் செல்லுமிடங்களைப் பற்றி விசாரித்து அறிவித்து வந்தனர். 1919ஆம் வருடத்தின் கடைசி மூன்று மாதங்களிலும் தொண்டர்கள் 12 இடங்களில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் வைத்துக் கொண்டு காத்திருந்து ஏமாந்தனர். வைசிராய் வருகிற பாதையும் நேரமும் அவர்களுக்கு வெகு நன்றாய்த் தெரியும். எனினும் வைசிராய் அவர்கள் கையில் சிக்கவில்லை. ஏனென்றால் அவர் கடைசி நேரத்தில் முன்னால் போட்ட பிராயானத் திட்டங்களை அடியோடு மாற்றி விடுவார். தான் செல்ல வேண்டி இடங்களுககு மிகவும் காலதாமதமாய்ச் செல்வார்; அல்லது முன்னதாகவே சென்று விடுவார். அலலது போகாமலே நின்று விடுவார்.
வைசிராயைத் தாக்குவதற்காகச் செய்யப்பட்ட முதலாவது முயற்சியில் மைக்கேல் காவின்ஸும் தான்பிரீனும் இருந்தனர். அவ்வாறே கார்க் நகரத் தொண்டர் கடையின் தளகர்த்தாவான பாம் மக்கர் பெயின் என்பவரும் பன்முறை கூட இருந்து உதவி புரிந்தார். (அவர் அடுத்த வருஷம் கார்க் நகர சபைத் தலைவராக இருந்த பொழுது, போலிஸார் அவரை அவர் வீட்டில் வைத்தே கொலை செய்தார்கள்). நவம்பர் மாதம் 11-ம் தேதி யுத்த சமாதான தினத்தில் வைசிராய் கலந்து கொள்வதற்காக டிரினிட்டி கலாசாலையில் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தான்பிரீன் தனது தோழர்களுடன் கிரேட்டன் பாலத்தருகில் சென்று காத்துக் கொண்டிருந்தான். அந்தப்பாலம் வைசிராய் கலாசாலைக்குச் செல்லக்கூடிய பாதையில்தான் இருந்தது. தான்பிரீன் ஏராளமான வெடிகுண்டுகளைத் தோழர்களிடம் கொடுத்து வைத்திருந்தான். வைசிராயுடைய கார்வரவும் குண்டுகளை அதன்மேல் எறிந்து காரையே தவிடு பொடியாக்கி விடவேண்டும் என்று அவன் ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் வைசிராய் வரவில்லை. அவர்கள் குண்டுகளைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்ததுதான் மிச்சம்.
அக்காலத்தில் பத்திரிகைகளுக்கும்கூட வைசிராயின் சுற்றுப் பிரயானத்தைப் பற்றி உண்மையான விவரங்கள் கிடைப்பதில்லை. அதிகாரிகள் பொய்ச் செய்திகளையே பத்திரிகைகளுக்கு அறிவித்து வந்தனர். வைசிராயின் கடற்கரையிலிருக்கும் பொழுது, நாட்டுப்புறத்திவிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வரும் இதை நம்பாமல் தங்களுடைய இரகசிய இலாகாவின் உதவியால் உண்மையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொண்டிருந்தனர். 1919 டிசம்பர் மாதத்தில் வைசிராய் வடகடலில் ஓடம் விட்டு உல்லாசமாக வாழ்ந்து வருவதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஆனால் உண்மையில் அவர் ரோஸ்கம்மான் என்னுமிடத்தில் தமது நாட்டுப்புற மாளிகையில் வசித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்து அவர் டப்ளினிலுள்ள தமது வைசிராய் மாளிகைக்குத் திரும்பும் பொழுது பீனிக்ஸ் தோட்டத்திலேயே அவரைத் தாக்க வேண்டுமென்று முடிவு செய்யபட்டது. பீனிக்ஸ் தோட்டதிற்கு அருகே ஆஷ்டவுன் ரயில் நிலையத்தின் பக்கத்திலே அவருடைய காரை மறிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
14
ஆஷ்டவுனுக்குப் பின்னால்
* * *
ஆஷ்டவுனில் வைசிராயைச் சுட்டு வீழ்த்துவதற்காகச் செய்யப்பெற்ற போராட்டத்தைப் பற்றி முதல் அத்தியாயத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அப்போராட்டத்திற்குப் பிறகு காயமடைந்த தான்பிரீன் தோழர்களுடன் சைக்கிளில் விரைவாக வந்து டப்ளின் நகரத்தின் வடபாகத்தில் தங்கியிருந்தான். மற்ற நண்பர்களை பல இடங்களுக்குப் பிரித்து அனுப்பிவிட்டான். பிறகு பிப்ஸ்பரோ வீதியிலிருந்த திருமதி டுமி அம்மாளுடைய வீட்டில் அவன்தங்கி வைத்திய சிகிச்சை பெற்று வந்தான். ஜே. எம். ரியான் என்ற பெரிய வைத்தியரும், மேட்டர் ஆஸ்பத்திரியிலிருந்து மற்றொரு வைத்தியரும் அடிக்கடி அவனைக் கவனித்து வந்தனர். டுமியின் அன்புக்கு அளவேயில்லை. அவள், இமைகள் கண்ணைக் காப்பதுபோல, தான்பிரீனைக் காத்துவந்தாள். தான்பிரீன் படுத்த கட்டிலை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் மிகவும் தளர்ச்சியடைந்திருந்தான்.
ஆஷ்டவுன் சம்பவத்திற்குப் பின்னால் லார்ட் பிரெஞ்சைச் சுடுவதற்கு வேறு சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. அவர் பொது வாழ்க்கையிலிருந்து அடியோடு விலகி விட்டார். எந்த விசேஷத்திலும் அவர் பொது மக்கள் முன்னிலையில் தோன்றுவதில்லை; மாளிகைக்குள்ளேயே அடைந்து கொண்டு கிடந்தார். கடைசியாக அவர் சீமைக்குச் செல்லும் பொழுது கூட ஆயுதந்தாங்கிய வீரருடன் பல மோட்டார் கார்கள் வீதியின் இருபுறங்களிலும் பாதுகாப்புக்காகச் சென்றுகொண்டிருந்தன. பல்லாயிரம் சிப்பாய்கள் வழியெங்கும் அணிவகுத்து நின்றனர். கப்பலிலும் அவருக்குப் பந்தோபஸ்து அதிகம். சீமைக்குச் சென்ற பின்னும் அவரை ஆயுதந்தாங்கிய இரகசிய போலிசார் காத்து வந்தனர்.
டப்ளின் பத்திரிகைகளின் வாசகத்தைப் படிக்கும்பொழுதெல்லாம் தான்பிரீன் மனக் கொதிப்படைந்தான். அவை தொண்டர்களுடைய செய்கைகளை, முக்கியமாக ஆஷ்டவுன் போராட்டத்தை வெகு இழிவாகக் கண்டித்து வசை மாரி பொழிந்துவந்தன. அவற்றுள் 'ஐரிஷ் டைம்ஸ்' என்ற ஆங்கிலேயருடைய பத்திரிகை உள்று. அது தன் இனத்தாரையே ஆதரித்தெழுவது இயற்கை. 'பிரீமன்ஸ் ஜேர்னல்' என்ற பத்திரிகையை புரட்சிக்காரர்கள் கையில் எடுத்துப் பார்ப்பது கூடக்கிடையாது. ஆனால், ஐரிஷ் இன்டிப்பென்டென்ட் (ஐரிஷ் சுதந்தரம்) என்ற பத்திரிகை ஐரிஷ் மக்களின் பண உதவியால் அவர்களுடைய நன்மைக்காகவே நடத்தப்படுவதாய்ச் சொல்லப்பட்டு வந்தது. அப்பத்திரிகை ஆஷ்டவுன் போராட்டத்தைப் பற்றி எழுதும் பொழுது, 'கொலைகாரர்கள், கொடுங்குற்றம், அக்கிரமம், படுகொலை' முதலிய கடுமையான பதங்களை உபயோகத்திருந்தது. அவற்றைக் கண்ணுற்றவுடன் அப்பத்திரிகைக்கு ஒரு பாடம் கற்பித்து அதன்மூலம் மற்றப் பத்திரிகைகளும் திருந்தும்படி செய்ய வேண்டும் என்று தான்பிரீன் தீர்மானித்தான். அப்பொழுது அவன் படுத்த படுக்கையாக் கிடந்ததால், மற்ற நண்பர்கள் அவ்வேலையை மெற்கொண்டனர். தேசத்திற்காக மார்ட்டின் சாவேஜ் உயிர்நீத்து அவனுடைய சரீரத்தை அடக்கஞ் செய்வதற்கு முன்னாலேயே, இன்டிப்பென்டென்ட் அவனுடைய ஆன்மாவைப் பழித்துக் கூறியதற்குப் பழிவாங்க வேண்டும் என்று அவர்கள் துணிந்தனர். அப்பத்திரிகையின் ஆசிரியரைச் சுட்டுத்தள்ளிவிடலாமா என்று யோசித்தனர். பின்னர் அது வேண்டாம் என்றும் பத்திரிகையைக் கொஞ்சம் அடக்கிவைத்தாலே போதும் என்றும் முடிவுசெய்தனர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு பீடர் கிளான்ஸியின் தலைமையில், சுமார் முப்பது தொண்டர்கள் இன்டிப்பென்டென்ட் காரியாலயத்தை நோக்கிச் சென்றனர். அங்கு சென்றதும் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களையும் எழுது வினைஞர்களையும் எழுந்து விலகி நிற்கும்படி உத்தரவிட்டார்கள். துப்பாக்கிகளைக் கண்டதும் எல்லோரும் வாய்பேசாது உத்தரவுக்குப் பணிந்து நின்றனர். ஆசிரியருக்கும் அதேகதிதான் நேர்ந்தது. தொண்டர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த அச்சு யந்திரங்களையும் எழுத்துக்கோர்க்கும் யந்திரங்களையும் தகர்த்தெறிந்தனர். மறுநாள் முதல் பத்திரிகை நடக்காமல் இருப்பதற்கு எவ்வளவு இடையூறு செய்யவேண்டுமோ அவ்வளவையும் செய்துவிட்டு, அவர்கள் வெளியேறிச்சென்றனர். ஆனால் மறுநாள் பத்திரிகை வெளிவந்து விட்டது. அதன் ஆசிரியர் வேறு அச்சுக்கூடங்களின் உதவியால் அதை வெளியிட ஏற்பாடுகளைச் செய்தார். 'இன்டிப்பென்டென்ட்' பத்திரிகாலயத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களில் பலர் புரட்சிப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களைச் சேர்ந்த தொண்டர்கள் வந்தவுடன் அவர்களோடு ஒத்துழைப்பதுபோல், எதிர்க்காமல் பேசாதிருந்துவிட்டனர். எனினும் ஆசிரியர் அவர்களின் யாரையும் வேலையில் இருந்து நீக்கவில்லை.
'இன்டிப்பென்டென்ட்' தாக்கப்பட்டதிலிருந்து மற்றப் பத்திரிகைகளெல்லாம் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டன. அதன்பிறகு டப்ளின் பத்திரிகை எதுவும் தொண்டர்களுடைய செய்கைகளைப் பற்றி அவதூறாக எழுதுவதில்லை. 'இன்டிப்பென்டென்ட்' பத்திரிகை கூட நாளடைவில் மாறுதலடைந்து, பிற்காலத்தில் பிரிட்டிஷார் செய்த கொடுமைகளையெல்லாம் கண்டித்து வந்தது.
மார்ட்டின் லாவேஜினுடைய பிரேத விசாரணைக்குப் பிறகு சரீரம் அவன் உறவினரிடம் கொடுக்கப்பட்டது. டப்ளினிலிருந்த மர்தாகோயில்களின் அதிகாரிகள் அப்பிரேதத்தைத் தங்கள் இடுகாடுகளில் புதைக்கக்கூடாது என்று தடுத்துவிட்டனர். பின்னர் அச்சடலம் பல்லிஸொடேர் என்னும் இடத்திற்குக் கொண்டு போகப்பட்டது. அதுதான் ஸாவேஜின் ஊர். அங்கு மக்கள் பிரேதத்தைத் தொடர்ந்து பலமைல் நீளமுள்ள ஊர்வலமாகச் சென்றனர். அவ்வூர்ப் பாதிரியார் சவக்குழியின் பக்கத்தில் நின்று கடைசிப் பிரார்த்தனையைக் கூறினார். அப்பொழுது பல ஐரிஷ் கான்ஸ்டபிள்கள் உருவிய கத்தியும், நீட்டியதுப்பாக்கியுமாகக் குழியைச் சுற்றி நின்றனர். கலவரமேற்படாமல் பாதுகாப்பதற்காகவே அவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர்.
சில நாட்களுக்குப் பின்னால் தான்பிரீன் டூமி அம்மையாரின் வீட்டிலிருந்து புறப்பட்டு கிரந்தான் தெருவில் 13ஆம் எண்ணுடைய வீட்டிற்குச் சென்று வசித்துவந்தான். அங்கு மலோனும், அவருடைய மனைவியும், இரண்டு பெண்களும் தங்கியிருந்தார்கள்.
மலோன் 1916ஆம் ஆண்டு ஈஸ்டர்கலகத்தின் போது போராட்டத்தில் தமது மகனை இழந்தவர். அதுமுதல் கணவனும், மனைவியும் இதர தொண்டர்களைத் தமது மகன் மைக்கேலைப் போலவே பாவித்து அன்புடன் ஆதரித்து வந்தனர். சிலநாட்கள் கழிந்தபின் தான்பிரீன் டிரீஸியையும் ஹோகனையும் அங்கு அழைத்து வந்து மலோன் குடும்பத்தாரை அறிமுகம் செய்துவைத்தான். மலோனின் பெண்களான பிரிஜிட்டும் எயினியும் பெண்களுடைய சுதந்திரச் சங்கத்தில் அங்கத்தினராக இருந்து தீவிரமாக வேலை செய்து வந்தார்கள். அவர்கள் தான்பிரீனுடைய தபால்களை விநியோகம் செய்வதற்கும் அங்கிருந்து திப்பெரரிக்கு அனுப்ப வேண்டிய வெடிமருந்தையும் துப்பாக்கியையும் கிங்ஸ் பிரிட்ஜ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய் ரயிலில் அனுப்புவதற்கும் மிக்க உதவியாயிருந்தனர். தான்பிரீன் தன் கையில் கிடைக்கும் சகல ஆயுதங்களையும் தோட்டாக்களையும் உடனுக்குடன் திப்பெரரிக்கு அனுப்பி விடுவது வழக்கம். அங்குள்ள சில வியாபாரிகளுடைய விலாசங்களுக்கே அவன் அனுப்புவான். வியாபாரிகளுக்குச் சாமான் வருகிற விபரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும். சர்க்கார் அந்தச்சாமான் பெட்டிகளைப் பற்றிச் சந்தேகமே கொள்வதில்லை.
100
15
மீண்டும் திப்பெரரி
* * *
1920ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தான்பிரீனுடைய காயம் குணமடைந்து வந்ததால் அவன் சென்ற ஆண்டின் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்தனை செய்யப் போதிய ஓய்விருந்தது.
ஸோலோஹெட்பக்கில் போடப்பட்ட வித்து முளைவிட்டு வளர்ந்து பலன் கொடுத்து வந்தது. புரட்சிக் காரியங்களைப் பற்றி மக்களும் தொண்டர்களும் நன்றாய்த் தெரிந்துகொள்வதற்கு அரசாங்க அறிக்கைகள் மிகவும் உதவி புரிந்தன. அயர்லாந்தில் செய்யப்பட்ட குற்றங்கள் என்று பிரிட்டிஷ் சர்க்கார்வெளியிட்ட அறிக்கைகளில் புரட்சிக்காரருடைய செய்கைகளே வர்ணிக்கப்பட்டிருந்தன. சர்க்கார் குற்றங்கள் என்று கூறிய பகுதிகள் தொண்டர்களுடைய சூரத்தனங்களை விவரித்தன.
இங்கிலாந்து வெளியிட்ட அறிக்கையில் தன்னுடைய பட்டாளங்களும் போலிஸும் செய்த குற்றங்களையும் கொடுமைகளையும் சிறிது கூட வெளியிடவில்லை. எத்தனை நிரபராதிகளுடைய வீடுகள் நள்ளிரவில் சோதனையிடப்பட்டன. ஒருபாவமும் அறியாத மக்கள் எத்தனைபேர் சிறையிடப்பட்டனர்! துன்புறுத்தப்பட்டனர் எத்தனை ஊர்களில் ராணுவச்சட்டம் அமுல் செய்யப்பட்டது. எத்தனை சங்கங்களும் கூட்டங்களும் சட்ட விரோதமானவை என்று கூறப்பட்டன. இவற்றையெல்லாம் சர்க்கார் உலகிற்கு அறிவிக்க வெட்கப்பட்டு மெளனமாக இருந்துவிட்டது. அயர்லாந்தின் உண்மைப் பிரதிநிதித்துவமுள்ள மாபெரும் சபையான டெயில் ஐரான் சட்டவிரோதமான சபை என்று விளம்பரப்படுத்தப்பட்டது! கெயிலிக் மொழி அபிவிருத்தி சங்கம், பெண்களின் தேசிய சங்கம், ஐரிஷ் தொண்டர்படை, ஐரிஷ் வாலிபச் சாரணர்படை முதலிய யாவும் சட்டவிரோதமான சபைகள் என்று விளம்பரப்படுத்தப்பட்டன. சுருக்கமாய்ச் சொன்னால் ஐரிஷ் தலைவர் ஆர்தர்கிரிபித் கூறியது போல் ஐரிஷ் ஜனசமுகம் முழுமையும் சட்டவிரோதமான கூட்டம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது!
மேற்சொல்லப்பட்டதில் இருந்து பிரிட்டிஷ் சர்க்கார் அயர்லாந்தில் சகல கொடுமைகளையும் செய்து தீர்த்துவிட்டதாக எண்ணிவிடவேண்டாம். மேலும் பல கொடுமைகளை அவர்கள் செய்யாமல் பாக்கி வைத்திருந்தனர். பின்னால் படிப்படியாக அவர்கள் எதற்கும்.துணிந்து முன்வந்து விட்டார்கள்.
1929ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தான்பிரீன் மலோனுடைய வீட்டிலிருக்கும் பொழுதெ முதலாவது ஊரடங்குச்சட்டம் அமுலுக்கு வந்தது. அவ்வருடம் பிப்ரவரி மாதம் ஒருநாள் நள்ளிரவில் ஒரு போலிஸ்காரன் ஐரிஷ் தொண்டர்களை எதிர்த்ததால் கிராட்டன் தெருவில் சுட்டுக்கொல்லப்படட்டான். உடனே பிரிட்டிஷார், பட்டாளத்தைத்தவிர வேறெந்த மக்களும் இரவு 12 மணிக்கும் காலை 5 மணிக்குமிடையில் வீட்டை விட்டு வெளியேறக் கூடாதென்று உத்தரவிட்டார்கள். சில மாதங்களில் அந்த உத்தரவு தென் அயர்லாந்திலுள்ள பல கிராமங்களிலும் நகரங்களிலும் அமுலுக்கு வந்துவிட்டது. அத்துடன் அது நாளுக்கு நாள்மிகக் கடுமையாகவும் செய்யப்பட்டது. லிமெரிக்கில் இரவு 7 மணிக்கு மேல் யாரும் வெளியேறக்கூடாது என்று உத்தரவுவிடப்பட்டது. கார்க் நகரில் கொஞ்சகாலத்திற்கு மாலை 4மணிக்கு மேல் உத்தரவு அமுலில் இருந்து, தெருக்களில் யார் சென்ற போதிலும் அதிகாரிகள் அவர்களைச் சட்டுத்தள்ளி வந்ததார்கள். இவ்வாறு 1920 - 21ல் நூற்றாண்டுக்கணக்கான ஆடவரும், பெண்டிரும் குழந்தைகளும் நடுத்தெருக்களில் படுகொலை செய்யப்பட்டனர். பட்டாளத்தார் செய்த அக்கிரமங்களை யாரும் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. ஏனெனில் கொலைகள் நடக்கும் பொழுது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.
1920 - ஆம் வருஷம் வசந்தகாலத்தில் தான்பிரீனுக்கு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்தது. எப்பொழுதும் சாரல் துளிகள் விழுந்து குளிர்ச்சியாயுள்ள தாரா மலைப்பிரதேசத்தில் அவன் சில நாள் தங்க நேர்ந்தது. மிக நெருக்கமான டப்ளின் நகரத்தின் கிராட்டன் தெருவில் வசித்ததற்கும் மலையடிவாரத்தில் வசித்ததற்கும் மிகுந்த வேற்றுமை இருந்தது. தாரா மலையிலுள்ள பசுந்தோட்டத்தில்தான் பழைய ஐரிஷ் அரசர்கள் வசந்தகாலத்தில் தங்குவது வழக்கம். தான்பிரீன் அங்கு சென்ற முதல்நாளே குன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் ஒரு மணி நேரம் நின்று சுற்றிலுமிருந்த இயற்கையின் வனப்பைக் கண்ணாரப் பருகிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் பழைய ஐரிஷ் வீரர்களைப் பற்றியும் சுதந்திரரத்துடன் கொலுவீற்றிருந்த வணங்காமுடி மன்னர்கள்களைப் பற்றியும், அயர்லாந்தில் தேசியக்கொடி பகைவர்களை வெற்றி கொண்டு ஆகாயத்தில் துலங்கிக் கொண்டிருந்ததைப் பற்றியும், பின்னால் அயர்லாந்தின் மக்கள் அடிமை விலங்குகளால் பிணைப்புண்டு கிடந்ததைப் பற்றியும் ஆகாயத்தில் வீசிய காற்றிலும் அடிமைத்தனத்தின் துர்நாற்றம் நாறியதைப் பற்றியும் அவன் உள்ளத்தில் அலை அலையாகப் பல எண்ணங்கள் எழுந்தன, அக்குன்றின் மேல் பழம் பெருமையைக் காட்டக்கூடிய ஒரு பொருளும் காணப்படவில்லை. மன்னர்கள் வசித்த அரண்மனைகள் மணல் மேடுகளாகிவிட்டன. எல்லாம் மறைந்தொழிந்து விட்டன. ஆனால், அயர்லாந்தை எதிர்த்து வெற்றி கொண்ட ஆங்கிலப் பகைவர்களின் சிப்பாய்கள் அவ்விடத்தி, போராடி இறந்ததற்கு அறிகுறியாக ஒரு சிலுவை மட்டும் நடப்பட்டிருந்தது. அவ்விடத்தில் 1898-ஆம் ஆண்டு அயர்லாந்தின் சுதந்திரத்தைக் காப்பதற்காக எத்தனையோ ஐரிஷ் வீரர்கள் பகைவர்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்தனர். அவர்களுக்கும் அச்சிலுவையே ஞாபகக் குறியாக விளங்கியது. தான்பிரீன் அவ்விடத்தில் முழங்காற் பணியிட்டுக் கொண்டு பழைய ஐரிஷ் வீரர்களுடைய கனவு நிறைவேற வேண்டும் என்றும், அதை விரைவில் நிறைவேற்றுவதற்குத் தனக்கு வலிமையும் வீரமும் பெருகவேண்டும் என்றும் இறைவனைத் துதித்தான்
மலையடிவாரத்தில் பழைய சிங்காரமான மாளிகைக்குப் பதிலாக நாட்டைப்பிடித்துக் கொண்ட அந்நியருடைய கோட்டைகளே காணப்பட்டன. அங்கு குடியானவர்களேயில்லை. இடையிடையே தொழிலாளர்களுடைய குடிசைகள் சில மைதானங்களின் மத்தியில் இருந்தன வீதிகளில் மக்களுடைய நடமாட்டமேயில்லை. அரசர்களுக்கும் குடியானவர்களுக்கும் பதிலாகக் கொழுத்த மாடுகளே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. அந்த மாடுகளும் ஆங்கிலேயரின் உணவுக்காக வளர்க்கப்பட்டவை!
கோடைகாலம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. தான்பிரீன் உடம்பு முற்றிலும் குணமாகி மீண்டும் வேலைக்குத் தயாவிட்டான். தேசத்தில் நெருக்கடி அதிகமாகிவிட்டது. பத்திரிகைகளில் மனம் பதறக்கூடிய பல செய்திகள் வெளிவந்தன. அச்சமயத்தில் அவன் போராட்டத்தின் மத்தியில் நில்லாது மலையடிவாரத்தில் பொழுது போக்கவிரும்பவில்லை. ஐந்தாறு மாதங்களுக்கு முன்னால் டப்ளினில் லார்ட் பிரெஞ்சைச் சுடுவதற்காகப் பலசமயம் தான்பிரீனுடன் காத்துக் கொண்டிருந்த கார்க் நகர மேயரான, டாம் மக்கர் டெயின் என்பவர் அவருடைய வீட்டிலேயே அவரது மனைவி, முன்னால் பிரிட்டிஷாரால் கொலைசெய்யப்பட்டார். தர்லஸ் நகரிலும் இதுபோல் இரண்டு மூன்று கொலைகள் செய்யப்பட்டன. இவற்றை கேட்ட பொழுது தான்பிரீனுடைய ரத்தம் கொதித்தது. போர்! போர்! என்று அவனுடைய உள்ளம் துடித்தது. உடனே டப்ளினுக்குச் சென்று, பல நண்பர்களையும் கண்டு மீண்டும் கெரில்லாச் சண்டையை ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். டிக் மக்கீ, பீட்டர் கிளான்ஸி முதலியோர் அவனை ஆதரித்தனர். ஆனால் டெயில் ஐரோனோ, தொண்டர் படையின் தலைமை அதிகாரிகளோ தான்பிரீனை ஆதரிக்கவில்லை. மைக்கேல் காலின்ஸ் மட்டும் கொஞ்சம் ஆதரவு காட்டினார்.
உண்மை என்னவென்றால் தலைவர்களுக்குத் தீவிரமான எந்த வேலையும் பிடிக்கவில்லை. தொண்டர்கள் தங்களுக்கும் அவர்களுக்கும் இருந்த வேற்றுமைகளைப் பகைவர்களுக்குத் தெரியும்படியாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
பொது மக்களும் யுத்தத்தை விரும்பவில்லை. 1918ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர்கள் கொடுத்த வாக்கினாலேயே குடியரசை ஏற்படுத்துவதற்கு முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். போலிஸாரைத் தாக்குவதால் சட்ட விரோத உத்தரவுகளும், கைது செய்வதும் மேலும் அதிகரிப்பதைக் கண்டு அவர்கள் அஞ்சினார்கள்.
தான்பிரீன் டப்ளினில் அதிக நாள் தங்க விரும்பவில்லை. விரைவாகத் திப்பெரரிக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். அங்கு தொண்டர்கள் எதற்கும் தயாரயிருந்தபோதிலும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு தலைவன் வழிகாட்ட வேண்டிய அவசியம் இருந்தது. ஆதலால் தான்பிரீனும் டிரீஸியும் நூறுமைல்கள் சைக்கிளில் பிரயாணம் செய்து திப்பெரரியையடைந்தனர். பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு தான்பிரீன் அப்பொழுதுதான் திப்பெரரியை மீண்டும் கண்ணுற்றான்.
16
புதிய போர்முறை
* * *
1920ஆம் வருஷம் ஆரம்பத்தில், அயர்லாந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நிச்சயமான போர் தொடுத்துவிட்டது என்பதை உலகத்திற்கு அறிவிப்பதற்காகத் தொண்டர்கள் புதிய போர்முறையைக் கைக்கொண்டனர். அவர்கள் போலிஸ்கார்கள் தங்கியிருந்த படைவீடுகளைத் தாக்கித் தேசம்முழுவதும் குழப்பத்தை உண்டாக்கி வந்தனர். அக்காலத்தில் பீலர்கள் ஊர்க்காவலுக்காகச் சுற்றுவதை அடியோடு நிறுத்திவிட்டனர். அவர்கள் வெளியே சென்றால் உயிருடன் திரும்புவது நிச்சயமில்லாமல் இருந்தது. அவர்கள் தங்கள் படைவீடுகளை விட்டு வெளியறேமுடியாமல் உள்ளே அடங்கிக் கிடந்தனர். தொண்டர்கள் பீலர்களைச் சந்தித்துப் போராட வழியில்லாமையால் அவர்களுடைய படைவீடுகளிலேயே போய்ச்சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். பட்டிகளிலும் சாலைப்புறங்களிலும் இருந்த படைவீடுகளையெல்லாம் காலிசெய்து பெரிய படைவீடுகளில் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தனர். தொண்டர்கள் தங்களை எளிதில் வெல்ல முடியாதபடி ஏராளமான ஆயுதங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டனர். வீடுகளுக்கு இரும்புக் கதவுகள் போட்டுக் கொண்டதுடன் சுற்றிலும் முட்கம்பி வேலிகளும் அமைத்துக் கொண்டனர். அந்தச் சமயத்தில் தொண்டர்களின் தீவிரமான போராட்டம் தேசம் முழுவதிலும் பரவியது. பிலர்கள் காலிசெய்த ஆயிரம் படைவீடுகள் ஒரே நாள் இரவில் அக்கினிக்கு இறையாக்கப்பட்டன. அவற்றைத் தொண்டர்கள் ஏன் எரித்தனர் என்றால் பின்னால் பட்டாளத்தாரும் பீலர்களும் அவற்றில் வந்து தங்க இடமில்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே. அந்தச் சமயத்தில் பீலர்கள் தாங்கள் போலிஸார் என்பதை அறவே மறந்து விட்டனர். போலிஸார் பொது மக்களைத் துன்புறுத்தாமல் அவர்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆனால் அடிமை நாடுகளில் போலிஸார் கடமைகளை கைவிட்டுத் தேசபக்தர்களை அந்நிய அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து உளவு சொல்வதையும், சுதந்திரக் கிளர்ச்சியை அடக்க ஆயுதந்தாங்கிய பட்டாளத்தாரைப்போல் சண்டை செய்வதையுமே கடமையாகக் கொண்டிருப்பார்கள். சுருங்கச் சொன்னால் ஐரிஷ் பீலர்கள் ஒற்றர்களாயிருந்தனர். அல்லது பட்டாளத்தாரைப்போல் யுத்தம் செய்துவந்தனர். எனவே மக்கள் அந்நிய அதிகாரிகளின் ராணுவத்தாரைப் பகைத்ததைக் காட்டிலும் தங்கள் கூடவேயிருந்து கொள்ளி வைக்கும் பீலர்களை மிக அதிகமாய்ப் பகைத்தனர். தொண்டர்களும் பீலர்களுடைய வம்சத்தைக் கருவறுத்துவிடவேண்டும் என்று முற்பட்டனர். பீலர்கள் எந்தெந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினார்களோ அங்கெல்லாம் தொண்டர்கள் தங்களுடைய போலிஸை நியமித்துக் கொண்டு திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் அடக்கி வந்தனர். எந்தப் பீலருக்கும் பயப்படாத கொள்ளைக்காரர்கள் தொண்டர்களுடைய போலிஸ் படைக்கு அடங்கி ஒடுங்கிக்கிடந்தனர்.
ஐரிஷ் போலிஸார் மக்களைத் திருடரிடமிருந்து பாதுகாக்கும் கடமையை கைவிட்டதோடு நிற்கவில்லை. தொண்டர் படையினர் களவு முதலான குற்றங்களைச் செய்தவர்களைக் கைது செய்தால் போலிஸார் அக்குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு, அவர்களைப் பிடித்த தொண்டர்களையே தண்டித்துச் சிறைகளில் போட்டு வந்தனர். அக்காலத்துப் பத்திரிகைகளில் இது சம்பந்தமான செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருந்தன. மீத்தலுகாவில் ஒரு முன்னாள் பிரிட்டிஷ் சிப்பாய் பயங்கரமான ஒரு கொலையைச் செய்து விட்டான். போலிஸார் அவனைக் கைது செய்து விசாரணையில்லாமலேயே விடுதலை செய்து விட்டனர். தொண்டர்கள் கையில் அவன் சிக்கிவிடாமல் தேசத்தைவிட்டு வெளியேறி விடும்படியும் அவர்கள் புத்தி சொல்லியும் அனுப்பினராம் ஆனால் அந்த ஆங்கில சிப்பாய் போலிஸாரிடமிருந்து விடுதலையடைந்து ஐந்து நிமிஷத்திற்குள் தொண்டர்களால் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டான்!
அதே சமயத்தில்தான் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தை அடக்குவதற்காகப் பிளாக் அன்டு டான் பட்டாளத்தார் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு இந்த விசித்திரமா பெயர் எப்படி வந்தது என்பதே ஒரு விசித்திரந்தான் 'பிளாக் அண்டு டான்' பட்டாளத்தார் எமதூதர்களுக்கு நிகரானவர்கள். 1920ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல ஐரிஷ்காரர்கள் போலிஸ் படையிலிருந்து விலகிவிட்டதால் அவர்களுக்குப் பதிலாக ஆங்கிலேயரைச் சேர்த்து அனுப்பும்படி ஸர் கமார் கிரீன்வுட் என்பவர் ஆங்கில அரசாங்கத்திற்கு யோசனை சொன்னார் கிரீன்வுட்டின் நோக்கம் ஆயிரக்கணக்கான புதியபட்டாளங்களைக் கொண்டு அயர்லாந்தில் சகிக்கமுடியாத கொடுமைகளைச் செய்து அடக்கி விடவேண்டும் என்பதே. புதிய பட்டாளத்தில் சேர அயர்லாந்தில் ஆள்கிடைக்கவில்லை. இங்கிலாந்திலும் யோக்கியமானவர்கள் அதில் சேர விரும்பவில்லை. ஆதலால் பிழைப்பில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த பல பழைய ஆங்கில சிப்பாய்களையும், தாழ்ந்த நிலையிலிருந்த வகுப்பினரையும் கிரீன்வுட் பட்டாளமாகச் சேர்த்தார். அந்தப்பட்டாளத்தில் பெரும்பாலும் குற்றவாளிகளும், கேடிகளும். பலமுறை சிறை சென்றவர்களுமே நிறைந்திருந்தனர். அவர்கள் அயர்லாந்திற்கு வந்தபோது அரசாங்கத்தாரால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே விதமான உடைகள் கொடுக்கப்படுவது வழக்கம். புதியதாய் வந்தவர்களுக்குக் கறுப்பு உடைகள் கொடுக்க வழியில்லாமையால் சர்க்கார் கைவசமிருந்த சில கறுப்பு உடைகளையும், கபில நிறமான உடைகளையும் கலந்து கொடுத்துவந்தனர். இதனால் புதிதாக வந்தவர்களிற் பலர் பலவிதமான உடை அணிய நேர்ந்தது. சிலர் கறுப்புத் தொப்பிகளையும் கறுப்புக் காற்சட்டைகளையும், கபிலச்சட்டைகளையும் அணிந்திருந்தனர். சட்டை ஒரு நிறம், குல்லா ஒரு நிறம், காற்சட்டை வேறு நிறம் இவ்வாறு கறுப்பும் கபிலமும் கலந்து ஆபாசமான பழைய உடைகளை அணிந்திருந்த பட்டாளத்தாரைக் கண்டவுடன், ஐரிஷ் மக்கள் நகைத்து ஏளனம் செய்தார்கள். மிகவும் சாமத்ர்தியசாலிகளாதலால் புதியபட்டாளத்திற்கு 'பிளாக் அன்டு டான்' என்று பெயர் வைத்தனர். ('பிளாக் அன்டு டான்' என்றால் கறுப்பும் கபிலமும் கலந்தது என்று பொருள்). அயர்லாந்தில் நாக்லாங்கைச் சுற்றியுள்ள ஜில்லாவில் கறுப்பும் கபிலமும் கலந்த நிறத்துடன் சில வேட்டை நாய்களுண்டு. அந்த நாய்கள் 'பிளாக் அன்டு டான்' என்று அழைக்கப்பட்டு வந்தன. மக்கள் அந்த நாய்களின் பெயரையே புதிய பட்டாளத்துற்கும் சூட்டினார்கள். புதிய பட்டாளத்தார் வெறிபிடித்த நாய்களிலும் கேடாக நடந்து கொண்டதால், அவர்களுக்கச் சூட்டிய பெயர் பல வழிகளிலும் பொருத்தமானதுதான்!
இனி போலிஸ் படைவீடுகள் தாக்கப்பட்டதைக் கவனிப்போம். முதல் முதலாகக் கால்ட்டீ மலைகளின் தென்பாகத்திலுள்ள அரக்லன் என்னுமிடத்தில் படைவீடுகள் தாக்கப்பட்டு அங்கேயிருந்த போலிஸார் தொண்டர்களால் பிடித்துக் கொள்ளப்பட்டனர். அந்த போராட்டத்தைத் தலைமை வகித்து நடத்தியவர் ஜெனரல் லியாம் லிஞ்ச் (அவர் மூன்று மணி நேரத்திற்குப் பின்னால் உள்நாட்டுக்கலகத்தில் கொல்லப்பட்ட வீரர்களுள் ஒருவர்.) லியாம் லிஞ்ச் பிறவியிலேயே தளகர்த்தா. ஒரு பெரிய பட்டாளத்தை அணிவகுத்து நிறுத்தயும், அடக்கவும், சாமர்த்தியமாய் நடத்தவும் அவர் வல்லமையுடையவர். அவரும் ஸீன் மோய்லன் என்ற மற்றொரு தளகர்த்தாவும் சேர்ந்து கொண்டு பிரிட்டி ஷார்திகைக்குப் படி அற்புதமான போராட்டங்கள் செய்திருக்கிறார்கள்:
ஸியாம் லிஞ்ச் ஆறு அடி உயரமும் கம்பீரமான தோற்றமும் உடையவர். அவருடைய கண்களில் காணப்பட்ட ஒளியே அவர் போர் வீரர் என்று அறிவுறித்தியது. அவர் குழந்தையைப் போல் திறந்த வெள்ளைச் சிந்தையுடையவர். ஆனால் போராட்டத்தில் காலனும் அஞ்சும்படியாக எதிரிகளைக் கலக்குவார். ஐரிஷ் தேசியப்படையின் ஒரு பெரும் பிரிவுக்கு அவரே தலைவராக இருந்ததார். 1919ஆம் ஆண்டு முதல் அவர் பிரிட்டிஷாரைப் பல இடங்களில் தாக்கியுள்ளார். அரக்லன் படை வீடுகளைப் பிடித்ததும் அவருடைய சாமர்த்தியமேயாகும்.
அரக்லனைத் தாக்கியதற்குப் பின்னால் மைக்கேல், பிரென்னன் கிளேர் என்ற இடத்தில் படைவீடுகளைத் தாக்கி, அங்கிருந்த ஆயுதங்களையெல்லாம் அபகரித்துக் கொண்டார். அங்கு கான்ஸ் டபிள் பக்லி என்பவன் முதலில் தொண்டர்களை எதிர்த்து நின்று, பின்னால் கீழ்ப்படிந்து விட்டான். (அவன் பிற்காலத்தில் நடந்த உள்நாட்டுக் கலகத்தில் கெர்ரி என்னுமிடத்தில் கைதியாயிருந்த பொழுது கொல்லப்பட்டான்.) தொண்டர்கள்.அடுத்தபடியாக ஏப்ரல் 18ஆம் தேதி பல்லிலண்டர்ஸ் படைவீடுகளை முற்றுகையிட்டுப் பிடித்துக் கொண்டனர். அவ்விடத்தில் மூன்று போலிஸாருக்குப் படுகாயம் எற்பட்டது. படைவீடுகள் முற்றிலும் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அங்கிருந்த போலிஸார் சகல ஆயுதங்களையும் தொண்டர்கள் தலைவராய் நின்ற ஸின்மலோனிடன் சமர்ப்பித்துவிட்டுச் சானாகதியடைந்தனர்.
தான்பிரீனும் திப்பெரரித் தொண்டர்படையை அழைத்துக்கொண்டு மூன்று இடங்களில் படைவீடுகளைத்தாக்கினான். முதலாவது அவனுக்குப் பணிந்தவை டிரங்கன் படைவீடுகள். அங்கு போராட்டம் நடந்தது ஜூன் 4ஆம் தேதியில்.
டிரங்கனில் நடந்த போராட்டம் முடிவடைய வெகுநேரம் பிடித்தது. அதில் கலந்து கொண்ட தொண்டர்படை அதிகாரிகள் தான்பிரீன், ஸின்டிரீஸி, லிமஸ் ராபின்ஸன், எர்னி ஒ மல்லி, ஸின்ஹோகன் ஆகியோர். விடியும்வரை இருபக்கத்தாருக்கும் அருஞ்சமர் நடந்தது. காலை இளஞ்சூரியனின் கிரணங்கள் வீசிய பின்னும் அவ்விடத்தில் தொண்டர்களுடைய துப்பாக்கிக் குண்டுகளும் வெடி குண்டுகளும் சடசடவென்று வெடிப்பது நிற்கவில்லை. சிறிது கோத்தில் பகைவர்கள் சுடுவதைத் திடீரென்று நிறுத்தி விட்டனர். ஒரு நிமிஷத்திற்குப் பின்பு ஒரு மூலையிலிருந்த ஜன்னல் வழியாகப் போலிஸார் குழல் ஊதினார்கள். அதைக்கேட்டுத் தொண்டர்கள் அவர்களை வெளியே வந்து நிற்கும்படி உத்தரவு போட்டார்கள். அவ்வாறே அவர்கள் வெளியே வந்து நின்று தங்கள் ஆயுதங்களைச் சமர்ப்பித்தனர். தொண்டர்கள் அவர்களைக் கைது செய்து கொண்டு மற்றப் பட்டாளங்கள் வெளியிலிருந்து உதவிக்கு வருமுன்னால், விரைவாக ஊரைவிட்டு வெளியேறி விட்டனர். ஊருக்கு வெளியே சென்றதும் அவர்கள் தங்களுடைய கைதிகளை மன்னித்து விடுதலை செய்தார்கள் அக்கைதிக்கூட்டத்தில் ஆறு கான்ஸ்டபிள்களும் இரண்டு சார்ஜன்டுகளும் இருந்தனர். தொண்டர்களில் ஒருவருக்குக் கூடக் காயமில்லை.
அதே இரவில் கப்பர் ஒயிட் படை வீடுகளும் வேறு தொண்டர்களால் தாக்கப்பட்டன. ஆனால் அங்கு போலிஸார் பணியவில்லை.
பத்திரிகைகளில் இவ்விஷயங்களைப் பற்றி உண்மையான விவரங்கள் வெளிவருவதேயில்லை. தொண்டர்கள் வெளிவந்து தாங்கள் செய்த வீரச்செயல்களை வெளியிட சூழ்நிலை பக்குவமாயில்லை. போராட்டத்தில் தப்பிப்பிழைத்த போலிஸாரே தங்களுக்கே தெரிந்த விஷயங்களை வெளியிட்டு வந்தனர். அவர்கள் தங்கள் இலாகாவுக்குக் கேவலம் ஏற்படாதவாறு, விருத்தாந்தங்களைத் திரித்தும், மாற்றியும், புதிதாய்ச் சிருஷ்டி செய்தும் கூறிவந்தார்கள் தாக்கிய தொண்டர்கள் 30பேர் என்றால் 300க்கு மேற்பட்டவர் வந்திருந்ததாக போலிஸார் கூறுவர். ஏனென்றால் 30பேருக்கு அவர்கள் தோற்றனர் என்பது கேவலமல்லவா மேலதிகாரிகள் இதைக் கேட்டு அவர்களைக் கண்டிக்கவும் கூடும். சில பத்திரிகை நிருபர்களுக்கு உண்மைச் செய்திகள் கிடைப்பினும் அவர்கள் சர்க்காருக்குக் கேவலத்தையுண்டாக்கும் விஷயங்களை வெளியிட அஞ்சினர். வெளியிட்டால் நள்ளிரவில் பிளாக் அண்டு டான் படையினர் அவர்களை வாட்டி வருத்துவர். அதனால் அவர்கள் செய்தி எழுதுகையில் 'தொண்டர்கள் காயமடைந்தனர்; சிலர் இறந்து வீழ்ந்தனர்' என்று குறிப்பிடுவது வழக்கம். ஆனால் உண்மையிலேயே சில தொண்டர்கள் இறந்திருக்கும் பொழுது, அவர்களுக்கு அவ்விஷயமே தெரியாது போய்விடும்!
அடுத்தாற் போல் தான்பிரீன் கூட்டத்தார் தாக்கிய இடம் ஹால்லி போர்டு. அது திப்பெரரித் தாலுகாவின் வடமேற்குப் பக்கத்திலுள்ளது. அங்கிருந்த போலிஸாரும் தொண்டர்களிடம் சரணாகதியடைந்து, ஆயுதங்களைப் பறிகொடுத்தனர். அங்கு அந்த போராட்டத்தில் தலைமை வகித்தவர்கள் டிரங்கனில் தலைமை வகித்த தொண்டர்படை அதிகாரிகளேயாவர்.
ரியர் கிராஸ் என்னுமிடம் அடுத்தாற்போல் தாக்கப்பட்டது. அங்கு போராட்டம் மிக உக்கிரமாக நடைபெற்றது. முடிவில் தொண்டர்கள் போலிஸாரை முடியடிக்காமலே திரும்ப நேர்ந்தது. இந்தப் போராட்டத்திற்குப் பல இடங்களிலிருந்து தொண்டர்கள் உதவிக்கு வந்திருந்தனர். ஸீன் டிரீஸியும், தான்பிரீனுமே தலைமை வகித்து நின்றார்கள். போலிஸாரும் உயிரை வெறுத்துத் தீவிரமாக போராடினார்கள். அவர்கள் எறிந்த வெடிகுண்டுகளின் சில்லுகள் ஒ மல்லி, ஜிம் கோர்மன், டிரீவி, தான்பிரீன் முதலியோரைச் சிறிது காயப்படுத்தின. தொண்டர்கள் படை விடுகளைத் தீ வைத்து எரித்தார்கள். பல பகைவர்கள் தீயில் வெந்தனர். இருவர் சுடப்பட்டு இறந்தனர்.
மே மாதம் 27-ஆம் தேதி கில்மல்லக் படை வீடுகள் தாக்கப்பட்டன. அந்தப் போராட்டம் மிகவும் புகழ் பெற்றது. தான்பிரீன் அதில் கலந்து கொள்ளவில்லை. ஸீன்மலோன் தோண்டர்களைத் தலைமை வகித்து நடத்தினார். அப்போராட்டம் இரவு 12 மணிக்கு ஆரம்பமாகி காலை 7 மணி வரை நடந்தது. கில்மலைக் படை வீடுகள் மிகப்பெரியனவாய், உறுதியான கட்டிடங்களுடன் நகரின் நடுமத்தியில் இருந்தன. தொண்டர்கள் ஒரு பெரிய சாப்பாட்டு விடுதியையும் வேறுபல வீடுகளையும் அமர்த்திக் கொண்டு அவற்றில் தங்கியிருந்து போராட்ட நேரத்தில்தான் வெளியே சென்றனர். முதலில் படை வீடுகளின் மேல் ஒரு குழாய் மூலம் பெட்ரோலைச் சொரிந்தனர். தீ வைத்தவுடன் அவ்விடுகள் எரிந்து தரைமட்டமாயின. போராட்டத்தில் ஸ்கல்லி என்ற ஒரு தொண்டன் குண்டுபட்டு இறந்தான். பகைவர்களில் காயமடைந்தவர் அறுவர் இறந்தவர் இருவர். இறந்துபோன இரு பீலர்களின் கதை மிகப் பரிதாபமானது. அவர்கள் முதலிலேயே தொண்டர்களுக்குப் பணிந்து விடவேண்டும் என்று சொன்னதற்காக மற்றப் போலிஸார் அவர்களை ஒரு அறைக்குள் தள்ளிப்பூட்டிவிட்டனர். இந்த அறை தீப்பற்றி எரியும் பொழுது அந்த இருவரும் தப்பிச்செல்ல வழியின்றி எரிந்து சாம்பலாயினர். போலிஸாருக்கு தலைமை வகித்து நின்ற சார்ஜெண்டு பின்னால் அரசாங்கத்தால் ஜில்லா இன்ஸ்பெக்டர் வேலைக்கு உயர்த்தப்பட்டார். சில மாதங்களில் தொண்டர்கள் அவரையும் வானுலகத்திற்கு அனுப்பி விட்டனர்.
அடுத்த பெரும்போராட்டம் ஊலாவில் நடந்தது. அன்றுதான் சர்க்கார்படையின் பிரிகேடியர் ஜெனரல்களுள் ஒருவரான லூகாஸ் தொண்டர்களால் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தப்பி ஓடினார்.
17
ஜெனரல் லூகாஸ்
* * *
லூகாஸ் என்பவர் ஆங்கிலப்படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவியிலிருந்தார். அவரையும் வேறு இரண்டு தளகர்த்தாக்களையும் புரட்சித்தலைவரான லியாம் லிஞ்ச் 1920ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி கைது செய்தார். அப்பொழுது லூகாஸ் கொன்னாவில் தம்முடைய நண்பர்களுடன் தங்கியிருந்தார். திடீரென்று லிஞ்ச் தமது படையுடன் அங்கே சென்று அவர்களைப் பிடித்துக் கொண்டார். லூகாஸுடன் கர்னல்ஸ் டான்போர்டும், கர்னல் டிரெல்லும் இருந்தனர். லிஞ்ச் அம்மூவரையும் அழைத்துக் கொண்டு சமீபத்தில் தயாராய்க்காத் திருந்த ஒரு மோட்டார்காருக்குச் சென்றார்.
பார்ட்டன் என்ற ஐரிஷ் தேசாபிமானி ஒருவர் ஆங்கிலயரின் சிறையிலிருந்தார். அரசாங்கத்தார் அவர்மீது ராஜத்துவேஷக் குற்றஞ்சாட்டிப் பத்து வருடத் தண்டனை விதித்தனர். சிறையில் கொலை, களவு செய்த குற்றவாளியைப் போல் அவரை மிகவும் கேவலமாக நடத்தி வந்தனர். அவரை விடுதலை செய்து வெளியே கொண்டுவருவதற்காகத்தான் லூகாஸ் கைது செய்யப்பட்டார். லியாம் லிஞ்ச், லூகாஸைப் பிடித்து வைத்துக் கொண்டு தங்களுடைய அன்பரான பார்ட்டனை விடுதலை செய்தால்தான் அவரை விடுதலை செய்யமுடியும் என்று சர்க்காருக்கு அறிவிக்கலாம் என்று கருதியிருந்தார்.
லிஞ்ச் தம்முடைய கைதிகள் மூவரையும் அழைத்துக்கொண்டு செல்லும் பொழுது அவர்கள் அரபி பாஷையில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் லிஞ்சையும் அவருடைய தொண்டர்களையும் திடீரென்று எதிர்த்துப் போராடித் தப்பிவிட வேண்டுமென்றே இரகசியாகப் பேசிக் கொண்டனர். சில நிமிஷங்களுக்குள் அவர்கள் பேசியபடியே தொண்ர்கள் மீது பாய்ந்தனர். இரு கட்சியாருக்கும் போராட்டம் முற்றியது. கர்னல் டான் போர்டுக்குக் காயம் பட்டது. தொண்டர்களே வெற்றி பெற்றனர். அதன் மேல் லிஞ்ச் காயமடைந்த கனையும், டிரெல்லையும் கொளரவமாக விடுதலை செய்து, பெர்மாயிலிருந்த பட்டாளப்படை வீடுகளுக்குப் போகும்படி அவர்களை ஒரு காரில் அனுப்பி வைத்தார். லூகாஸை மட்டும் கைதியாக வைத்துக் கொண்டு பந்தோபஸ்தான ஓரிடத்தில் அவரையடைத்து வைக்கும்படி அனுப்பினார். இரு தளகர்த்தாக்களை விடுதலை செய்ததிலிருந்து லிஞ்சின் தாராள சிந்தையும் தொண்டர்களுடைய கண்ணியமும் விளங்குகின்றன. ஆனால் இந்த உதவிக்குப் பட்டாளத்தார் என்ன கைம்மாறு செய்தனர்? மறுநாள் இரவில் பெர்மாய் நகரையே தீவைத்து எரித்தனர் ஸியாம் வெற்றியடைந்து விட்டார் என்ற கோபமே இதற்கெல்லாம் காரணம்.
ஜெனரல் லூகாஸ் கண்ணியமான போர் வீரர். அவர் தொண்டர்களிடம் ஐந்து வாரம் கைதியாயிருந்தார். தொண்டர்கள் அவரை மிக்க மரியாதையாக நடத்திவந்து வேண்டிய உணவு, உடை முதலிய சௌகரியங்களும் செய்து கொடுத்தனர். அருவடைய பந்துக்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதற்கு வசதிகள் அளித்தனர். லூகாஸ் பின்னால் தப்பியோடிய காலத்திலும் தொண்டர்களுடைய உதவிகளை நன்றியறிதலுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
கடைசியாக அவர் சிறை வைக்கப்பட்டிருந்த இடம் கீழ் லிமெரிக்கிலிருந்த ஒரு வீடு. ஜூலை மாதம் முதல் இரவு அவர் மிகவும் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விஷயம் முக்கியமான தொண்டர்களுக்கெல்லாம் பத்திரிகையைப் பார்த்த பின்பே தெரிய வந்தது.
ஜூலை மாதம் 30ஆம் தேதி லின்டிரீஸி, தான்பிரீன் முதலானவர்கள் லிமெரிக் நகருக்கும் திப்பெரரிக்கும் மத்தியிலுள்ள ரஸ்தாவில் ஆயுதபாணிகளாகக் காத்துக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் தொண்டர்கள் சர்க்காருக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தனர். ரயில்களையும் தபால்களைக் கொண்டு செல்லும் கார்களையும் மறித்து நிறுத்தினார்கள். அவற்றிலிருந்த கடிதங்களையும், பட்டாளத்தாரின் இரகசிய தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றிவந்தனர். இதனால் அவர்களுக்கு எதிரிகளுடைய உடவடிக்கைகளை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆங்காங்கேயிருந்த ஒற்றர்களில் எவர்கள் மிகவும் அயோக்கியர்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களைத் தண்டிப்பதற்கும் அரசாங்க கடிதங்கள் உபயோகமாயிருந்தன. சர்க்கார், தொண்டர்களுடைய தொல்லை பொறுக்கமாட்டாமல் தபாலைக் கொண்டு செல்லும் கார்களுடன் பட்டாளங்களையும் பாதுகாப்புக்காக அனுப்பிவர ஆரம்பித்தது. லிமெரிக் வீதியில் இத்தகைய பட்டாளம் ஒன்று தபால் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்ததால் அதை எதிர்த்துப் போராடவே தொண்டர்கள் மேலே கூறிய முறையில் மறைவாகக் காத்துக் கொண்டு நின்றனர். அவர்கள் நின்ற இடம் ஊலா கிராமத்திலிருந்து அரை மைல் தூரத்திலிருந்தது. அங்கிருந்து திப்பெரரி ஆறுமைல்; லிமெரிக் பதினைந்து மைல்; ஸாஹெட்பக் நான்குமைல். இவ்விடங்களைச் சுற்றிலும் சமவெளிகள் இருந்தமையால் தப்பியோடுவதற்குப் போதிய செளகரியங்கள் இருந்தன. ராணுவக் கார் காலை 10.30 மணிக்கு வரக் கூடும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து, அதற்கு முன்னதாகவே சென்று ஒரு பெரியமரத்தை வெட்டி அதனால் சாலையை அடைத்து விட்டுப் புதர்களில் மறைந்திருந்தனர். ஊலாவில் ஒரு பீலர் படையும் அதற்கு இரண்டு மைலுக்கு அப்பால், லிமெரீக் சந்திப்பில் ஒரு பீலர்படையும் இருந்தன. ஆதலால் எந்த நிமிஷத்தில் என்ன நேருமென்று தெரியாமலிருந்தது.
குறித்த நேரத்தில் பட்டாளத்தாருடைய கார் மிக வேகமாக ஓடிவந்தது. தொண்டர்கள் அதைக் குறிவைத்துச்சுட்டனர். உடனே காருக்குள்ளேயிருந்த சிப்பாய்கள் அனைவரும் கீழே குதித்து மறைவாக நின்று கொண்டு பதிலுக்குச் சுட ஆரம்பித்தனர். அதுவரை அமைதியாயிருந்த அந்த நாட்டுப் புறத்தில் திடீரென்று குண்டுகள் இடி இடித்தது போல முழங்க ஆரம்பித்தன. முதல் நிமிடத்திலேயே இரண்டு ஆங்கிலேயர்கள் குண்டுபட்டுத் தங்கள் துப்பாக்கிகளை எறிந்து விட்டுக் கீழே சாய்ந்து மடிந்தனர். பட்டாளத்தார் தொண்டர்களுடைய குண்டு வந்த திசையைப் பார்த்துச் சுட்டுக்கொண்டேயிருந்தனர். தொண்டர்கள் மொத்தம் பத்துப் பேரேயிருந்தனர்; அவர்கள் ஒவ்வொருவரிடமும் பத்துமுறை கடுவதற்குத்தான் மருந்து இருந்தது. அந்நிலையில் திடீரென்று லிமெரிக் பக்கத்திலிருந்து மற்றொரு ராணுவக் காரும் வந்து கொண்டிருந்தததை அவர்கள் கண்ணுற்றுனர். இவ்வாறு ஏற்படுமென்று அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. தற்செயலாக எதிரிகளுக்கு உதவியாட்கள் வந்துவிட்டனர் தொண்டர்கள் திகைத்தனர். அவர்கள் பின்வாங்கி மெதுவாக வேறிடத்திற்குச் சென்றுவிடத் தீர்மானித்துப் புறப்பட்டனர்.
தொண்டர் மறையும் பொழுதும் சிப்பாய்களைப் பார்த்துச் சுட்டுக் கொண்டே பின்வாங்கி வந்தனர். அந்நேரத்தில் சிப்பாய்களுக்கு உதவியாக ஊலாவிலிருந்தும் ஆறு பீலர்கள் வந்து கொண்டிருந்தனர். தொணடர்களிடம் போதிய குண்டுகளிருந்திருந்தால் அவர்கள் ஊலா போலிஸ் நிலையப் பக்கமாகச் சிலரை அனுப்பிச் சுடக் கொல்லியிருப்பார்கள். குண்டோசைகேட்டால் பீலர்களில் எவனும் சிப்பாய்களின் உதவிக்காக வெளியே வந்திருக்கமாட்டான். அதற்கும் வழியில்லாமற் போயிற்று. எனவே அவர்கள் யாருக்கும் காயப் படாமலும் உயிர்ச் சேதமில்லாமலும் போராட்டத்தில் இருந்து விலகிச் சென்று மறைந்துவிட்டனர். எதிரிகளில் மூவர் இறந்தனர்; மற்றும் மூவர் காயமடைந்தனர். அங்கு போராடிய சிப்பாய்களுடன் ஜெனரல் லூகாஸும் நின்று கொண்டிருந்தார். இவ்விஷயம் தொண்டர்களுக்கு மறுநாள் காலையில்தான் தெரியவந்தது. அவர் 29ஆம் தேதி இரவே தப்பியோடி பல பல வயல்களையும் மைதானங்களையும் தாண்டி தொண்டர்களுடைய கையில் சிக்காமல், மிக்க எச்சரிக்கையுடன் மறைவாக லிமரிக் வீதிக்கு வந்து சேர்ந்தார். அதன் வழியே நடந்துசெல்லுகையில் தற்செயலாய் அங்கு வந்து கொண்டிருந்த ராணுவக் கார் அவரைக் கண்டதும் அதிலிருந்த சிப்பாய்கள் அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
தொண்டர்கள், சண்டையின்போது அவரை அடையான, கண்டு பிடிக்கவில்லை. மறுநாள் பத்திரிகைகளில் 'ஜெனரலை மீண்டும் பிடிக்க முயற்சி' என்று பெரிய எழுத்துகளிற் செய்தி வந்த பின்பே அவர்களுக்கு லூகாஸ் தப்பியோடிய விவரம் தெரிய வந்தது. அவர்கள் சிப்பாய்களை வழிமறித்துப் போராடச் சென்றிருந்த போதிலும் பத்திரிகைகள் லூகாஸை மீண்டும் பிடிக்கவே அவர்கள் போராடியதாக கற்பனை செய்து எழுதின.
ஊலாச் சண்டை நடந்து சென்று சில தினங்களுக்குப் பின்பு தான்பிரீன் டப்ளினுக்குச் சென்று பாக்கியிருந்த பல சில்லறை வேலைகளை, முடித்துவிட்டான். ரீயர் கிராஸ் படை வீடுகளைத் தாக்கிய பொழுது அவனுடைய உடம்பில் தைத்திருந்த வெனிகுண்டுகளின் கண்ணாடித்துண்டுகளையும் ஆணிகளையும் எடுத்தெறிந்து உடம்பைக் குணப்படுத்திக் கொள்வதற்கு அவனுக்குத்தக்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் அதை அவன் உபயோகித்துக் கொண்டான்.
மேற்சொன்ன சம்பவங்கள் நடந்து 1920ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் அக்காலத்தில் தேசியயப் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வந்தது. மக்கள் கடைசி வலை போராடியே தீர வேண்டும் என்று உறுதி கொண்டனர். 'பிளாக் அண்டு டான்' பட்டாளத்தாருடைய கொடுமைகள் சகிக்க முடியாமல் இருந்தன. அவர்கள் வடுகளையும் தெருக்களையும் பயிர்களையும் கொளுத்திப் பல உயிர்களையும் வதைத்து வந்தார்கள். அரசியல்வாதிகளைக் கைதுசெய்து கொண்டு போகும் பொழுது சுட்டுத்தள்ளி வந்தனர். நித்திரை செய்துகொண்டிருந்த மக்கள் துப்பாக்கிகளுக்குப் பலியாகி வந்தனர். யாருக்கும் உயிரும் சொத்தும் உரிமையாக இருக்கவில்லை. ஆதலால் மக்கள் ஒன்றும் செய்யாமல் வீடுகளிலிருந்து மடிவதைக் காட்டிலும புரட்சிப்படையிலே சேர்ந்து வீரமரணம் அடைவது மேலென்று கருதினார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு உணவும் உடையும் கொடுத்ததோடு அவசியமான செய்திகளையும் துப்புகளையும் அறிந்து கூறி உதவி செய்து வந்தார்கள்.
ஆங்கிலப் பட்டாளத்தார் அயர்லாந்தில் எத்தனை கோடிபவுண்டு பெறுமானமுள்ள சொத்துக்களை அழித்தனர் என்பதையும் எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலிவாங்கினர் என்பதையும் பிற்காலச் சரித்திர ஆசிரியர்களே கணக்கிட்டுக் கூற முடியும். இந்தக் கொடுமைகளைச் செய்துவந்த 'பிளாக் அன்டு டான்' பட்டாளத்தாரிற் பலர் பின்னால் தாங்கள் செய்த கொடுமைகளை மறக்க முடியாமற் பைத்தியம் பிடித்து அலைந்தனர். தற்கொலை செய்து கொண்டு மடிந்தனர் என்றால் ஐரிஷ் மக்கள் அந்தப் பாதகர்களிடம் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.
அதேசமயத்தில் தொண்டர் படையும் வலிமையடைந்து தீரமான பட்டாளமாகி விட்டது. அது ஐரீஷ் குடியரசுப் படை என்ற பெயருக்குப் பொருத்தமாயிருந்தது. 1918ஆம் ஆண்டு தான்பிரின், டிரீஸிடம் கூறிய வாக்கு இரண்டு வருடங்களில் பலித்து விட்டது. முதலில் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டால் அது பின்னால் நாடெங்கும் பரவிவிடும் என்று அவன் கூறியிருந்தான். அதன்படி தேசத்து வாலிபர்கள் சுதந்திரப்படையில் ஆயிரக்கணக்காய்ச் சேர்த்து வந்தனர். ஐரிஷ் மக்கள் எவ்வளவு துன்பப்பட்டாயினும் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்று விரதம் பூண்டனர். அயர்லாந்தின் சுதந்திரத்தைக் கடைசிவரை நசுக்கியே தீரவேண்டும் என்று இங்கிலாந்தும் கண்மூடித்தனமாக வெறிகொண்ட செயல்களில் இறங்கி நின்றது.
18
கொலைக்கூட்டத்தின் முயற்சிகள்
* * *
தலைநகரில் இருந்த தொண்டர்கள் படைத்தலைமை அதிகாரிகளிடம் தான்பிரீன் ஒரு புதிய வேலைத்திட்டத்தைச் சமர்ப்பித்து அதை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினான். அத்திட்டத்தின்படி 'பறக்கும் தொண்டர் படை' யென்று சில படைகளை நியமிக்க வேண்டும் என்பது அவன் நோக்கம். இத்தகைய படை ஒரேயிடத்தில் தங்காது, தேசம் முழுவதும் சுற்றித்திரிந்து எங்கெங்கு அவசியம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் போரிடும்; எல்லையற்ற கொடுமைகள் செய்யும் அதிகாரிகள் எந்த ஊரில் இருந்தாலும் அப்படை அவர்களைப் பழிவாங்கும்; எந்த பிரதேசங்களில் தேசிய ஊக்கம் குறைகின்றதோ எங்கெல்லாம் அதிகாரிகள் அமைதியுடன் ஆனந்தமாய்க் காலம் கழிக்கிறார்களோ, அங்கெல்லாம் அப்படை சென்று உறங்குகின்ற மக்களையும் அதிகாரிகளையும் தட்டி எழுப்பிவிடும். அடிமை நாட்டில் அமைதி நிலவியிருந்தால் ஆள்வோருக்குத்தான் செளகரியம். ஆதலால், விடுதலை வேட்கையுள்ள மக்கள் ஆட்சி முறையை எப்பொழுதும் இடைவிடாது எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். இத்தகைய எதிர்ப்புக்குப் பறக்குந் தொண்டர் படை பெரிய உதவியாயிருக்கும் என்று தான்பிரீன் கருதினான்.
தொண்டர் படையில் அதுவரை சேர்ந்திருந்த வாலிபர்களிற் பலர் தங்களுடைய சொந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டு இடையிடையேதான் தேசிய வேலைக்கு முன்வந்தனர். அவர்கள் முழுநேரத் தொண்டர்களாக இருக்கவில்லை. இதனால் முக்கியமான சந்தர்ப்பங்களில் மிகுந்த நஷ்டங்கள் ஏற்பட்டன. நாக்லாங்கில் ஸீன் ஹோகனை மீட்பதற்காக உதவிப்படை அனுப்பும்படி தான்பிரீன் திப்பெரரிக்குச் சொல்லியனுப்பி ஏமாந்து போனதன் காரணம் இதுவே. பாதிநேரம் வேலை செய்தவர்கள், திடீரென்று வெளிவந்து எந்தக்காரியத்திலும் கலந்து கொள்ள முடியாது. அவர்கள் பகல் முழுவதும் சொந்தத் தொழில்களைப் பார்த்து விட்டு, இரவில்தான் தேச ஊழியத்திற்கு வரமுடிந்தது. மேலும் மறுநாள் காலையில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள். நல்ல யுத்த வீரர்களுக்கு வேண்டிய பயிற்சியை அவர்களுக்கு அளிக்கமுடியவில்லை. எல்லா விஷயங்களைப் பார்க்கிலும் ஒரு பெருங்குறை அவர்களிடமிருந்தது. அவர்கள் பெரும்பகுதியான நேரத்தை அமைதியான வாழ்க்கையிலே கழிந்து வந்ததால், போரின் ஆவேசம் அவர்களிடம் அதிகம் காணப்பட வில்லை. எப்போழுதும் போரில் ஈடுபட்டு, இரவும் பகலும் பாசறையையும் படையையும் பகைவனையும் பற்றி எண்ணிக்கொண்டிருப்பவர்களே வீராவேசத்துடன் இருக்க முடியும். ஆதலால் முழுநேரமும் தொண்டு செய்யக்கூடியவர்களை அதிகமாய்ச் சேர்த்துத் தக்க யுத்தப் பயிற்சி கொடுத்து திறமையுள்ள அதிகாரிகளின் கீழ் கட்டுப்பட்டிருக்கும்படி செய்ய வேண்டும் என்று தான்பிரீன் தீர்மானித்தான். அதன்படி வாலிபர்களும் நூற்றுக்கணக்காக முன்வந்தனர்.
'பறக்குந் தொண்டர்' படைகளை ஏற்படுத்தியதால் திப்பெரரியிலும் கார்க் பகுதியிலும் இருந்த வாலிபவீரர்கள் மிகவும் பிற்போக்காயிருந்த கில்கென்னி, வாட்டர் போர்டு பகுதிகளிலே சென்று போராடுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த ஏற்பாட்டினால், தேசத்தில் ஒரு பகுதியில் ஊக்கமும் மற்றொரு பகுதியில் அயர்வும் ஏற்படாமல் எங்கும் ஆவேசத்தைப் பரப்ப வழி ஏற்பட்டது.
தான்பிரீன் டப்ளினிலிருந்த பொழுது டின்னிலேஸி என்னும் அவனுடைய ஆருயிர்த் தோழன் பலநாள் கூடவேயிருந்து உதவி செய்து வந்தான். லேஸி தேசத்திற்கே உழைக்கவேண்டுமென்று ஜன்மமெடுத்தவன். 1920 முதல் 1922 வரை அவன் பற்பல வீரச்செயல்களைச் செய்து பெரும் புகழ் பெற்றான். திப்பெரரிப் பகுதியிலுள்ள கோல்டன் கார்டன் (தங்கத்தோட்டம்) என்பது அவனுடைய சொந்த ஊர். அவன் மிக்க தேகக்கட்டோடு விளங்கியதோடு, ஓட்டத்திலும், கால்பந்து விளையாட்டிலும் பெரிய சூரனாயிருந்தான். அவனுடைய வீடு தான்பிரீனுடைய வீட்டிலிருந்து அரைமைல் துரத்திலிருந்தது. தான்பிரீனும் அவனும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஓருயிரும் ஈருடலுமாகப் பழகிவந்தார்கள். வயது வந்தபின் அவன் ஒரு பெரிய கடையில் வேலைபார்த்து வந்தான்.
1920ஆம் ஆண்டுமே மாதம் கில்மல்லக்கில் நடந்த போராட்டத்தில் அவன் கலந்து கொண்டான். அதுமுதல் அவன் மறைந்து வாழும்படி ஏற்பட்டது. அவன் செய்துவந்த வீரப்போராட்டங்களைக் கேட்டுப் 'பிளாக் அன்டு டான்' பட்டாளத்தார்.அவனைப்பிடிக்க வேண்டுமென்று பகீரதப் பிரயத்தனம் செய்தனர். திப்பெரரியில் அவன் சிலநாள் தங்கியிருந்த வீட்டைக்கூட அவர்கள் கொழுத்திவிட்டனர்! பிரிட்டிஷாருடைய குண்டுகளுக்கெல்லாம் லேஸி தப்பிவிட்டான்! (ஆனால் பின்னால் நடந்த உள்நாட்டுக் கலகக்கில் 1923ஆம் ஆண்டு அவன் பிரீஸ்டேட் படைகளுடன் செய்த போராட்டத்தில் தன்நாட்டவர்களாலேயே உயிர் பறிக்கப்பட்டு மாண்டான்.)
டப்ளின் நடமாடுவது மிகவும் அபாயகரமானதாயிருந்தது எங்குபார்தாலும் இரகசிய பொலிஸாரும் அவர்களிடம் கூலிக்கு மாரடிக்கும் ஒற்றர்களும், உளவாளிகளும் நிறைந்திருந்தனர். தொண்டர்களைப்பற்றி யார் என்ன தகவல் கொடுத்தாலும் ஏராளமான வெகுமதிகள் கொடுக்கபடும் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இரகசிய போலிஸ்படை சீர்குலைந்திருந்தால், அதைப் புனருத்தாரணம் செய்வதற்கு அதிகாரிகள் ஓவ்வின்றி முயற்சித்து வந்தர்கள். பார்க்கும் இடமெல்லாம் காக்கி உடையணிந்ததுருப்புகளும், துப்பாக்கிகளும், ராணுவ லாரிகளுமாகவே கூட்டங்கூட்டமாகக் காணப்பட்டன. தெருக்களில் நடமாடுகிறவர்களையெல்லாம் ஒரே நாளில் ஏழெட்டு முறை சோதனை போட்டார்கள் டிராம் வண்டிகளிலும் பஸ் வண்டிகளிலும் படைவீரர் திடீர்திடீர்ரென்று புகுந்து பிராயினிகளை தடைபடுத்தி சோதனையிட்டனர். பட்டாளத்தார் பற்பல வீடுகளைச் சுற்றி பலநாள் சூழ்ந்து நின்று, உள்ளேயிருந்துயாரும் வெளியேறாமலும் வெளியிலிருந்து யாரும் உட்செல்லாமலும் தடுத்து வந்தார்கள். இவையெல்லாம் அத்ததலை நகரிலே தினசரி நிகழ்ச்சிகளாகப் போய்விட்டன.
பொது மக்களுடைய கடிதங்கள் தபாற் காரியாலங்களிலே உடைத்துப் பார்க்கப்பட்டன. நிரபராதிகளான மக்கள் டப்ளின் மாளிகைக்கு கொண்டுபோகபட்டு, தொண்டர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லும்படி சித்திரவதை செய்யப்பட்டனர். அங்கு இரகசியமாய் நடத்தபட்ட கொடுமைகளுக்கு அளவேயில்லை. சாப்பாட்டு விடுதிகளிலுள்ள வேலைக்காரர்களுக்கெல்லாம் சர்க்கார் லஞ்சம் கொடுத்துத் தொண்டர்கள் வந்தால் தகவல் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தனர். பட்டாளத்தாரும் அதிகாரிகளும் டெலிபோன்மூலம் பேசிக் கொள்வதைப் பிறர் அறியாமலிருப்பதற்கு ஓர் இரகசிய பரிபாஷையை அமைத்துக் கொண்டார்கள். இவ்வளவு நெருக்கடியின் மத்தியிலே தான்பிரீனும் இடைவிடாது ஒற்றால் பின்பற்றபட்டான். அவன் தனது துப்பாக்கியையும் வீரத்தையுமே துணையாகக் கொண்டு சுற்றி வந்தான். ஆபத்து வேளைகளில் அவனுடைய வலது கைதுப்பாக்கியைப் பற்றிய வண்ணமாகவேயிருந்தான்.
கடைசியாக ஒருநாள் அவன் பகைவர்களின் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது. ஒரு வெள்ளிக்கிழமை இரவில் அவன் ஹென்றி திருமுனையிலுள்ள நெல்ஸன் தூண் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் அவன் அன்றிரவு கரோலன் என்பவருடைய வீட்டுக்குச் செல்வதற்காக டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வீடு டிரம்கொண்டராவுக்கும் வயிட் ஹாலுக்கும் மத்தியிலிருந்தது. வயிட் ஹாலுக்குச் செல்லக்கூடிய டிராம் வண்டி அப்பக்கத்தில் வந்த பொழுது அவன் உடனே அதில் பாய்ந்து மேல் தளத்தி ஏறி உட்கார்ந்து கொண்டான். அவனைத் தொடர்ந்து வேறு ஐந்து பேர்கள் அவ்வண்டியிலேறி வருவதையும் அவன் கண்டான்.
அவர்களில் இருவர் சர்க்காருடைய கொலைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவன் தெரிந்து கொண்டான். இக்கொலைக்கூட்டத்தார் ஜெனரல் ரியூடர் என்பவலால் நியமிக்கப்ட்டவர்கள். அவர்களுக்கு 'உதவிப் படையினர்' என்று பெயர். ரியூடரே அப்படையினருக்குத் தலைவர். அப்படையினர் செய்து வந்த அட்டகாசங்களுக்கு அளவேயில்லை. அவர்கள் கொலைக்கு அஞ்சாதவர்கள். தெருக்களில் எந்தப் புரட்சிக்காரரைக் கண்டாலும் சந்தேகப்படத்தக்க நபர்களைக் கண்டாலும் உடனே கண்ட இடத்திலேயே சுட்டுக் கொல்ல வேண்டு மென்று இவர்களுக்கு உத்தரவு. அவர்கள் கொலைகள் செய்ததாக வழக்குகள் ஏற்படாமல் பாதுகாப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தார்கள். இந்த இரகசியப்படை அமைக்கப்பட்டிருந்த விஷயம் பீலர்களுக்கும் பட்டாளங்களுக்குங் கூடத் தெரியாது. ஆனால் தொண்டர்களுக்கு அப்படையைப் பற்றியும் அப்படையிலுள்ளவர்களில் யார் யார் எத்தனை கொலைகளையும் கொடுமைகளையும் செய்தனர் என்பதைப் பற்றியும் வெகு நன்றாய்த் தெரிந்திருந்தது. முக்கியமான கொலைகாரர்களுடைய புகைப்படங்களையும் சிரமப்பட்டுக் சம்பாதித்துத் தொண்டர் படைத் தலைமைக் காரியாலயத்தார் எல்லாத் தொண்டர் படைகளுக்கும் அனுப்பியிருந்தனர்.
டிராம் வண்டியில் ஏறிய ஐவரையும் தான்பிரீன் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களில் இருவர் அவன் அருகில் வந்து பக்கத்திற்கு ஒருவராக ஒரு பக்கத்திலும் உட்கார்ந்து கொண்டனர். ஒருவன் அவர்களுக்கு முன்னால் சென்று நின்று கொண்டிருந்தான். மற்றும் இருவர் முன்பக்கம் சென்று வண்டியின் முகப்பில் நின்று கொண்டனர். கொலைக்கு அஞ்சாத பாதகர்கள் தனக்கு இரு பக்கத்திலும் அமர்ந்திருந்ததால், எந்த நிமிஷத்தில் என்ன அபாயம் நேருமோ என்று தான்பிரீன் மிகவும் எச்சரிக்கையாகக் கவனித்துக் கொண்டிருந்தான். கொலைகாரர்கள் தன்னைக் கண்டு வந்தார்களா, அன்றித் தாங்களாகவே வேறு வேலைகளுக்காக வந்தார்களா என்பது புலனாகவில்லை. ஆனால் இருவர் அவன் பக்கத்தில் வந்து உட்காரக் காரணம் என்ன? இவ்வாறு அவனுக்குப் பல யோசனைகள் தோன்றின. என்ன நேர்ந்தாலும் அவன் போராட்டத்திற்குத் தயாராயிருந்தான். உயிரோடு பகைவர்கள் கையிலே சிக்காமல் அரும்போராட்டம் செய்து எதிரிகளில் பலரைச் சுண்டுக்கொன்ற பின்பே தன் உயிரை விட வேண்டும் என்று அவன் வெகு காலத்திற்கு முன்பே தீர்மானித்திருந்தான்.
மணி 11 க்கு மேலாகிவிட்டது. ஊரடங்கு உத்தரவு 12 மணி முதல் ஆரம்பம். டிராம் வண்டி பார்னல் ஸ்குயர் பக்கம் சென்றது. அப்பொழுது இரண்டு பக்கத்திலும் இருந்த கொலைஞரும் சட்டைப்பைக்குள் கைவிட்டு எதையோ எடுக்க முயன்றனர். தான்பிரீனுக்கு விஷயம் நன்றாக விளங்கிவிட்டது. உடனே அவன் தன் ரிவால்வரையும் சரேலென்று உருவிக் கையில் பிடித்துக் கொண்டான். அவனுடைய நோக்கமும் பகைவர்களுக்குப் புலனாயிற்று. மேற்கொண்டு. அங்கு தங்கினால் உயிருக்கு அபாயம் நேரும் என்று தெரிந்துகொண்டு வண்டியின் உட்புறத்திலிருந்த மூன்று கொலைஞரும், திடீரென்று எழுந்து ஒரு வர்மேல் ஒருவர் விழுந்து வெளியே குதித்து ஓடினர். தான்பிரீன் அவர்களைத் தொடர்ந்து சென்றான். ஆனால் அந்த இடத்தில் சுடுவது அபாயம் என்று கருதினான். அவன் சுட்டிருந்தால், வண்டியிலுள்ளவர்கள் கலவரமடைத்திருப்பார்கள். குண்டுகளின் ஓசை கேட்டுப் பக்கத்தில் எங்கேனும் நிற்கும் பீலர்களும் பட்டாளத்தாரும் அங்கு வந்து கூடியிருப்பார்கள். அதனால் தான்பிரீனுடைய உயிருக்கே ஆபத்து வந்துவிடும். தெருவும் பல மக்கள் நடமாடக்கூடிய தெரு வாயிருந்தது. தான்பிரீன் தெருவில் குதித்து, செயின்ட் ஜோசப் மாளிகைக்குப் பக்கம் அருகேயிருந்த ஒரு தெருவுக்கு விரைந்து சென்றான். அவன் செல்வதைக் கண்ட கொலைஞர் மூவரும் வேறொரு தெருவின் வழியாகச்சென்று, அவனைத் தெருவின் மறுபுறத்தில் மறித்துக் கொள்ளலாம் என்று கருதி ஓடினர். தான்பிரீன் அவர்களுடைய சூழ்ச்சியையறிந்து, அத்தெருவின் வழியே செல்லாமல் திரும்பி வந்து, தெருவில் அப்பொழுதுதான் வந்து நின்ற வயிட் ஹாலுக்குச் செல்லும் டிராம் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
அப்பொழுதுதான் அவனுக்கு முன்நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக் கச்சிறிது அவகாசம் ஏற்பட்டது. மூன்று பகைவர்களும் ஓடும் பொழுது வண்டியிலிருந்த மற்ற இருகொலைஞரும் ஏன் அவர்களுக்கு உதவிக்கு வராமல் இருந்துவிட்டனர் என்பது புலனாகவில்லை. தங்கள் உயிருக்கே அபாயம் நேரும் பொழுது, அவர்கள் தோழர்கள் என்றும் வேண்டியவர்கள் என்றும் கவனித்து உதவிசெய்ய வருவது வழக்கமில்லை போலும் கூலிக்கு மாரடிக்கும் ஒற்றர்களுக்குப் பொறுப்பேது? ஒழுக்கமேது?
அந்த ஐவரில் ஒருவன், பின்னால் தான்பிரீனும் தோழர்களும் டிராம் கொண்டராவில் இருந்ததை எப்படியோ அறிந்து பின் தொடர்ந்தான். அவன் அன்றிரவே தான்பிரீனுக்குப் பின்னால் வேறொரு டிராம் வண்டியிலேறிச் சென்று புலன் விசாரிக்கவுங்கூடும். தான்பிரீன் மறுநாள்காலையில் டிரீஸியிடம் தனக்கு நேர்ந்த விபத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது அவன், 'உன்காலம் நெருங்கி விட்டது போலிருக்கிறது; நீ இனிமேல் வெகுநாள் தப்பியிருக்க முடியாது, என்று வேடிக்கையாகக் கூறினான். ஆனால் பின்னர் இருவரும் அவ்விசயத்தைக் குறித்துத் தீர்க்கமாக ஆராய்ச்சி செய்தனர். அன்று முதல் வெளியே செல்வதானால் இருவரும் சேர்ந்து செல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டனர். அன்று சனிக்கிழமை. இருவரும் காலையிலேயே பிட்ஜெரால்டு அம்மையின் வீட்டுக்குச்சென்று பகல் முழுவதும் படுத்துறங்கி ஓய்வெடுத்துக்கொண்டனர். அந்த அம்மையும் திப்பெரரியைச் சேர்ந்தவராதலால் அவர்களை அன்புடன் ஆதரித்தார்.
மறுநாள் அவர்கள் அரைமைல் தூரத்திலிருந்த கெயிலிக் தேசப்பயிற்சிக் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று பொழுதைப் போக்கினர். அங்கிருந்த நண்பர்களுடன் அவர்கள் சீட்டு விளையாடவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பந்தயப் பணம் அதிகமாயில்லாதால் தான்பிரீன் பணம்வைத்து விளையாடுவதில் சலிப்படையவில்லை. சீட்டாட்டத்திலுங்கூட அதிர்ஷ்டம் அவன் பக்கத்திலிருந்தது. அவன் கையில் கொஞ்சம் பணம் சேரவும் இது ஒரு வழியாயிற்று. அச்சமயத்தில் அவனுக்குப்பிற்கால வேலைகளைப்பற்றி மனதில் முடிவான திட்டம் எதுவுமில்லை. தலைமைக் காரியாலயத்தார் அவனையும் அவன் நண்பர்களையும், சில போலியான காரணங்களைச் சொல்லி, டப்ளினிலேயே பலநாள் தாமதிக்கும்படி செய்தனர். தலைவர்கள் முன்னால் நின்று வழிகாட்டத் தயாராயிருக்கவில்லை; மற்றவர்கள் சுயேச்சையாக வேலைசெய்யவும், வழி விடவில்லை. டின்னி லேலி தான்பிரீனை எதிர்த்த்துத் திப்பெரரியில் தான். தலைமைக் காரியாலயத்தார் பொறுப்பேற்க அஞ்சினதோடு, தான்பிரீனை விரைவாக ஊருக்கு அனுப்பத் தயாராயில்லை. ஆனால், தொண்டர்கள் அடிக்கடி பயிற்சி செய்து வந்ததால், அதிக தைரியத்தையும் பயிற்சிகளையும் பெற்று வந்தனர். அவர்களுடைய குடியரசுப் படை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது. சுடச்சுட ஒளிரும்பொன்பொல், துன்பங்களை அனுபவித்து, அனுபவித்து அப்படை மிக்க வல்லமையுைடயதாகிவிட்டது.
11ஆம் தேதி மாலை தான்பிரீன் டிரீன்லியை அழைத்துக்கொண்டு சினிமா ஒன்றைப் பார்க்கச்சென்றான். அது பொழுது போக்காயிருக்கும் என்று அவன் கருதினான். கொட்டகையில் டிரம்கொண்டராவைச் சேர்ந்த பிளெமிங் குமாரிகள் இருவரையும் ஈமன் ஒபிரியனுடைய மனைவியையும் சந்தித்தான். அவர்கள் அவனையும் டிரீஸியையும் கண்டு திடுக்கிட்டுப்போயினர். இருவரையும் பிடிப்பதற்குத் தேசம் முழுவதும் பட்டாளங்களும் பீலர்களும் இரவு பகலாய் அலைந்து தேடிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தலைநகரத்தில் பல்லாயிரம் மக்கள்கூடியுள்ள கொட்டகையில் வந்து நின்றது. பெரும் வியப்பாகவே தோன்றியது. அவர்களை எந்தச் சிப்பாய் கண்டாலும் சுட்டுத்தள்ளும்படி சர்க்கார் உத்தரவு போட்டிருந்தது. தான்பிரீன் அந்தப் பெண்களோடு குடும்ப நலங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். காட்சிமுடிந்த பின்பு எல்லோரும் சேர்ந்து வெளியேறினர்.
கொட்டகை வாயிலில் ஒற்றன் ஒருவன் நின்று கொண்டு வெளியே போகிறவர்களைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் அவன் யாரென்பது தான்பிரினுக்குப் புலனாகிவிட்டது. சில தினங்களுக்கு முன்னால் டிராம் வண்டியில் அவன் பக்கத்தில் உட்கார்ந்த இருவரில் அவன் ஒருவன். அவன் தான்பிரீன் எப்பொழுது வருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டே நின்றான். அந்த இடத்திலேயே அவனை சுட்டுத் தள்ளிவிடலாமா என்று தான்பிரீன் யோசனை செய்தான். ஒரு வேளை அவனுக்கு உதவியாக வேறு ஒற்றர்கள் அங்கு வந்திருக்கலாம் என்பதாலும் பொது மக்கள் அண்மையில் இருந்ததாலும் அவன் துப்பாக்கியை வெளியே எடுக்காமல் ஒன்றும் அறியாதவன் போல் அப்பெண்களுடன் போய்விட்டான்.
அவர்கள் ஐவரும் டிரம் கொண்டராவுக்குச் செல்லும் ஒரு டிராம் வண்டியில் ஏறிக்கொண்டனர். தான்பிரீன் மட்டும் கடைசியாக ஏறினான். பெண்களில் ஒருத்தி அவனைப் பார்த்து 'அதோ, ஒரு நண்பன் தொடர்ந்து வருகிறான்' என்று மெதுவாகக் கூறினாள். தான்பிரீன் திரும்பிப்பார்க்கையில் பழைய சாக்கன்தான் அவனைத் தொடர்ந்து வந்து வண்டியிலேற முயன்று கொண்டிருந்தான். ஆனால் தான்பிரீன் கால்சட்டைப் பையிலிருந்த ரிவால்வரில் கை போட்டுக்கொண்டிருந்த நிலையைக் கண்டு, அவன் மெதுவாகப் பின்வாங்கி நகர ஆரம்பித்தான். நகர்ந்து கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்து விட்டான். அந்த இடத்திலேயே தான்பிரீன் அவனைச்சுட்டிருந்தான், பின்னால் அவனால் இடையூறு நேர்ந்திராது. ஆனால் பெண்களின் மத்தியிலே நின்று போராடினால் எதிரியின் குண்டுகள் அவர்களையும் காயப்படுத்துமே என்றெண்ணி அவன் அந்த நேரத்தில் ஒற்றனை உயிரோடு விட்டுவிட்டான்.
அப்பொழுது உயிர் தப்பிய அந்தக் கயவனே அன்றிரவு தான்பிரீன் டிரம் கொண்டராவில் தங்கியிருந்த இடத்தில் சிப்பாய்கள் சென்று தாக்குவதற்குக் காரணமானான்.
19
டிராம்கொண்டரா சண்டை
* * *
அன்றிரவு 11 மணிக்கு தான்பிரீனும், டிரீஸியும் பிளெமிங் குடும்பத்தாருடைய வீட்டிலிருந்து புறப்பட்டனர். வாயில் வழியாகச் சென்றால் போலிஸ் ஒற்றர்கள் ஒரு வேளை கவனித்து விடக்கூடும் என்று அவர்கள் கொல்லைப் புறமாகவே வெளியேறினர். அருகேயிருந்த ஒரு தோட்டத்திற்குள்ளே சென்று அவர்கள் மேற்கொண்டு எங்கு போகலாம் என்பதைப் பற்றி யோசித்தனர். திருமதி பிட்ஜெரால்டின் வீடும், கரோலன் என்ற நண்பருடைய வீடுமே அவர்கள் அன்றிரவு தங்குவதற்கு ஏற்ற இடங்கள். முடிவாகக் கரோலனுடைய வீட்டை நோக்கியே அவர்கள் புறப்பட்டனர். வழியில் டோல்கா நதியின் மேல் கட்டப்பட்டிருந்த ஒரு பாலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அப்பாலத்தின் மேல் செல்லும் பொழுது அவர்கள் வெகுதூரத்தில் ராணுவ லாரிகள் ஓடிக்கொண்டிருந்த ஓசையைச் செவியுற்றனர். அப்பொழுது ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததால் 12 மணிக்கு மேல் யாராவது தெருவில் வருகிறார்களா என்று பார்ப்பதற்கு ராணுவத்தார்சுற்றிக் கொண்டிந்தனர். அதற்கு வெகுநேரத்திற்கு முன்பே தெருக்களில் ஜனநடமாட்டம் நின்று போய்விட்டது.
தான்பிரீன் எப்பொழுதும் கரோலனுடைய வீட்டுக்கு இரவு 11மணிக்கு முன்பே போய்விடுவது வழக்கம். ஆனால் இந்தத் தடவை அங்கு சேரும்பொழுது 11.30 ஆகிவிட்டது. வீட்டில் வெளிச்சமொன்றும் காணப்படாமையால் வீட்டிலுள்ளவர்கள் உறங்கிவிட்டனர் என்று தெரிந்தது. தான்பிரீனும் டீரீஸியும் சந்தடி செய்யாமல் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே புகுந்தனர். அவர்கள் எந்த நேரமும் தங்குவதற்காக மேல்மாடியின் பின்புறத்தில் நாற்றுக்கூட்டத்தின் பக்கம் ஓர் அறையில் படுக்கை முதலானவை போடப்பட்டிருந்தன. அவர்கள் வீட்டிலுள்ளவர் எவரும் அறியாமலே அங்கே சென்று படுத்துக்கொண்டனர்.
இரண்டு பேர்களும் ஒரே படுக்கையில் படுத்துக் கண்களை மூடிக்கொண்டு உறங்க முயன்றனர். ஆனால் உறக்கம் வரவில்லை. பிற்கால வேலைத்திட்டத்தைப் பற்றியும், திப்பெரரிக்குத் திரும்பவேண்டியதைப் பற்றியும் பேச ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்திற்குப் பின்னால் பேச்சுச் சுருங்கிவிட்டது.
இதன் பின்னால் இருவரும் சிறிது கண்ணயர்ந்தனர். சில நிமிஷங்கள் கழிவதற்கு முன்னால் இருவரும் திடீரென்று விழித்தெழுந்து படுக்கையில் உட்கார்ந்தனர். வெளியே தெருவில் சிப்பாய்கள் பலர் 'பூட்ஸ்' காலுடன் அணிவகுத்து நடக்கும் சப்தம் கேட்டது. பின் பக்கத்து ஜன்னல் வழியாக அவர்கள் இருந்த அறைக்குள் ஒரு மின்சார விளக்கைக் காட்டியதாலேயே அவ்வெளிச்சம் தெரிந்தது. அப்போழுது ஒரு மணி இருக்கும்.
முன் கதவில் ஏதோ கண்ணாடி சட சட' வென்று உடைந்தது! ஒரு கதவு திறக்கப்பட்டது. படிகளின் வழியே சிப்பாய்கள் ஏறிவந்த காலோசையும் கேட்டது!
உடனே தான்பிரீனும் டிரீஸியும் படுக்கையிலிருந்து ஏககாலத்தில் துள்ளி ஏழுந்தனர். இருவரும் ரிவால்வர்களைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். தான்பிரீன் இரண்டு கைகளிலும் இரண்டு ரிவால்வர்களைப் பிடித்துக்கொண்டான். அவர்களுடைய அறைக்கதவை யாரோ வெளியில் தட்டிக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. தான்பிரீன் வாய் திறக்கவேயில்லை. டிரீஸி அண்டையில் நின்ற அவன் வலக்கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு, 'வந்தனம் அன்பா இனி மேலுலகில் சந்தித்துக் கொள்வோம்' என்று கூறினான்.
அந்த நிமிஷத்தில் வெளிக்கதவின் வழியாக இரண்டு குண்டுகள் சரேலென்று உள்ளே பாய்ந்தன. உள்ளிருந்தவர்களும் உடனே சுட ஆரம்பித்தனர். அறைக்குள்ளே குண்டுகளின் ஒளியைத் தவிர வேறு வெளிச்சமில்லை. வெளியே ஒர் ஆங்கிலேயன் தன் பாஷையில் ரியான் எங்கேயிருக்கிறான்? ரியான் எங்கே யிருக்கிறான்? என்று கூவினான்.
எல்லாப் பக்கங்களிலும் குண்டுகள் பாய்ந்து கொண்டிருந்தன. அறைக்கதவு சிறிது திறந்திருந்தது. தான்பிரீன் கதவை நோக்கிச் சென்றான். அவனது வலது கைப் பெருவிரலிலே ஒரு குண்டுபட்டு இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் வலியைச் சிறிதும் உணரவில்லை. வெளியே யாரோ ஒருவன் வழுக்கி விழுந்த ஓசை கேட்டது. அந்நேரத்தில் டிரீஸியின் ரிவால்வரில் ஏதோகோளாறு எற்பட்டுச் சுடமுடியாது போயிற்று. தான்பிரீன் அவனை பின் புறத்து ஜன்னலைக் கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வாயிற்கதவைத் தாண்டி வெளியேற முயன்றான். அப்பொழுது ஒரு குண்டு உள்ளே வந்து உடைகள் வைத்திருந்த இடத்தில் பாய்ந்தது. மாடிப்படியிலிருந்து சுடும் ஒசை திடீரென்று சிறிது நேரம் நின்றுவிட்டது. சிப்பாய்கள் மடமடவென்று கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அறையின் பின்புறத்தில் குண்டுகள் வெடித்த வண்ணமாயிருந்தன.
தான்பிரீன் அறைக்கு வெளியே சென்று மாடிப்படிகளை உற்று நோக்கினான். கீழேயிருந்து ஆறு சிப்பாய்கள் மின்சார விளக்குகளை ஏந்திக் கொண்டு மீண்டும் மேலே போராடவந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய விளக்கொளியில் தான்பிரினுடைய உருவம் வெகு தெளிவாய்த் தெரிந்தது. அவன் பகைவர்கள் தன்னை எளிதில் குறிவைத்துக் கொன்றுவிடுவார்கள் என்பதையறிந்து விரைவாக அவர்களை நோக்கிக் குண்டுக்கு மேல் குண்டாகப் பொழிந்து கொண்டிருந்தான். வீட்டைச்சுற்றிப்பட்டாளத்தார் நின்ற விஷயமும், அவன் அவர்கள் அனைவரிடமிருந்தும் தப்பிச்செல்வது எளிதல்ல என்பதும் அவனுக்கு நன்றாய்த் தெரியும். ஆயினும் அவன் அஞ்சவில்லை. மரணம் நிச்சயம் என்று தோன்றிய போதிலும், எதிரிகளில் எத்தனை பேரை வதைக்க முடியுமோ அத்தனை பேரையும் தீர்த்து விட்டுத்தான் மடிய வேண்டும் என்று வீராவேசம் கொண்டு நின்றான்.
அவன் படிக்கட்டை நோக்கிச் சுட்டுக் கொண்டே சென்ற பொழுது சிப்பாய்கள் கீழிறங்கி ஓட முயன்றனர். சிலர் கீழ் வீட்டிலுள்ள அறைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். மற்றும் சிலர் ஒருவர்மேலோருவர் விழுந்துகொண்டு தெருவுக்கு ஓடிச்சென்றனர். தான்பிரீனுடைய குண்டுகளுக்கேற்ற பகைவன் எவனையும் காணோம். பின்புறத்தில் மட்டும் இடையிடையே ஒரு குண்டோசையும் காயப்பட்டவருடைய புலம்பலும் கேட்டன.
முன்னால் வேறு சிப்பாய்களைக் காணாமையால் தான்பிரீன் அவசரமாக அறையை நோக்கித் திரும்பினான். அறையின் வாயிற்படியில் இரண்டு பட்டாள அதிகாரிகள் செத்துக்கிடந்தனர். ஒரு சிப்பாய் குற்றுயிராயிருந்தான். தான்பிரீன் அவர்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர்களை வழியைவிட்டு வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு அவன் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். முதலில் அறையை விட்டு வெளியே சென்றபோது அவன் இந்தப் பிரதங்களைப் பார்க்கவில்லை. அதற்குக் காரணம் சண்டையின் வேகத்திலே அவனுக்கெதுவும் நன்றாய்ப் புலப்படவில்லை.
சிறிதும் ஓய்திருக்க முடியவில்லை. ஏனென்றால் பட்டாளத்தார் நூற்றுக் கணக்காய் வந்திருந்ததால் மீண்டும் ஒரு முறை வந்து தாக்குவார்கள் என்று அவன் எதிர்பார்த்து ஜன்னலருகில் சென்றான். பின்புறத்திலிருந்து மின்சார விளக்கின் வெளிச்சம் அறைக்குள் வீசியதும் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக் கொண்டு பல குண்டுகள் ஜன்னல் வழியாக உள்ளே பாய்ந்தன. அவற்றில் சில அவனுடைய பல அங்கங்களிலும் காயப்படுத்திக்கொண்டு சென்றன.
ஜன்னலின் கீழ்ப்பாகம் திறந்து கிடந்தது. அதைக் கண்டவுடன் தான்பிரீன், டிரீஸி அதன் வழியாகத் தப்பியோடியிருக்க வேண்டு மென்று யூகித்து அதன் வழியாக வெளியேறி, நாற்றுக் கூடத்தின் கூரையின்மேல் குதித்தான். அங்கிருந்து பார்த்தபொழுது, வீட்டைச் சுற்றி எண்ணிறந்த உருக்குத் தொப்பிகள் அவன் கண்களுக்குப் புலப்பட்டன. ராணுவத்தார் யாவரும் நாற்றுக் கூடத்தின் கூரையை நோக்கிச்சுட ஆரம்பித்தனர். தான்பிரீனுடைய நிலைமை அபாயகர மாயிற்று. எந்த நிமிஷத்திலும் குண்டு பட்டுக்கீழே சுருண்டு விழக்கூடிய நிலையில் அவன் துப்பாக்கிகளுக்குக் குறியாய்க் கூரையின் மேல் தனியாக உட்கார்ந் திருந்தான். கூரையை விட்டுக் கீழே இறங்கினால் துப்பாக்கிக் காட்டைத் தாண்டாமல் வெளியேற முடியாது. அந்நிலையில் அவன் இடது கையிலே துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு கூரை ஓட்டைப்பார்த்துச்சுட்டான். கூரையில் ஒரு பெரிய துவாரஞ்செய்து கொண்டு அதன் வழியே உட்புகுந்து உத்திரக்கட்டையைப் பிடித்துக் தொங்கிக் கொண்டிருந்தான். அத்துடன் இடையிடையே வெளியே தலைநீட்டி எதிரிகளை நோக்கிச் சுடுவதையும் அவன் நிறுத்தவில்லை. அவன் கூரைக்குள் மறைந்திருந்ததால் எதிரிகளின் குண்டுகள் அவனைப் பாதிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் திடீரென்று சகல பட்டாளத்தாரும் அவ்விடத்தை விட்டு மறைந்து போயினர்.
பகைவர்களைக் காணாமையால் அவன் மெதுவாக மீண்டும் கூரைமேலேறி அங்கிருந்து தரையின் மீது குதித்தான்.
அச்சமயத்திலெல்லாம் அவனுடைய ஞாபகம் முழுவதும் ஸீன் டிரீஸியைப் பற்றித்தான். அந்த உயிர் தோழன், எங்கேயிருந்தான், என்ன செய்தான் என்ற ஒரு விசயமும் புலப்படவில்லை. அவனுடைய அறிகுறிகளே தென்பட வில்லை. 'டிரீஸீ! டிரீஸீ! என்று அவன் பன்முறை கூவிப்பார்த்தான். பதிலில்லை எங்கேனும் பகைவர்கள் மறைந்திருந்து தன்னைச் சுட்டுவிடாமல் இருப்பதற்காக அவன் தரையின் மேல் படுத்துக் கொண்டு, தோழா! எங்கு சென்றாய்? என்று வினாவினான். பதில் சொல்வார் யாருமில்லை. அவன் மனம் அனலிடப்பட்ட மெழுகுபோல் வருந்திற்று.
கீழே கவிழ்ந்து கிடக்கும் பொழுதுதான் தேகத்தின் பலவீனம் அவனுக்கு நன்றாய்த் தெரியவந்தது. உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பற்பல புண்களிலிருந்தும் இரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. குறைந்தது ஆறு இடங்களிலாவது குண்டுகள் புதைந்திருந்தன. அவனுடைய தொப்பியும், மேற்சட்டையும், பூட்ஸுகளும் அறைக்குள்ளே கிடந்தன. உறங்கிக் கொண்டிருந்தவன் திடீரென்று எழுந்து போராட நேர்ந்ததால், அவசரத்தில் அவற்றை எடுத்துக்கொள்ள முடியவில்லை. போதிய ஆடையில்லாமையால், அவன் துன்புற நேர்ந்தது. ஆனால் அங்கு தாமதித்திருப்பது அபாயம் என்பதையுணர்ந்து மெய் வருத்தத்தையும் மெலிவையும் பொருட்படுத்தாது எப்படியாவது தப்பிவிடலாம் என்று அவன் தைரியங்கொண்டு எழுந்தான்.
தப்பிச் செல்வதற்கு வழி தேடிக்கொண்டிருக்கையில் பல வெடி குண்டுகள் நாற்றுக் கூடத்திற்குப் பக்கத்தில் வெடித்தன. அவன் தைரியத்தைக் கைவிடாமல் மெதுவாகச் சென்று அருகேயிருந்த தாழ்ந்த தோட்டச்சுவரைக் கண்ணுற்றான். அறிஞர் கரோலன் ஆதியிலேயே அந்தச் சுவரைக் கட்டி வைத்திருந்தார். அது ஆபத்திற்கு உபயோகமாயிருந்தது. நாற்றுக் கூடத்திற்கு அருகே தோட்டத்தில் இரண்டு படை வீரருடைய பிரதேங்களைத் தான்பிரீன் கண்டான். அவற்றிலிருந்து டிரீஸி அந்தப் பாதையின் வழியாகவே சென்றிருக்கவேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால், டிரீஸி அங்கே தப்பியிருந்தாலும் தோட்டத்தின் மத்தியிலே கொல்லப்பட்டிருந்தல் கூடும் என்றும் அவன் சந்தேகித்தான்.
அவன் சுவரின் அடியில் சென்றவுடன் சுவருக்கு மறுபக்கத்திலிருந்து ஒரு சிப்பாய் மெதுவாகத் தலை நீட்டினான். சிப்பாய் துப்பாக்கியை அவனுக்கு நேராக வைத்துக்கொண்டு குறிபார்த்து, 'யாரது? நில் அங்கே! என்று உத்தர விட்டுச் சுட்டான். அந்தக் குண்டு குறிதவறிப்போய் விட்டது. உடனே தான்பிரீனும் பதிலுக்குச் சுட்டுவிட்டுச் சுவரிலேறி மறுபுறம் குதித்தபோது அந்தச் சிப்பாப் கீழே சுருண்டு கிடந்ததைக் கண்டான்.
வேறொரு சிப்பாய்க் கூட்டத்தார்.அப்பால் நின்று கொண்டு அவனைக் குறி பார்த்துச் சுட்டனர். அவன் தன் துப்பாக்கியை அவர்களுக்கு நேராகப் பிடித்துப் பல குண்டுகளை மழையாகப் பொழிந்துகொண்டே, அடுத்த தோட்டத்திலிருந்த மற்றொரு சுவரையும் தாண்டி வெளியே தெருவில் குதித்தான். அவன் குதித்ததுதான் தாமதம். எங்கிருந்தோ ஒரு ராணுவக்கார் வேகமாய் வந்து அவன் அண்டையில் நின்றது. அதிலிருந்தவர்களும் அவனைப் பார்த்துச் சுட ஆரம்பித்தனர். தான்பிரீன் உயிரை வெறுத்து நின்றதால், காரிலுள்ளவர்கள் நன்றாய்க் குறிபார்க்கு முன்பே எதிர்த்துச் சுடலானான். காரிலிருந்த ஒரு சிப்பாய் குண்டு பட்டுச் சாய்ந்தான். தான்பிரீன் வெகு வேகமாய் ஓடிப் பகைவரின் குண்டுகள் தன்னுடம்பில் பாயாதவாறு தப்பி மறைந்து கொண்டான். குண்டுகள் நாலா பக்கத்திலும் பறந்து கொண்டிருந்தனவேயன்றி அவன்மேல் படவில்லை; சுவர்களிலும் மரங்களிலுமே பாய்ந்துகொண்டிருந்தன. தான்பிரீன்தான் நின்ற தெரு கரோலனுடைய வீட்டுக்கும் டிரம்கொண்டரா பாலத்திற்குமிடையேயுள்ளது என்று கண்டான். அவ்வழியே சென்றால் ஆங்காங்கே நிறுத்தப்படிருந்த பட்டாளத்தாருடைய கையில் சிக்கும்படி நேரும் என்பதை உணர்ந்து, வலது பக்கமாய்த் திரும்பிச் சென்றான். சிறிதுதுரத்தில் செயின்ட் பாட்ரிக் கலாசாலை யிருந்தது. அதன் முன்புறத்தில் சுமார் 18அடி உயரமுள்ள பெரிய சுவர் உண்டு. அவன் அந்தச் சுவரைத் தாண்டிவிட்டால், சிப்பாய்களின் வலையில் அகப்படாமல்
127
தப்பி விடலாமென்று ஆவலுடன் எண்ணமிட்டான். ஆனால் பிறர் உதவியில்லாமல் அந்தச் சுவரை எப்படித் தாண்டுவது? அவன் கால்களில் பூட்ஸுகளும் இல்லை. வலது கால் பெருவிரலோ குண்டுபட்டு ஒடிந்து வேதனை கொடுத்து வந்தது. இவற்றோடு உடம்பு முழுவதும் குண்டு பட்ட புண்கள் ஆனால், உயிருக்காகப் போராடுகிற ஒரு மனிதனுக்கு எங்கிருந்தோ தைரியமும் வலிமையும் வந்து விடும் எப்படியோ அவன் ஒரே மூச்சில் அச்சுவரிலேறி அப்பால் குதித்துவிட்டான். இது பெரிய விந்தைதான். தான்பிரீன் பிற்காலத்தில் பாட்ரிக் கலாசாலைப் பக்கம் செல்லும்பொழுது எல்லாம் அந்தப் பெரிய கவரைத் தான் தாண்டியது உண்மைதானா என்று ஆச்சரியப்படுவது வழக்கம். கலாசாலைக்குள்ளே சென்றதும், அவனுக்குக் கொஞ்சம் மனஅமைதி ஏற்பட்டது. ஆயினும் அந்த இடமும் கரோலுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்ததால் சிப்பாய்கள் எந்த நேரத்திலும் அங்கு வந்து விடக்கூடும் என்பதை யறிந்து அவன் மெதுவாகச்சந்தடி செய்யாமல் ஊர்ந்து சென்றான். அவன் நடந்து செல்லும்பொழுது இடையே டோல்காநதி குறுக்கிட்டது. தங்குவதற்கு அப்பக்கத்தில் வேறு இடமில்லாததால், அவன் ஆற்றைக்கடந்து செல்லவேண்டியிருந்தது. எப்படியும் பட்டாளத்தார் நின்ற இடத்திலிருந்து வெகுதூரம் தள்ளிக்சென்று விடவேண்டியிருந்தது. வீதி மார்க்கமாய்ச் சென்றால், ஆற்றைத் தாண்டப் பாலம் இருக்கும். ஆனால் வீதியில் பட்டாளத்தாரும் இருப்பார்கள் அல்லவா? எவ்வளவு குளிராயிருந்தாலும் நதியில் விழுந்து நீந்தி அக்கரை செல்லவேண்டுமென்று தான்பிரின் துணிந்தான். ஆற்றில் குதித்துவிட்டான். நீந்துகையில் கால்களில் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்த துவாரங்களில் ஒரு பக்கமாய்த் தண்ணிர் புகுந்து மறுப்பத்தால் வெளியே சென்றது. அத்தனைக் கொடுந்துன்பத்திலும் அவனுக்குத் தண்ணீருடைய தண்மை அதிகமாய்த் தெரியவில்லை. இத்தகைய சந்தர்ப்பத்தில் நெருப்புச் சுடாது, நீரும் குளிராது, இயற்கை உணர்ச்சியே அற்றுப்போய்விடுமல்லவா மனத்திலே ஒரு பெரும் உணர்ச்சி குடிகொண்டிருக்கும் பொழுது, அற்பமான துன்பங்களும் இன்பங்களும் ஒருவனைப் பாதிக்கமாட்டா. எனவே கைகளையும் கால்களையும் அடித்துக் கொண்டு தான்பிரீன் எப்படியோ அக்கரைசேர்ந்தான்.
ஆற்றின் மறுகரையில் சமீபத்தில் சில வீடுகளிருந்தன. அவையிருந்த இடம் மரங்களடர்ந்த பொட்டனிக் அவினியூ என்று அவன் தெரிந்து கொண்டான். அவன் நின்றது வீடுகளின் பின்புறத்தில். மேற்கொண்டு அவனால் நடக்கமுடி யவில்லை. அவனுடைய உடம்பிலிருந்து இரத்தம் வழிந்த வண்ணமாயிருந்தது. மேற்கொண்டு வெளியே தங்கினால் வெறுங்களைப்பினாலேயே இறந்து விழநேரும். ஆதலால் ஏதாவது ஒரு வீட்டிற்குச்சென்று இளைப்பாற வேண்டு மென்று அவன் விரும்பினான்.
யாதொரு யோசனையுமில்லாமல், அவன் திடீரென்று சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். அன்றிரவு அவன் எந்த வீட்டைத் தட்டியிருந்தாலும், அவன்பாடு அன்றோடு தீர்ந்து போயிருக்கும். அந்நேரத்தில் (காலை 3 அல்லது 4 மணிக்கு) தலைவிரி கோலமாய், உடம்பெல்லாம் இரத்தம் பெருகி, உடை யெல்லாம் நனைந்து, அவன் நின்றுகொண்டிருந்த நிலையை யார் கண்டாலும் திடுக்கிட்டு போயிருப்பர்.
எந்தத் தெய்வமோ வழிகாட்டியது என்று சொல்லும்படியாக, அவன் அந்த வீட்டின் கதவைத் தட்டினான்.
ஒரு முறை தட்டியதில் ஒருவரும் ஏனென்று கேளாததால், அவன் மீண்டும் தட்டினான். ஒரு மனிதர் வந்து கதவைத் திறந்து எதிரே நின்று கொண்டிருந்த் உருவத்தைக் கண்டார். தான் பிரீன் மெய்மறந்த நிலையில், வாய் குழறிக் கொண்டே தனக்குத் தங்க இடம் வேண்டுமென்று வேண்டினாான். அவ்விட்டுக்காரர் அவனை யாரென்றும், எவ்வாறு காயமுற்றான் என்றும் கேட்க வில்லை. உள்ளே வாருங்கள் எங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்யக் காத்திருக்கிறோம் என்று வரவேற்று உள்ளே அழைத்தார்.
அவரும் அவர் மனையும் தான்பிரீனைப் படுக்கையில் படுக்கவைத்து, உடனே அருகே வசித்துக்கொண்டிருந்த லாங் என்ற தாதிப்பெண்ணை அழைத் துவந்தனர். அவர்கள் அவனுடைய புண்களுக்கு மருந்திட்டு, உற்சாகமளிக்கும் பானமொன்றையும் குடிக்கக் கொடுத்தனர். அந்தப் பானம் தாதிப் பெண்ணால் வெளியிலிருந்து வாங்கிக் கொண்டுவரப்பட்டது.
தான்பிரீனை ஆதரித்து வீடு கொடுத்து உதவிய கணவான் பிரெட் ஹோம்ஸ் என்பவர். அவருக்குப் புரட்சியில் அபிமானமில்லாததோடு ஆங்கிலேயரிடமே அனுதாபமுண்டு. ஆயினும், அவரும் அவர் பத்தினியும் தான்பிரீனைத் தங்கள் சொந்தப்பிள்ளையைப் போலும், சகோதரனைப்போலும் பாவித்துச்சிகிச்சை செய்தனர். தான்பிரின் தனக்குக் காயங்கள் எப்படியேற்பட்டன என்பதைச்சொல்லாம லிருப்பினும், அவர்கள் வேண்டிய உபசாரம் செய்து உயிரைக்காப்பாள்றினர்.
நன்றாக விடிந்த பிறகு தான்தான்பிரீன் அவர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். ஹோம் அவனைத் தேற்றி நன்றாகக் குணமடையும்வரை தாங்கள் பாதுகாப்பதாயும், பின்னால் வேறு பந்தோபஸ்தான இடத்திற்கு அனுப்பி, வேண்டிய உதவி செய்வதாயும் வாக்களித்தனர்.
மறுநாள் தோழர்கள் தான்பிரீனை ஒரு காரில் வைத்து, மேட்டர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் சென்றனர். வழியில், சார்லஸ் தெருவில் டிர்லி அவனைக் கண்டு உயிர்தப்பிவந்த விபரத்தைச் சொன்னான்.
வைத்திய சாலையில் டாக்டர்கள் தான்பிரீனுக்கு மிகுந்த அன்புடன் சிகிச்சை செய்து வந்தனர். ஆனால் அங்கு அடிக்கடி பட்டாளத்தாருடைய சோதனை நடந்து வந்தது. அப்படி அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வெடிகுண்டினால் காயமடைந்த ஒரு பையனைத் தேடி ஒரு சோதனை நடந்தது. அதனால், நேர்ந்த விபரீதத்தை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
20
பிரிவும் பிரிவாற்றாமையும்
* * *
தான்பிரீன் மேட்டர் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டிருக்கும் பொழுது, அவனுடைய உயிர்த் தோழன் ஸீன் டிரீஸி சிறிது கூடச் சோம்பியிருக்கவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்த தன்னுடைய நண்பனுக்கு எவ்வித ஆபத்தும் நேராமலிருக்க வேண்டுமென்று, அவன் கண்ணில் எண்ணையூற்றிக்கொண்டு கவனித்து வந்தான். பீலர்களோ, பட்டாளத்தார்களோ ஆஸ்பத்திரிப்பக்கம் சென்றால், உடனே சென்று அவர்களை எதிர்த்து போராடவேண்டும் என்பது அவன் தீர்மானம். அக்டோபர் 14ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் அவன் எதிர்பார்த்திருந்த சோதனை நடந்தது. அவன் அதை முன்கூட்டியே அறிந்து உடனே வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டான்.
அவன் நேராகத் தொண்டர்களுடைய தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று தன்னுடன் ஒர் உதவிப்படை அனுப்பவேண்டும் என்று கேட்டான். அவர்கள் அவ்வேண்டுகோளுக்கு இசைந்தனர். டிரீஸி பல நண்பர்களை அழைத்தக்கொண்டு மற்றும் சில முக்கியஸ்தர்களையும் கூப்பிடுவதற்காக வெளிப்பட்டான். தான்பிரீனைக் காக்க வேண்டுமென்ற ஆவலினால் அவன் தன்னை அறவே மறந்து விட்டான். டப்ளின் நகரத் தெருக்களில் பகலில் தாராளமாய் நடந்து சென்றான். ஒற்றர்களோ தொண்டர்களில் எவன் தெருவில் வருவான் என்று வேட்டை நாய்போல் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் டிரீஸியைப் பின்தொடர்ந்து கவனித்து வந்தனர். அவன் அவர்களைக் கவனிக்கவேயில்லை. அவசரமாக நடந்து கொண்டிருந்தான்.
அவன் சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டுக் கடைசியாக டால்பட் தெரு விலிருந்த ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றான். அங்கு சில முக்கியமான தகவல்கள் கொடுக்கவேண்டியிருந்தது. அந்தக் கடை புரட்சிக்கட்சித் தலைவர்களான டாம் ஹண்டர், பீட்டர் கிளான்ஸி ஆகிய இருவராலும் நடத்தப்பட்டு வந்தது. அவர்கள்.ஜவுளிக்கடை என்று பெயருக்கு வைத்துக் கொண்டிருந்தார்களே தவிர அவ்விடத்தில்தான் குடியரசுப்படை சம்பந்தமான பல வேலைகளும் செய்து வந்தனர். சுருங்கச்சொன்னால், இந்தக் கடையே தொண்டர்களுடைய சதியாலோசனை மணிமண்டபம் என்று கூறலாம். பீலர்களும் அதையறியாமலில்லை. அவர்கள் இரகசியமாய்ப் பல நாட்களாக அதைக் கவனித்துக் கொண்டு வந்தனர். எனவே அங்கு செல்லும் தொண்டர்கள் அங்கு அதிக நேரம் தாமதிப்பதில்லை.
டிரீஸி கடைக்குச் சென்ற சமயத்தில் அங்கு டப்ளின் நகரப் புரட்சிப் பட்டாளத்தின் தலைவர்கள் சிலர் ஓர் அவசரக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். அவன் உள்ளே புகுந்து, கதவண்டையில் நின்று சில தகவல்களைப் பேசிக் கொண்டிருந்தான்.
அதற்குள் பட்டாளத்தார் கடைப்பக்கம் நெருங்கி விட்டனர். கடைமுகப்பில் நின்று கொண்டிருந்த டிரீஸியே பகைவரின் வருகையை முதன் முதல் தெரிந்து கொண்டவன். வேறு இரண்டு மூன்று பேர்கள் கடைக்குள்ளிருந்து துணிந்து வெளியே ஓடினார்கள்.
ராணுவ வாகனங்கள் கடை வாசலில் வந்து நின்றன. அச்சமயத்தில் கடைக்குள்ளிருந்த ஒருவன் வெளியே ஓடினான்; ஒரு சிப்பாய், வாகனத்திலிருந்து கீழே குதித்து அவனை வழிமறிக்கச் சென்றான். அப்பொழுது ஒரு ராணுவ ஒற்றன் முன்வந்து, 'அவனை விட்டுவிடு நமக்கு வேண்டியவன்.அதோ நிற்கிறான்' என்று டிரீஸியைச் சுட்டிக்காட்டினான். டிரீஸி அப்பொழுது கடைக்கு வெளியிலிருந்த தன்னுடைய சைக்கிளில் காலை வைத்து ஏறிக்கொண்டிருந்தான். உடனே ஒற்றன் அவன் மேலே பாய்ந்தான். டிரீஸியா பணிந்து கொடுப்பவன்? இடுப்பிலிருந்த ரிவால்வரை உருவிக்கொண்டு, பகைவனைத் தாக்கலானான். உடம்பு முழுவதும் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்படும்வரை அவன் பணிய மாட்டான் என்பது சிப்பாய்களுக்கு எப்படித் தெரியும்? ஆனால் அவன் போராட்டத்திற்கு தயாராயில்லாதபொழுது, எதிர்பாராத நிலையில் பகைவர்கள் அவனைச் சூழ்ந்து நின்றனர்.
வாகனங்களிலிருந்த ராணுவ வீரர்கள் அனைவரும் தங்களுடைய துப்பாக்கிகளை டிரீஸியை நோக்கிப் பிடித்துக் கொண்டு சுட ஆரம்பித்தனர். அவர்களுடைய ஒற்றன் டிரீஸியுடன் போராடிக் கொண்டிருந்ததால் அவன் மேலும் குண்டுகள் படக்கூடும் என்பதை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. ஒரு மனிதனை எதிர்ப்பதற்கு எத்தனை சிப்பாய்கள் எத்தனை இயந்திரத்துப்பாக்கிகள் டிரீஸியைச் சுற்றி நெருப்பு மழை பொழிந்தது. அவன் உடலெல்லாம் குண்டுகள் பாய்ந்தன. கடைசிவரை பகைவரை நோக்கிச் சுட்டுக்கொண்டே, அந்த உத்தம வீரன் உயிர்துறந்து பெற்றெடுத்த புண்ணிய பூமியின் மடியிலே சாய்ந்தான் அவனுடன் அவ்வழியாகச் சென்ற மூவர்களும் ராணுவத்தாருடைய குண்களுக்கு இரையாயினர். டிரீஸியுடன் போராடிய ஒற்றனும் படுகாயமடைந்து கீழே வீழ்ந்துகிடந்தான்.
தேசத்திற்கு இதயத்தையும், தொண்டிற்குக் கைகளையும் அர்ப்பணம் செய்து டிரீஸியின் வாழ்க்கை இவ்வாறுமுடிந்தது. தோழனுடைய உயிரைப் பாதுகாக்க அவன் தன் ஆருயிரையே பலிகொடுத்தான் மாளிகைகளில் தங்கி, அறுசுவையுண்டிகளை உண்டு, கோழைகளாயும், அடிமைகளாயும் அந்நியருடைய கொடுங்கோலுக்குப் பணிந்து வாழும் மனிதர்களின் நடுவிலே, பெற்று வளர்த்த தாயின் மானத்தை அந்நியர் குலைத்துக் கொண்டிருக்கும் பொழுது வீரத்திரு மகன் சுகத்தையும் போகத்தையும் விரும்புவானா? ஸீன் அவை ஒன்றையும் விரும்பாது விட்டையும் வாசலையும் விட்டு, உற்றாரையும் பெற்றாரையும் துறந்து பகலில் தங்கிய இடத்தில் இரவில் தங்காது அலைந்து, பகைவருடன் பற்பல இடங்களில் வீரப் போராட்டங்கள் செய்து, கடைசியாக டப்ளின் கடைத் தெருவில் பகைவருடைய குண்டுகளை நெஞ்சிலேதாங்கி வீர மரணமடைந்தான்!
அவன் படுக்கும் மெல்லிய பஞ்சனை கல்லறையின் கீழுள்ள சவக்குழி: அவன் உண்ணும் சுவையுள்ள உண்டி நஞ்சினும் கொடியது!
அவன் வாழ்விலும் வீரன், சாவிலும் வீரன். அவனைப்பர்க்கிலும், ராணுவ அறிவும், போர்த்தந்திரங்களும் தெரிந்தவன் அயர்லாந்தில் கிடையாது. 28 வயது நிரம்பும் முன்னரே, அவன் இறந்துவிட நேரினும், அந்த வாழ்க்கையில் அவனுடைய அபாரத் திறமைகளை வெளிக்காட்டி விட்டான். பொதுவாக ஐரிஷ் தொண்டர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்துவந்த கெரில்லாச்சண்டை வல்லமை மிக்க தலைவர்களால் மிகத் திறமையோடு நடத்தப்பட்டது என்பதை உலகத்தார் அனைவரும் ஒப்புக்கொள்வர். இத்தலைவர்களிலே சிறந்தவன் டிரீஸி. அவனது கூரிய யுத்திகளை வைத்துக் கொண்டே மற்றத் தளகர்த்தாக்கள் அற்புதப் போராட்டங்கள் செய்து பெரும் புகழ் படைத்தனர்.
டால்பட் தெருவில் நடந்த போராட்டத்தைக் குறித்து தான்பிரீனுக்குப் பல நாட்கள் வரை ஒன்றுமே தெரியாது. அவன் குருட்டு நம்பிக்கை கொள்பவனல்லன்; அவனிடம் கற்பனா சக்தியும் அதிகமில்லை. அப்படியிருந்தும் 13ஆம் தேதி வியாழக்கிழமை மாலை, அவன் தனது கட்டிலின் பக்கத்திலே டிரீஸியின் உருவம் வந்து நின்றதாகக் கண்டான். இதைக் கேட்டவர்கள் அது கனவு என்றும், மனைவிகற்பம் என்று சமாதானம் கூறி விடலாம். ஆனால் அவனுக்குத் தான் கண்ட காட்சியை என்றும் மறக்க முடியவில்லை.
அன்று, மாலை மைக்கேல் காலின்ஸ் தான்பிரீனைக் காணச் சென்றார். உடனேயே தான்பிரீன், 'டிரீஸி எங்கே?' என்று முதலாவதாகக் கேட்டான். உள்ளதைச் சொன்னால் அவனுடைய புண்கள் ஆறுவதற்கு இடையூறாயிருக்குமென்றும், அவனுடைய மனம் முறிந்து போகும் என்றும் கருதி, 'அவன் நாட்டுப்புறத்துக்குப் போயிருக்கிறான், ' என்று காலின்ஸ் கூறினார்.
பத்து நாட்களுக்குப் பின்பு தான்தான்பிரீனுக்கு முழுவிவரம் தெரியும். பிரிட்டிஷார் டிரீஸியின் பிரேதத்தைக் டால்பட் தெருவிலிருந்து படைவீடுகளுக்குக் கொண்டு போய்ப் பரிசோதனை செய்து விட்டு, அதை அவனுடைய நண்பர்களிடம் அெகாடுத்தனர். பிரேதம் டிரீஸியின் சொந்த ஊரான திப்பெரரிக்குக் கொண்டு போகப்பட்டு, ராஜாக்களும் கண்டு பொறாமைப்படக்கூடிய முறையில் கெளரவிக்கப்பட்டது. திப்பெரரி வாசிகளில் எவனுக்கும் அவ்விதமான மரியாதைகள் செய்யப்பட்டதில்லை. பல மைல் நீளமுள்ள பெரிய ஊர்வலத்துடன் பிரேதம் கல்லறைக்கு எடுத்துச் செல்வப்பட்டது. டிரீஸியின் இறந்த உடலைக் கண்டும் அஞ்சுவது போல், பிரிட்டிஷாருடைய துருப்புக்கள் ஆயுதம்தாங்கி வழிமுழுவதும் நின்று கொண்டிருந்தன. அன்றையதினம் தென் திப்பெராசிப் பிரதேசம் முழுவதும் துக்கத்தினமாகக் கொண்டாடப்பட்டது. அன்று அழுது கண்ணீர் பெருக்காத ஜனங்களேயில்லை. டிரீஸியின் சமாதி கில்பிக்கின் என்னுமிடத்தில் இருக்கிறது. அது பிற்காலத்தில் ஐரிஷ் ஜனங்கள் யாத்திரை செல்லும் புனித ஸ்தலமாகி விட்டது!
மேட்டர் ஆஸ்பத்திரியில் வைத்தியர்களும் தாதிகளும் தான்பிரீனுக்குச் செய்துவந்த உபசாரத்திற்கு அளவேயில்லை. அக்காலத்தில் குண்டுப்பட்டுக் காயமடைந்துவர்கள் ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டுவரப்பட்டால், உடனே வைத்தியர்கள் டப்ளின் மாளிகைக்குத் தகவல்கொடுக்க வேண்டுமென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவின் மூலம் தான்பிரீன் போன்ற நபர்களைப் பிடித்துவிடலாமென்று அவர்கள் மனப்பால் குடித்து வந்தனர். ஆனால் வைத்தியர்கள் தங்களுடைய அரசியல் கொள்கை எப்படியிருந்போதிலும், சர்க்காருடைய உத்தரவை நிறைவேற்றுவதில்லை. அது அவர்களுடைய பெருந்தகைமை.
அடுத்த வெள்ளிக்கிழமையன்று தான்பிரின் மேட்டர் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினான். சில நபர்கள்.அவனை நகரின் தென்பகுதியிலிருந்த வேறொரு வைத்தியப் பெண்ணினுடைய வீட்டுக்குக் கொண்டுபோனார்கள். ஆஸ்பத்திரியில் மேற்கொண்டு தங்குவது அபாயமாய்ப் போய்விட்டது. புதிய வீட்டில் அவன் குணமடைந்து சிலநாட்களில் எழுந்து பக்கத்தில் நடமாடக்கூடிய வலிமையும் பெற்றான். அவனை வேறிடத்திற்கு அழைத்துப் போகவேண்டிய அவசியமேற்பட்டது. பாரி அம்மையின் விட்டில் அவனுடைய சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரண்டு மூன்று தினங்களில் அந்தத் தெருவையும் பட்டாளத்தார் சோதனை இட்டனர்.
21
திருமணம்
* * *
தான்பிரீன் நிலையாக ஓரிடத்திலே தங்கியிருக்க முடியவில்லை. அடிக்கடி இடம் மாற்றிக்கொண்டேயிருந்தான். ஏனெனில், இங்கிலாந்து ஆயிரக்கணக்கான புதிய சிப்பாய்களை அயர்லாந்துக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தது. இங்கிலாந்திலுள்ள சிறைச்சாலைகளெல்லாம் காலியாகி, அவைகளிலிருந்த பேடிகளும் தூர்த்தர்களும் அயர்லாந்தின் மிது கவிழ்ந்து விடப்பட்டனர் அந்தக் கொலைகாரர்கள் உயிரைப் பழிவாங்கினாலும், எத்தனை ஊர்களைக் கொள்ளையடித்தாலும், தீ வைத்து எரித்தாலும் கேள்வி கேட்பதில்லை என்று அதிகாரிகள் அவர்களுக்கு உறுதிமொழி கொடுத்தனர்.
இதுகாறும் தான்பிரீன் தனிமையாகவே வாழ்ந்தான். தேசத்தில் புரட்சிப் போர் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது. அவனுடைய உயிருக்கு எந்த நேரம் ஆபத்து என்பது தெரியாமலிருந்தது. அவனுடைய தலையைக் கொய்து சர்க்காரிடம் கொடுப்பவர்களுக்குக் கை நிறையப் பொற்குவியல் கிடைத்திருக்கும். நாடும், நகரும் நன்கு அறியும்படி அவன் கலகக்காரருடைய தலைவன் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நிலையில் அவன் திருமணம் செய்து கொண்டான். 1921 ஜூன் மாதம் 12ஆம் தேதி ஆங்கிலேயருக்கும் அயர்லாந்திற்கும் சமாதானம் ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அத்திருமணம் நிறைவேறியது.
தான்பிரீன் 1919 செப்டம்பரில் பிரிகிட் மலோன் என்னும் மாதினால் சிகிச்சை செய்யப்பட்டு வந்த விஷயம் முன்னரே கூறப்பட்டிருக்கிறது. அம்மாதே அவனுடைய மனைவியானாள். அவளுடைய கவனத்தினாலும் ஆதரவினாலுமே அவன் விரைவாகக் குணமடைய முடிந்தது. பிரிகிட்டும் அவளது சகோதரி ஆன்னியும் அவனைத் தங்கள் குடும்பத்தானாகவே கருதி உபசரித்து வந்ததை அவன் என்றும் மறந்ததில்லை. அவன் மலோன் குடும்பத்தாரைக் கண்டமுதல், நாளுக்கு நாள் அவர்களுடைய நேசப்பான்மை வளர்ந்து வந்து, கடைசியாக அக்குடும்பத்தைச் சேர்ந்த கட்டிளங்கன்னியை அவனே மணந்து கொள்ளவும் நேர்ந்தது. 1920லேயே தான்பிரீனும் பிரிகிட்டும் மனந்து கொள்வதென்று முன்கூட்டி உறுதி செய்து கொண்டிருந்தனர்.
டிரம் கொண்டரா சண்டைக்குப்பின்னால் தான்பிரீன் காயமடைந்து கிடக்கையில் பிரிகிட் அடிக்கடி சென்று அவனைப் பார்த்துவந்தாள். தான்பிரீனை மணந்து கொள்வதில் எத்தனை கஷ்டங்கள் இருந்தன என்பதைப் பிரிகிட் அறியாதவளல்ல. அவன் எந்த நிமிஷம் பகைவரால் சுடப்படுவான் என்பது நிச்சயமில்லை. அவனுடைய அன்புக்குப் பாத்திரமான மனைவி என்ற காரணத்தால் பிரிகிட்டையும் பட்டாளத்தார் இரவு பகல் எந்த நேரத்திலும் கொடுந் துன்பங்களுக்கு ஆளாக்குவார்கள். அக்காலத்தில் அவனுடன் நட்பாயிருப்பதே குற்றம், அதிலும் மனைவியாயிருப்பது எவ்வளவு பெரிய குற்றம் ஒற்றர்கள் பிரிகிட்டின் வீட்டை, நினைத்தபொழுதெல்லாம் சோதனை போடுவார்கள். 'உன் கணவன் எங்கே?' என்று கேட்டு அவளைச் சித்திரவதை செய்வார்கள். இத்தனை துன்பங்களும் அவளுக்கு வெகு நன்றாய்த் தெரிந்திருந்தும், அவள் எதையும் பொருட்படுத்தாது, அந்த வீர சிங்கத்தையே காதலித்து மணந்து கொள்ள இசைந்தாள். தான்பிரீனும் அவளை மணந்து கொள்வதால் தேசியப் போராட்டத்தில் தனக்கு அதிக வலிமையாகும் என்று கருதினான்.
திருமணத்தன்று தொண்டர்கள் அணிவகுத்து நின்ற காட்சி ஒரு பெரிய மன்னரைக் கெளரவிப்பது போலிருந்தது. கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு ஸீன் ஹோகன், டின்னி லேவலி முதலிய தோழர்கள் தான்பிரீனுடன் ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தனர். இரவுமுழுவதும் அவர்கள் உறங்காது தங்கள் தோழனைக் கேலி செய்வதும், அவனுக்கு உபதேசங்கள் செய்வதுமாகக் காலங்கழித்தனர். பகைவர்களுடைய குண்டுகளுக்கெல்லாம் தப்பிய தான்பிரீன் தோழர்களுடைய தாக்குதலுக்குத் தப்பமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்!
திருமணத்தில் நண்பர் யாவருக்கும் பெரிய விருந்தளிக்கப்பட்டது. அன்று முழுவதும் எங்கும் ஆண்களும் பெண்களும் ஆனந்தமாய்ப் பாடவும் ஆடவுமாயிருந்தனர். இரவில் எல்லோரும் நடனம் செய்தனர். பட்டாளத்தார் வந்து விடாமல் வெளியிடங்களிலே காத்துக் கொண்டிருந்த தொண்டர்கள் இடையிடையே வேறு தொண்டர்களைத் தங்கள் இடங்களில் வைத்துவிட்டு வந்து, தாங்களும் கல்யான விமரிசைகளில் கலந்துகொண்டனர். ஆனால் பையன்கள் நடனமாடும் பொழுதும் துப்பாக்கிகளை மட்டும் மறக்கவில்லை. அவை பக்கத்து ஜன்னல்களில் தயாராயிருந்தன. கூத்திலும் பாட்டிலுங்கூட அவர்கள் போருக்குத் தயாராகவேயிருந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு தான்பிரீன் தம்பதிகள் பல அன்பர்களுடைய விருந்தினர்களாக அநேக ஊர்களில் தங்கிவந்தனர். சென்ற இடங்களிலெல்லாம் அவர்களுக்குக் கிடைத்த பாதுகாப்புக்கும் உபசாரத்திற்கும் அளவில்லை. அவர்களை வாழ்த்தாத நண்பரேயில்லை; வியந்து போற்றாத ஜனங்களேயில்லை.
22
சமாதானம்
* * *
1921 - ஆம் வருடம் ஜூன் மாதம் ஆரம்பத்திலேயே சில ஐரிஷ் தலைவர்கள் இங்கிலாந்தோடு சமாதானம் செய்துகொள்ள முயற்சித்த செய்தி வெளிவந்தது. ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் சமாதானம் அமுலுக்கு வரவேண்டுமென்று உடன்படிக்கையும் செய்யப்பட்டது.
தொண்டர்கள் இந்தச்சமாதானத்தில் கொஞ்சம் ஓய்வுகிடைக்கும் என்றும், பின்னர் மீண்டும் சண்டையை ஆரம்பிக்கலாம் என்றும் எண்ணியிருந்தனர். அவர்களிடம் வெடிமருந்து அதிகமாயில்லை. குண்டுகளும் குறைவு. ஓய்வுக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வெடிமருந்தை ஏராளமாய் வரவழைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் தீர்மானித்தனர். சமாதானம் பின்னால் தேசத்தைப் பிளவுபடுத்திப் பெருத்த அவமானத்தை விளைவிக்குமென்ற விஷயம் அவர்களுக்குத் தெரியாமற் போய்விட்டது. சமாதானக் காலத்தில் தான்பிரீன் தென்பகுதியிலிருந்த குடியரசுப் படையின் 'குவார்ட்டர் மாஸ்டர்' பதவியில் இருந்தான். ஆனால், பின்னால் அப்பதவியை ராஜினாமாச் செய்துவிட்டான். அக்காலத்தில்தான் அயர்லாந்து முழுவதும் சிதறிக்கிடந்த குடியரசுப் படையின் பிரிவுகள் பெருஞ்சேனைகளாக ஒன்று சேர்க்கப்பட்டன.
சமாதானக் காலத்தில் தான்பிரினும் மற்றத் தொண்டர்களும் நகரங்களில் சுயேச்சையாக நடமாட முடிந்தது. சென்ற இடமெல்லாம் ஜனங்கள் அவ்ர்களை வரவேற்று, சுதந்திர வீரர்கள் என்று பாராட்டிப் புகழ்ந்தனர். இரண்டு
ஷங்களுக்கு முன்னால் அவர்களைக் கொலைகாரர்கள் என்று கூறிவந்த ஜனங்களே, பின்னால் அவர்களைப் போற்றிப்புகழ நேர்ந்தது!
செப்டம்பர் மாதம் முடிவில் அவன் டப்ளினுக்குச் சென்று தங்கியிருந்த போது, அங்கிருந்த தொண்டர்படைத் தலைவர்கள் அவனுக்கு ஒரு தங்கக்கடிகாரமும், சங்கலியும் பரிசலித்து அவனைப் பாராட்டிப் புகழ்ந்தனர்.
சமாதான உடன்படிக்கை கையெழுத்தாவதற்குச் சில தினங்களுக்கு முன்னால் தான்பிரீன் டப்ளினை விட்டுத் தென்பாகத்திற்குச் சென்றான். தொண்டர்களையெல்லாம் ஒன்று சேர்த்துப் போலிச்சமாதானத்தை எதிர்த்து நிற்கும்படி செய்து விட்டால், தலைவர்கள் அவர்களுக்கு விரோதமாக நடக்க மாட்டார்கள் என்று அவன் நம்பியிருந்தான். தொண்டர்களே அரசியல்வாதிகளுக்கு வழிகாட்ட வேண்டியிருந்தது.
தான்பிரீன் டிசம்பர் 7ஆம் தேதி மீண்டும் டப்ளினுக்குச் சென்று லியாம் ஸீன் ஹோகன் முதலிய நண்பர்களைக் கண்டு, சமாதானத்தைத் தொலைத்து, உடனே சண்டையை மறுபடி தொடர்ந்து நடத்துவேண்டுமென்று வற்புறுத்தினாான். குடியரசுப் படையில் பிளவு ஏற்படாமலும், நாட்டுமக்கள் சோம்பலில் ஆழ்ந்து விடாமலும் இருக்க வேண்டுமானால், போர் நடத்துவதே உத்தமம் என்பதை விளக்கினான். பிரிட்டிஷாருடன் எவ்விதமான சமாதானம் செய்யப்பட்டாலும் ஜனங்கள் அதை ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில், மக்கள் போராட்டத்தினால் பெரும் நஷ்டங்களடைந்து களைப்புற்றிருந்தனர். ஆதலால் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு, அதன்படி புதிய தேர்தலை நடத்தி, அதன் மூலம் ஜனங்களுடைய அபிப்பிராயத்தை தெரிந்துகொள்வது சரியான முறையன்று என்று அவன் வாதாடினான். தலைவர்கள் யாவரும் அவனுடைய நோக்கத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். பழைய நண்பர்கள் பலரும் அவனை இவ்விஷயத்தில் கைவிட்டனர்.
அவன் தன் முயற்சி தோல்வியுற்றதன்மேல் அயர்லாந்தை விட்டு வெளியேறி, அந்நிய நாடுகளுக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்தான். அவனும் ஸீன் ஹோகனும் லண்டனில் இருந்த இந்தியத் தலைவர்களை இது சம்பந்தமாய்க் கலந்து பேசிய பொழுது அவர்கள், 'ஐரிஷ்காரர்களாகிய நீங்கள் உங்கள் நாட்டுப் போராட்டத்தையே முடிக்காலமல் இடையில் நிறுத்திவிட்ட பொழுது, நீங்கள் இந்தியாவுக்கு வந்து என்ன செய்துவிட முடியும்?' என்று கேட்டார்கள். இதனால் தான்பிரீன் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்று கருதி, அமெரிக்காவுக்குப் புறப்பட ஏற்பாடு செய்தான். இடையில், அவனுடைய உயிர்த்தோழன் ஸீமஸ் ராபின்ஸனுக்கு டப்ளினில் திருமணம் நடந்தது. தான்பிரீன் கூடவே இருந்து அதை நடத்திவைத்தான்.
அவன் அயர்லாந்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்னால் குடியரசுப் படையின் முக்கியமான அதிகாரிகளைக் கண்டு, மீண்டும் போரை ஆரம்பிப்பதின் அவசியத்தை வற்புறுத்திக் கூறி, அதை ஆதரிக்கும்படி வேண்டினான். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தால், அவன் அயர்லாந்தை விட்டு வெளியேற வேண்டியிருந்திராது.
தான்பிரீன் நாட்டைவிட்டுப் புறப்படும்பொழுது, அதுவரை தானும் நண்பர்களும் செய்துவந்த அரும்பெரும் முயற்சிகள் வீணாக்கப்பட்டதையும், அவர்களுடைய தியாகமெல்லாம் தேசத்தை இரண்டு பிரிவுகளாக வெட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டதையும், அந்நிய அரசனுக்கு 'ராஜா விசுவாசமாக' இருப்பதாகப் பிரமாணம் செய்ய வேண்டிய கட்டுப்பாடுடைய சுதந்திரமே கிடைத்திருப்பதையும் எண்ணி மனம் வருந்தினான்.
ஸீன் ஹோகன் முன்கூட்டியே லண்டனுக்குச் சென்று அவனுடன் சேர்ந்து கொண்டான். அதுவரை அவன் தேசத்தை விட்டு வெளியேறி எந்த அந்நிய நாட்டையும் கண்டதில்லை. லண்டன் நகரின் புதுமைகள் அவன் தாய்நாட்டைப் பற்றிக் கொண்டிருந்த மனக்கவலையைக் கொஞ்சம் மறப்பதற்கு உதவி செய்தன. அந்நகரில் அவன் இரண்டு வாரம் தங்கியிருந்து, ஆங்காங்கிருந்த விசேஷங்களைக் கண்ணுற்று வந்தான்.
அங்கிருந்து நேராக அமெரிக்க ஐக்கிய மாகாணத்திற்குச் செல்லமுடியா தென்பதை அறிந்து அவனும் ஹோகனும் முதலில் கனடாவுக்குப்போய், அங்கிருந்து ஐக்கிய மாகாணத்திற்குள் நுழைந்துவிடவேண்டும் என்று தீர்மானித்தனர். அவர்களிடம் போதிய பணமில்லை. கனடாவுக்குள் இறங்குவதற்கு அனுமதிச் சீட்டுகளுமில்லை. பின்னால் ஏதோ தந்திரம் செய்து அனுமதிச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டனர்.
மூன்று வாரம் கப்பலில் பிரயாணம் செய்து அவர்கள் செளக்கியமாகக் கனடாவையடைந்தனர். அங்கிருந்து அமெரிக்க ஐக்கிய மாகாணத்திற்குப் போய், சிக்காகோ நகரையடைந்தனர். அங்கேதான்பிரீனுடைய இரு சகோதரர்களான ஜான், பாட் என்பவர்களும் சகோதரியான மேரியும் அவர்களைச் சந்தித்தனர். அவர்கள் பல வருஷங்களாக அமெரிக்காவிலேயே தங்கியிருந்தவர்கள். வெகுதொலைவிலிருந்த அந்த அந்நிய நாட்டிலும், தான்பிரீன் தம் பந்துக்களின் மத்தியிலே வாழ நேர்ந்ததால், தான் அயர்லாந்திலேயே இருந்ததாக எண்ணிக்கொண்டான். வேறு பல ஐரிஷ் நண்பர்களும் அவனைக் கண்டு மிகுந்த உபசாரம் செய்தனர். நாக்லாங்கிலே அவனுடன் போராடிய ஒ'பிரியன் அவனைக் கண்டு பேசினார். அமெரிக்காவில் பல ஐரிஷ்காரர்கள் ஏராளமான மூலதனங்களைப் போட்டுப் பெரிய தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருப்பதைக் காணத்தான்பிரீன் மகிழ்ச்சியடைக்கான்.
பிறகு அவன் பிலடல்பியா, கலிபோர்னியா முதலிய நகரங்களைப் பார்வையிட்டான். அக்காலத்தில் அவனுக்கு அயர்லாந்தில் நடந்து வந்த விஷயங்களைக் குறித்து அடிக்கடி தெரிந்து கொள்ளச்சந்தர்ப்பம் ஏற்பட்டது. உடன்படிக்கைக்குப் பிறகு அயர்லாந்தின் நிலைமையைக் குறித்து அமெரிக்கப் பத்திரிகைகள் விரிவான செய்திகளை வெளியிட்டு வந்தன. அவற்றிலிருந்து தொண்டர்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாய்த் தெரிந்தது. ஒவ்வொருநாளும் அவர்களுக்குள் மனஸ்தாபம் பெருகிக்கொண்டே வந்தது. அயர்லாந்திலுள்ள பிளவு அமெரிக்காவிலிருந்த ஐரிஷ் காரர்களுக்குள்ளும் பரவிவிட்டது. அவர்களும் இருபிரிவாகப் பிரிந்து நின்றனர்.
மார்ச் மாதம் ஆரம்பத்தில் லிமெரிக் நகரில் தொண்டர்கள் இருபிரிவாகப் பிரிந்து சண்டைக்குத் தயாராயிருந்ததாகச் செய்திகள் வெளிவந்தன. ஒரு பிரிவினர் உடன்படிக்கையை ஆதரித்தும், மற்றப் பிரிவினர் எதிர்த்தும் நின்றனர். அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்து விட்டால், தேசம் முழுவதும் உடனே உள்நாட்டுக் கலகம் பரவிவிடும். லிமெரிக் நகரத் தொண்டர்கள் ஒரு சிறு சமாதானம் செய்து கொண்டு தான்பிரீனை உடனே புறப்பட்டு வரும்படி கம்பியில்லாத் தந்திமூலம் ஒரு செய்தி அனுப்பியிருந்தனர்.
தான்பிரீன் அப்பொழுது கலிபோர்னியாவில் இருந்தான். இரண்டு தினங்களில் அவன் அங்கிருந்து சிக்காகோவுக்கும் பிலடல்பியாவுக்கும் சென்று, பழைய நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, ஹோகனுடன் நியூயார்க் நகரையடைந்தான். அங்கிருந்து கப்பலேறுவது எளிதென்று அவர்கள் கருதியிருந்தனர். போதுமான பனமும் அனுமதிச் சிட்டுக்களும் இல்லாமையால், அவர்கள் அமெரிக்காவுக்கு வரும்பொழுது ஏற்பட்ட கஷ்டம் அங்கிருந்து புறப்படும் பொழுதும் ஏற்பட்டது.
தான் பிரினும் ஹோகனும் பின்னும் பல ஏமாற்றங்களை யடைந்து, கடைசியாக மிகுந்த முயற்சியின்மேல் ஒரு கப்பலில் ஏறிக் கொண்டு அயர்லாந்திலுள்ள கோப்நகரை நோக்கிப் புறப்பட்டனர்.
ஏப்ரல் மாத ஆரம்பத்தில் அவர்கள் கோப் நகரை அடைந்தனர். அங்கு ஒரு நபர் அவர்களைச் சந்தித்து வரவேற்று, தான்பிரீனுடைய மனைவி ஓர் ஆண் மகனைப் பெற்றிருப்பதாயும், தாயும் குழந்தையும் அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாயும் அறிவித்தார்!
23
முடிவுரை
* * *
தான்பிரீன் டப்ளின் நகருக்குச் சென்றபொழுது வீர அயர்லாந்து பிளவுபட்டுக் கிடந்ததைக் கண்டான். பழைய குடியரசுப் படை இரண்டு பிரிவாகப் பிரிந்து, 'பிரீஸ்டேட் படை', 'குடியரசுப் படை என்ற இரண்டு பெயர்களுடன் விளங்கியது. பிரிட்டிஷ் துருப்புகளால் காலி செய்யப்பட்ட படை வீடுகளை எல்லாம் இரு படைகளும் பிடித்துக்கொண்டன. தேசம் முழுவதும் இரு படைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் போராடத் தயாராய் நின்றன.
தான்பிரீன் இரு கட்சியாரிடமும் சென்று அடிக்கடிசமாதானப்படுத்த முயன்றான். அவர்களை அழைத்துக்கூட்டங்கள் நடத்தினான். அவனுடைய நன்முயற்சியால் இரு கட்சித் தலைவர்களிலும் சிலர் ஒன்றுகூடி விவாதம் செய்து, கடைசியில் ஒரு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர். அந்த உடன்படிக்கையின் விவரம் முழுவதும் மே 1ஆம் தேதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. தொண்டர்களுக்குள் பிளவு ஏற்பட்டுக் கலகம் நேருமானால், அதனால் அயர்லாந்து பல நூற்றாண்டுகள் தலைதுாக்கமுடியாதபடி பெரும் நஷ்டமடையும் என்பதும், எல்லாத் தொண்டர்களும் உடனேவேற்றுமைகளை மறந்து ஐக்கியப்பட வேண்டும் என்பதும், தலைவர்கள் யாவரும், பொது மக்களும், யுத்த வீரர்களும் தேசத்தின் நிலைமையை உணர்ந்து தங்கள் வலிமையைத் தொலைக்கக்கூடிய எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பதும் உடன் படிக்கையில் வற்புறுத்தப்பட்டிருந்தன.
இந்தச்சமாதான உடன்படிக்கை நெடுநாள் அமுலில் இல்லாமற் போயிற்று. குடியரசுப் படையைச் சேர்ந்த சில அதிகாரிகள் அதைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர். அதற்குக் காரணமாயிருந்த தான்பிரீனும் பலமாய்க் கண்டிக்கப்பட்டான். அரசியல் தலைவர்களுக்குள்ளும் ராணுவத் தலைவர்களுக்குள்ளும் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வழியில்லாது போயிற்று. ஆயினும் இருகட்சித்தலைவர்களிலும் முக்கியஸ்தராய் விளங்கிய டிவலராவும் மைக்கேல் காலின்ஸும் புதிதாய் நடக்கவேண்டியிருந்த பொதுத் தேர்தலில் இரு கட்சிகளையும் ஒன்று சேர்த்து ஒரே ஸின்பீன்கட்சியின் சார்பாகப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டுமென்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், அந்த ஒப்பந்தமும் சிதைந்து போயிற்று. கிழக்குத் திப்பெரரி அங்கத்தினர் ஸ்தானம் காலியாயிருந்ததால், அதற்கு எந்தக்கட்சி அங்கத்தினரை அபேட்சகராக நியமிக்கலாம் என்பதைப் பற்றிப் பலத்த விவாதம் ஏற்பட்டதால் இப்படி நேர்ந்தது.
மேலும் விவசாயிகளும் தொழிலாளர்களும் குடியரசுக் கட்சியையும் பிரீஸ் டேட் கட்சியையும் எதிர்த்துத் தங்களுடைய பிரதிநிதிகளைச் சுயேச்சையாக நறுத்த முற்பட்டனர்.
உள்நாட்டுக் கலகம் ஏற்படாமல் தடுப்பதற்குத் தான்பிரீன் தன்னால் இயன்றளவு முயற்சிசெய்து பார்த்தான். அவன் முயற்சிகள் பயனற்றுப்போயின. சகோதரர்களுக்குள்ளேயே பூசல் விளைந்தது. ஒருவரையொருவர் சுட்டுத்தள்ள முற்பட்டனர். கொடிய கலகம் மூண்டுவிட்டதால், தான்பிரீன் குடியரசுப் படையுடன் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமற் போயிற்று. டின்னி லேவலி, லியாம் லிஞ்ச் முதலிய பல வீரர்களை இழக்க நேர்ந்ததைக் குறித்துத் தான்பிரீன் வருந்தினான்.
1923ஆம் ஆண்டு லியாம் லிஞ்சின் மரணத்திற்குப் பின்னால் நைர் பள்ளத்தாக்கில் நடக்கக்கூடிய ஒரு சமாதானக் கூட்டத்திற்குத் தான்பிரீன் சென்றான். இடைவழியில் பிரீ ஸ்டேட் பட்டாளத்தார் அவனையும் அவனுடன் சென்ற நண்பர்களையும் பார்த்து சுட ஆரம்பித்தனர். அப்பொழுது அவர்கள் பல திசைகளைப் பார்த்து ஒடிமறைந்துகொள்ள நேர்ந்தது. தான்பிரீன் இரண்டு நாள் காட்டுப்புறத்தில் சுற்றித்திரிந்து, பின்னால் பூமிக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு பாசறைக்குள் பதுங்கியிருந்தான். களைப்பு மிகுதியால் அவன்.அங்கே விழுந்து உறங்கிவிட்டான். சிறிது நேரத்தில் பிரீஸ்டேட் பட்டாளத்தார் அங்கு சென்று, அவனைத் திடீரென்று சூழ்ந்து கொண்டு கைது செய்தனர். அவன் விழித்துப் பார்க்கையில் நாலு புறத்திலும் பட்டாளத்தார் துப்பாக்கிகளைத் தன்னை நோக்கிப் பிடித்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். ஐந்து வருஷகாலம் வல்லமை மிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, எந்த நேரத்திலும் பகைவர்களுடைய கையில் சிக்காமல் சாமர்த்தியத்துடன் தப்பிவந்த தான்பிரீன், தன் தாட்டுச் சகோதரர்களுடைய கையில் எளிதாக அகப்பட்டு விட்டான் அவன்
அளவற்ற துக்கமடைந்து பரிதவித்த போதிலும், எதிரிகள் முன்பு தைரியத்தைக் கைவிடாதது போல் பாவனைசெய்து கொண்டான்.
பிறகு, அவன் கால்பல்லிக்குக் கொண்டு போகப்பட்டு, அங்கிருந்து திப்பெரரிக்குக் கொண்டு போகப்பட்டான். திப்பெரரியிலிருந்த பிரீஸ்டேட் அதிகாரிகள் அவனை லிமெரிக் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவன் இரண்டுமாதம் வைக்கப்பட்டிருந்தான். அந்தச் சிறையில் அவன் முன்னால் ஆஷ்டவுன் போராட்டத்தில் காயப்படுத்திய லார்ட் பிரெஞ்சினுடைய கார் டிரைவரைக்காண நேர்ந்தது. அந்த டிரைவர் லிமெரிக் சிறையில் ஓர் உத்தியோ கஸ்தனாயிருந்தான்.
லிமெரிக்கிலிருந்து தான்பிரீன் மெளண்ட்ஜாய் சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கே ஒரு வசதியுமில்லை. எனவே அவன் உண்ணவிரதம் இருக்க நேர்ந்தது. 12நாள் உண்ணாவிரதமும், 6நாள் (நீரே பருகாமல்) தாகந்தனியா விரதமும் இருந்த பிறகு, விடுதலை செய்யப்பட்டான்
அவன் சிறையிலிருந்த பொழுது திப்பெரரி வாசிகள் அவன்பால் நன்றி செலுத்தி, அவனையே தங்களுடைய குடியரசுக் கட்சியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தனர்.
சமாதான உடன்படிக்கைப்படி பிரிட்டிஷ் பார்லிமென்டால் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திர ஐரிஷ் ஆட்சி 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி ஏறபடுத்தப்பட்டது. அதன்படி அயர்லாந்துக்கு பிரிட்டிஷ் உறவு இருந்து வந்த போதிலும், ஐரிஷ் பார்லிமென்டான டெயில் ஐரானின் தலைவர் ஈமன் டிவலரா நாளடைவில் அந்த உறவு இல்லாமல் செய்துவிட்டார். அதனால் குடியேற்ற நாடு குடியரசாகிவிட்டது. ஆயினும் தொண்டர்படையினருக்குள் இடையில் ஏற்பட்ட பூசல்களால் என்றும் மறக்கமுடியாத பல கஷ்டங்கள் அயர்லாந்துக்கு ஏற்பட்டன. டப்ளினில் தொண்டர்படைத் தலைமையில் நின்று, எண்ணற்ற வீரத்தியாகங்கள் செய்து போராடிய மைக்கேல் காலின்ஸ் தன்னுடைய பழைய நண்பர்கள் கையாலேயே மடிய நேர்ந்தது! நண்பரை நண்பரே வதைத்தனர். சொத்துக்கள் நெருப்புக்கு இரையாயின. எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்தனர்!
ஆனால் ஐரிஷ் தலைவர்கள் அரசாங்கத்தை அமைத்ததோடு நில்லாமல், வெகு வேகமாக முற்போக்கான திட்டங்களைக் கையாண்டதால் நிலைமையை மாற்றமுடிந்தது.
ஐரிஷ் தலைவர்களில் முதலாவதாக டி வலராவைக் குறிப்பிடவேண்டும். அவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவர். 1913லேயே அவர் சுதந்திரப் பட்டாளத்தில் சேர்ந்தவர். 1916ஆம் வருடம் நடந்த ஈஸ்டர் சண்டையில் அவரும் தலைமைவகித்து போராடினார். அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 1917ஆம் ஆண்டு நடந்த சமாதான உடன்படிக்கையின்படி அவர் ஜான் மாதம் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பெற்றார். அடுத்தவருடம் டப்ளினில் கூடிய குடியரசுச்சட்ட கபைக்கு அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடி அவரை அரசாங்கத்தார் கைது செய்து லிங்கன் சிறையில் அடைத்தனர். அங்கிருந்து அவர்தப்பி வெளிவந்து, அமெரிக்கா சென்று அயர்லாந்துக்கு அரும்பெரும் வேலைகள் செய்தார். கடைசிச் சுதந்திரப் போருக்கு வேண்டிய பணத்தையும் அங்கேயே திரட்டிக்கொண்டார். பின்னால், தாய்நாடு திரும்பி, சுதந்திர நாட்டிற்காக அல்லும் பகலுமாக உழைத்து வந்தார். அவருடைய ஆசைக்கனவுகள் ஒவ்வொன்றாகப் பலித்துவிட்டன. பின்னால் பிரிட்டிஷார் சூழ்ச்சியால், அல்ஸ்டர் மாகாணம் வேறு, அயர்லாந்து வேறு என்று அயர்லாந்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டதை மட்டும் அவரால் மாற்றவே முடியவில்லை! அல்ஸ்டர்தான் அயர்லாந்தின் பாகிஸ்தான்.
ஆர்தர் கிரிபித் என்று அரசியல் ஞானியையும் அயர்லாந்தின் விடுதலைப் போரின் வீரச்சரித்திரத்தில் குறிப்பிடவேண்டியது அவசியம். அவர் நடத்திய பத்திரிகைகளும், எழுதிய நூல்களும் மக்களுக்கு வீரத்தை ஊட்டின தாய்மொழியாகிய கெயிலிக் மொழியின் மீது மட்டற்ற அன்பை வளர்த்தன. 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி அவர் தமது காரியாலயத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் களைப்பினால் இறந்து விழுந்துவிட்டார். அவருடைய கடுமையான உழைப்பே அவரைக் கொன்றுவிட்டது.
இளம் சிங்கம் மைக்கேல் காலின்ஸையும் அயர்லாந்து ஒரு நாளும் மறக்காது. சிரித்த முகமும், செவ்விய உள்ளமும் கொண்டவர். பயம் என்பது அவரைக் கண்டு பயப்படும். ஊர் முழுவதும் அவரைப் பிடிக்கப் போலிஸ்காரர்களும், பட்டாளத்தார்களும் திரியும்பொழுது, அவர் பெரிய வீதிகளின் முனையில் நின்று தொண்டர்களுக்கு வேலைத்திட்டம் வகுத்துக் கொண்டிருப்பார். அவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு 10,000 பவுண்டு பரிசலிப்பதாக அதிகாரிகள் கூவிப்பார்த்தார்கள். கடைசிவரை அந்தப் பதினாயிரம் பவுண்டை வாங்க அயர்லாந்திலே ஆள்கிடைக்கவேயில்லை.
இத்தகைய தலைவர்களின் பெருமையாலும் தான்பிரீன், ஸீன் டிரீஸி, லியாம் லிஞ்ச், ஹோகன், மார்ட்டின் லாவேஜ் போன்ற பல்லாயிரம் வீரத் தொண்டர்களின் தியாகத்தாலும் அயர்லாந்து விடுதலை பெற்றது. உலக சரித்திரத்தில் ஒரு பொன் ஏட்டில் எழுதவேண்டிய சரித்திரம். 43 லட்சம் ஐரிஷ் மக்கள் ராட்சத வலிமையுள்ள ஓர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்றது விசித்திரமேயாகும்!
சுதந்திர ஜோதியில் அடிமை இருளும், அறியாமை இருளும் அகன்றன: ஒவ்வொருநாளும் ஒரு முன்னேற்றம், பற்பல சீர்திருத்தங்கள் ஐரிஷ் மக்கள் மற்ற நாட்டவரைப்போல், தலைநிமிர்ந்து மிடுக்குடன் வாழுகிறார்கள்
வாழ்க சுதந்திரம்
வாழ்க வையகம்!
சுதந்திரம்
சுதந்திரத்தின் சுடரை ஏற்றி
வருவதற்காக கனத்த
இருளில் அவன் சென்றான்
திரும்பி வருவேன்
எனக்காகக் காத்திருங்கள் என்றான்
எங்கே சென்றான்?
சோகத்தில் கறுத்த
பனைக் கோடுகளுள்-
தத்தளிக்கும் கருநீலக்
கடல் வெளியினூடே-
எத்தனைத் தடைகளை
அவன் தகர்த்திருப்பான்?
கடுமையான, முனைகளில்
எப்படிப் போரிட்டான்?
தெரியவில்லை
தெரிவதெல்லாம்
சுதந்திரத்தை மீட்டு வருவதற்காகத்
தந்த உறுதிமொழிகள்...
காத்திருக்கச் சொன்ன நம்பிக்கைகள்...
அவனுக்காக சில காலம்
காத்திருப்பேன்
பிறகு, அவனும் வரவில்லையெனில்
நானே போவேன்
நானும் சிரும்பவிட்டால்
எனது பையன்களும் போவார்கள்.
...களில் கங்கோபாத்யாய,
எழுதிய வங்காளக் கவிதையைத் தழுவியது.
இளங்கோவின்
ஒரு
கவிதை:
உம் மக்களின், இளைஞர்களின்
இறந்த உடல்களின் மீதும்,
சாம்பல் மேடுகளின் மீதும்,
ஏறி நின்று
உயர்த்திய கரங்களில்
துப்பாக்கிகளை ஏந்தியபடி,
ஓங்கிய குரல்கள்
விண்ணதிர ஒலிக்க
உனது முகத்திலறைந்து கூறுகின்றோம்:
"இங்கு எமக்கொரு வாழ்வுண்டு:
எங்கள் இருப்பை“
அங்கீகரிக்க மறுக்கும்
எல்லோருக்கும்
நாங்கள் எதிரிகளே!“
உனது
இரத்தமொழுகும் கரங்கள்
வாழ்வுக்காக மரணிப்பதைத் தவிர
வேறெதனையும்
எமக்கு உணர்த்தவில்லை.
அயர்லாந்து
மண்ணில் உள்ள
பிரிட்டிஷ் படைவீரனுக்கு
ஓர் கடிதம்
- பேட்ரிக் கால்வின்
படைவீரனே
இங்கு வரவேண்டும் என்று
நீ யாரையும் கேட்கவில்லை
அது எங்களுக்குத் தெரியும்.
நீ ஆணைகளுக்கு அடிபணிகிறாய்
அது எங்களுக்குத் தெரியும்.
உனக்கு ஒரு மனைவி
ஒரு காதலி
ஒரு தாய் உண்டு
அது எங்களுக்குத் தெரியும்.
உனக்குக் குழந்தைகள் உண்டு
அதுவும் எங்களுக்குத் தெரியும்.
ஆனால் படைவீரனே
எங்கு நீ நிற்கிறாயோ
அங்கே உனக்கு மரணம் நிச்சயம்.
எங்கு நீ நடக்கிறாயோ
அங்கே ஏற்படும் உனக்கொரு
எரிகின்ற காயம்.
எங்கு நீ உறங்குகிறாயோ
அங்கு உனக்கு அமைதியே இல்லை.
ரத்த வெள்ளத் தீய கனவினூடே
விம்மித் தணிகிறது பூமி
படை வீரனே
நீ மடிந்தால்
நாய்கள்தான் உன்னைப் புதைக்கும்.
இந்த மண்ணிற்கு நீ வந்தபோது
புரிந்துகொள்ள வந்ததாகக் கூறினாய் நீ. படைவீரனே, உனது புரிதல்
எங்களுக்குச்
சலிப்பூட்டியிருக்கிறது.
ஐரிஷ் மண்ணில் உள்ள
பிரிட்டிஷ் துருப்புகளும்
கதவுகளை நீங்கள் தட்டுவதும்
தலைகளில் இடிக்கும்
துப்பாக்கிக்கட்டையும்
சிறைகளும் விஷவாயுவும்
இருண்ட மூலைகளில் எங்கள்மீது
விழும் அடி உதைகளும்
எங்களுக்குச் சலிப்பூட்டியிருக்கின்றன.
படை வீரனே
ஐரிஷ் மக்களின் எலும்புகளுக்கு
நீ கொண்டு வரும் சமாதானம்
எங்களுக்குச் சலிப்பூட்டியிருக்கிறது.
எங்கள் இல்லங்களில்
வெடிக்கும் குண்டுகள்
தெருக்களில் குவிந்து வரும் இடிபாடுகள்
நெடுங்கால நண்பர்களின் மரணங்கள்
கண்ணீர்கள், ஈமச் சடங்குகள்
முடிவேயில்லாத ஈமச் சடங்குகள்
எங்களுக்குச் சலிப்பூட்டியுள்ளன.
படைவீரனே
இந்த மண்ணிற்கு நீ வந்தபோது
புரிந்துகொள்ள வந்ததாகக் கூறினாய்.
இதுதானா உன் புரிதல்?
நாங்கள் இங்கு கனவு காண்கிறோம்.
இந்த பூமி எங்கள் பூமி எனக்
கனவு காண்கிறோம்.
கத்தோலிக்கரும் புராடஸ்டண்டுகளும்
கடவுள் நம்பிக்கையுள்ளவரும் இல்லாதவரும்
ஒரு நாள் இங்கு கூடி
ஐரிஷ் ஆண்களாய்
ஐரிஷ் பெண்களாய்
கனவு காண்பர்.
மரணமே இல்லாத
பசுமையானதொரு பூமியை
இறங்கிவரும் ஒரு நிசப்தத்தை
சமாதானம் என்றொரு நிசப்தத்தை
நாங்கள் கனவு காண்கிறோம்
இந்தக் கனவை நாங்கள் காண்பதற்கு
படை வீரனே
நீ வேண்டியதில்லை.
அதுதான் எங்களது புரிதல்
வீட்டுக்குப் போ படை வீரனே
நீ இங்கிருப்பது
காற்றை நாசப்படுத்துகிறது.
உனது புன்முறுவல்
எங்களை அலங்கோலப்படுத்துகிறது.
வீட்டுக்குப் போ படைவீரனே
உன்னைப் பிணமாக நாங்கள்
உன் வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்.
தமிழாக்கம்: எஸ். வி. ராஜதுரை, வ. கீதா